Search This Blog

Aug 22, 2020

விநாயக சதுர்த்தி 2020

விநாயக சதுர்த்தி

இன்று விநாயக சதுர்த்தி . இந்த நாளில், முன்பு நான் எழுதி பதிவு செய்த "விநாயகர் பதிகம்" என்ற பதிவை விநாயகரை வணங்கி மறு  பதிவு செய்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்




பாடல்
குறிப்பு .
வானுறை ஈசரும்  ஏனைய தேவரும் 
கானுறை நற்றவ மாமுனிவரும் ---தீநிறை
வேள்விகள் செய்யுமுன் வேண்டி வணங்குவது 
வேழமுகன் பாதம் தனையே                              
                             (1)
எந்தக் காரியத்தையும், , கடவுளர்கள்,பிற தேவர்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் கூட விநாயகனைத் தொழுத  பின்னரே தொடங்குவார்கள். இல்லையேல் காரியம் வெற்றி ஆகாது! சிவபெருமான் ஒரு சமயம் போருக்குச் செல்லுமுன் இதைச் செய்ய மறந்ததால் , அவரது தேர்ச் சக்கரம் உடைந்தது என்பது புராணம்.
காரியம் எதையும் கருதித் தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவரே  --- கரிமுகத்
தூயவன் மாயவன் மருகனுறை கோயிற்கு
போயவன்  காலில் விழுந்து .                                        (2)
தெய்வங்களே   இப்படி என்றால், இவ்வுலகு மாந்தர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பூசித்த பின்னரே காரியம் தொடங்குவர்.
காவியமாம்  பாரதப் பெருங் கதையை பலநூறு
பாயிரமாய்ப்  புனைந்த வியாசரவர் -வாயுரைக்க
தந்தம் உடைத் தந்த வரிகோலால் வரைந்தானை
வந்தனை செய்வோம் வணங்கி .                        (3)
வேதவியாசர் சற்றும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பாரதக் கதையைச் சொல்லவேண்டும் என்றும், அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்லுவதைப் புரிந்து கொண்டு , சற்றும் நிறுத்தாமல் விநாயகர்  எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். அவர் வேகமாக எழுதும்போது எழுதுகோல் உடைந்துவிட்டது! என்ன செய்வது? உடனே விநாயகர் ஒரு தந்தத்தை உடைத்து , அதை எழுத்தாணியாக உபயோகித்து பரதக் கதையை எழுதி முடித்தார்!  அதை விளக்கும் பாடல் இது.
கைலையில் குடிகொண்ட பெற்றோர் தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு  மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப்  பற்று.                       (4)
விநாயகர் பற்றிய கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கதை-- அன்னையையும் தந்தையையும்  வலம் வந்து மாங்கனியைப் பெற்ற கதை.  விளக்கம் எதுவும் தேவையில்லை.      (4)
குறுமுனி  அகத்தியன் கைலயம் சென்றங்
கிருந்து கொணர்ந்ததண்  கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக்  கவிழ்த்துக் காவிரியாகத்  தென்திசை
நிலம்செழிக்க  விட்டவனை  வணங்கு.            (5)
விந்தியமலையின் தெற்குப் பகுதிகளின் தண்ணீர்ப்  பற்றாக்குறையை நீக்க ஒரு ஜீவ நதியை  உருவாக்க அகத்திய முனி கங்கை நீரை  ஒரு மண்டலத்தில் எடுத்து  வந்தார். தென்மேற்கு  மலையில் ஒரு இடத்தில் தன்  கமண்டலத்தை கீழே வைத்து  இளைப்பாறுகையில் , விநாயகர் ஒரு காக்கை வடிவில் வந்து ( ஒரு அந்தணச் சிறுவன் வடிவில் என்றும் சொல்வதுண்டு), அந்தக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அங்கிருந்து காவிரி உற்பத்தி ஆகியது ; அந்த இடம் தான் தலை காவேரி : -என்பது ஐதீகம்.

