Search This Blog

Apr 28, 2019

நிலவும் பேத்தியும் - 3

நிலவும் பேத்தியும் - 3

பேத்திகளைப்  பற்றிய இன்னொரு பாடல்.
எல்லா தாத்தாக்களுக்கும் , பாட்டிகளுக்கும்  சமர்ப்பணம்.

அன்புடன்
ரமேஷ்




மஞ்சில்* மறைந்த மதியுன்னை
பிஞ்சுக் கரங்கள் தமைநீட்டி
கொஞ்சிக் கொஞ்சி வாவென்று
கெஞ்சி அழைக்கும் என்பேத்தி
குஞ்சுக் குரலுன் காதுகளில்
கொஞ்சம் கூட விழவில்லையா?
இரங்கி அவள்குரல் நீகேட்டு
இறங்கி நீயும் வருவாயேல்
உறங்கி அவள் கண் மூடியபின்
திரும்பி நீயும் சென்றிடலாம்
                                                                                           ( வஞ்சி விருத்தம் )

                                                                               
* மஞ்சு = மேகம் 

Apr 23, 2019

நிலவும் என் பேத்தியும் -2

குழந்தையின் முக அழகுக்கு முன் , தன அழகு தோற்றுவிடும் என்றெண்ணி, "அவள் அழைக்கையில் இறங்கி வரமாட்டேன்" என்று அடம் பிடிக்காமல் இறங்கி வா, வெண்ணிலவே 

Second in my line of poems on " The moon and my Granddaughter". ( I have three!).

Dear Moon, You know that your beauty pales in comparison to the beauty of my Grand Daughter. But because of that do not refuse to come down and play with ther , when she is calling you" !


அன்புடன் 

ரமேஷ் 





நிலவும் என் பேத்தியும் -2



வட்ட நிலவேயென் பேத்தி அழகுக்கு
கிட்ட உனதழகு வாரா  தெனவெண்ணி
எட்டி இருக்காதென்  செல்லம்   அழைக்கையில்
அட்டி* புரியாமல்  வா 

(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

அட்டி = பிடிவாதம் 

Apr 22, 2019

வயநாட்டில் ராகுல்

வயநாட்டில் ராகுல்

செய்திகள் : 
உத்தர பிரதேஷ் அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டி இடும்  ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவார்.

இது பற்றி ஒரு சிறு பாடல்.

அன்புடன் ரமேஷ் 

சுயவூரை விட்டு அயலூரைத் தேடி 
வயநாடு போன காரணம் என்ன?
தயங்காமல் கூறு; தவறேதும் இல்லை;
பயத்தாலே தானோ? பரையணும்* சாரே!

* பரையணும் - மலையாள வார்வார்த்தை - இதன் பொருள் , "சொல்ல வேண்டும்" என்பது


Apr 21, 2019

தோனி அண்ட் சி,எஸ் .கே

லிமெரிக் (LIMERIK)- ஒரு குறும்புக் கவிதை.
-தோனி அண்ட் சி,எஸ் .கே  பற்றி 



ஆங்கிலக் கவிதை வகைகளில் லிமெரிக் (LIMERIK) என்று ஒரு வகைஇது ஒரு ஐந்தடிப் படைப்பு.


1,2 மற்றும் 5-ம்  அடிகளின் ஈற்றுச் சீர் ஒரே சந்தத்துடன்  இருக்கும்
அது போல் 3,4 ம்  வரிகளின் ஈற்றுச் சீரும் ஒரே சந்தத்தைப்  பெற்றிருக்கும். 1.2 மற்றும் 5 ம் அடிகளை விட இந்த அடிகள் சிறியதாக இருக்கும்
இது எனக்குத் தெரிந்த இலக்கணம்.
பொதுவாக இவை குறும்புக் கவிதைகளாக அமைத்திருக்கும்.   ஹாஸ்ய ரசம் ததும்பும்.
இப்போது இந்த இலக்கணத் திற்கு உட்பட்டு ஒரு தமிழ் "லிமெரிக்".
இப்போது நடக்கும் ஐ.பி.எல் மற்றும் சென்னை அணியின் கேப்டன் தோனியைப் பற்றியது.

படித்துக்  கருத்துக் கூறுங்கள்!

அன்புடன்

ரமேஷ்




 CSK    தல    ரொம்பக்           கூலு 
அடிப்பாரு    six     லாஸ்ட்     பாலு 
     அவர் பேரு    தோனி 
     மேட்ச் பாக்க வாநீ 
விசில் போட்டு கிளப்பலாம் தூளு

Apr 17, 2019

தமிழ்நாடே முதல் - ஆனால் தலை நிமிர முடியலே!

