Search This Blog

Showing posts with label kavithaigal. Show all posts
Showing posts with label kavithaigal. Show all posts

Apr 19, 2026

எந்தன் மகனே கோவிந்தா-----

 எந்தன்  மகனே கோவிந்தா-----

இது தேர்தல் நேரம். இந்த வாரத்திறுதியில் தமிழகத்தில் தேர்தல். 

இந்தத் தருணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிப் பதித்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஓட்டுப் போடப் போகும் ஒரு தந்தை தன் மகனுக்கு தேர்தலைப் பற்றி சொல்லித் தருவதாக எழுதினேன்.

எவ்வளவு ஆண்டுகள் ஆனால் என்ன? நிலமை அதேதான்!

இதோ அந்தப் பாடல்.

அன்புடன்

ரமேஷ்





மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும்  கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே


தந்தை
எந்தன்  மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால்  நீயும் என்னுடனே 
---இடைஞ்ச  லாக இருந்திடுமே.


மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா  தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.


தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ; 
---நாளை  இந்நாட்டின் தலைவன் நீ .. 
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள 
-----பாடம்   உனக்கே சொல்வேன்நான்.


மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!


தந்தை
சேரர்,  பாண்டியர்  சோழரென 
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும்  மன்னர்  ஆகிடலாம் 
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர்  பெரிய   குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில்   மந்திரி  ஆக்கிடுவோம்.


மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி   ஒருவர்   வந்தபின்னே
---அவர்க்கும்  கப்பம் கட்டணுமோ ?


தந்தை
காரியம் நமக்கு  நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.


மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்  
---தலைமுறை  தோறும்  தொடருமென்பார்
மந்திரி   இவர்கள்  ஆட்சியுமே
---தலைமுறை  ஆகத்  தொடர்வதென்ன?


தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள் 
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.


மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?


தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின்  அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே 
---"சாவ   டிக்கிறார்" அதனாலே.


மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே  
---ஆசை,  அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே

 
தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே  பொறுத்திடுவாய் .


மகன்
பதினெண்  வயது வேண்டுவது 
----நாட்டில்  நிலவும்  சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்? 

----எனக்கதை நீயே சொல்வாயா?

தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே 
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே 
-----பதினெட்   டாண்டுகள் பிடித்திடுமே!.


மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள் 
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும்  முட்டாள் ஆகிவிட்டு   
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.

Apr 14, 2026

பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து

 பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து 

முன் குறிப்பு:

இந்தப் புத்தாண்டின் பெயர் பரபாவ ஆண்டா அல்லது பராபவ ஆண்டா?  நான் கீழே கொடுத்துள்ள தமிழ்ப்பெயர்கள் பட்டியலின் படி இதன் பெயர்  பரபாவ ஆண்டு. பஞ்சாங்களில்  குறிப்புட்டுள்ளபடி இது பராபவ  ஆண்டு. நான் இந்தப் பாடலில் பரபாவ ஆண்டு என்றே குறிப்பிட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் , பாடலில்  கூறப்பட்டுள்ள கருத்துகளும், எண்ணக்கிடக்கைகைகளும், எதிர்பார்ப்புகளும் மாறாதவையே!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.

அன்புடன் 

ரமேஷ் 


உலக நிறை*வென்ற விசுவாசு ஆண்டிங்கு 

கலகங்கள் பலநிறைந்த ஆண்டாக முடிவடைய 

அருள்தோற்றம்* என்கின்ற பரபாவ ஆண்டின்று 

தரையிறங்கும் வேளையிலென் புத்தாண்டு வாழ்த்துக்கள் 


குறுகியதோர் கடலிடுக்குக் கால்வாயில் கப்பல்கள் 

மறுபடியும் தடையின்றித் தவழ்ந்திடவே வாழ்த்துக்கள் 

கால்வாயை விடமிகவும் குறுகிய மனமுடையோரின் 

கோல்மால்கள் குறைந்தொழிய கவிஞன் என் வாழ்த்துக்கள் 


டிரம்ப் போன்ற கோமாளித் தனத்தோரை விட்டெறிந்து 

திறம்படைத்தோர் ஆட்சியினை அமெரிக்கர் பெற்றிடவும்  

நடுகிழக்கு நாடுகளில் உக்ரேனில் ருஷ்யாவில் 

நடக்கின்ற கடும்போர்கள் முடிந்திடவும் வாழ்த்துக்கள்  


எரிவாயு எண்ணெய் கரி இவைசார்ந்த ஆலைகளை 

சரிபாதி அளவேனும் குறைத்துஅணு சக்தியொடு 

வளிஒளியைச் சார்ந்த உற்பத்தித் திறன்பெருக்கும் 

வழிகண்டு நாம் விரைவில் வளம் பெறவும் வாழ்த்துக்கள் 


சகோதரத்  துவம்பெருகி சமதர்மம் நிலைத்திடவும் 

விகாரங் கள்விலக்கி வாழ்வாங்கு வாழ்ந்திடவும் 

பரபாவப் புத்தாண்டில் பாரதம்பெரும் வளம்பெறவும் 

அரன்,அரி பிரம்மன்எனும் முத்தேவர் அருள்புரிக 



* உலக நிறைவு= விசுவாசம் ; அருள்தோற்றம்= பிரபாவம் - இவை சென்ற, இந்த ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள். முழு அறுபது ஆண்டுகளின் தமிழ்ப்  பெயர்கள் இதோ!



