Search This Blog

Feb 3, 2026

காலைச் சிற்றுண்டி


காலைச்  சிற்றுண்டி 

சென்ற மாதம் என்னுடைய மகன் அமெரிக்காவிலுருந்து வந்திருந்த போது ஒரு காலைவேளையில் அருகிலுள்ள ராமேஸ்வரம் கஃபே யில் காலைச்  சிற்றுண்டி(?) சாப்பிடச் சென்றோம். ஒரு மாத்திட்க்குப் பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது , இன்னும் அந்தச் சுவை அவன் நினைவில் மிதக்கிறது என்று கூறினான்! அதன் உந்துதலின்  பேரில் எழுதிய ஒரு சிறு பாடல்! சுவைத்து மகிழுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 





மிகமிக மிகமிக மெலிதாய் வார்த்த 

முரு முரு முறுவெனும் ரவையின்    தோசை 

கம கம கம வென வாசம் வீசி  

நெய்யில் மிதக்கும் நறுமணப் பொங்கல் 

சுறு சுறு சுறுவென உரைக்கும் ரசத்தில் 

மெது மெது மிருதுவாய் ஊறிய  ரசவடை 

சிவ சிவ சிவ சிவ சிவப்பு நிறத்தில் 

பொடி மேல் தடவிய  தட்டு இட்டலி 

தேங்காயத் துகளும் கொத்து மல்லியும் 

தூவித் தெளித்த  தோசை இவற்றை 

பல பல பல பல சட்டினி வகையுடன் 

சாம்பார் சேர்த்து சாப்பிட் டானபின்  

கொதி கொதி சூட்டில்  கொதித்திடும் பாலுடன் 

கரு கருக்  கொட்டை வடிநீர் கலந்து 

சர் சர் சர் என நுரை வர ஆற்றி 

சுடு சுடு சுடுவென டிகிரிக் காபி 

குடித்து முடிக்கையில் கூடிய  தின்பம் 



Dec 13, 2025

இன்னும் கொஞ்சம் ----

இன்னும் கொஞ்சம் ---- 


இன்னும் கொஞ்சம் ----

அன்பை வெளிப்படுத்தவும், கருணையைக் காட்டவும் , உதவி செய்யவும், பிறர் நமக்குச்  செய்த உதவிகளுக்கு  நன்றியைத் தெரிவிக்கவும் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்டு பின் நினைத்து வருந்துவது என்பது நம்  அனைவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒன்று. நாம் செய்ய நினைத்து , செய்யாமல் தள்ளிப் போட்ட சிலவற்றை செய்யவே முடியாமல் போய்விடுமுன், இன்றே, இப்போதே, செய்துவிடலாமே !

அன்புடன் 

ரமேஷ்  




என்னைப்   பெற்ற தந்தையும்  தாயும்  

முன் அவர் தனியாய் வாழ்ந்த போதிலும் 

பின்னென் னுடனே சேர்ந்த்திருக் கையிலும் 

------------இன்னும் கொஞ்சம் நேசமும் நெருக்கமும் 

------------காட்டி இருக்கலாமோ 

------------என் அன்பை அவர்க்கு நன்றாய்த் தெரியச்    

------------செய்தி ருக்கலாமோ 


இன்வாழ்வுப் பொருள்* எதுவும் வேண்டாம்       * luxury goods 

என்றுரைத்தே அவர் ஏற்க மறுத்தாலும்

என்னால் அந்நாள்  இயன்ற வரையில்      

------------இன்னும் கொஞ்சம் ஏதேனும் நான் 

------------செய்திருக்கலாமோ?

 ------------இன்னும் அவர்க்கு வாழ்க்கை வசதிகள் 

------------சேர்த்திருக்கலாமோ?  


நெருங்கிய நண்பர் அருகில் இருந்தும் 

நேரே  சந்தித் துரையாடாமல் 

இணைய தளத்தில் இணைவதைக் குறைத்து O

------------இன்னும் கொஞ்சம் தடவைகள் நேரில் 

------------பார்த்திருக்கலாமோ ?

------------அவர் கூட நடந்து  நினைவில் நெகிழ்ந்து கை 

------------கோர்த்திருக்கலாமோ? 


என்னிடம் உதவி கேட்டு அணுகிய 

முன்பின் அறியா முகங்களுக்கும்

அன்புடன் இருந்த உறவுகளுக்கும்    

------------இன்னும் கொஞ்சம் கூட உதவிகள் 

------------செய்திருக்கலாமோ? - அவர்

------------முகத்தில் புன்னகை இன்னும் கொஞ்சம் 

------------சேர்த்திருக்கலாமோ?


நானின் றிப்படி நலமாய் இருப்பதற் 

கேணிப் படியாய்  இருந்து உதவிய 

மானுடர் பலராம்; நன்றி அவர்க்காய் 

------------இன்னும் கொஞ்சம் நெஞ்சில்மட்டேனும்  

------------நினைத்திருக்கலாமோ?

------------நேரில் சென்றென்  நன்றிக்  கடனை 

------------*நேர்ந்திருக்கலாமோ?                 


