Search This Blog

Showing posts with label spiritual. Show all posts
Showing posts with label spiritual. Show all posts

Oct 1, 2025

கலைமகளைத் தொழுதிடுவோம்

கலைமகளைத் தொழுதிடுவோம்


நவராத்திரியின் கடைசி நாளான நவமித் திதி , நாம் கலைமகளைப் பூசிக்கும் தினம். 

மனத்தின்,  ஆன்மாவின் தூய்மையைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சிதரும் அன்னை தன்  கரங்களில் ஏந்தியிருக்கும் வீணையும் , புத்தகமும்  குறிப்பது கலைகளின் இணைப்பை.

கல்விக்குத்  தெய்வமாக நாம் மட்டும் சரஸ்வதியை வழிபடுவதில்லை.  பல மதத்தினரும், பண்பாட்டினரும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு உருவங்களில் கல்வித் தேவதைகளை வணங்கி வந்திருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் இந்த பண்பாடுகள்  அழிந்து போன போது, அவைகளுடன்  இந்த  வழிபாட்டு முறைகளும்  சிதைந்து போயின. ஆனால் நம் பாரதப் பண்பாடும், அப்பண்பாட்டின் சின்னங்களான வெவ்வேறு வழிபாட்டு முறைகளும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன.

இன்று நாம் கலைமகளைப்  பூசிக்கும் இத்தினத்தில், கலைமகளைப்  பற்றியும் ,  வேறு பண்பாடுகளில் - மதங்களில்-  குறிப்பிடப்பட்டு  வணங்கப்பட்ட கல்வித் தெய்வங்களைப்  பற்றியும் ஒரு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில் !

அனைத்துக் கல்வித் தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டுதலுடன் 

உங்கள் அன்பின் 

ரமேஷ்  





வெண்பட்டு ஆடை உடுத்தாளின், தன்கரத்தில் 

பண்ணெழுப்பும் வீணை எடுத்தாளின்- தண்கருணைக்* 

கண்பார்வை பட்டாலே நற்கல்விக் கண்திறக்கும் 

மண்வாழும் மாந்தர்க்கெல் லாம்  


மற்ற மதங்களிலும் பண்பாட்டுச்  சாரலிலும்  

ஓத்தபிற தெய்வங்கள் உண்டாமே - பட்டியல் 

இட்டவற்றைப் பார்ப்போம் சரஸ்வதியை நாம்வணங்கும் 

சத்தான நன்னாளில்  இன்று   




அப்பாலோ ஆணென்றும்#  அத்தீனா பெண்ணென்றும்# 

செப்பித்  தொழுதார்  கிரேக்கர்-  அதன்முன்னர் 

மெர்க்குரி ஆணென்றும்  பெண்மினர் வாவென்றும்   

ரோமர்கள் பேரிட்ட  னர் 





BENZEITEN

ஷிண்டோ மதத்தினரின் ஆண்கடவுள் தென்ஜின்னே !  

பெண்கடவுள் பென்சய்ட்டென் வாக்தேவி**  யின்னுருவாம்  !

ஈகிப்து நாட்டினரின் ஆண்பெண்பால்  தெய்வங்கள் 

தோத்துடன் சேஷத்தும் தான்!  


  

வேற்றுப்பண் பாட்டினர்கள் தம்கல்வித் தேவதையை   

போற்றி வணங்குவதை  விட்டே மறந்தாலும்    

இந்தியப்பண் பாட்டாரோ  நெஞ்சில் நிலைநிறுத்தி 

வந்தனை செய்கின்றார்  நன்று   


* தண் கருணைக்  கண்  = குளிர்ந்த,  கருணைகாட்டும் விழி 

** வாக்தேவி = சொல்லின் அரசி. . 

பென்சய்ட்டன்  என்னும் பெண் தெய்வம், சரஸ்வதியைப் போன்றே கையில் ஓர் இசைக்கருவியை ஏந்தியிருப்பதைக் காணலாம் 

# மற்ற பண்பாடுகளில் கல்வித் தெய்வங்களாக, பெண் தெய்வத்தோடு ,ஒரு ஆன் தெய்வமும் குறிப்படப்பட்டுள்ளதைப்  பார்க்கலாம். நம் பண்பாட்டிலும், விநாயகரை ஆண்  கல்வித் தெய்வமாக வழிபடுதல் உண்டு.