Dec 13, 2025

இன்னும் கொஞ்சம் ----

இன்னும் கொஞ்சம் ---- 


இன்னும் கொஞ்சம் ----

அன்பை வெளிப்படுத்தவும், கருணையைக் காட்டவும் , உதவி செய்யவும், பிறர் நமக்குச்  செய்த உதவிகளுக்கு  நன்றியைத் தெரிவிக்கவும் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்டு பின் நினைத்து வருந்துவது என்பது நம்  அனைவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒன்று. நாம் செய்ய நினைத்து , செய்யாமல் தள்ளிப் போட்ட சிலவற்றை செய்யவே முடியாமல் போய்விடுமுன், இன்றே, இப்போதே, செய்துவிடலாமே !

அன்புடன் 

ரமேஷ்  




என்னைப்   பெற்ற தந்தையும்  தாயும்  

முன் அவர் தனியாய் வாழ்ந்த போதிலும் 

பின்னென் னுடனே சேர்ந்த்திருக் கையிலும் 

------------இன்னும் கொஞ்சம் நேசமும் நெருக்கமும் 

------------காட்டி இருக்கலாமோ 

------------என் அன்பை அவர்க்கு நன்றாய்த் தெரியச்    

------------செய்தி ருக்கலாமோ 


இன்வாழ்வுப் பொருள்* எதுவும் வேண்டாம்       * luxury goods 

என்றுரைத்தே அவர் ஏற்க மறுத்தாலும்

என்னால் அந்நாள்  இயன்ற வரையில்      

------------இன்னும் கொஞ்சம் ஏதேனும் நான் 

------------செய்திருக்கலாமோ?

 ------------இன்னும் அவர்க்கு வாழ்க்கை வசதிகள் 

------------சேர்த்திருக்கலாமோ?  


நெருங்கிய நண்பர் அருகில் இருந்தும் 

நேரே  சந்தித் துரையாடாமல் 

இணைய தளத்தில் இணைவதைக் குறைத்து O

------------இன்னும் கொஞ்சம் தடவைகள் நேரில் 

------------பார்த்திருக்கலாமோ ?

------------அவர் கூட நடந்து  நினைவில் நெகிழ்ந்து கை 

------------கோர்த்திருக்கலாமோ? 


என்னிடம் உதவி கேட்டு அணுகிய 

முன்பின் அறியா முகங்களுக்கும்

அன்புடன் இருந்த உறவுகளுக்கும்    

------------இன்னும் கொஞ்சம் கூட உதவிகள் 

------------செய்திருக்கலாமோ? - அவர்

------------முகத்தில் புன்னகை இன்னும் கொஞ்சம் 

------------சேர்த்திருக்கலாமோ?


நானின் றிப்படி நலமாய் இருப்பதற் 

கேணிப் படியாய்  இருந்து உதவிய 

மானுடர் பலராம்; நன்றி அவர்க்காய் 

------------இன்னும் கொஞ்சம் நெஞ்சில்மட்டேனும்  

------------நினைத்திருக்கலாமோ?

------------நேரில் சென்றென்  நன்றிக்  கடனை 

------------*நேர்ந்திருக்கலாமோ?                 


என்னை ஈன்ற தாய்தந்தை யுமே  

இன்னுயிர் நீத்தின்  றிறையடி சேர்ந்தபின் 

இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம் 

என்றே நினைந்து  நொந்தால் பயனென்?


இன்னும் கொஞ்சம் செய்தி ருக்கலாம் 

என்றே  தோன்றும் எதையும் கூட 

பையச் செய்வோம் என்றே நினைப்பின் 

ஐயோ அதனைச் செய்யும் காலம் 

கையை விட்டுக் கடந்தே சென்று 

நைதல்*  மட்டும்    நிலைக்கும் !  அதனால்                 * மனம் வருந்துதல் 


"இன்னும் கொஞ்சம்"  என்றே தோன்றும்   

எதையும்    இன்றே செய்தல் நன்றாம் ! 















Nov 1, 2025

தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

உடலில் தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

இன்று   (1-11-2025)டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி!

முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர்க்கலம் ( toilet cistern ) புகழ் பெற்ற Sotheby என்னும் ஏலம் விடும் நிறுவனத்தாரால் ஏலம் விடப்பட இருக்கிறது! 

இதை அந்த நிறுவனம் " கலையின் வெளிப்பாட்டிற்கும் வணிக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய கூர்மையான விமர்சனம் " (an incisive commentary on the collission of artistic production and commodity value ) என்று விவரத்திருக்கிறது !படிப்பவர்க்குப் புரிந்தால் சரி!

ஏலத்தின் ஆரம்பத்  தொகை சுமார் 90 கோடி ரூபாய்! இதற்கு மேலும் பணம் கொடுத்து வாங்கத்  தயாராக இருக்கும் பைத்தியக்காரப் பணக்காரர்களும் இருப்பார்கள்தான்!