என்னை ஈன்ற தாய்தந்தை யுமே  

இன்னுயிர் நீத்தின்  றிறையடி சேர்ந்தபின் 

இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம் 

என்றே நினைந்து  நொந்தால் பயனென்?


இன்னும் கொஞ்சம் செய்தி ருக்கலாம் 

என்றே  தோன்றும் எதையும் கூட 

பையச் செய்வோம் என்றே நினைப்பின் 

ஐயோ அதனைச் செய்யும் காலம் 

கையை விட்டுக் கடந்தே சென்று 

நைதல்*  மட்டும்    நிலைக்கும் !  அதனால்                 * மனம் வருந்துதல் 


"இன்னும் கொஞ்சம்"  என்றே தோன்றும்   

எதையும்    இன்றே செய்தல் நன்றாம் ! 















Nov 18, 2025

பிரதோஷப் பாடல் - 51

பிரதோஷப் பாடல் - 51

சில நாட்கள் முன்பு, எனது பிரதோஷப் பாடல் தொகுப்பின்  50 தாவது பாடலாய் பதிவு செய்து, அதனையுடன் இந்தத் தொகுப்பை  நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டிருந்தேன் . 

ஆனால்  நேற்றைய பிரதோஷத்தன்று மீண்டும் நாகலிங்கேஸ்வரசர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கையில் மனதில் எழுந்த  ஒரு பாடல் இது!

எல்லாம் அவன் செயல்!

அன்புடன் 

ரமேஷ்  




அஞ்சுதலை அரவம் படமெடுத்துக்  குடைபிடிக்க 

நஞ்சுண்ட கண்டனதன் அடியமர்ந்து அருள்புரிய 

அஞ்சுதலை விலக்கி அவன்பாதம் பணியுங்கால் 

செஞ்சிட்ட பாவங்கள் பஞ்சுபோல் பறந்தோடும்! 


Nov 1, 2025

தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

உடலில் தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

இன்று   (1-11-2025)டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி!

முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர்க்கலம் ( toilet cistern ) புகழ் பெற்ற Sotheby என்னும் ஏலம் விடும் நிறுவனத்தாரால் ஏலம் விடப்பட இருக்கிறது! 

இதை அந்த நிறுவனம் " கலையின் வெளிப்பாட்டிற்கும் வணிக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய கூர்மையான விமர்சனம் " (an incisive commentary on the collission of artistic production and commodity value ) என்று விவரத்திருக்கிறது !படிப்பவர்க்குப் புரிந்தால் சரி!

ஏலத்தின் ஆரம்பத்  தொகை சுமார் 90 கோடி ரூபாய்! இதற்கு மேலும் பணம் கொடுத்து வாங்கத்  தயாராக இருக்கும் பைத்தியக்காரப் பணக்காரர்களும் இருப்பார்கள்தான்!

இது குறித்து ஒரு குறும்புக் கவிதை - லிமெரிக் வடிவில்- படித்துச் சிரிக்க !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கத்தாலே செஞ்ச ஒரு பாத்திரம் 

கழித்திடவே தினம் மலஜல மூத்திரம்!

விடு வாராம்  ஏலம்!

உலகம் போற கோலம்!!

நினைச்சாலே பொங்கிவருது ஆத்திரம்! 


Oct 27, 2025

இரண்டு கவிதைகள் - லிமெரிக் வடிவில்

இரண்டு கவிதைகள் - லிமெரிக் வடிவில் 

சென்ற சில பதிவுகள் சற்று ஆழமான கருத்தமைப்பைக் கொண்டிருந்தன.  அவைகளுக்கு முற்றும் மாறுபாட்ட வகையில், லிமெரிக் என்னும் ஒரு குறும்பு வகை சார்ந்த படைப்பை இந்தப் பதிவில் கொடுக்கிறேன். 
இது  ஒரு ஆங்கிலக் கவிதை அமைப்பு. ஒரு ஐந்தடிப் படைப்பு.
1,2 மற்றும் 5-ம்  அடிகளின் ஈற்றுச் சீர் ஒரே சந்தத்துடன்  இருக்கும்.
அது போல் 3,4 ம்  வரிகளின் ஈற்றுச் சீரும் ஒரே சந்தத்தைப்  பெற்றிருக்கும். 1.2 மற்றும் 5 ம் அடிகளை விட இந்த அடிகள் சிறியதாக இருக்கும்.

பொதுவாக இவை குறும்புக் கவிதைகளாக அமைத்திருக்கும்ஹாஸ்ய ரசம் ததும்பும்.
இப்போது இந்த இலக்கணத் திற்கு உட்பட்டு இரண்டு  தமிழ் "லிமெரிக்"குகள்.
முதலாவது , இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டி.
இரண்டாவது டொனால்ட்  டிரம்பின் தன்னிச்சையான  வரிவிதிப்புகள் பற்றியது.
படித்தும், கேட்டும், சிரித்தும் மகிழலாம்!
அன்புடன் 
ரமேஷ் 




ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டம் 




மகளிர் கிரிக்கெட்டின் முதலாவது ஆளு  

அவர்கையில்  இருப்பதுவோ மட்டை இல்லை வாளு 

மந்தானா என்பதவர் பேரு  

நிச்சயமாய் அடிப்பாரு நூறு  

இல்லேன்னா  இன்னான்னு எங்கிட்ட கேளு!.