Feb 26, 2025

சிவ பதிகம்

சிவ பதிகம்

இன்றைய சிவராத்திரி தினத்தன்று வெண்டுறை வடிவில் நான் முன்பொருநாளில் சிவபிரானைத் துதித்து எழுதிப் பதித்த பத்துப் பாடல்களைமீண்டும் பதிவிடுகிறேன்.

முக்கண்ணனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

அன்புடன் 

ரமேஷ் 


சிவ பதிகம்


விடைவா கனமேறி வீற்றிருந் துமையவளை
இடமணிந்து  பாதியாய்  இணைத்தவனை  - சடைமுடிமேல்
படமெடுக்கும் அரவணிந்த பரமனைப் பணிந்தவரை
இடரெதுவும் தீண்டாது காண்.!                                                1.

   
ஆல மரத்தடியில் அமர்ந்த்திருந்து மோனத்தவக்
கோலம் தரித்த குருநாதன் -- நால்வேத
நாயகன்  தட்சிணா  மூர்த்தியின்  திருநாமம்
வாயுரைத்தல் நாளும் நலம்.                                                       2.

   
நெடிதுயர்ந்து விசுவத்தை நிறைத்திட்ட பசுபதியின்
அடிமுடியைக் காணவே முயன்றிட்டு --- முடியாமல்
பிரமனும்  நெடுமாலும் முடிதாழ்த்தி வணங்கிட்ட
பரமசிவன் பாதம்பணி வோம். .                                                 3.


பாகீ  ரதன்செய்த பெருந்தவத்தின்  பரிசாக
ஆகாய கங்கைதனை மேலிருந்து கொணர்ந்தவளின்.
வேகத்தைத்  தடைசெய்து  சடைமுடியில் பிடித்திட்ட
ஏகனை மனமே பணி .                                                              4.


ஒருகையில் உடுக்கெடுத்து ஒரு கையில் மானேந்தி
ஒரு கையில் சூலமெடுத்து ---  பிறைமதியை
விரிசடையில்   முடிதரித்து களிநடம் புரிகின்ற
திரிபுராந்  தகனைத்   துதி.                                                          5,


அவிமறுத்து அவமதித்த தக்ஷனின்  யாகத்தை
அழித்துப்பின் அருந்தவத்தில் அமர்ந்தவன்மேல்  தேவர்களின்
மன்னுதலால் மலரம்  பெறிந்தமன்  மதனைத்தன்
கண்ணுதலால் எரித்தோன் துணை.                                            6.


காலம் முடிந்ததெனக்  காலன் அழைத்திட்ட
பாலன்மார்க் கண்டேயன் உயிர்தனைப்-- பாலித்து
காத்தவற்கு சாகா வரம்தந் தருள்புரிந்த
கூத்தனடி நெஞ்சே  பணி .                                                          7.


நிலையிலது   இவ்வுலகு நிலையிலது   இவ்வாழ்வு
விலையற்ற  இவ்வுண்மை   விளக்குமுக மாகவே
இடுகாட்டின்  சுடுசாம்ப லுடல்முழு திலும்பூசி
நடமாடு வோனைத் துதி. .                                                           8.  