இது குறித்து ஒரு குறும்புக் கவிதை - லிமெரிக் வடிவில்- படித்துச் சிரிக்க !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கத்தாலே செஞ்ச ஒரு பாத்திரம் 

கழித்திடவே தினம் மலஜல மூத்திரம்!

விடு வாராம்  ஏலம்!

உலகம் போற கோலம்!!

நினைச்சாலே பொங்கிவருது ஆத்திரம்! 


Oct 17, 2025

தொலையும் தூய்மை

தொலையும்  தூய்மை 

படைப்பு தூய்மையாக இருந்தாலும் , அந்தத் தூய்மைத் தன்மை , வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் போது, சிதைவடைந்துவிடுகிறது! மூலத்திலிருந்து பிரிவது , எப்போதும் தூய்மையின் இழப்பிற்கு வழி வகுக்குமோ?

 

அன்புடன் 

ரமேஷ் 





முகில்விடும் மழைத்துளி தரைவிழும்  வரைதான்

தெரியும் அதன்தன் தனித்துவம் 

தரைதொட்ட உடனே  கரைபல கலந்து  

அதுதன்  தூய்மையைத்  துறந்திடும் 


கருவிட்ட  உயிர்த்துளி  தரைதொடும் வரைதான் 

நிலைத்திடும்  அதனது நிர்மலம்

உருப்பெற்று   உலகுடன் கசடுறக்  கலந்தபின்   

தொலைந்திடும் அதனது நற்குணம் 


காற்றினில் மிதக்கும் அழகிய சிறகுகள்

தரையில் விழுந்ததும்  குப்பைகளே

தோற்றம் மாறா திருப்பினும்  மாற்றம்

பார்ப்பவர் மனதினில் விளைந்திடும் 


தோன்றிய உடனே  எல்லாப் பொருளும் 

தூய்மையில் தோய்ந்து துலங்கிடுமோ?

தாய்மையை விட்டவை  விலகிய உடனே

தூய்மையும்  தேய்ந்தே  மாய்ந்துடுமோ?





Oct 6, 2025

விடை தெரியாக் கேள்விகள்

விடை தெரியாக் கேள்விகள் 


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, "இவை இப்படித்தான்" என்று நிறுவப்பட்டு நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,   அடிப்படை உண்மைகள் சில.  அவை  வளி, ஒளி, நிலம் நீர்,நெருப்பு போன்ற இயற்கைக் சக்திகளின் தன்மைகள்!

அதேபோல் , இம்மனித வாழ்வில் நாம் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிற, தத்துவ விவாதங்களுக்கு அப்பாற்பட்ட,  சில உணர்வுகளும் மதிப்புகளும்  சில உண்டு..  அன்பு, நட்பு, கருணை போன்ற இவைகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் நம் வாழ்வின் இம்மை, மறுமை பற்றிய சில விடை தெரியாக் கேள்விகள் காலம் காலமாக  கேட்கப்பட்டு வருகின்றன. நசிகேதன் என்ற இளைஞன்  எமதர்மனிடன் கேட்ட கேள்விகளும் இவைதான். 

இந்த கேள்விகளுக்கு பதில்,  தத்துவ விவாதங்களில் ஈடுபடுவதை விட, OK அறநெறிக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்தல் மூலமே கிடைக்குமோ?

இது பற்றிய, அலைந்து திரியும் எண்ணங்கள் கொண்ட,  ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 



தென்றலுக்குத் தடையில்லை 

ஒளிக்கதிர்க்கு எடையில்லை

தண்ணீருக்கோர்  வடிவில்லை  

விண்வெளிக்கோ   உடையில்லை  

----------இந்தப் பிறவியின் பொருள் என்ன      

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை   


நட்பை  வாங்கக் கடையில்லை 

கருணைக் கென்றும் மடையில்லை 

அன்பை வெல்லப்  படையில்லை

உயிரை   மிஞ்சிய கொடையில்லை 

----------இப்பிறவிக் கப்பால் இருப்பதென்ன 

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை


நசிகே தனுமே  எமனிடம் எழுப்பிய

இந்தக் கேள்விகள்  புதிதில்லை

பன்னூல் படித்தும் பண்டிதர் உரைத்தும் -நான் 

உணர்ந்து புரிந்திடும்   பதிலில்லை 


விடையே யில்லா,  திருப்பினும் புரியாக்  

கேள்விகள் இங்கே பலவாகும் 

அவற்றின் புரிதலைத்  தேடி அலைந்தால் 

வாழ்நாள் முழுதும் செலவாகும் 


நல்லதை நினைத்து நல்லதைச் செய்து 

நன்றே வாழ்வை நடத்திடுவோம்   

இன்றோ என்றோ இக்கேள் விக்கு  

பதிலும் தானே கிடைத்துவிடும்


அன்புடன் 

ரமேஷ் 



Oct 1, 2025

கலைமகளைத் தொழுதிடுவோம்

கலைமகளைத் தொழுதிடுவோம்


நவராத்திரியின் கடைசி நாளான நவமித் திதி , நாம் கலைமகளைப் பூசிக்கும் தினம். 