செவ்விய தமிழிலே பாடல்கள் பலபுனைந்த
அவ்வைக் கிழவிக்கு அருள்செய்து- அவர்தம்மை
கவ்வித் தன்வாயால் கைலாயம் சேர்த்தானை
பவ்(வி)யமாய்ப் பணிவோம் தினம்            (6)               
அவ்வையும் அவரது நண்பர்கலான சுந்தரமூர்த்தி நாயனாரும், சேர மன்னனும் கைலாயம் போகத் திட்டமிட்டார்கள். புறப்படும் நாளன்று அவ்வை விநாயகர் பூஜையில் ஆழ்ந்திருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் போயிற்று. அவர் பூஜையில் ஈடுபட்டிருந்த போதிலே , மற்றவர் இருவரும் கைலாதுக்கு புறப்பட்டு விட்டார்கள்- முன்னவர்   இந்திர லோகத்து  யானை ஐராவதத்தின் மீதும், பின்னவர் அவரது புரவி மேலும் அமர்ந்து. அவ்வையாரின் மனக்கலக்கத்தை அறிந்த விநாயகர் , பூஜை முடிந்ததும் அவரை தன தும்பிக்கையால் தூக்கி கைலாசத்தில்- அவரது நண்பர்கள் அங்கடையும் முன்னே - சேர்த்தார் என்பது வரலாறு.
அருகம்புல் மாலையை அணிவித்து அதனோடு
எருக்கம்பூ சேர்த்தவரைப் * பூசித்து -- உருக்கமுடன்
வேண்டுமடி யார்க்கவர்கள் நாடும்வரம் நல்குவனைத்
தண்டமிட்   டுத்தொழுவம் நாம்.                             (7)
               
* சேர்த்து அவரைப்
                               
இந்தப் பாடலுக்கு விளக்கங்கள் தேவையில்லை. என்றாலும் ஏன் அருகம் புல் விநாயகருக்கு விசேஷம் ? ஒரு கதை உண்டு. ஒரு சமயம் பார்வதியின் கோபத்துக்கு உள்ளாகி சபிக்கப்பட்டார் நந்தி தேவர். சாபம் விலக வழியை அவர் தேவியிடம் வேண்ட, தேவியும் " உனக்குப் பிரியமான ஒன்றை விநாயகருக்கு அர்ப்பணித்துவிட்டால்  சாபம் விலகும்"என்று அருளினார். உடனே நந்தி தேவர் அவருக்குப் பிடித்த உணவான அருகம் புல்லை அர்ப்பணித்ததாகவும் , அதனாலேயே பிள்ளையாருக்கு அருகம்புல் விசேஷம் என்றும் கூறுவர் .
புறஅறிவின் பூரண உருவகமாய் புத்தியினை 
ஒருபுறம் அமர்த்திக் கொண்டு -- மறுபுறம்
மெய்ப்பொருள் தத்துவமாய்  சித்தியை       வைத்திட்ட
அய்ங்கரனி னடிகள் பணிவோம்.                           (8)
பிள்ளையாரை பிரம்மச்சாரியாகவே நாமெல்லாரும் நினத்திருந்தாலும், அவர் பிரஜாபதியின் ( சிலர் பிரமனின் என்பர்) மகளிரான சித்தியையும் புத்தியையும் துணையாக ஏற்றதாகவும் வரலாறு உண்டு.விநாயகர் இருக்கும் இடத்திலே அறிவின் பூரணத்துவத்தைக் காணலாம் என்பதையே சித்தியும், புத்தியும் உணர்த்துகிறார்கள் என்பதின்  உருவகமே இது என்றும் கொள்ளலாம்.
மோதகமும் முக்கனியும் பாலோடு சர்க்கரையும்
சாதித்து சிரம்தாழ்த்தி வணங்கிடின் -- காதலுடன் 
வேதனைகள் நமைச்சேரா! விக்னங்கள் விலகிவிடும்!
தீதகன்று நலம்சேரும் காண்.                                   (9)
" சாதித்து.   சிரம்தாழ்த்தி காதலுடன் வணங்கிடின் "-- என்று படித்துப் பொருள் கொள்க. வேறு விளக்கங்கள் தேவையில்லை
முச்சந்தி தோறும் மரத் தடிகள் மீதும்
எச்சமயமு மர்ந்த்தருள் புரிபவனை   - இச்சையுடன்
மெச் சியே  தொழுவோர்க்கு நலமெலாம் சேருமே
நிச்சயமி தென்றே உணர்.                                      (10)               
பொருள் விளக்கங்கள் தேவையில்லை.
அனைவரும் விநாயகனை வணங்கி நலம் பெறுவோம்!