நிலமாகக்   காஞ்சியிலும் வளியாக ஹஸ்தியிலும்
ஜலமாக திருவானைக்  காவல் தலத்திலும்
ஒளிர்நெருப்   பாய்த்திரு வண்ணா மலையிலும்
வளியாக தில்லைத்திருச் சிற்றம் பலத்திலும்                                         


ஏகாம்ப ரேசனாய்  காளஹஸ் தீசனாய்
ஜம்புகே சுவரனாய் அண்ணா மலையனாய்
அம்பலத்தில் தாண்டவ நடமிடும் ராசனாய்
அமர்ந்தஐம்  பூதனைப் பணி.                                                        9.
.      

அசுரர்களும் தேவர்களும் அடிபணியும் வேதியனை
விசும்புவெளி படைத்தவற்றைக் காக்குமொளிச் சோதியனை
அணங்குதனை இணங்கித்தன் உடல்கொண்ட பாதியனை
வணங்கியே    முக்தியடை வோம்,                                                     10    

Jan 27, 2025

பிரதோஷப் பாடல் - 50

பிரதோஷப் பாடல் - 50 

இன்றைய பிரதோஷத்தன்று நாகலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கையில் எண்ணத்தில் எழுந்த பாடல்.

இந்த ஐம்பதாவது பாடலுடன்,  இதுவரை எழுதி வந்த பிரதோஷப் பாடல் தொடரை நிறைவு செய்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 



அகரஉகர மகரங்கள் ஒன்றிணைந்த ஓமினை 

சிகரமாகச் சேர்த்துச் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரம்  *

பகருவோர்க்கு பலமுறை பலனளிக்கும் மந்திரம் 

நகரவேண்டி நந்தியை நந்தன் சொன்ன மந்திரம் 

சிதம்பரத்தில் நடனமாடும் திகம்பரனைத் துதித்திடும்  

நிகரில்லாத மந்திரம் நமச்சிவாய மந்திரம் 

உகந்து நாளும் காலை மாலை வேளைதொறும் ஓதுவர் 

இகபர மிருவுலகிலும் இன்பமாக வாழுவர்!


* ஓம் நமசிவாய  

Oct 2, 2024

நீத்தார் நினைவு

நீத்தார் நினைவு 

இன்று மாளய அமாவாசை.  எல்லா அமாவாசை நாட்களும் நீத்தார் நினைவு நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மாளயம் என்று அழைக்கப்படும்  பதினைந்து நாட்களும் , நம் முன்னோரை நினைத்தும், வழிபட்டும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளோடு முடிவடையும் இந்த மாளயத்தில் ஒரு பாடல் மூலம் நம் முன்னோர்களை வணங்கும் விதமாக ஒரு வெண்பா --இதனுடன் சென்ற ஆண்டுகளில் நான் எழுதிப்  பதித்த இரு சிறு பாடல்களையும் இணைத்து!

அன்புடன் 

ரமேஷ் 


ஈன்றதாய் தந்தையொடு முன்பிருந்த மூத்தாரின் 

மூன்று தலைமுறையைப் பேரிட்டு - நோன்பிருந்து 

எள்நீரை மட்டும் இறைத்துத் துதிக்காமல்   

உள்ளத்தில் ஏற்றிவைப்  போம் !

(இருவிகற்ப நேரிசை வெண்பா)


ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)


தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)

Aug 17, 2024

பிரதோஷப் பாடல் - 49

 பிரதோஷப் பாடல் - 49






  


வேத நாயகன் நாத போதகன்

-----சோதி வானவன் ஆதி சிவன்

பாதி உடலைப்பார் வதிக்கு அளித்தவன் 

-----நீல கண்டனவன் நடன சிவன்- *இத்                     *இத்தேதி = இந்தப் பிரதோஷநாள் 

தேதி யன்று*வீ பூதியணிந்து (ஸ்)தல                        *வீபூதி = திருநீறு 

-----நேதி* தவறாமல் வணங்குவரை                                  * நேதி = நியதி 

பாது காப்பவன் யாது மானவன் 

-----பாடி அவனையே போற்றிடுவோம்


Jun 20, 2024

பிரதோஷப் பாடல் - 48

பிரதோஷப் பாடல் - 48

நேற்றைய பிரதோஷ நாளன்று பெங்களூர் குந்தனஹல்லியில் இருக்கும் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டவன் தரிசனம்! அங்கு மனதில் எழுந்த ஒரு பாடல்-  

பிரதோஷ நாதன்  திருவடிகளில் சமர்ப்பணம்.