மனத்தின்,  ஆன்மாவின் தூய்மையைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சிதரும் அன்னை தன்  கரங்களில் ஏந்தியிருக்கும் வீணையும் , புத்தகமும்  குறிப்பது கலைகளின் இணைப்பை.

கல்விக்குத்  தெய்வமாக நாம் மட்டும் சரஸ்வதியை வழிபடுவதில்லை.  பல மதத்தினரும், பண்பாட்டினரும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு உருவங்களில் கல்வித் தேவதைகளை வணங்கி வந்திருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் இந்த பண்பாடுகள்  அழிந்து போன போது, அவைகளுடன்  இந்த  வழிபாட்டு முறைகளும்  சிதைந்து போயின. ஆனால் நம் பாரதப் பண்பாடும், அப்பண்பாட்டின் சின்னங்களான வெவ்வேறு வழிபாட்டு முறைகளும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன.

இன்று நாம் கலைமகளைப்  பூசிக்கும் இத்தினத்தில், கலைமகளைப்  பற்றியும் ,  வேறு பண்பாடுகளில் - மதங்களில்-  குறிப்பிடப்பட்டு  வணங்கப்பட்ட கல்வித் தெய்வங்களைப்  பற்றியும் ஒரு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில் !

அனைத்துக் கல்வித் தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டுதலுடன் 

உங்கள் அன்பின் 

ரமேஷ்  





வெண்பட்டு ஆடை உடுத்தாளின், தன்கரத்தில் 

பண்ணெழுப்பும் வீணை எடுத்தாளின்- தண்கருணைக்* 

கண்பார்வை பட்டாலே நற்கல்விக் கண்திறக்கும் 

மண்வாழும் மாந்தர்க்கெல் லாம்  


மற்ற மதங்களிலும் பண்பாட்டுச்  சாரலிலும்  

ஓத்தபிற தெய்வங்கள் உண்டாமே - பட்டியல் 

இட்டவற்றைப் பார்ப்போம் சரஸ்வதியை நாம்வணங்கும் 

சத்தான நன்னாளில்  இன்று   




அப்பாலோ ஆணென்றும்#  அத்தீனா பெண்ணென்றும்# 

செப்பித்  தொழுதார்  கிரேக்கர்-  அதன்முன்னர் 

மெர்க்குரி ஆணென்றும்  பெண்மினர் வாவென்றும்   

ரோமர்கள் பேரிட்ட  னர் 





BENZEITEN

ஷிண்டோ மதத்தினரின் ஆண்கடவுள் தென்ஜின்னே !  

பெண்கடவுள் பென்சய்ட்டென் வாக்தேவி**  யின்னுருவாம்  !

ஈகிப்து நாட்டினரின் ஆண்பெண்பால்  தெய்வங்கள் 

தோத்துடன் சேஷத்தும் தான்!  


  

வேற்றுப்பண் பாட்டினர்கள் தம்கல்வித் தேவதையை   

போற்றி வணங்குவதை  விட்டே மறந்தாலும்    

இந்தியப்பண் பாட்டாரோ  நெஞ்சில் நிலைநிறுத்தி 

வந்தனை செய்கின்றார்  நன்று   


* தண் கருணைக்  கண்  = குளிர்ந்த,  கருணைகாட்டும் விழி 

** வாக்தேவி = சொல்லின் அரசி. . 

பென்சய்ட்டன்  என்னும் பெண் தெய்வம், சரஸ்வதியைப் போன்றே கையில் ஓர் இசைக்கருவியை ஏந்தியிருப்பதைக் காணலாம் 

# மற்ற பண்பாடுகளில் கல்வித் தெய்வங்களாக, பெண் தெய்வத்தோடு ,ஒரு ஆன் தெய்வமும் குறிப்படப்பட்டுள்ளதைப்  பார்க்கலாம். நம் பண்பாட்டிலும், விநாயகரை ஆண்  கல்வித் தெய்வமாக வழிபடுதல் உண்டு.


Sep 4, 2025

அமைதிப் பள்ளத்தாக்கில்....

அமைதிப் பள்ளத்தாக்கில்......


"அமைதிப் பள்ளத்தாக்கில்" அமர்ந்து எழுதிய ஒரு பாடல்! 

அன்புடன் 

ரமேஷ்.



எண்ணக் குவியல்களின் இரைச்சல்களைத் துறந்து 

அண்ட வெளிபரப்பின்  ஆழத்திற் குள்பறந்து 

அமைதிப்  பள்ளத்தாக்கில்    தனியாகவே    அமர்ந்து  

இமைமூடி எண்ணத்தின்  சுமையிறக்கி சுவாசிக்கிறேன்


மவுனமெனும் மொழியில்நான் எழுதியபல  கவிதைகளையென் 

செவிமட்டும் கேட்டுணர ரகசியமாய் வாசிக்கிறேன்

இயற்கையின் இடையமர்ந்து  மோனநிலை மடியமர்ந்து 

தனிமைதரும் இனிமையினை  நானுணர்ந்து  நேசிக்கிறேன் 

  