Aug 11, 2020

கிருஷ்ணாவதாரம் 
கண்ணன் அவதரித்த இன்றைய தினத்தில் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி  ஒரு சிறு பாடல் .
அன்புடன்
ரமேஷ்
பி.கு :
முந்தைய கோகுலாஷ்டமி தினத்தன்று எழுதி பதித்த பாடல்களை கீழ்கண்ட இணைப்புகளில் காணலாம்.
https://kanithottam.blogspot.com/2017/08/blog-post_12.html
http://kanithottam.blogspot.com/2016/08/blog-post_26.html


கிருஷ்ணாவதாரம் 



*இருதாயைப் பெற்று  **இருதாரம் ஏற்று
திரௌபதியைக் காக்க துகிலளித்து - அர்ச்சுனனின்
தேர்ஒட்டி  போர்முடித்து கீதையெனும் நீதியை
பாருக் களித்தகண் ணன்.  

(பல விகற்ப இன்னிசை வெண்பா )


*இருதாய் - பெற்ற  தாய் தேவகி; வளர்த்த தாய் யசோதை. இருவரையும் கண்ணனே தேர்ந்தெடுத்ததால் "இருதாயைப் பெற்று " என்று கூறியுள்ளேன்.

** இருதாரம் - பாமா, ருக்மணி

Aug 7, 2020

அயோத்யா

நேற்று அயோத்தியாவில் நடைபெற்ற பூமி பூஜையை ஒட்டி இரு சிறு பாடல்கள்.

அன்புடன் 

ரமேஷ்  


அயோத்யா 

பாடல் 1

புதையுண்டு பூமியிலே பலகாலம் கிடந்தாலும் 

கதையாய்க் காவியமாய் பக்தர்கள் மனதினிலே 

வதையுண்டு போகாமல் விதையாய் உயிர்வாழ்ந்து 

சிதையாமல் சிதறாமல் விருட்சமாய் வளருதிங்கு !

பாடல் 2

இலக்குமியின் மலர்க்கரம் பற்றி அவள் இடப்புறம்.
இளையநம்பி இலக்குவன் இருப்பதவன்  வலப்புறம். 
இலக்கென்றும்   இழக்காத கோதண்டம் தோளிலே. 
இலங்கையை எரித்திட்ட  அனுமந்தன் தாளிலே. 
வலக்கையை உயர்த்தியே   வரங்கள் வழங்குவான் !
கலக்கங்கள் விலக்கிடும் ஸ்ரீராமன் தரிசனம். 

Aug 1, 2020

பிரதோஷப் பாடல் -35


பிரதோஷப் பாடல் -35

இன்றைய பிரதோஷப் பாடல் சிவபெருமானின் அறுபத்திநான்கு  திருவிளையாடல்களில் ஒன்று. 
வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தை திருவிடைமருதூர்த் தலத்தில் இறைவன் போக்கியது பற்றியும், பின்பு அவனுக்கு சிவலோக தரிசனம் தந்து அருளியதைப் பற்றியும் இந்தப் பாடலில் கூறியுள்ளேன்.

அன்புடன் 

ரமேஷ் 

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் 



அறியாம லேயோர் அந்தணனைக் கொன்றதால் 
--------- பிடித்ததோர்  தோஷத் தினை  
சரிசெய்யும் வழிகாட்டி வரகுண வழுதிக்கு 
----------திருவிடை மருதூர்த் தலப் 
புரியிலே அருள்செய்து சிவலோக தரிசனம் 
----------காட்டியே மீட்டுவந் தான். 
திரிபுர மெரித்தவன் விரிசடை வேதியன் 
----------திருவிளை யாடலிது வாம்   

பாடற்பொருள் :

வரகுணபாண்டியன் காட்டில் வேட்டையாடித் திரும்புகையில் அறியாமல் அவனது குதிரையின் காலில் மிதிபட்டு ஓர் அந்தணன்  இறந்ததால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அந்த தோஷம் இறைவனருளால்   திருவிடைமருதூர்த் தலத்தில் வழிபட்டதும் விலகியது. அதன்பின், சிவலோக தரிசனம் செய்ய விரும்பி வேண்டிய  பாண்டியனுக்கு, இறைவன் அவ்வாறே அத்தரிசனம் கிடைக்குமாறு  அருளினான். 

