Search This Blog

Showing posts with label pradoshappaadalgal. Show all posts
Showing posts with label pradoshappaadalgal. Show all posts

Jun 24, 2025

பிரதோஷப் பாடல் 51

 பிரதோஷப்  பாடல் 51




ஆதியனே வேதியனே மங்கையுடற் பாதியனே

மீதியுடல்  மின்னுகின்ற வேதகப்பொன்* சோதியனே  

காதினிக்க சாமமெனும் வேதமறை ** நாதத்தை 

ஓதுவரைக் காதலித்து  ஆதரிக்கும்   நாயகனே  

 

நட்டநடு நள்ளிரவில் உடலெரியும் சுடலையிலே 

சுட்டெரித்த சாம்பலையே பூசி நடம் புரிபவனே 

பிட்டுக்கு மண்ணெடுத்து பணிபுரிந்த சேவகனே 

மொட்டவிழ்ந்த மலர்தூவி பனிந்துனையே பூசிப்பேன்!


* புடமிட்ட பொன் 

** சாமவேதம் 

அன்புடன் 

ரமேஷ் 




Jan 27, 2025

பிரதோஷப் பாடல் - 50

பிரதோஷப் பாடல் - 50 

இன்றைய பிரதோஷத்தன்று நாகலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கையில் எண்ணத்தில் எழுந்த பாடல்.

இந்த ஐம்பதாவது பாடலுடன்,  இதுவரை எழுதி வந்த பிரதோஷப் பாடல் தொடரை நிறைவு செய்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 



அகரஉகர மகரங்கள் ஒன்றிணைந்த ஓமினை 

சிகரமாகச் சேர்த்துச் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரம்  *

பகருவோர்க்கு பலமுறை பலனளிக்கும் மந்திரம் 

நகரவேண்டி நந்தியை நந்தன் சொன்ன மந்திரம் 

சிதம்பரத்தில் நடனமாடும் திகம்பரனைத் துதித்திடும்  

நிகரில்லாத மந்திரம் நமச்சிவாய மந்திரம் 

உகந்து நாளும் காலை மாலை வேளைதொறும் ஓதுவர் 

இகபர மிருவுலகிலும் இன்பமாக வாழுவர்!


* ஓம் நமசிவாய  

Aug 17, 2024

பிரதோஷப் பாடல் - 49

 பிரதோஷப் பாடல் - 49






  


வேத நாயகன் நாத போதகன்

-----சோதி வானவன் ஆதி சிவன்

பாதி உடலைப்பார் வதிக்கு அளித்தவன் 

-----நீல கண்டனவன் நடன சிவன்- *இத்                     *இத்தேதி = இந்தப் பிரதோஷநாள் 

தேதி யன்று*வீ பூதியணிந்து (ஸ்)தல                        *வீபூதி = திருநீறு 

-----நேதி* தவறாமல் வணங்குவரை                                  * நேதி = நியதி 

பாது காப்பவன் யாது மானவன் 

-----பாடி அவனையே போற்றிடுவோம்


Jun 20, 2024

பிரதோஷப் பாடல் - 48

பிரதோஷப் பாடல் - 48

நேற்றைய பிரதோஷ நாளன்று பெங்களூர் குந்தனஹல்லியில் இருக்கும் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டவன் தரிசனம்! அங்கு மனதில் எழுந்த ஒரு பாடல்-  

பிரதோஷ நாதன்  திருவடிகளில் சமர்ப்பணம்.

அன்புடன் 

ரமேஷ் 




பிரதோஷப் பாடல் - 48


இமயப் பனிமலை மேலுறையும் இறைவனை

-----துதிக்கின்ற நாமமே ஓம்நமச் சிவாயவே 

அமரரைக் காக்கவே ஆலகா லம்உண்ட  

-----விமலனை வேண்டுவோம் ஓம்நமச் சிவாயவே

சமகருத் திரமெனும்* மந்திரங்கள் ஓதியே                   * சமகம், ருத்திரம்  சிவனைத் துதிக்கும் மந்திரங்கள்   

-----தினமவன் துதிபாடு வோம்நமச் சிவாயவே  

சமயக் குறவர்கள் நால்வரும்* நாள்தொறும்               *அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர்,சம்பந்தர் 