கண்மூடித்  தவமிருந்து என்னையே  நான்திறந்து 

இப்பிறவியின் காரணமே  என்னவென யோசிக்கிறேன்

ஒளிவளிவெளி நிலம்நீரை  எண்ணற்ற உயிரினத்தை 

படைத்தும் காத்தும் அழிக்கும் இறைவனைநான் பூசிக்கிறேன் 


என்னுள்ளே யேயிறைவன் இருக்கின்றான் என்றாலோ  

கண்டுணரும் வரத்தையவன்  வழங்கிடவே யாசிக்கிறேன்


அன்புடன்

ரமேஷ் 



  




முத்தமிட முகில்தொட்டு நீண்டுயர்ந்த மலைநடுவில் 

சத்தங்கள்  என்றென்றும் சேராத தானதொரு 


Aug 15, 2025

சுதந்திர தின வாழ்த்துகள்

 சுதந்திர தின வாழ்த்துகள் 




மதமினம் பற்பல   மொழிகள் என்றும் 

----வடகுட குணதென்* திசைகள் என்றும்

விதவித வெவ்வெவ் வேறு பிரிவுகள் 

----பலவு மிருந்தும்  அனைவரும் ஒன்றாய் 

இதந்தரும் இனியவிச் சுதந்திர நாளில் 

----இணைந்து  பாரதத் தாயினைப் போற்றி 

சதம்பல யுகம்** இனும் சிதறுதல் இன்றி 

----சிறப்புடன் இருந்திட வாழ்த்துகள் சொல்வோம் .


எல்லைக்  கோட்டின் இருபுறங் களிலும்   

----தொல்லை யளிக்கும் தெருநறை ^ அழிக்கும்  

      ----வல்லமை பெற்றவள் விளங்கிட வாழ்த்து! 

வரம்புகள் மீறி வம்புகள் செய்யும்   

---- டிரம்பின் காப்பு வரிகளை*** எதிர்த்து 

      ---- திறம்பட மாற்றுகள் கண்டிட வாழ்த்து 

நித்தம் நித்தம் புத்தம் புதிதாய் 

---- பற்பல தொழில்வகை  வித்துகள் விதைத்து 

    ---- இந்திய இளைஞர் எழுந்திட வாழ்த்து 

சிறுதொழில் செய்வோர் சிறந்திட வாழ்த்து 

-----பெருந்தொழில் செய்வோர் பெருகிட வாழ்த்து 

     ----உழவுத் தொழிலோர் உயர்ந்திட  வாழ்த்து

மொத்த உள்நாட்டு ஆக்கத்  திறனை# 

----மெத்த உயர்த்தி மூன்றாண்டுகளில் 

    ----மூன்றாம் இடத்தைப் பிடித்திட வாழ்த்து 


அன்புடன் 

ரமேஷ் 


^ தெருநர் = பகைவர் 

* வடகுட குணதென் = North India, Western India, Eastern India and South India divisions

**  சதம் பல யுகம் = பல சத  யுகங்கள் என்று படித்தறிக 

*** காப்பு வரிகள் = tariffs

# உள்நாட்டு ஆக்கத்  திறன் =  GDP




Aug 10, 2025

உரசல்

உரசல்கள் பலவிதம்!
சில உரசல்கள் மென்மையானவை. 
வேறு சில வன்மையானவை.
வெவ்வேறு விதமான உரசல்கள் விளைக்கும் விளைவுகள் பற்றி ஒரு கற்பனை!
அன்புடன் 
ரமேஷ் 

உரசல் 

8




மலையோடு  முகிலுரச மழை பிறக்கும்
மலரோடு காற்றுரசி  மணம் பரப்பும்.
கல்லோடு உளியுரச சிலை பிறக்கும்
சொல்லோடு கருத்துரச கவி பிறக்கும்

மண்ணோடு நீருரச பயிர் தழைக்கும்
வண்டோடு மலருரசி தேன் சுரக்கும்  
கண்ணோடு கண்ணுரச காதல் பிறக்கும் 
பெண்ணோடு ஆணுரசல்  சரசம் ஆகும்  

பஞ்சோடு பொரியுரச தீ பிறக்கும் 
நெஞ்சோடு நினைவுரச துயர் மறக்கும் 
வாளோடு வாளுரச வீரம் பிறக்கும் 
தோளோடு தோளுரச நட்பு தழைக்கும் 

தென்றல்குழ லுரசுகையில் இசை பிறக்கும்
கன்றுதாய் மடியுரச பால் சுரக்கும்
உன்னோடு  உன்னையே உரசிக் கொண்டால்
உண்மையெது என்கின்ற ஞானம் பிறக்கும்.
 

அன்புடன் 

ரமேஷ் 








Jul 26, 2025

சதுரங்க வேட்டை --சாதனை படைக்கும் இந்திய பெண்கள்

சதுரங்க வேட்டை --சாதனை படைக்கும் இந்திய பெண்கள்  

இப்போது நடைபெற்று வரும் உலக மகளிர் சதுரங்கப் போட்டியின்  இறுதிச் சுற்றில்  முதல் முறையாக இரு இந்தியப்  பெண்கள் மோதுகிறார்கள்- கொன்னூரு ஹம்பியும் , திவ்யா தேஷ்முக்கும் .

 இதைப்  பாராட்டி ஒரு சிறு பாடல் வெண்பா வடிவில்!