அன்புடன் 

ரமேஷ் 




பிரதோஷப் பாடல் - 48


இமயப் பனிமலை மேலுறையும் இறைவனை

-----துதிக்கின்ற நாமமே ஓம்நமச் சிவாயவே 

அமரரைக் காக்கவே ஆலகா லம்உண்ட  

-----விமலனை வேண்டுவோம் ஓம்நமச் சிவாயவே

சமகருத் திரமெனும்* மந்திரங்கள் ஓதியே                   * சமகம், ருத்திரம்  சிவனைத் துதிக்கும் மந்திரங்கள்   

-----தினமவன் துதிபாடு வோம்நமச் சிவாயவே  

சமயக் குறவர்கள் நால்வரும்* நாள்தொறும்               *அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர்,சம்பந்தர் 

-----நாவுரைத்த மந்திரம் ஓம்நமச் சிவாயவே  

தமருகும் எனும்சிறு முரசினை ஏந்திய

-----நாதனைப் பாடுவோம் ஓம்நமச் சிவாயவே 

உமையவள் நாதனை நான்மறை வேதனை*                * வேதன் = இறைவன்  

-----உருகியே வேண்டுவோம்   ஓம்நமச் சிவாயவே 


Jun 4, 2024

பிரதோஷப் பாடல் 47

பிரதோஷப்  பாடல் 47




அரியும் பிரமனும் அடிமுடி காண 

-----முடியா துயர்ந்த முன்னவனை 

சரிபாதி உடலில் உமையாளை இருத்தி 

-----பிரியா தவளோ டிருப்பவனை 

கரிதோ லுரித்து பிறிதத் தோலை 

-----மருங்கில்* அணிந்த மகேஸ்வரனை                        மருங்கு = இடை 

பிறவிப் பிணிகளை அறுத்திட வேண்டியிப் 

-----பிரதோஷ நாளில் போற்றிடுவோம்.


அன்புடன் 

ரமேஷ் 


  

Apr 6, 2024

சனிப் பிரதோஷப் பாடல்-

சனிப் பிரதோஷப் பாடல்- 

இன்றைய பதிவு ஒரு மீள் பதிவு.

சென்ற பதிவின் போது போது பாடலை ஒலிப்பதிவு  செய்யவில்லை. இப்போது பாடல் ஒலியுடன்!

அன்புடன் 

ரமேஷ் 


இன்று பிரதோஷம். 

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

அன்று இறைவனை வணங்குபவர்களுக்கு பலமடங்கு அதிகமாக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த சனிப்பிரதோஷ மகிமைபற்றி ஒரு பாடல்.

\அன்புடன்

ரமேஷ் 


சனித்தினத் துடன்இணைந்து சேர்ந்துவந்த தாலொரு
தனித்துவத் துடன்விளங்கும் சனிப்ரதோஷ வேளையில்
பனித்தசடைப்   பரமன்பாதம் பணிந்துபோற்றி வணங்குதல்
துணிக்கும்  பிறவித்தளைகளை ! இனிக்குமிந்தப்  பிறவியும் !

Jan 21, 2024

அயோத்தியில் ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயில் 


நாளை அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் பால ராமரின் சிலையை நிறுவவிருக்கும் நேரத்திலே,  அந்நிகழ்வையொட்டி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




புதைபட்டு  பூமியிலே ஆண்டுபல ஆயினும்   

வதையுண்டு போகாமல்  பக்தர்கள் மனதிலே 

விதையாக உயிர்வாழ்ந்து  காவியமாய்க்  கதைகளாய்   

சிதையாமல் சிதறாமல் வேரூன்றி  வளர்ந்ததே! 


