Search This Blog

Showing posts with label philosophy. Show all posts
Showing posts with label philosophy. Show all posts

Dec 13, 2025

இன்னும் கொஞ்சம் ----

இன்னும் கொஞ்சம் ---- 


இன்னும் கொஞ்சம் ----

அன்பை வெளிப்படுத்தவும், கருணையைக் காட்டவும் , உதவி செய்யவும், பிறர் நமக்குச்  செய்த உதவிகளுக்கு  நன்றியைத் தெரிவிக்கவும் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்டு பின் நினைத்து வருந்துவது என்பது நம்  அனைவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒன்று. நாம் செய்ய நினைத்து , செய்யாமல் தள்ளிப் போட்ட சிலவற்றை செய்யவே முடியாமல் போய்விடுமுன், இன்றே, இப்போதே, செய்துவிடலாமே !

அன்புடன் 

ரமேஷ்  




என்னைப்   பெற்ற தந்தையும்  தாயும்  

முன் அவர் தனியாய் வாழ்ந்த போதிலும் 

பின்னென் னுடனே சேர்ந்த்திருக் கையிலும் 

------------இன்னும் கொஞ்சம் நேசமும் நெருக்கமும் 

------------காட்டி இருக்கலாமோ 

------------என் அன்பை அவர்க்கு நன்றாய்த் தெரியச்    

------------செய்தி ருக்கலாமோ 


இன்வாழ்வுப் பொருள்* எதுவும் வேண்டாம்       * luxury goods 

என்றுரைத்தே அவர் ஏற்க மறுத்தாலும்

என்னால் அந்நாள்  இயன்ற வரையில்      

------------இன்னும் கொஞ்சம் ஏதேனும் நான் 

------------செய்திருக்கலாமோ?

 ------------இன்னும் அவர்க்கு வாழ்க்கை வசதிகள் 

------------சேர்த்திருக்கலாமோ?  


நெருங்கிய நண்பர் அருகில் இருந்தும் 

நேரே  சந்தித் துரையாடாமல் 

இணைய தளத்தில் இணைவதைக் குறைத்து O

------------இன்னும் கொஞ்சம் தடவைகள் நேரில் 

------------பார்த்திருக்கலாமோ ?

------------அவர் கூட நடந்து  நினைவில் நெகிழ்ந்து கை 

------------கோர்த்திருக்கலாமோ? 


என்னிடம் உதவி கேட்டு அணுகிய 

முன்பின் அறியா முகங்களுக்கும்

அன்புடன் இருந்த உறவுகளுக்கும்    

------------இன்னும் கொஞ்சம் கூட உதவிகள் 

------------செய்திருக்கலாமோ? - அவர்

------------முகத்தில் புன்னகை இன்னும் கொஞ்சம் 

------------சேர்த்திருக்கலாமோ?


நானின் றிப்படி நலமாய் இருப்பதற் 

கேணிப் படியாய்  இருந்து உதவிய 

மானுடர் பலராம்; நன்றி அவர்க்காய் 

------------இன்னும் கொஞ்சம் நெஞ்சில்மட்டேனும்  

------------நினைத்திருக்கலாமோ?

------------நேரில் சென்றென்  நன்றிக்  கடனை 

------------*நேர்ந்திருக்கலாமோ?                 


என்னை ஈன்ற தாய்தந்தை யுமே  

இன்னுயிர் நீத்தின்  றிறையடி சேர்ந்தபின் 

இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம் 

என்றே நினைந்து  நொந்தால் பயனென்?


இன்னும் கொஞ்சம் செய்தி ருக்கலாம் 

என்றே  தோன்றும் எதையும் கூட 

பையச் செய்வோம் என்றே நினைப்பின் 

ஐயோ அதனைச் செய்யும் காலம் 

கையை விட்டுக் கடந்தே சென்று 

நைதல்*  மட்டும்    நிலைக்கும் !  அதனால்                 * மனம் வருந்துதல் 


"இன்னும் கொஞ்சம்"  என்றே தோன்றும்   

எதையும்    இன்றே செய்தல் நன்றாம் ! 















Oct 17, 2025

தொலையும் தூய்மை

தொலையும்  தூய்மை 

படைப்பு தூய்மையாக இருந்தாலும் , அந்தத் தூய்மைத் தன்மை , வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் போது, சிதைவடைந்துவிடுகிறது! மூலத்திலிருந்து பிரிவது , எப்போதும் தூய்மையின் இழப்பிற்கு வழி வகுக்குமோ?

