Search This Blog

Nov 26, 2016

ஈசாவாஸ்ய உபநிஷத் - அறிமுகம்

ஈசாவாஸ்ய உபநிஷத் - அறிமுகம் 

இதை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னால் , இது எப்படி எனக்கு அறிமுகமானது என்பதை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

நான் பணிசெய்துகொண்டிருக்கும்போது, ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தது. அதன் பெயர் ஈசாவாஸ்யா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட். பல  புதுமையான தொழில் நுட்பங்களின்  மூலம் மிக அதிக அளவில் ஆற்றல் குறைக்கும் (energy saving) பல கருவிகளை அவர்கள் செய்வதாக அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அப்போது, இந்த பெயரை வைத்த காரணத்தை கேட்டு அறிந்தபோதுதான் , ஈசாவாஸ்ய உபநிஷத்தைப் பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் பயன்படுத்தும் பல தொழில் நுட்பங்களின் அடிப்படை நம் வேதங்களிலும் , உபநிஷத்துக்களிலும் இருப்பதாகவும், அவர்கள் கூறியது வியப்பை அளித்தது. அந்த நிறுவனத்தின் மூத்த பொறியாளர்கள் அனைவரும் , நமது வேதங்களிலும் , உபநிஷத்துக்களிலும் புலமை பெற்றவர்களாக இருப்பதை அறிந்தேன். ஒரு குருகுலம் போன்ற ஒரு அமைப்புடன் ஒரே வீட்டில் தங்கி  அவர்கள் கடமை ஆற்றுவது எனக்கு வியப்பை ஊட்டியது.

அந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, வேதங்களும், உபநிஷத்துக்களும் நேரடியாக எந்த அளவில் பயன்பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்களும் அதை எனக்கு உணர்த்தவில்லை.  அந்தக் கண்டுபிடுப்புகளையும், கருவிகளையும் நான் பயன் படுத்தினேனா என்பது வேறு விஷயம். ஆனால் , இது இந்த உபநிஷத்தை பற்றிய எனது ஆவலைத் தூண்டியது. அதன் விளைவாக , இந்த உபநிஷத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஈசாவாஸ்ய உபநிஷத் என்பது 18 முக்கியமான உபநிஷத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவைகளுள்ளே  , சிறிய உபநிஷத்து இதுதான். 18 ஸ்லோகங்கள் அடங்கியது.

உபநிஷத்துகள் வேதங்களின் சாராம்சம். உட்பொருளை புரிந்து கொள்ளுவது மிகக் கடினம்.ஆனாலும் இதை முதன்முதலாகப் படிப்பவர்களும் புரிந்து கொள்ளுமாறு ஒரு மொழிபெயர்ப்பு எனக்கு கிடைத்தது. இது , சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்கத்துடன் , ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பித்த ஒரு சிறு நூல் *. இதனுடன் கூட  , இந்த உபநிஷத்தைப் பற்றிய வேறு சில பதிப்புகளையும் படித்தேன். இவைகளை "தமிழ்க் கவிதை வடிவில் வடித்தால் என்ன ? " என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதன் விளைவே இது.

மேற்கூறிய நூலுடன், திரு.குருபரானந்தரின் விளக்கவுரை ,( இணைய தளத்தில் உள்ளது ) இவற்றை மூலமாக வைத்து  புனைந்து இருக்கிறேன்.
ஆன்மீகத்தில் முதல் படியைக்கூடக் கடக்காத  ஒருவனான நான் இந்த முயற்ச்சியில் ஈடுபடுவது சரியா என்ற ஒரு கேள்வி பல  மாதங்களாக என்னைக் குடைந்து கொண்டு இருந்தது. என்றாலும், ஒரு அசட்டுத் துணிவுடன் இதைப் பதிப்பிக்கப் போகிறேன்.  

இதை உபநிஷத்தின் சாந்தி ஸ்லோகத்துடன் ஆரம்பிக்கிறேன். ( இது மட்டும் ஏற்கனவே "முழுமையின் வடிவம் " என்ற தலைப்பில் பதிப்பித்து இருக்கிறேன். )

 மற்றவை வரும் பல பதிவுகளில். 

குறை இருப்பின் பொறுத்திடுக!