தவமிருந்து தசரதனும் கோசலையும் வேண்டிட  

அவதரித்த அண்ணலுக்கு அவர்பிறந்த இடத்திலே  

அயோத்திமா  நகரிலே அழகுமிகு  கோவிலில்  

அவருடைய திருச்சிலையை நியாசம்*செய்யும்  நாளிதே .                   

                                                                                                                                    (*நியாசம்=consecration)

வீடெடுக்கும் வினைமுடிந்து கூடிவந்த நாளிலே 

கோடிமக்கள் கூட்டமாக கூடிநின்று களித்திட 

நாடுமுழுதும் வீடுதோறும் தீபமேற்றி  மகிழ்ந்திட 

பாடிப்பாடல் பாலராமன் புகழையெவரும் போற்றுவோம்  


அன்புடன் 

ரமேஷ் 








Oct 23, 2023

நவராத்திரி- ஒன்பதாம் நாள்



நவராத்திரி- ஒன்பதாம் நாள் 



 


சித்திகள் எட்டையும் சிவனுக்கு அருளியபின் 

-----அவனுருவில் பாதி யானாள் 

முத்தேவர் முத்தேவி யர்களை சிருட்டித்த 

------சித்தாத்ரி தேவித் தாயே.


விட்டுணி* வின்துணைவி செல்வப் பொருள்தலைவி 

-----இலக்குமி என்னும் தேவி 

மொட்டவிழ்த்த தாமரை முழுமலர் மேலமர்ந்து 

-----அருள்புரியும் அலைமகள் இவள் 


சித்தன் பித்தன் நீறணிக் கடவுளெனப் 

-----பலபெயர் கொண்ட ஈசற் 

குற்றதோர் மனைவியாய் பனிமலை மேலமர்ந்து

------அருள்புரியும் மலைமகள் இவள் 


நான்முகத்தி னன்கிழத்தி ஞானங்க ளின்இறைவி

----- நன்னூலின்  தலைவி வாணி 

வெண்ணாடை யையுடுத்து வீணையக் கரமேந்தி 

-----அருள்புரியும் கலைமகள் இவள்


அலைமகள் மலைமகள் கலைமகள் என்றுபல 

-----உருவங்கள்  எடுத்த இறைவி

உலகையெலாம் காத்துப்பல நலங்களால் நிறைக்கவே 

-----தலைவணங்கி வேண்டிப் பணிவோம் 

* விட்டுணு=விஷ்ணு 

நிறைவு

 

சைலபுத் திரிபிரம்ம சாரிணி சந்திர 

-----காந்தை குஷ்மாண் டனி

ஸ்கந்த மாதாகார்த்தி யாயினி காலாத்ரி 

-----கௌரிமா சித்தாத் த்திரி 

என்றநவ தேவியரின் சரிதத்தை என்கவிதை

-----மூலமே எடுத்துரைத் தேன் 

இன்னும்பல நற்கவிதை நான்புனைந்து படைத்திடவே 

-----தேவியருள் தரவேண்டு வேன். 

   

 



     


Oct 22, 2023

நவராத்திரி- எட்டாம் நாள்

நவராத்திரி- எட்டாம் நாள்



 

வெண்சங்கம், வெண்ணிலவைப் பழிக்கின்ற நிறமுடையாள்

வெண்மைநிற எருதின்மேல் அமர்ந்தருள்வாள்  கௌரித்தாய். 

பண்புநெறி, நல்லொழுக்கம், அருள், கருணைக் கரசியிவள் 

இன்றிவளைத்  தொழுதே நாம் ஆன்மஞானம் அடைந்திடுவோம்.   