அன்புடன்

ரமேஷ் 

பின் குறிப்பு : இதைப் பதிக்கும் இந்நேரத்தில்  வந்த செய்தி ----  ஹம்பி இறுதிப் போட்டியில் வென்று விட்டார்.




பன்னாட்டு பெண்டிர் சதுரங்கப் போட்டியிலே 

கொன்னூரு ஹம்பியுடன் முன்னேறி மோதுகிறாள்   

இன்னாளில் இன்னுமொரு   இந்தியப்பெண்* ;  ஈவர்க்கு 

கண்ணேறு நேராமல் வேண்டு. 

                                                                    (பலவிகற்ப இன்னிசை வெண்பா) 

* திவ்யா தேஷ்முக் 

Jun 24, 2025

பிரதோஷப் பாடல் 51

 பிரதோஷப்  பாடல் 51




ஆதியனே வேதியனே மங்கையுடற் பாதியனே

மீதியுடல்  மின்னுகின்ற வேதகப்பொன்* சோதியனே  

காதினிக்க சாமமெனும் வேதமறை ** நாதத்தை 

ஓதுவரைக் காதலித்து  ஆதரிக்கும்   நாயகனே  

 

நட்டநடு நள்ளிரவில் உடலெரியும் சுடலையிலே 

சுட்டெரித்த சாம்பலையே பூசி நடம் புரிபவனே 

பிட்டுக்கு மண்ணெடுத்து பணிபுரிந்த சேவகனே 

மொட்டவிழ்ந்த மலர்தூவி பனிந்துனையே பூசிப்பேன்!


* புடமிட்ட பொன் 

** சாமவேதம் 

அன்புடன் 

ரமேஷ் 




Jun 19, 2025

தியானம்

தியானம் 



மண்மீது பாய்விரித்து கண்மூடிக் கால்மடித்து 
எண்கணக்கில் என்மூக்கால் உயிர்வளியை உள்ளிழுத்து 
நுரையீரல் தனைநிரப்பி, உள்நிறுத்தி, வெளியேற்றி
சுவாசத்தின் சுழற்சியிலே என்னைநான் இழக்கின்றேன்
மவுனத்தில்  முழுகுகிறேன்; அமைதியினைத் தழுவுகிறேன் 
கவனங்கள் வழுவாமல்  தியானத்தைப் பழகுகிறேன் 

உடலெனும் உடையிழந்து, எண்ணத்தின்   எடையிழந்து 
புவியீர்ப்பின் தடையிழந்து வானத்தில் மிதக்கின்றேன்
இறக்கைகள் இல்லாமல் பறக்கின்றேன்- இவ்வுலகின் 
இணைப்புகள் யாவையும் துண்டித்துத் துறக்கின்றேன்.
மோனப் பெருவெளியில்  மவுனத்தின் அவயத்தில்*  
நானிங்கு நிறைகின்றேன்;  மனக்கவலை மறக்கின்றேன் 

உள்ளிழுத்து உள்நிறுத்தி வெளியேற்றும் சுழற்சியிலே 
என்மனதின் சிந்தனையின் இயக்கத்தை  இழக்கின்றேன் 
பேரண்ட ஆற்றல் பரப்பினொரு  சிறுதுளியே
நானென்று உணருகிறேன்; அதில்மூழ்கிப் புணருகிறேன் 
என்னுள்ளே இருக்கின்ற எனையுணர முயலுகிறேன். 
இத்தேடல் வெற்றியுற தியானத்தைப் பயிலுகிறேன். 


* அவயம் = இரைச்சல் 

அன்புடன் 

ரமேஷ் 




 

 

May 28, 2025

geetha 80

என்னுடைய சித்தி கீதாவின் இன்றைய 80-ஆவது பிறந்தநாளன்று நான் எழுதிப் பகிர்ந்த ஒரு வாழ்த்துப் பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


கீதா -80

எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் எங்கள் அருமை கீதாவே 

இந்நன்னாளில் உன்னை வாழ்த்தி இந்தப்பாடல் எழுதுகிறேன் 

ஐந்து பேர்களில் கடைக் குட்டி ; அவர்களுள் இவளே படு சுட்டி! 

வாய் பேசுவதில் வெகு  கெட்டி; அனைவரும் கேட்பார் கைகட்டி!

தனித்துவத் தன்மை படைத்தவளாம்,  சரியெனப் படுவதை செய்பவளாம் 

எந்த எல்லைக் கோட்டுள்ளும்  இவளை வரையிட  இயலாதே. 

வாழ்க்கைப் பாதையில் வழுக்கல்கள்  பலவும்  இருந்தது உனக்கெனினும்    

வீழ்ந்து விடாமல் எழுந்திட்டு  வாழ்ந்து அவற்றை வென்றிட்டாய். 

மகனும் மகளும் உறவுகளும் உனக்குத் துணையாய்  இருக்கையிலே 

மகிழ்வுடன் மிகப்பல நாளின்னும் வாழ்ந்திட வாழ்த்துகள் பாடுகிறோம்

தடைகளை உடைக்கும் திட மனதை விடைவா கனத்தான் அருளிடுவான்!

உடலுறு குறைகள்  விடுபடவே உமையொரு பாகன் உதவிடுவான்!