-----நாவுரைத்த மந்திரம் ஓம்நமச் சிவாயவே  

தமருகும் எனும்சிறு முரசினை ஏந்திய

-----நாதனைப் பாடுவோம் ஓம்நமச் சிவாயவே 

உமையவள் நாதனை நான்மறை வேதனை*                * வேதன் = இறைவன்  

-----உருகியே வேண்டுவோம்   ஓம்நமச் சிவாயவே 


Jun 4, 2024

பிரதோஷப் பாடல் 47

பிரதோஷப்  பாடல் 47




அரியும் பிரமனும் அடிமுடி காண 

-----முடியா துயர்ந்த முன்னவனை 

சரிபாதி உடலில் உமையாளை இருத்தி 

-----பிரியா தவளோ டிருப்பவனை 

கரிதோ லுரித்து பிறிதத் தோலை 

-----மருங்கில்* அணிந்த மகேஸ்வரனை                        மருங்கு = இடை 

பிறவிப் பிணிகளை அறுத்திட வேண்டியிப் 

-----பிரதோஷ நாளில் போற்றிடுவோம்.


அன்புடன் 

ரமேஷ் 


  

Apr 6, 2024

சனிப் பிரதோஷப் பாடல்-

சனிப் பிரதோஷப் பாடல்- 

இன்றைய பதிவு ஒரு மீள் பதிவு.

சென்ற பதிவின் போது போது பாடலை ஒலிப்பதிவு  செய்யவில்லை. இப்போது பாடல் ஒலியுடன்!

அன்புடன் 

ரமேஷ் 


இன்று பிரதோஷம். 

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

அன்று இறைவனை வணங்குபவர்களுக்கு பலமடங்கு அதிகமாக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த சனிப்பிரதோஷ மகிமைபற்றி ஒரு பாடல்.

\அன்புடன்

ரமேஷ் 


சனித்தினத் துடன்இணைந்து சேர்ந்துவந்த தாலொரு
தனித்துவத் துடன்விளங்கும் சனிப்ரதோஷ வேளையில்
பனித்தசடைப்   பரமன்பாதம் பணிந்துபோற்றி வணங்குதல்
துணிக்கும்  பிறவித்தளைகளை ! இனிக்குமிந்தப்  பிறவியும் !

Mar 8, 2024

சிவராத்திரிப் பாடல்

 சிவராத்திரிப் பாடல்

 


சிவசிவசிவ சிவசிவசிவ சிவசிவவெனும் மந்திரம் 

துயில்துறந்து இந்தநாளின் இரவுப்பொழுது முழுவதும்

பயிலுவோர்க்கு புண்ணியங்கள் பலவும்வந்து வாய்த்திடும்; 

கயிலைநாதன் கருணையாலே கேட்டயாவும் கிட்டுமே ! 


அன்புடன் 

ரமேஷ் 

Mar 31, 2022

பிரதோஷப் பாடல் - 45

 பிரதோஷப் பாடல் - 45

இந்த மாதம் 29-ம் தேதி பிரதோஷ தினத்தன்று எழுதிப்  பதிக்க மறந்த பாடல் இது.

கிட்டத்தட்ட மூன்று மாத இடை வெளிக்குப் பின் ஒரு பாடலை இயற்றிப் பதிவு செய்கின்றேன் .

அன்புடன் 

ரமேஷ் 



அர்த்தநாரீஸ்வரர் 

 


அம்புலியைத் தன்சிரத்தி லேவைத்த ஈசனை 

அம்பலத்தில் நடமாடும் நீள்சடைக் கேசனை 

அம்பிகைக்கு தன்னுடலில் பங்களித்த தேசனை 

அம்பைய்த காமனை எரித்தகை லாசனை 

நம்பியே மனதிருத்தி செய்திடுவோம் பூசனை!