 

அன்புடன் 

ரமேஷ் 





முகில்விடும் மழைத்துளி தரைவிழும்  வரைதான்

தெரியும் அதன்தன் தனித்துவம் 

தரைதொட்ட உடனே  கரைபல கலந்து  

அதுதன்  தூய்மையைத்  துறந்திடும் 


கருவிட்ட  உயிர்த்துளி  தரைதொடும் வரைதான் 

நிலைத்திடும்  அதனது நிர்மலம்

உருப்பெற்று   உலகுடன் கசடுறக்  கலந்தபின்   

தொலைந்திடும் அதனது நற்குணம் 


காற்றினில் மிதக்கும் அழகிய சிறகுகள்

தரையில் விழுந்ததும்  குப்பைகளே

தோற்றம் மாறா திருப்பினும்  மாற்றம்

பார்ப்பவர் மனதினில் விளைந்திடும் 


தோன்றிய உடனே  எல்லாப் பொருளும் 

தூய்மையில் தோய்ந்து துலங்கிடுமோ?

தாய்மையை விட்டவை  விலகிய உடனே

தூய்மையும்  தேய்ந்தே  மாய்ந்துடுமோ?





Oct 6, 2025

விடை தெரியாக் கேள்விகள்

விடை தெரியாக் கேள்விகள் 


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, "இவை இப்படித்தான்" என்று நிறுவப்பட்டு நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,   அடிப்படை உண்மைகள் சில.  அவை  வளி, ஒளி, நிலம் நீர்,நெருப்பு போன்ற இயற்கைக் சக்திகளின் தன்மைகள்!

அதேபோல் , இம்மனித வாழ்வில் நாம் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிற, தத்துவ விவாதங்களுக்கு அப்பாற்பட்ட,  சில உணர்வுகளும் மதிப்புகளும்  சில உண்டு..  அன்பு, நட்பு, கருணை போன்ற இவைகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் நம் வாழ்வின் இம்மை, மறுமை பற்றிய சில விடை தெரியாக் கேள்விகள் காலம் காலமாக  கேட்கப்பட்டு வருகின்றன. நசிகேதன் என்ற இளைஞன்  எமதர்மனிடன் கேட்ட கேள்விகளும் இவைதான். 

இந்த கேள்விகளுக்கு பதில்,  தத்துவ விவாதங்களில் ஈடுபடுவதை விட, OK அறநெறிக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்தல் மூலமே கிடைக்குமோ?

இது பற்றிய, அலைந்து திரியும் எண்ணங்கள் கொண்ட,  ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 



தென்றலுக்குத் தடையில்லை 

ஒளிக்கதிர்க்கு எடையில்லை

தண்ணீருக்கோர்  வடிவில்லை  

விண்வெளிக்கோ   உடையில்லை  

----------இந்தப் பிறவியின் பொருள் என்ன      

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை   


நட்பை  வாங்கக் கடையில்லை 

கருணைக் கென்றும் மடையில்லை 

அன்பை வெல்லப்  படையில்லை

உயிரை   மிஞ்சிய கொடையில்லை 

----------இப்பிறவிக் கப்பால் இருப்பதென்ன 

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை


நசிகே தனுமே  எமனிடம் எழுப்பிய

இந்தக் கேள்விகள்  புதிதில்லை

பன்னூல் படித்தும் பண்டிதர் உரைத்தும் -நான் 

உணர்ந்து புரிந்திடும்   பதிலில்லை 


விடையே யில்லா,  திருப்பினும் புரியாக்  

கேள்விகள் இங்கே பலவாகும் 

அவற்றின் புரிதலைத்  தேடி அலைந்தால் 

வாழ்நாள் முழுதும் செலவாகும் 


நல்லதை நினைத்து நல்லதைச் செய்து 

நன்றே வாழ்வை நடத்திடுவோம்   

இன்றோ என்றோ இக்கேள் விக்கு  

பதிலும் தானே கிடைத்துவிடும்


அன்புடன் 

ரமேஷ் 



Sep 4, 2025

அமைதிப் பள்ளத்தாக்கில்....

அமைதிப் பள்ளத்தாக்கில்......