தொடர்ந்து படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன் 

ரமேஷ்



சாந்தி ஸ்லோகம் 

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே I 
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே II 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி: II 

பொருள் 

இறைவன் முழுமையானவர். 
இந்த உலகம் முழுமையானது. 
முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியது. முழுமையிலுருந்து முழுமையை எடுத்த பின்னும்  முழுமையே எஞ்சியுள்ளது.

பாடல் 

முழுமையின்      வடிவம்      இறையவனே !

இறைவன்      படைத்தது      இவ்வுலகே!

முழுமையி     லிருந்து      முளைத்ததனால்- இவ் 

வுலகும்      முழுமைத்      தன்மையதே !

முழுமையி       லிருந்து       முழுமைதனை 

முழுதாய்      எடுத்து      முடித்தாலும் 

பழுதில்     லாமல்      மிஞ்சுவதும் 





முழுமை      என்றே      உணர்வாயே !



* - reference : ஈசாவாஸ்ய உபநிஷதம் - ஒளிக்கு அப்பால் - published by Sri Ramakrishna madam, Mylapore, Chennai -4 




Nov 25, 2016

தசாவதாரம்- 2- கூர்மாவதாரம்


தசாவதாரம்- 2 

கூர்மாவதாரம் 

தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் இடையே போராட்டங்கள் நடைபெற்று வருகையில், ஒரு சமயம் துர்வாச முனிவரின் சாபத்தால், தேவர்கள் வலுவிழக்க நேர்ந்தது. அவர்கள் திருமாலை வேண்ட, அவர் தேவர்களையும் அசுரர்களையும் , இருவரும் சேர்ந்து பாற்கடலைக்  கடையுமாறும் , அதிலிருந்து வெளிவரும் அமுதத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளுமாறும் கூறினார். வாசுகியை கயிறாகவும், மந்தாரமாலையை மத்தாகவும் கொண்டு அவர்கள் கடைகையில் , மலை கீழே அமிழாமல் , ஒரு பெரும் ஆமை வடிவெடுத்து , திருமால் அதைத் தாங்கிப் பிடித்தார். இந்த அவதாரமே கூர்ம அவதாரம்.

இது பற்றிய வெண்பா இங்கே !

கடைந்த பின் என்ன ஆயிற்று? அசுரர்களுக்கும் அமுதம் கிடைத்ததா? முழுக்கதையும் கீழே ஆங்கிலத்தில் .

அன்புடன் 

ரமேஷ் 

முதல் அவதாரமான மச்சாவதாரம் பற்றிய சென்ற மாதப் பதிவைப் பார்க்க
இந்த இணைப்பைப் பார்க்கவும்.
http://kanithottam.blogspot.in/2016/10/1.html






 

மந்தார மாமலையை   மத்தாக ஆக்கியே
இந்திர தேவ ரசுரர் - இணைந்துவெண்        
பாற்கடலை யேகடைய அம்மலையைத் தாங்கினார்
கூர்மாவ  தாரத்   திலே.                

.

In KURMA Avatar, Lord Vishnu incarnates himself as a tortoise.

In the saga of battle between the Devas  and the Asuras, on one occasion the gods suddenly lost all their strength due to a curse by the short-tempered sage Durvasa and approached Vishnu for help. Vishnu then asked them to churn the ocean of milk using Mount Mandara as  the churning stick . He requested them to ask them the help of Asuras in lifting the mountain in exchange for offer of the share of nectar of immortality that would ensue from the churning. Both the devatas and the asuras churned the ocean using the serpent Vasuki as the rope. At the start, playing a Machiavellian trick, Indra, king of the gods asked the asuras for the head end of vasuki. But asuras suspecting foul play, took the head end, only to be deceived as the poison from Vasuki was slowly weakening them. But as churning was proceeding the mountain was sinking and then Lord Vishnu took the form of the tortoise KURMA and kept the mountain afloat.
As soon as the bowl of amrita, the nectar of immortality was out, the asuras grabbed it. Then Lord Vishnu took the form of an apsara, a beautiful maiden, and seduced the asuras into letting her distribute the nectar and also to abide by her order of distribution. As soon as the devatas were served the maiden disappeared thus totally deceiving the asuras and making them totally weak.

See the earlier post
http://kanithottam.blogspot.in/2016/10/1.html
for Machchaavathaaram.