Oct 21, 2023

நவராத்திரி - ஏழாம் நாள்

 நவராத்திரி - ஏழாம் நாள் 


கருத்த உடலும் விரித்த தலையும் 

-----சினத்தை சிந்தும் சிவந்த விழியும் 

இரத்த பீஜனின்* இரத்தத் துளிகள் 

-----சிறிதும்  தரையில் சிந்தா வண்ணம்

உறிஞ்சி உதிரம் குடித்த இதழ்களும் 

-----மின்னலை மாலையாய் அணிந்த கழுத்தும் 

கருத்தபம்** மீது அமர்ந்து சமர்செ(ய்)ய

-----கூன்வாள்*** வச்சிரம்*** ஏந்திய கரங்களும்

கொண்டே இன்றைய ஏழாம் நாளில் 

-----எழுந்து அருளும் கொற்றவைத் தாயை 

வேண்டி வணங்கி அவளருள் பெறுவோம்;

-----கேட்கும் வரங்கள் கொடுப்பாள் அவளே!  

* இரத்தபீஜன் என்னும் அரக்கன் அவன் தரையில் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும்  மீண்டும் ஓர் அரக்கனாக உருவெடுக்கும் என்ற வரத்தைப் பெற்றவன். அதனால் காளி அவனை வாதம் செய்த பிறகு  ரத்தத்துளிகள் கீழே விழாமல் தன்  இதழால் உறிஞ்சி உண்டாள் என்பது ஐதீகம்.

** கர்த்தபம் = கழுதை

*** கூன்வாள் = scimitar, cleaver  வச்சிரம் = வஜ்ராயுதம் 




Oct 20, 2023

நவராத்திரி - ஆறாம் நாள்

நவராத்திரி - ஆறாம் நாள்


இந்த ஆறாம் நாளன்று தேவியை காத்யாயனி , மகிஷாசுரமர்த்தினி , துர்க்கை  என்னும் பெயர்களில் வழிபடுவோம். 

துர்கையின் அவதாரம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதி பதித்த ஒரு பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இதனோடு பாடலின் ஒலிவடிவத்தையும் கொடுத்திருக்கிறேன்.

படித்தும், கேட்டும் தேவியின் அருள் பெறுவீர்களாக!

அன்புடன் 

ரமேஷ் 


 




துர்க்கை அவதரித்தல்
முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - மண்ணரசி = பூமாதேவி 
துர்க்கையின் படைக்கோலம்
திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே
வாயுதே வன்தந்த  வில்ம்புகள்
ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.
மகிஷாசுர வதம்
உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்
செந்தழலோன் சீற்றமதைக்  கண்களில்  ஏற்றினள்
இமயவான் அளித்தஅரி  மாமீது ஏறினள்
சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைத்தனள்
துதி
எருதுருக் கொண்டமகி ஷாசுரன்  செருக்கறுத்து 
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை  
கருத்திலே   நிறுத்திநவ நாட்கள்  நோன்பிருந்து 
கரம்கூப்பி  வணங்கித் தொழுவோம்.



நவராத்திரி- ஐந்தாம் நாள்

நவராத்திரி- ஐந்தாம் நாள் 



தான்கொடுத்த வேலெடுத்து தாரகனைக் கொன்று 

வான்புகழை வென்றமகன்  கந்தனது பெயரியினையே  

தன்பெயரின் முன்னாலே  சேர்த்துவைத்து  மகிழ்ந்தவளே  

ஐந்தாம்நாள் அருள்புரிவாள்   ஸ்கந்தத்தாய் வடிவத்தில்.