The story in English :

Varaguna pandian , the Pandiya King, was returning after a hunting trip. At that time, his horse unknowingly trod on a Brahmin who was lying down by the road side and the Brahmin lost his life. Unaware of this the King returned to his palace.  Because of this the King became afflicted with Brahmahaththi dosham (curse). The next day, when the King came to know of this, he was stricken with sorrow.  He donated lot of wealth to the relatives of the deceased and also performed various religious rites as enjoined in the scriptures. But still the curse could not be neutralised and the King was subjected to mental torture. As advised by the learned elders, he went around the temple of Lord Somasekarar  a thousand times for ten days. Upon completion,  he was accosted by a celestial voice which said "Soon there will be a battle between you and the Chola King during the course of which you will defeat and chase the Chola King  and will reach Thiruvidaimaruthoor. There you will have the Darshan of the deity and your curse  will leave you". The events unfolded as described by the celestial voice. Varagunapandian chased the Cholan and reached Thiruvidaimaruthoor and entered the temple through the eastern gate. The Brahmahaththi could not enter the holy site and was left standing outside the gate. The Lord blessed the King and advised him to leave the temple through the western gate, leaving the Brahmahaththi waiting at the eastern gate! The King did as he was told and got cured of the curse. Later he felt an urge to have the darshan of the Lord at His celestial seat. The Lord granted his wish by bringing the Sivalokam down to Madurai  briefly and enabled the King to have a blissful Darshan of the celestial abode of Shiva!

The story in Tamil: 



மதுரையை ஆண்டு வந்த வரகுண பாண்டியன் வேட்டையாடியபின் காட்டிலிருந்து திரும்பும்போது, அவனறியாமல் அவனது குதிரை வழியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன் மீது ஏறி, அவன் உயிரிழக்க நேர்ந்தது. இது அவன் அறியாமல் நடந்ததெனினும், அரசனை ப்ரம்மஹத்தி தோஷம் வந்தடைந்தது. இறந்தவர் குடும்பத்திற்கு வேண்டிய பொருளுதவிகள் செய்தும், முறைப்படி செய்யவேண்டிய பரிகாரங்களை செய்தும் அந்த தோஷம் நீங்காது அவனை வாட்டியது. அறிஞர்கள் உரைப்படி, மன்னன் சோமசேகரர் திருக்கோவிலை தினமும் ஆயிரம் முறை வலம் வந்தான். பத்து நாட்கள் வலம் வந்தபின், வானிலிருந்து ஒரூ குரல்  " பாண்டியனே! இன்னும் சிலநாட்களில், சோழ மன்னன் உன்னோடு போர் தொடுப்பான். அவன் போரில் தோற்று ஓடுகையில் நீ அவனைத் துரத்தி திருவிடைமருதூர்த்தலம் வருவாய். அங்கு எம்மைத் தரிசனம் செய்தபின் உன் தோஷம் விலகும்" என ஒலித்தது!அவ்வாறே சில நாட்களுக்குப் பின் சோழன் மதுரை மீது போர் தொடுக்க, பாண்டியனும்  அப்போரில் சோழனை வென்று அவனைத் துரத்தி மருதூர்த் தலம் அடைந்து, கோவிலின் கிழக்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தான். அவன் கோயிலின் உள்ளே  நுழைகையில் அவனைப் பிடித்திருந்த ப்ரம்மஹத்தி அந்தப் புண்ணியத்தலத்தினுள் நுழைய முடியாமல் வெளியிலேயே நின்றது! பாண்டியன் இறைவனை வணங்க, தோஷம் நீங்கஅருள் செய்த இறைவனும் பாண்டியனை கோவிவிலின் மேற்கு வாசல் வழியே வெளியேறப் பணித்தான். பாண்டியனும் அவ்வாறே செய்து ப்ரம்மஹத்தி தோஷம் விலகப் பெற்றான். பின்பொரு சமயம். வரகுணபாண்டியன் சிவலோகத்தில் பெருமான் வீற்றிருக்கும் காட்சியைக்  காண விழைந்து அவரை வேண்ட, சிவபெருமானும் சிவலோகத்தை  மதுரையம்பதிக்கே வரவழைத்து, மன்னன் கண்குளிர தரிசிக்கச் செய்தான்.