"அமைதிப் பள்ளத்தாக்கில்" அமர்ந்து எழுதிய ஒரு பாடல்! 

அன்புடன் 

ரமேஷ்.



எண்ணக் குவியல்களின் இரைச்சல்களைத் துறந்து 

அண்ட வெளிபரப்பின்  ஆழத்திற் குள்பறந்து 

அமைதிப்  பள்ளத்தாக்கில்    தனியாகவே    அமர்ந்து  

இமைமூடி எண்ணத்தின்  சுமையிறக்கி சுவாசிக்கிறேன்


மவுனமெனும் மொழியில்நான் எழுதியபல  கவிதைகளையென் 

செவிமட்டும் கேட்டுணர ரகசியமாய் வாசிக்கிறேன்

இயற்கையின் இடையமர்ந்து  மோனநிலை மடியமர்ந்து 

தனிமைதரும் இனிமையினை  நானுணர்ந்து  நேசிக்கிறேன் 

  

கண்மூடித்  தவமிருந்து என்னையே  நான்திறந்து 

இப்பிறவியின் காரணமே  என்னவென யோசிக்கிறேன்

ஒளிவளிவெளி நிலம்நீரை  எண்ணற்ற உயிரினத்தை 

படைத்தும் காத்தும் அழிக்கும் இறைவனைநான் பூசிக்கிறேன் 


என்னுள்ளே யேயிறைவன் இருக்கின்றான் என்றாலோ  

கண்டுணரும் வரத்தையவன்  வழங்கிடவே யாசிக்கிறேன்


அன்புடன்

ரமேஷ் 



  




முத்தமிட முகில்தொட்டு நீண்டுயர்ந்த மலைநடுவில் 

சத்தங்கள்  என்றென்றும் சேராத தானதொரு 


Aug 10, 2025

உரசல்

உரசல்கள் பலவிதம்!
சில உரசல்கள் மென்மையானவை. 
வேறு சில வன்மையானவை.
வெவ்வேறு விதமான உரசல்கள் விளைக்கும் விளைவுகள் பற்றி ஒரு கற்பனை!
அன்புடன் 
ரமேஷ் 

உரசல் 

8




மலையோடு  முகிலுரச மழை பிறக்கும்
மலரோடு காற்றுரசி  மணம் பரப்பும்.
கல்லோடு உளியுரச சிலை பிறக்கும்
சொல்லோடு கருத்துரச கவி பிறக்கும்

மண்ணோடு நீருரச பயிர் தழைக்கும்
வண்டோடு மலருரசி தேன் சுரக்கும்  
கண்ணோடு கண்ணுரச காதல் பிறக்கும் 
பெண்ணோடு ஆணுரசல்  சரசம் ஆகும்  

பஞ்சோடு பொரியுரச தீ பிறக்கும் 
நெஞ்சோடு நினைவுரச துயர் மறக்கும் 
வாளோடு வாளுரச வீரம் பிறக்கும் 
தோளோடு தோளுரச நட்பு தழைக்கும் 

தென்றல்குழ லுரசுகையில் இசை பிறக்கும்
கன்றுதாய் மடியுரச பால் சுரக்கும்
உன்னோடு  உன்னையே உரசிக் கொண்டால்
உண்மையெது என்கின்ற ஞானம் பிறக்கும்.
 

அன்புடன் 

ரமேஷ் 








Jun 19, 2025

தியானம்

தியானம் 



மண்மீது பாய்விரித்து கண்மூடிக் கால்மடித்து 
எண்கணக்கில் என்மூக்கால் உயிர்வளியை உள்ளிழுத்து 
நுரையீரல் தனைநிரப்பி, உள்நிறுத்தி, வெளியேற்றி
சுவாசத்தின் சுழற்சியிலே என்னைநான் இழக்கின்றேன்
மவுனத்தில்  முழுகுகிறேன்; அமைதியினைத் தழுவுகிறேன் 
கவனங்கள் வழுவாமல்  தியானத்தைப் பழகுகிறேன் 

உடலெனும் உடையிழந்து, எண்ணத்தின்   எடையிழந்து 
புவியீர்ப்பின் தடையிழந்து வானத்தில் மிதக்கின்றேன்
இறக்கைகள் இல்லாமல் பறக்கின்றேன்- இவ்வுலகின் 
இணைப்புகள் யாவையும் துண்டித்துத் துறக்கின்றேன்.
மோனப் பெருவெளியில்  மவுனத்தின் அவயத்தில்*  
நானிங்கு நிறைகின்றேன்;  மனக்கவலை மறக்கின்றேன் 

