Search This Blog

Dec 27, 2022

கடலோரக் காட்சி

 

கடலோரக் காட்சி 

நண்பர் அரவிந்த் பகிர்ந்து கொண்ட படம். அது பற்றி ஒரு பாடல்.

இப்பாடலுக்கு விளக்கம் தேவையில்லை.

அன்புடன் 

ரமேஷ் 





அரவம் இன்றி இரவின் மடியில் 

-----இன்னும் உறங்கும் நகரங்கள் 

இருளைப் பிளந்து கண்கள் சிமிட்டும் 

-----தெரு ஓரத்து மின்மினிகள் 

சிறிதே வெளுத்து சாம்பல் நிறத்தில்

-----சிற்றலை ததும்பும் சமுத்திரங்கள் 

அருணன் வரவை மறைக்கும் சிறுதிரை 

-----அரைச் சாம்பல்நிற மேகங்கள் 

பிறிதோர் காலை அரும்புமித் தருணம் 

-----செந்நிறச் சாயலில் ஒளிர்வானம் 

பரிதியின் கதிர்முழு வான்நிறைக்  கும்வரை  

-----மேலே மிதக்கும் மேகங்கள் 

தரிசனம் செய்ய இக்காட்சியின் அழகை 

-----இவ்விரு கண்கள் போதாதே  

Dec 22, 2022

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை 


இந்த மார்கழித் திங்களன்று அதிகாலையில் எழுந்து கண்ணனை வணங்கக்  கூறும் ஒரு சிறு பாடல் - தமிழ் வாக்கிய வடிவமைப்பைக் குறிக்கும் சில வார்த்தைகளின் -  (எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை ) --சிலேடைப்  பயன்பாட்டுடன் !

அன்புடன் 

ரமேஷ் 





எழுமின் திசை*யில் கதிரவன் எழுமுன் 

எழுவாய் தினமுமிம் மார்கழி மாதம். 

குழுவாய்க் கோவில் சென்றே தொழுவாய்  

குழலூ திடுவோன் கண்ணன் கழலை. 


வியலகம்** வாழும் உயிர்நிலை அனைத்தும் 

உயர்நிலை அடைய வணங்கித்  ^^ துதித்தல் 

செயப்படு(ம்) பொருளை பாடுதல் அன்றி 

அயலுரை*** யேதும் பயனிலை,  இலையே !


எழுமின் திசை = கிழக்கு 

** வியலகம் = பூமி 

*** அயலுரை = பிற பேச்சுகள் 

^^  துதித்தல் செயப்படு(ம்) பொருள் = துதிக்கப்படும் இறைவன் 

Dec 7, 2022

எனக்குப் பின்னால் என்னாகும்?

 எனக்குப் பின்னால் என்னாகும்?




 

படிப்பேன் என்று வாங்கிவைத்து 
-----புதிதாய் இன்னும் படிக்காமல் 
அடுக்கி வைத்த புத்தகங்கள் 
-----எனக்குப் பின்னல் என்னாகும்?

விரைவாய் ஒருமுறை எழுதியபின் 
-----வரைவு நிலையிலே காத்திருக்கும் 
பழுதைத்  திருத்தா எழுத்துக்கள் 
-----எனக்குப் பின்னல் என்னாகும்?

வேலை செய்யும் காலத்தில் 
-----வாங்கித் தெய்த்த வெளியாடை 
இணங்கும் வண்ண வடிவமைப்பில் 
-----அழகாய் அமைந்த கீழாடை 

துணிஅடுக்கிலே இடமடைக்கும்.    
------தூக்கி எறியென்றால்   மனம் துடிக்கும்- அக்  
கோட்டும் சூட்டும் கழுத்துப்பட்டையும்      
----- எனக்குப் பின்னல் என்னாகும்?

வெளிநாடு சென்ற வேளைகளில் 
------வாங்கிய அருங்கலைச்  சின்னங்கள்*          *curios  
நிறையடுக்குகளை நிறைக்கு மிவைகள்
------ எனக்குப் பின்னல் என்னாகும்?

ஒருக்கால்  வருநாள் உதவுமென      
------- பரணையில் திரட்டிய  பொருள்களையே   
ஒருநாளும்  நான்  எடுத்ததில்லை -- இவை 
-------எனக்குப் பின்னல் என்னாகும்?


இவ்வினாக் களுக்கெலாம்  விடைகிடைக்கலாம்        
-------விடையே தெரியாக் கேள்வியிதே !
ஒவ்வோர் நாளும் எனைநான் கேட்பேன்      
-------நானே என்பின் என்னாவேன்? 


அன்புடன் 

ரமேஷ்