தேர்தலில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்த பணத்தை வருமான வரி அதிகாரிகள் கிட்டுக்கிப் பிடி போட்டு பிடித்து வருகிறார்கள். மாகாண வாரியாக பிடிபட்ட பணப்  பட்டியல் வெளியாகியிருக்கிறது.
அதில் இன்றைய நிலவரப்படி , தமிழ் நாடு முதலிடம் பெற்றிருக்கிறது!
சாதாரணமாக, முதலிடம் பெற்று சாதனை புரிந்தவர்  தலை நிமிர்ந்து நடப்பார்.
ஆனால் இந்த முதலிடம் -----??????

அன்புடன்

ரமேஷ்

தமிழ்நாடே முதல் ; ஆனால்-------- 
தலைநிமிர முடியலே!


தமிழ்நாடே முதல் - ஆனால் தலைநிமிர முடியலே!
தமிழ்நாடே முதல் - ஆனால் தலைநிமிர முடியலே!
பறிமுதல்  பணப் பட்டியலில்  நம்நாடு முழுவதில்  
தமிழ்நாடே முதல்-ஆனால் தலைநிமிர முடியலே!

காட்பாடியில் வேட்பாளரும் கணக்கில்வரா பணத்தையே 
ஓட்டுப்போட நோட்டுகொடுக்க கட்டுக்கட்டா அடுக்கினார் 
வருமான வரிவாரியப் பொறியில் அவர் சிக்கவே 
தேருதல்   நடக்கும் நாளையே தள்ளிப்போட லாச்சுதே 

ராதாகிருஷ்ணன் நகர்தொடங்கி அரவங் குறிச்சி அதனுடன் 
போதாதற்கு தஞ்சாவூரு தொகுதியுமே தொடர்ந்தது 
ரத்துசெய்த தேர்தல்லிஸ்ட்டு இன்றுமீண்டும்  வளருது 
கத்திக்கத்தி என்னசெய்ய? காதில்யார்க்கும் கேட்கலே !

திட்டமிட்டு செய்யும்இந்த திருட்டுக்காரி யத்திலே 
தமிழ்நாடே முதல் - ஆனால் தலைநிமிர முடியலே!
உமிழ்ந்துகாரித்  துப்பினாலும் ஒருவருக்கும் உரைக்கலே !
தமிழ்நாடே முதல் - ஆனால் தலைநிமிர முடியலே!






பிரதோஷப் பாடல் - 16

பிரதோஷப்  பாடல் - 16


இன்று பிரதோஷம். 
பரமசிவனைத் துதித்து ஒரு  பாடல்.

அன்புடன் 
ரமேஷ் 




நந்தியை விலக்கியே நந்தனுக்கு தரிசனம் 
தந்தபரம சிவனையே இந்தநல்ல நாளிலே 
சிந்தையில் நிறுத்தியே வந்தனங்கள் செய்வரேல் 
எந்ததுன்பம் நேரினும் வந்தவழி திரும்புமே 

Apr 14, 2019

விகாரிப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


விகாரிப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

விகாரி என்னும் புத்தாண்டின் 
-----யுகாதி* நாளின்று பிறக்கையிலே 
விகாரம் விலக்கிய சமுதாய 
-----சகாப்தம் தொடங்கிட வாழ்த்துக்கள் 

மிகாத அளவில் மழை பெய்து 
-----நதிகள் நிரம்பிட வாழ்த்துக்கள் 
தகாத செயல்கள் செய்தவர்கள் 
-----திகாரில் அடைபட வேண்டுதல்கள் 

சகோத ரத்துவம் பெருகிடவும் 
-----சமதர் மங்கள் நிலைத்திடவும் 
மகோன்னத மகிமை நம்நாடு 
------அடைந்து முன்னே சென்றிடவும்  

இவ்வாண் டனைத்தும்  இனிதாகி 
-----செய்காரியங்கள் சிறந்திடவும்
வெவ்வினை விட்டே அகன்றிடவும் 
-----செவ்வேள் சண்முகன் அருள்புரிக.