உள்ளிழுத்து உள்நிறுத்தி வெளியேற்றும் சுழற்சியிலே 
என்மனதின் சிந்தனையின் இயக்கத்தை  இழக்கின்றேன் 
பேரண்ட ஆற்றல் பரப்பினொரு  சிறுதுளியே
நானென்று உணருகிறேன்; அதில்மூழ்கிப் புணருகிறேன் 
என்னுள்ளே இருக்கின்ற எனையுணர முயலுகிறேன். 
இத்தேடல் வெற்றியுற தியானத்தைப் பயிலுகிறேன். 


* அவயம் = இரைச்சல் 

அன்புடன் 

ரமேஷ் 




 

 

Dec 10, 2024

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்!

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்!

வயது கூடக்  கூட , நாம் நமது  குழந்தைப் பருவத் தூய்மைகளையும் , அப்பருவத்திற்கே உரிய குதூகலங்களையும் தொலைத்துவிட்டு உழலுகிறோம்.  நம்மில் பலரும் அவ்வப்போது உணரும் இந்த உணர்வை  ஒரு  பாடலாக வடித்திருக்கிறேன்! 

சற்று நீளமான பாடல்! இருந்தாலும் கேட்டும்  படித்தும்   ஒத்துணர்வீர்கள் என்று நம்புகிறேன்!

அன்புடன் 
ரமேஷ் 

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை 
எங்கோ தொலைத்து விட்டேன்!




என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 

  

சின்னச் சின்ன குறும்புகள் செய்து மகிழ்ந்ததை மறந்து  விட்டேன் 

வன்மம் நில்லா வெள்ளை மனதை வெளியே துறந்து  விட்டேன்

துள்ளல் சிரிப்பை உள்ளக்  களிப்பை  என்றோ  துறத்தி  விட்டேன்  

கள்ளம் கபடம் இல்லா உள்ளம்  எங்கோ  விரட்டி  விட்டேன்

       என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

      உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 

 

விழுந்து காயம் பட்ட இடத்தில் அப்பா  முத்தம் இட்டால்     

விலகிடும் வலிகள் என்று  நம்பிய அப்பா வித்தன உறுதி  !  

புத்த கத்தில்   பத்திர மாக பதுக்கி வைத்த மயிலிறகு

சத்தியமாக  போடும் மறுநாள் குட்டி என்ற நம்பிக்கை!      

இத்தகு   உறுதியும்  நம்பிக் கைகளும்  இருந்த வெள்ளை மனதை  

          என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

          உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


ஏமாற் றங்கள் ஏற்பட் டாலும் அதையே மனதில் நிறுத்தி  

ஏமா ராமல்* உடனே அடுத்த  அனுபவம்  தேடும் குணங்கள்  

சூழ்ச்சி களங்கம் குற்றம்  இவைகள் எதுவும் இல்லா மனது   

தாழ்த்துதல் உயர்த்துதல் காழ்ப்புகள் இனப்பிற குணமெதும்  சேராப்  பண்பு  

வாழ்க்கையின் உயரிய  இத்தகு  முறைமைகள்  நிறைந்து  இருந்த மனதை   

          என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

          உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


வண்ணப் பூச்சிகள் பறப்பதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்த   காலம்  

விண்ணில் மின்னும் விண்மீன்களை  எண்ணி வியந்த நேரம் 

நண்பர் களுடன் நேரம் தெரியாமல் பேசிக் கழித்த பருவம்  

கொண்டாட் டங்கட்கு  குறைவில் லாமல் குதித்துக் களித்த காலம்   

இவைகளை நினைவில் நிறுத்திச் சிரித்துக் களித்த காலம் கடந்து  

கவலைகள் மட்டும் ஏனோ மனதில் நிலைகொண் டிருக்குமிந்  நேரம்

எல்லாம் இருந்த போதும் எதுவோ குறைந்ததைப் போல் தோன்றும் 

எதுவும் புரியா தேனெனத் தெரியா நெஞ்சை   நெருடிடும் பாரம்

         என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

         உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


இன்றையப்  பொழுதை   இனிதாய்க் கழித்து இருப்பதை  முற்றும் மறந்து

முன்தினம் நடந்து முடிந்த  ஒன்றை   மனதில் இருத்தி வருந்தி 

நாளையப் பொழுதின் நடப்புகள் நினைத்து கவலையில் மூழ்கிக் கழித்து

நாளின் றிதையே  நன்றாய் கழிப்பதை    நானே மறந்து விட்டேன். 