தொண்டாற்றும் அடியார்க்கு அருள்கின்ற  கரமொன்று 

வண்டூரும் கமலமலர் ஏற்றிருக்கும்  கரமிரண்டு

கண்டோர்க்கு தாயன்பை தெரிவிக்கும் முகமாக 

தன்மகனை மடியிருத்தி அணைக்கின்ற கரமொன்று 


சிங்கமொன்றின் மேலமர்ந்து சங்கடங்கள் தீர்ப்பவளை 

பங்கயத்தின் மேலமர்ந்து* மங்களங்கள் தருபவளை 

இங்குமங்கும் பாயும்மனம்  தங்கவைக்கும் தூயவளை 

சங்கரனின்  மனைவி(ஸ்)கந்தத் தாயினையே  வணங்கிடுவோம்.


பங்கயத்தின் மேலமர்ந்து* =ஸ்கந்தமாதாவை தாமரை மேலமர்ந்திருக்கும் பத்மலட்சுமி ஆகவும் சித்தரிப்பது உண்டு,

  








   

 

Oct 18, 2023

நவராத்திரி- நான்காம் நாள்

நவராத்திரி- நான்காம் நாள் 

 




கருமையும் வெறுமையும் எங்கும் இருக்கையில்

இருளை நீக்கிய ஒளி அவளே 

அண்ட பேரண்டம் விண்மீன் மண்டலம் 

அனைத்தையும் ஆக்கிய அன்னையிவள் 

முகத்தில் பூத்த முறுவலின் மூலம் 

சகங்கள் அனைத்தையும் சிருஷ்டித்தாள் 

ஆதி சக்தியின் அம்ச மானவள் 

சோதி மயமாய் ஜொலித்திடுவாள்

மகா காளியுடன் மஹா லட்சுமி 

மகா சரஸ்வதி தேவியரை 

இடக்கண் வலக்கண் நெற்றிக் கண்களின் 

கடைக்கண் பார்வையால் படைத்திட்டாள் 

மிருகா திபதியாம்  அரிமா மீது 

அமர்ந்து அன்பர்க் கருள் புரிவாள்

சித்திகள் எட்டும் நிதிகள் ஒன்பதும் 

சித்திக்கும் அவள் அருளாலே 

பூசணிக் காயெனும் பொருளைக்  கொண்ட 

குசுமாண்டா எனும் தேவி இவள்

நான்காம் நாளின் நாயகி இவளை 

நோன்புகள் நோற்று  வணங்கிடுவோம். 

  

 

Oct 17, 2023

நவராத்திரி - மூன்றாம் நாள்

 நவராத்திரி - மூன்றாம் நாள் 



திரிசூலம், செண்டு,வாள் கமண்டலங் களை 

-----இடப்பக்கக் கைகளிலே ஏந்தி இருப்பாள்.

விரிகமலம், ஜபமாலை, வில்லம்புடன் 

-----மணியொன்றைத் தாங்கிடுவாள்  வலக்கரங்க ளில்

பரிவிரக்கம் கருணை காட்டும்   வரதமுத்திரை 

-----  காட்டிடுவாள் அடியார்க்கோர் இடதுகரத் தால்

வருகின்ற அடியவரை அணைத்து அபயம் 

-----தருகின்ற முத்திரையோர் வலக்கரத் திலே.

வரிப்புலியை அரியணையாய் அமைத்து அதன்மேல் 

-----அமர்ந்து அருள் புரிந்திடுவாள் அனவரதமுமே 

 

நெற்றியிலே சொலிக்கின்ற பிறைச்  சந்திரன்- கூட 

-----வெற்றியொலி எழுப்பிகின்ற காண்டா மணி 

பெற்றதனால் சந்திரகண்டா என்னும்- பெயர்

----- கொண்டவளை நாள்மூன்றில்  கொண்டா டிடுவோம் 

 

Oct 16, 2023

நவராத்திரி இரண்டாம் நாள்

நவராத்திரி இரண்டாம் நாள்


இன்று நவராத்திரியின் இரண்டாம் நாள்.இந்த நாளன்று தேவியைத்  துறவுக்கோலத்தில் வழிபடுவர். 