* யுகாதி = யுக+ஆதி =ஆண்டின் (யுகத்தின்) முதலாவது 

அன்புடன் 
ரமேஷ் 
www.kanithottam.blogspot.com

Apr 11, 2019

திருவிளையாடல் பாடல் - 12

திருவிளையாடல் பாடல் - 12

நீண்ட நாட்களுக்குப்  பிறகு மீண்டும் திருவிளையாடல் புராணத்தைத் தொடருகிறேன் .
படித்து மகிழ்ந்து , கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 

உக்கிர பாண்டியருக்கு வேல், வளை , செண்டு கொடுத்த படலம் 









மணப்பருவ மடைந்திட்ட  மகனுக்ர வர்மர்க்கு  மனவூரின் மன்னன் பெற்ற
குணவதியாம் கன்னி மகள் காந்திமதி என்பாளை கடிமணம் கட்டிவைத்து 
செண்டோடு எரிவளையு மதன்கூட கூர்வேலும் கொடுத்தரி யணையி லமர்த்தி 
விண்ணூர்தி மேலேறி உமையன்னை யுடன் சேர்ந்து கைலாசம் சென்றடைந் தார் 

பாடற்பொருள்

சுந்தரபாண்டியராக பாண்டியநாட்டை ஆண்டு வந்த சிவபெருமான் , தன் மகனான முருகக் கடவுளின் அவதாரமாகிய உக்கிரவர்மனுக்கு ,மனவூரின் மன்னன் மகளான காந்திமதியை மனம் புரிவித்து அவனை மகுடம் சூட்டி மன்னனாக்கினார். அவ்வேளையில் உக்கிரவர்மனுக்கு , வளை , வேல் , செண்டு ஆகிய ஆயுதங்களை  அளித்து அருள் புரிந்து தடாகைப் பிராட்டியோருடு தேவலோக விமானமேறி கைலாயம் அடைந்தார். 

The story in Tamil

பன்னெடுங்காலம் ஆட்சி செய்து வந்தபின், சுந்தரபாண்டியரான சிவபெருமான், தன் துணைவி தடாதகைப் பிராட்டியாரோடு கைலாசம் செல்ல விழைந்தார். அதற்கு முன் , தன மகனும், முருகப் பெருமானின் அவதாரமுமான தன மகன் உக்கிரவர்மனுக்கு மணமுடித்து , பின் முடிசூட்டிட விழைந்தார். மதுரையின் வடக்கே உள்ள மணவூரை ஆட்சி புரிந்து வந்த சோமசேகரன் என்னும் சூரிய குலா அரசனின் மகளான காந்திமதி என்பாளை தேர்ந்தெடுத்தார். குலவதியும் , திருமகளை ஒத்த  அழகுடையாளுமான காந்திமதியை உக்கிரசேனர் மங்கலநாண் பூட்டி மணமுடித்தார்.
அதன் பின் ஓர்நாள் , சுந்தரபாண்டியர், தன மகனை அழைத்து,   இந்திரன் , கடலரசுன் , மேரு ஆகியோரை  வெல்ல வல்ல வளை , வேல், செண்டு ஆகிய மூன்று ஆயுதங்களையும் அளித்து அருளினார். பின் உக்கிரவர்மனுக்கு மகுடம் சூட்டி அரியணையில் அமர்த்தி, தன துணையோடு கைலாசம் சென்றடைந்தார்.

The story in English

Lord Siva, who ruled the Pandiya Kingdom , as King Sundarapandian, for a long , long, time, desired to  hand over the reins of the kingdom to his son , Ukravarman,( who himself was a avthar of Lord Muruga) after getting him married. The search for a suitable bride followed and Kanthimathi, the daughter of Somasekaran, ruler of Manavoor, situated on the north of Madurai was chosen. Soon after the marriage celebrations, King Sundarapandian called his son , crowned him the as the Pandya King and gave him three armaments - a boomerang, a spear and a whip- which were to be used by him in the battles with Indra , Varuna and the Mount Meru. After completing his task, He ascended to Kailasam with his consort.  

ஒப்புகை  :  இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படம் shaivam.org தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 












Apr 10, 2019

நிலவும் என் பேத்தியும் -1

நிலவும் என் பேத்தியும் -1

தொடரும் என் பேத்திகள் புராணத்தில் இன்று ஒரு வெண்பா பாடல் !

அன்புடன் 

ரமேஷ் 


பேத்திகள் 







வட்ட நிலவுமிகக்    கிட்ட இருக்கென்று
எட்டிப் பிடிக்கவே   என்பேத்தி எத்தனிக்க  
பட்டுக் கரங்களும்  பட்ட   நிலவினொளி
பட்டப் பகலாச் சுதே

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)


Apr 2, 2019

பிரதோஷப் பாடல் - 15


சில மாதங்களுக்குப் பின், இன்றைய பிரதோஷப் பாடல்!

அன்புடன்

ரமேஷ்

பிரதோஷப் பாடல் - 15

நஞ்சுதன்னைத் தான ருந்தி தேவர் தம்மைக் காத்தவன்
செஞ்சடைவி ரித்து கங்கை தாங்கி தரையில் சேர்த்தவன்
அஞ்செழுத்து மந்தி ரத்தை ஓதி யவனை வேண்டினால்
அஞ்சலென்றும் தேவை யில்லை அமர லோகம் கிட்டுமே !