        என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

       உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


என்னுள் எங்கோ புதைந்து கிடைக்கும் சின்னக் குழந்தை மனதை 

இன்றே தேடி எடுத்து அதனை மீண்டும் மீட்டு  வருவேன் 

எங்கும் இன்பம் எதிலும் இன்பம் காணும் அந்த மனதை 

தங்கல்** தவிர்த்து எந்தன் மனதில் இன்றே உயிர்க்க வைப்பேன்.

 

ஏமாராமல் = மனம் கலங்காமல்

**தங்கல்=தாமதித்தல்



 



 





 


Nov 14, 2024

பிறவித் துறத்தல்

பிறவித் துறத்தல் 




விண்ணும் மண்ணும் ஒன்றை  யொன்று நின்று சேரும் கோட்டினை 

என்றும் நாம் நடந்து சென்று அடைய  முடிவ   தில்லைபோல்   

என்னுளே யேயுள்ள னென்று எவரும் கூறும்  இறைவனை 

'சின்ன தூரம்' ஆயினும் அடைய முடிவ தில்லையே!


கண்ணை மூடி காதை  மூடி கால்மடக்கி அமர்ந்தபின் 

எண்கணக்கில் எண்ணி மூச்சை இழுத்தடக்கி விடுகையில் 

எண்ணம் பலவும் எந்தன் உள்ளே வந்து வந்து போவதால் 

என்கணக்கில் இறைவன் ஏட்டில் புண்ணியங்கள்  ஏறுமோ?


வந்து போன நாட்க ளில் செஞ்ச பாவ புண்ணியம் 

இன்னும் மீதி நாட்களில் செய்யப்  போகும் காரியம் 

முந்தை யப்பல பிறவியில் முடிந்து வைத்த மிச்சமும்   

இந்த யாவும் இணைந்ததே இப் பிறவியின் அப்புறம் 


ஜன்ம ஜன்ம மாய்த்  தொடர்ந்து இன்னும் வருமிப் பின்னலில்  

இன்ப துன்பம் மீண்டும் மீண்டும் முடிவில் லாமல் வருவதை

நின்று போகச் செய்திடும் நல்வழி யொன் றுண்டெனின்     

என்னுள் உள்ள இறைவனை யான் கண்டு கொண் டுணர்வதே  


ஏட்டில் இந்த உண்மையை மீட்டும் மீட்டும்* படிக்கிறேன் 

பாட்டில் இந்த உண்மையை எழுதி ஏட்டில் பதிக்கிறேன் 

சேட்டை செய்யும் மனதி லிந்த  உண்மை என்று ஒட்டுமோ 

 நாட்கள் பலவும் நீளுமுன்    தேட்டம்** தீர்ந்து தெளியுமோ

*மீட்டும்=மீண்டும் 

**தேட்டம் = தேடுதல் 


அன்புடன் 

ரமேஷ் 



 







Sep 5, 2024

இறப்பில்லாமல் இருப்பது எப்படி?

இந்தப் பதிவிற்கு முன்னுரையும், விளக்கங்களும்  தேவையில்லை!

அன்புடன் 

ரமேஷ் 


இறப்பில்லாமல்  இருப்பது எப்படி?


புதைத்தால் ஆறடி எரித்தால் ஓர்பிடி 

இதைத்தான் அடைவோம் இறுதியிலே 

அதைத்தான் விதித்தான் ஆண்டவன் நமக்கு 

அதனை மாற்றுதல் இயலாதே!

எதைத்தான் நம்முடன் எடுத்துச் செல்வோம் 

எதுவும் நம்முடன்  வருவதில்லை - (நாம்) 

விதைக்கும் நற்செயல்  விளைக்கும் பயன்மட்டும்  

நிலைத்தே  நம்பின் வாழ்ந்திருக்கும் ! 

முதுமூப் படைந்து உயிர்த்துளி உதிருமுன் 

விதைகளை இன்றே ஊன்றிடுவோம்! 