ஒருகையில் ருத்ராட்சத்திர மாலையை ஏந்தி, மறுகையில் கமண்டலத்துடன் , துறவைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சி தரும் தேவியை, பிரம்மச்சாரிணி என்றழைத்து வணங்குவர். 

இது பற்றி ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: நவராத்திரியின் போது நாளுக்கொரு ஒரு பாடல் எழுதிப்  பதிக்க முயன்றாலும்,இந்த நவராத்திரிப் பாடல் பதிவு பற்றிய தகவலை   தினமும் எனது பகிர்வுப் பட்டியலில் இருக்கும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதை,  தற்காலிமாக , இன்று முதல் நவராத்திரி முடியும் வரை, நிறுத்திக்கொள்கிறேன். பதிவை www.kanithottam.blogspot.com இணையத்தில் படிக்கலாம். நன்றி. 



 




துறவெனும் அறம்பூண்ட அடையாளமாய் 

(உ)ருத்ராட்சத் தவமாலை ஒருகையிலே!

மறுகையில் நீர்நிறைக் கண்டிகை*யுடன் 

அறவி**யரின் வெண்ணிற ஆடையுடுத்தாள்.

செறிவான ஓர்முகச் சிந்தனையுடன் 

பிரம்மத்தை மனதிருத்தி தவம்செய்வதால் 

ப்ரம்மச்  சாரிணியாய்ப்  பெயர்கொண்டவள்.

இரண்டாம் நாளின்று  இவளையெண்ணி 

கரும வினையனைத்தும் களைவதற்கு  

சரணடை வோம்திருப்  பாதங்களில்.

* கண்டிகை = கமண்டலம் 

** அறவி = பெண் துறவி 



நவராத்திரி- முதலாம் நாள்

 

நவராத்திரி- முதலாம் நாள் 

இன்று நவராத்திரியின் முதலாம் நாள். இந்நாள் அன்று தேவியை சைலபுத்தரியாக வழி படுவர். திரிசூலம், தாமரை இவைகளை இரு கரங்களிலும் ஏந்தி,வெள்ளை நிற எருதின் மேல் அமர்ந்து, செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து அருள் புரியும் தேவியை வணங்கி இன்றைய நவராத்திரிப் பாடல்.

தேவியின் அருளால் வரும் எட்டு நாட்களிலும், அந்த அந்த நாட்களில் அவள் திருக்கோலம் பற்றி ஒவ்வோர் பாடல் எழுதிப் பதிக்க முயல்வேன். 

அன்புடன் 

ரமேஷ்.





மலையரசன் மகளாக அவதரித்த தால் 

சைலபுத்தி திரியென்று பெயர்கொண்ட வள்

திரிசூலம் ஒருகையில் விரிகமலம் மறுகையில் 

தரித்தே திரிலோகம் காக்கின்ற வள்

வெண்ணெருதின்   மேலேறி வீற்றிருப்ப வள்

தண்கருணை இருவிழியால் தருகின்றவள் 

செம்மஞ்சள் நிறவாடை உடுத்திருப்ப வள்

கும்பிட்ட பேருக்கு அருள் செய்பவள் 

ஒம்பதுநாள்* பண்டிகையின் முதல்நா ளிலே 

நம்பியே அவள்தாளைத் தொழுதேத் துவோம்  


*ஒன்பது நாள்

Sep 28, 2023

நீத்தார் கடன்

நாளை முதல் மாளைய பக்ஷம் என்று அறியப்படும் 15 நாட்கள் தொடங்குகிறது. இந்த நாட்கள் உயிர் நீத்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. வெவ்வேறு பிரிவினர் அவரவர்களுடைய முறைப்படி நீத்தார் வழிபாடுகளை செய்வர். எள் நீர் விடுவதும், காகங்களுக்கு உணவு படைப்பதும் பலரது வழக்கம். இது குறித்து இரு சிறு பாடல்கள்.

அன்புடன் 

ரமேஷ்  

நீத்தார் கடன் 





ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 




தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)