 



 

ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியருக்கு வாழ்த்துகள்

எனது நீண்ட நாள் நண்பன் ராமகிருஷ்ணனின் 50 தாவது திருமணநாள் நிகழ்வன்று  ( 22-5-2025)  - தம்பதிகளுக்கு நான் எழுதிப்  படித்த வாழ்த்துப்  பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியருக்கு வாழ்த்துகள் 


காதல் மனைவியின் கைத்தலம் பற்றி 

மாதினைப் பாதியாய் மனதில் ஏற்றி 

மேதினி யோர்க்கு மாதிரி யாக 

ஆதர வாக ஒருவரோ டொருவர்

புரிதல் பெருக்கி   இருதயம் ஒன்றி  

இருமனம் இணைந்து இனிதே வாழ்ந்து 

அரைநூ றாண்டுகள் ஆகும்   இந்நாள்  

நிறைவுடன்  சிறக்க  நண்பனென்  வாழ்த்து!


அன்புடன் 

ரமேஷ் 

 




 

பெற்றவர் இருவரும் பெருங்களிப் படைய 

வெற்றிபெற் றவரும்  வாழ்வினில் சிறந்தார்!

 

எடுத்த கடமைகள் அனைத்தையும் நன்றாய் 

முடித்தபின் மீண்டும் தொடங்கிய வாழ்க்கை

உடல்திடம் மனநலம் நிம்மதி யோடு 

தொடர்ந்திட இறைவன் நல்லருள் புரிக!

May 1, 2025

ஐ.பி.எல் போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும்

ஐ.பி.எல்  போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும் 

நேற்று நடந்த போட்டியில் மீண்டும் வெற்றிகரமாகத் தோல்வியுற்று சி.எஸ்.கே அணி இறுதிக் கட்ட ஆட்டங்களுக்குப் போகும் வாய்ப்பை இழந்தது.

இது குறித்து ஒரு பாடல்!

இது நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சொற்பமான பந்துகளிலேயே  சதமெடுத்து சாதனை புரிந்தார்! 

இது பற்றியும் ஒரு பாடல்!

இரண்டும் வெண்பா வடிவில்.

அன்புடன் 

ரமேஷ் 



வந்தாரை வாழவைக்கும் சென்னைநகர் பண்பினையே 

பந்தாட்டப் போட்டியிலே காட்டுவதேன்? - நொந்துமிக

நூல்தன்னைப் போலானார் மாநகரின்  மக்களெலாம்!

பால்தன்னைப் பத்தாம்நாள் ஊற்று

                                                                                (இருவிகற்ப இன்னிசை வெண்பா)




பால்வடியும் தோற்றத்தால்  ஏமார்ந்தே போகாதே!

'பால்'^அடிக்கும் மட்டை  பலத்தால் எதிரணியை                        ^ ball

பாழடிக்கும்  *"வைப(வ்)"வத்தை பார்த்தேநாம் பூரிப்போம்  * vaibhav

வாழட்டும் **சூர்யகுலத் தான்!                                                             ** suryavanshi

                                                                               (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

Apr 26, 2025

பெகல்காம் படுகொலை

எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெஹல்காம் பள்ளத்தாக்கில் செய்த படுகொலைகளுக்கு , இன மத வேறுபாடுகளின்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்துக்களை மட்டுமே கொலைசெய்து    இந்தியாவில்  மதக் கலவரத்தை தூண்ட முயலும் தீவிரவாதிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். 

ஜெய் ஹிந்த் !

ரமேஷ்  




பட்டப் பகலில் பெகல்காமின் பள்ளத்தில் 

திட்டமிட்டுத் தாக்கியே சுட்டுக்  கொலைசெய்தார்

இந்துக் களைமட்டும் -  இந்தச் செயலெதிர்த்து  

இந்தியனே பொங்கி எழு !


ஆதார  அட்டைகளில் பேர்பார்த் ததன்பின்னும்

போதாமல்  உள்ளுறுப்பை சோதித்த பாவிகள்-தன்

மாற்று மதத்தாரை மட்டும் இனம்கண்டு 

கூற்றுக் கிரையாக்கி கொன்ற கொடுஞ்செயலை 

ஏற்காது  எம்பார தம்


பெற்றிட்ட பிள்ளைகள் கட்டிய தோர்தாரம்

உற்ற உறவினர் மற்றவர் முன்னாலே  

ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொலைசெய்த 

பாவிகளைத் தேடிக்கொல் வோம் 








Apr 25, 2025

IPL -2025 -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி ??

IPL -2025  -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி??!


ஆறாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது : 

சேறிலே கால்புதைந்து ஒடத் தவிப்பவனைப் போல் 

ஆறிலே ஒன்றை மட்டும் இன்றுவரை வென்றதாலே 

மாரிலே சந்தனம்போல் மணக்கின்ற நிலைமை மாறி 

ஆர்.ஐ.பி. எழுதும் நிலைமை அய்யகோ வந்ததிங்கே !