இதை நாம் செய்தால் மற்றவர் மனதினில் 

இறப்பில் லாமல் வாழ்ந்திடலாம்!




Oct 31, 2023

முகங்கள்

இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவை இல்லை!

அன்புடன் 

ரமேஷ் 

முகங்கள் 




உனக்கென்று ஓர் முகம் உறவுக்கு ஓர்முகம் 

ஊராருக் கெனவேறு பலமுகம் 

மனையாளுக் கொருமுகம் மக்கட்கு ஒருமுகம்

தனியாக ஒவ்வொருவர்க் கொருமுகம்   

  

அனல்கக்கி தணல்வீசும் சினமுகம்  

மகிழ்வோடு முறுவலிக்கும்   மலர்முகம் 

தனவானுக் கோர்முகம் தரித்திரர்க் கோர்முகம்

இனங்கண்டு கணப்பொழுதில்  மாறும்.   


கணக்கின்ற பலமுகம் ஊரார் உலகுக்கு 

உருவாக்கி உலவவே விட்டேன் 

எனக்கென்று என்னோடு ஜனித்திருந்த தனிமுகத்தை 

எங்கயோ நான்தொலைத்து விட்டேன் 


வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு முகங்களை 

அணிந்தே உலவுகிற தாலே 

எவ்வா றிருக்கும் என்முகம் என்றே 

என்றோ நான் மறந்து விட்டேன் 


கனக்கின்ற மனதோடு கேட்கிறேன் அம்முகத்தை 

கண்டவர் யாரேனும்  உண்டோ?

அனுதாபம் என்மேல் கொண்டம் முகத்தை 

அடையாளம் காட்டவே வேண்டும்!

 



Sep 16, 2023

தேடல்

 தேடல் 






நதியின் தேடல் கடலில் முடியும் 

கடலின் தேடல் கரையில் முடியும் 

பகலின் தேடல் இரவில் முடியும் 

இரவின் தேடல் பகலாய் விடியும்

  

கண்களின் தேடல் காட்சியாய் விரியும் 

வண்டின் தேடல் மலரில் முடியும் 

மலர்களின் தேடல் முடியும் இடமோ 

சரமாய்ச் சூடிய மங்கையர் முடியே. 


அம்பின் தேடல் இலக்கில் முடியும்

அன்பின் தேடல் உறவில் முடியும்

கல்லின் தேடல் சிலையாய் முடியும் 

சொல்லின் தேடல் கவிதையில்  முடியும் 

 

ராகத்தின் தேடல் பாடலில் முடியும் 

தேகத்தின் தேடல் மோகத்தில் முடியும்

மேகத்தின்  தேடல் மழையில் முடிந்து 

தாகம் தீர்க்கத்  தரையில் இறங்கும் 


தேடல் எவைக்கும் அவற்றின்  முடிவில்

விடையும்  ஒருநாள்   கிடைத்திடும் ; ஆனால் 

தேடுவ தெதையெனத்   தெரியா தெதையோ*            

தேடுமென் தேடற்கு  விடையென்று கிடைக்கும்?  


* தெரியாது எதையோ

    





  




Jul 3, 2023

படைப்பின் தொடக்கம்?

படைப்பின் தொடக்கம்? 

சில நாட்களுக்கு முன்  சசி தரூரின் The Hindu Way என்ற ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் முதலாம் அத்தியாயத்திலே இந்தப் பிரபஞ்சம்  எப்படித் தோன்றியது என்ற மர்மத்தைப் பற்றி ஆராயும்  நாஸடீய ஸுக்தம் என்னும் ஒரு ஸ்லோகத் தொகுப்பைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இது ருக் வேதத்தின் ஒரு பகுதி. பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுதப்பட்ட இந்தப் பாடல் தொகுப்பிற்கும் இந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த BIG BANG என்னும் கோட்பாட்டுக்கும் இடையே  வியக்கத்தகு ஒற்றுமை  காணப்படுகிறது! 

முந்தியதோ தவ ஞானிகள் உள்ளுணர்ந்த உண்மை! சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சுக்தம் என்னும் துதி.

பிந்தைய கோட்பாடு அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சம்! இதை நம் முன்னோர்கள் அன்றே உணர்ந்திருந்தார்களா?