Dec 31, 2021

பிரதோஷப் பாடல் - 44

பிரதோஷப் பாடல் - 44



அங்கை தன்னில் கங்கெடுத்து ஆடுகின்ற அம்பலன் 

மங்கை தன்னை இடமிருத்தி பங்களித்த புண்ணியன்    

ஐங்கரற்கு அருள்புரிந்து ஆனை  முகத்தை அளித்தவன்

திங்கள்தன்னை  தலையில் ஏந்தி தக்ஷ சாபம் தீர்த்தவன் 

----------லிங்க உருவில் கோவில் கொண்ட இறைவனை வணங்குவோம்


வெங்கண் வீச்சில் தவம் தடுத்த காமனை எரித்தவன் 

பொங்கும் கங்கை நதியைத் தலையில் தங்கவைத்த தற்பரன்

கங்குல் இரவில் காட்டின்  நடுவில் நடனமாடும் நாயகன் 

இங்கு மங்கும் என்றிலாது  எங்கணும் இருப்பவன் 

----------லிங்க உருவில் கோவில் கொண்ட இறைவனை வணங்குவோம் 



 

Nov 1, 2021

பிரதோஷப்பாடல்- 42

நாளை பிரதோஷதினம்.

இத்தினத்தன்று, பிரதோஷத்தின் சந்திவேளையில், சிவபெருமானின் முன் வீற்றிருக்கும் நந்திதேவனின் பின் நின்று, அவருடைய இரு கொம்புகளின் இடைவெளி வழியே ஈசனை தரிசனம் செய்தல் சிறந்தது என்பது ஐதீகம்!

இதை விளக்கும் ஒரு பாடலை இன்று மகிழ்ச்சியுடன் பதிக்கிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 
 







 

இந்தி ரன்முதல் தேவர் அனைவரும் வந்து வணங்குமிச் சந்தியிலே*

நந்தி தேவனின் பிந்தி நின்றவன் கொம்பின் இடைவெளிச் சந்தினிலே

சிந்தும் தண்ணொளிச் சந்திர னைத்தன் சென்னியில்** சூடிய சுந்தரனை

எந்தை ஈசனை வந்து தரிசனம் செய்து தொழுதுநாம்  உய்திடுவோம்


* சந்தியிலே-- சந்திகால வேளையிலே  

** சென்னியில் - சிரத்தில், தலை மீது 

Oct 19, 2021

பிரதோஷப் பாடல் - 41

 பிரதோஷப் பாடல் - 

நேற்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோஷம்.

சனிக்கிழமைகளில் வரும் சனிப்பிரதோஷத்தைப்போல் இதுவும் விசேஷமான ஒன்று.

இந்த நாளில் இறைவனைத் துதித்து நேற்று எழுதத் துவங்கி இன்று முடித்த பாடல் இது.

அன்புடன் 

ரமேஷ் 




சாமத்திரு வேதம்உரை வேதியர்க்கு அடியோன் 

ஈமத்திடு காட்டினிலே சாமநடம் புரிவோன் 

வாமத்தொரு பாகத்தினில் பார்வதியை வைத்தோன் 

சோமத்திரு வாரப்பிர தோஷத்திந்  நாளில் 

பூமண்டலத் துயிர்வாழும் பிறவிகள்  எல்லாமும் 

சேமமுற வாழஅவன் அடிபணிந்து தொழுவோம்.

Jul 7, 2021

பிரதோஷப் பாடல் - 40

 பிரதோஷப் பாடல் - 40

இன்றைய பிரதோஷப் பாடலுடன் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலத்தைப் பற்றிய வரலாறையும் கொடுத்திருக்கிறேன்.

அன்புடன் 

இரமேஷ் 



ஏமகூட* மேருமலையை வில்லாய் வளைத்தவன் 

வாமபாக தேகமீதில் தேவியைத் தரித்தவன் 

காமநாசன் ஆமிரேசன்** பேரைப்பாடி வணங்கிடும் 

பாமரற்கும் சேமகாலம் ஆமளவும்*** அளிப்பனே 

 

* ஏமகூடம்= மேருமலை 

** ஆமிரேசன்= மாமரத்தினடியில் அமர்ந்துள்ள ஈசன் 

*** ஆமளவும் = எப்பொதும் , கூடிய விரைவில் 

"eka" means one and "amaram" means mangoe tree. Legend has it that Parvathi was sitting under the mangoe tree in the temple and was performing penance. Wanting to test her, Lord shiva, directed fire at her. Parvathi took the help of Vishnu, who colled the fire using the rays of the moon. Then Shiva sent the river Ganga but Parvathi convinced her that both of them were sisters and that she should not disturb her penance. After completing her penance, Parvathi was united with Shiva.