ஏழாவது ஆட்டத்தின் வெற்றிக்குப்  பின் எழுதியது 

கருமேகக் கூட்டத்தின் விளிம்பினொளிக் கீற்றைப்போல்  
சரிபாதி ஆட்டங்கள் முடிகின்ற தருவாயில் *                * 7 out of 14
பரிதாப நிலைசற்றே மாறியதே ! இனிமேலே
ஒருவேளை பெருவாகை பெறும்வேளை வந்ததுவோ? 
 
எட்டாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது

விழுந்து கிடக்கின்ற சி.ஸ்.கே இனியேனும் 
எழுந்து நிற்குமிவ் வெட்டாவது  ஆட்டத்தில் 
என்ற நினைப்பினிலும் மண்விழுந்து மூடியதே 
வென்றதே மும்பை அணி!

இன்று ஒன்பதாம் ஆட்டத்திற்கு முன்பு 

பத்தாம் இடத்திலே பசைபோட்டு அசையாமல் 
கெத்தாய் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் சி.ஸ்.கே
ஒன்பதாம் இடத்துள்ள காபித்தூள் குழுமத்தை*      * sunrisers  
இன்றேனும் காட்டுமோ வென்று?

அன்புடனும்,எதிர்பார்ப்புடனும் 

ரமேஷ் 



Feb 26, 2025

சிவ பதிகம்

சிவ பதிகம்

இன்றைய சிவராத்திரி தினத்தன்று வெண்டுறை வடிவில் நான் முன்பொருநாளில் சிவபிரானைத் துதித்து எழுதிப் பதித்த பத்துப் பாடல்களைமீண்டும் பதிவிடுகிறேன்.

முக்கண்ணனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

அன்புடன் 

ரமேஷ் 


சிவ பதிகம்


விடைவா கனமேறி வீற்றிருந் துமையவளை
இடமணிந்து  பாதியாய்  இணைத்தவனை  - சடைமுடிமேல்
படமெடுக்கும் அரவணிந்த பரமனைப் பணிந்தவரை
இடரெதுவும் தீண்டாது காண்.!                                                1.

   
ஆல மரத்தடியில் அமர்ந்த்திருந்து மோனத்தவக்
கோலம் தரித்த குருநாதன் -- நால்வேத
நாயகன்  தட்சிணா  மூர்த்தியின்  திருநாமம்
வாயுரைத்தல் நாளும் நலம்.                                                       2.

   
நெடிதுயர்ந்து விசுவத்தை நிறைத்திட்ட பசுபதியின்
அடிமுடியைக் காணவே முயன்றிட்டு --- முடியாமல்
பிரமனும்  நெடுமாலும் முடிதாழ்த்தி வணங்கிட்ட
பரமசிவன் பாதம்பணி வோம். .                                                 3.


பாகீ  ரதன்செய்த பெருந்தவத்தின்  பரிசாக
ஆகாய கங்கைதனை மேலிருந்து கொணர்ந்தவளின்.
வேகத்தைத்  தடைசெய்து  சடைமுடியில் பிடித்திட்ட
ஏகனை மனமே பணி .                                                              4.


ஒருகையில் உடுக்கெடுத்து ஒரு கையில் மானேந்தி
ஒரு கையில் சூலமெடுத்து ---  பிறைமதியை
விரிசடையில்   முடிதரித்து களிநடம் புரிகின்ற
திரிபுராந்  தகனைத்   துதி.                                                          5,


அவிமறுத்து அவமதித்த தக்ஷனின்  யாகத்தை
அழித்துப்பின் அருந்தவத்தில் அமர்ந்தவன்மேல்  தேவர்களின்
மன்னுதலால் மலரம்  பெறிந்தமன்  மதனைத்தன்
கண்ணுதலால் எரித்தோன் துணை.                                            6.


காலம் முடிந்ததெனக்  காலன் அழைத்திட்ட
பாலன்மார்க் கண்டேயன் உயிர்தனைப்-- பாலித்து
காத்தவற்கு சாகா வரம்தந் தருள்புரிந்த
கூத்தனடி நெஞ்சே  பணி .                                                          7.


நிலையிலது   இவ்வுலகு நிலையிலது   இவ்வாழ்வு
விலையற்ற  இவ்வுண்மை   விளக்குமுக மாகவே
இடுகாட்டின்  சுடுசாம்ப லுடல்முழு திலும்பூசி
நடமாடு வோனைத் துதி. .                                                           8.  


நிலமாகக்   காஞ்சியிலும் வளியாக ஹஸ்தியிலும்
ஜலமாக திருவானைக்  காவல் தலத்திலும்
ஒளிர்நெருப்   பாய்த்திரு வண்ணா மலையிலும்
வளியாக தில்லைத்திருச் சிற்றம் பலத்திலும்                                         


ஏகாம்ப ரேசனாய்  காளஹஸ் தீசனாய்
ஜம்புகே சுவரனாய் அண்ணா மலையனாய்
அம்பலத்தில் தாண்டவ நடமிடும் ராசனாய்
அமர்ந்தஐம்  பூதனைப் பணி.                                                        9.
.      

அசுரர்களும் தேவர்களும் அடிபணியும் வேதியனை
விசும்புவெளி படைத்தவற்றைக் காக்குமொளிச் சோதியனை
அணங்குதனை இணங்கித்தன் உடல்கொண்ட பாதியனை
வணங்கியே    முக்தியடை வோம்,                                                     10