இது பற்றி மேலும் அறிந்துகொள்ள சில புத்தகங்களை படித்தேன். இந்த ருக்வேதப் பாடல்களின்   தமிழ்ப் பொருளை tamilandveda.com  என்ற blog ல் படித்தேன். லண்டன்  சுவாமிநாதன் என்பவரின் பதிவு அது. 

இந்த சுக்தத்தின் ஏழு பாட்லகளின் பொருளை மேற்குறிப்பிட்டுள்ள பதிவிலிருந்து எடுத்து கீழே கொடுத்திருக்கிறேன் . ஒவ்வொரு பாடலின் பொருளுக்குப் பின்னும் என் வார்த்தைகளில் பாடல் வடிவில் புனைந்திருக்கிறேன். 

படித்து உங்கள் கருத்தையும் பதியுங்களேன்!

அன்புடன

ரமேஷ் 



    

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

உளதாம் தன்மையும் இலதாம் தன்மையும்           existence and  nonexistence -

உண்மையும் இன்மையும் அன்றங் கில்லை 

வெளியும் அதன்மேல் வானும் இல்லை 

எங்க திருந்தது? எதுவதை மறைத்தது?

-----அளவிட முடியா ஆழத்  தடியில்

-----உயிர்த்துளி உண்டோ? அறிவார் யாரோ? 


2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

இறப்பு என்பது அன்றங் கில்லை 

இறவாத் தன்மை என்பதும் இல்லை 

இரவெனப் பகலெனப் பிரிவினை இல்லை 

தானே தனித்துத் தன்னிறைவடைந்த 

-----ஒருவன் மட்டும் வெறுமையில் இருக்க 

-----வேறோர் எவரும்  அன்றங் கில்லை 

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

இருளை இருளே போர்த்தி இருக்க 

இருளுள் உயிர்த்துளி ஒளிந்து கிடக்க  

அண்டம் முழுதும் அந்த காரமாய் 

வெறுமை எங்கும்  நிறைந்தே இருக்க

-----உருவம் இல்லா   அருவனாம் அவன் 

-----வெம்மையின் ஆற்றலால் உயிர்பெற் றெழுந்தான்

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

ஆதியில் எழுந்தது ஆசை என்பது 

அதுவே மனதில் விதையு மானது 

முதுபே  ரறிஞரின் தேடலி னாலவர் 

இதயத் துள்ளோர் ஒளி பிறந்தது 

-----உளதி லதென்ற விரண்டின் இடையிலே 

-----துலங்கும் தொடர்பும் தெரிய வந்தது.

5.அந்தக் கயிறு இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

சூனிய மான வெறுமையி னுள்ளே 

ஞானிகள் பார்வை நீண்ட போதிலே 

விருப்பத்தின் விதையினின் றெழுந்த சக்தியே 

விருட்சமாய் வளர்ந்து வெடித்ததை உணர்ந்தார்.

-----உள்ளே உள்ள மாபெரும் ஆற்றலே 

----வெளியே விரிந்தெங்கும் வியாபித் திருந்தது


6. யாருக்குத் தெரியும்? யார் இதைச் சொல்ல முடியும்? அது எப்போது தோன்றியது? இந்த படைப்பு என்பது எப்போது ஏற்பட்டது ?படைப்புக்குப் பின்னரே (நாம் இன்று வணங்கும்) கடவுளர் வந்தனர். அப்படி இருக்கையில் இது எப்போது தோன்றியது என்பதை எவர் அறிவார்?

படைப்பு முதலாய் நிகழ்ந்த  தெப்படி ? 

இடமும் நேரமும் அறிந்தவர் உண்டோ?

கடவுளர் தோன்றலும் படைப்பின் பின்னெனின் 

நடந்தது எதுவென யாரே உரைப்பர்?


7. எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? இல்லையா? யார் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த ஒருவனுக்கே  அது தெரியும்; அவனுக்கே தெரியாமலும் இருக்கலாம்!


மூலமிப் படைப்பின் காரணம்*  எதுவோ?              *இப்படைப்பின் மூலகாரணம் 

காலமிந் நிகழ்வைக்* கணித்தவர் எவரோ?           *இந்நிகழ்வின் காலத்தைக் 

மேலிருந் தனைத்தையும் நோக்கிடும் ஒருவன் 

வாலறிவன் இதன் விடையறி வானோ?

-----ஒருகால் அவர்க்கும் இதுதெரி யாதோ?

-----புரியா மருமத்தின் விடைகிடை யாதோ?