டொனால்ட்  டிரம்பின் வரிகள் 




அமெரிக்க நாட்டதிபர் டிரம்பு 

அவர்தலையில் முளைச்சிருக்கோர்    கொம்பு?

தன்னிச்சை போலே 

பலநாடுகள்  மேலே 

வரிபோட்டு வரவழைத்தார்  வம்பு 



Oct 17, 2025

தொலையும் தூய்மை

தொலையும்  தூய்மை 

படைப்பு தூய்மையாக இருந்தாலும் , அந்தத் தூய்மைத் தன்மை , வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் போது, சிதைவடைந்துவிடுகிறது! மூலத்திலிருந்து பிரிவது , எப்போதும் தூய்மையின் இழப்பிற்கு வழி வகுக்குமோ?

 

அன்புடன் 

ரமேஷ் 





முகில்விடும் மழைத்துளி தரைவிழும்  வரைதான்

தெரியும் அதன்தன் தனித்துவம் 

தரைதொட்ட உடனே  கரைபல கலந்து  

அதுதன்  தூய்மையைத்  துறந்திடும் 


கருவிட்ட  உயிர்த்துளி  தரைதொடும் வரைதான் 

நிலைத்திடும்  அதனது நிர்மலம்

உருப்பெற்று   உலகுடன் கசடுறக்  கலந்தபின்   

தொலைந்திடும் அதனது நற்குணம் 


காற்றினில் மிதக்கும் அழகிய சிறகுகள்

தரையில் விழுந்ததும்  குப்பைகளே

தோற்றம் மாறா திருப்பினும்  மாற்றம்

பார்ப்பவர் மனதினில் விளைந்திடும் 


தோன்றிய உடனே  எல்லாப் பொருளும் 

தூய்மையில் தோய்ந்து துலங்கிடுமோ?

தாய்மையை விட்டவை  விலகிய உடனே

தூய்மையும்  தேய்ந்தே  மாய்ந்துடுமோ?





Oct 6, 2025

விடை தெரியாக் கேள்விகள்

விடை தெரியாக் கேள்விகள் 


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, "இவை இப்படித்தான்" என்று நிறுவப்பட்டு நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,   அடிப்படை உண்மைகள் சில.  அவை  வளி, ஒளி, நிலம் நீர்,நெருப்பு போன்ற இயற்கைக் சக்திகளின் தன்மைகள்!

அதேபோல் , இம்மனித வாழ்வில் நாம் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிற, தத்துவ விவாதங்களுக்கு அப்பாற்பட்ட,  சில உணர்வுகளும் மதிப்புகளும்  சில உண்டு..  அன்பு, நட்பு, கருணை போன்ற இவைகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் நம் வாழ்வின் இம்மை, மறுமை பற்றிய சில விடை தெரியாக் கேள்விகள் காலம் காலமாக  கேட்கப்பட்டு வருகின்றன. நசிகேதன் என்ற இளைஞன்  எமதர்மனிடன் கேட்ட கேள்விகளும் இவைதான். 

இந்த கேள்விகளுக்கு பதில்,  தத்துவ விவாதங்களில் ஈடுபடுவதை விட, OK அறநெறிக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்தல் மூலமே கிடைக்குமோ?

இது பற்றிய, அலைந்து திரியும் எண்ணங்கள் கொண்ட,  ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 



தென்றலுக்குத் தடையில்லை 

ஒளிக்கதிர்க்கு எடையில்லை

தண்ணீருக்கோர்  வடிவில்லை  

விண்வெளிக்கோ   உடையில்லை  

----------இந்தப் பிறவியின் பொருள் என்ன      

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை   


நட்பை  வாங்கக் கடையில்லை 

கருணைக் கென்றும் மடையில்லை 

அன்பை வெல்லப்  படையில்லை

உயிரை   மிஞ்சிய கொடையில்லை 

----------இப்பிறவிக் கப்பால் இருப்பதென்ன 

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை


நசிகே தனுமே  எமனிடம் எழுப்பிய

இந்தக் கேள்விகள்  புதிதில்லை

பன்னூல் படித்தும் பண்டிதர் உரைத்தும் -நான் 

உணர்ந்து புரிந்திடும்   பதிலில்லை 


விடையே யில்லா,  திருப்பினும் புரியாக்  

கேள்விகள் இங்கே பலவாகும் 

அவற்றின் புரிதலைத்  தேடி அலைந்தால் 

வாழ்நாள் முழுதும் செலவாகும் 


நல்லதை நினைத்து நல்லதைச் செய்து 

நன்றே வாழ்வை நடத்திடுவோம்   

இன்றோ என்றோ இக்கேள் விக்கு  

பதிலும் தானே கிடைத்துவிடும்


அன்புடன் 

ரமேஷ்