Nov 21, 2016

குறள் மேல்வைப்பு வெண்பா -13

குறள் மேல்வைப்பு வெண்பா -13

துரியோதனன்- கர்ணன் - இவ்விருவரிடையே இருந்த நட்பு அனைவரும் அறிந்ததே. சாதாரணமாக இந்த நட்புறவைப் பற்றிப்  பற்றி பேசுகையில்,  "துரியோதனன் செய்கையில் கர்ணனுக்கு  முழு உடன்பாடு இல்லையென்றாலும், எவ்வாறு நட்பின் காரணமாக அவன் துரியனுக்குத் துணை நின்றான் " என்பது  பேசப்படுகிறது. ஆனால் துரியோதனன் கர்ணனிடம் வைத்திருந்த நட்பையும் , அதனால் அவன் மேல் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று உண்டு.

ஒரு சமயம், கர்ணன் துரியோதனனின்  மனைவி பானுமதியுடன்  துரியோதனனுடைய மாளிகையில் , தாயம் விளையாடிக்கொண்டிருந்தான். ஆட்டத்தில் தோல்வியைத் தழுவ இருந்த பானுமதி, " போதும் இந்த ஆட்டம்" என்று கூறி எழுந்து செல்ல முயல்கையில், கர்ணன் அவள் மேகலையைப் பிடித்து இழுத்து அவளைத் தடுக்க முயன்றான். மேகலையில் பதித்திருந்த மணிகள் சிதறி அறையெங்கும் தெறித்து ஓடின! அவ்வமயம் அங்கு வந்த துரியோதனன் , இதனைக் கண்டும் , கர்ணனின் செயலைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் , " சிதறிய முத்துக்களை எடுக்கவோ ? கோக்கவோ? " என வினவுகிறான்.

இச்செயல் வள்ளுவரின் இந்தக் குறளுக்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.

பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.  
(குறள் - 803 , அதிகாரம் - பழைமை )

நண்பர் நட்பின் உரிமையால் செய்யும் செயலைத் தான் செய்தது போலவே எண்ணி உடன்படாவிட்டால், அவரோடு தான் பழகிய நட்பு என்ன பயனைத் தரும்?

இக்குறளை   ஈற்றடிகளாகக் கொண்ட ஒரு குறள்  மேல் வைப்பு வெண்போ இதோ.

அன்புடன்

ரமேஷ்



 
துடுக்குடன் மேகலையை கர்ணன் இழுக்க  
எடுக்கவோ கோக்கவோ என்றான் துரியன்
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

English version by Rev.Pope

When to familiar acts men kind response refuse
What fruit from ancient friendship's  use?

English version by Suthaananda Bharathi

Of Long friendship, what is the use
Righteous freedom if men refuse?

Meaning By Rev. Pope 

Of what avail is longstanding friendship, if friends do not admit their as their own actions ( actions done by their friends ) through the right of intimacy?

Nov 20, 2016

இலையுதிர் காலம் - with english translation

இலையுதிர் காலம்

இப்போது அமெரிக்காவில் இலையுதிர் காலம்.
எல்லா மரங்களின் இலைகளும் முதலில் நிறம் மாறுகின்றன.
பச்சைப் பசேல் என்று கரும் பச்சைப்  போர்வை போர்த்தியிருந்த மரங்களும், மரங்கள் அடர்ந்த மலைச் சரிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுகின்றன.
முதலில் கரும் பச்சை வெளிர் பச்சை ஆகி, பின்னர் மஞ்சள், சிவப்பு, ஊதா என்று ஒரு வண்ணக் கலவையாகவே மாறுகிறது. இது நடப்பது ஒரு சில நாட்களுக்கு உள்ளேயே!
இதனோடு கூடவே இலைகள் உதிரத்  துவங்குகின்றன.
உதிர்ந்தபின் பொட்டிழந்த நெற்றிபோல் களையிழந்து காணும் இந்த மரங்களும் , சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பூத்துக் குலுங்கத் தொடங்கும்!
இந்தச் சுழற்சி நமக்கு கற்பிக்கும் வாழ்க்கைப் பாடம் பற்றி ஒரு பாடல்.
அன்புடன் 
ரமேஷ்.
பி.கு: ஒரு புதிய முயற்சியாக, இந்தப் பாடலின் ( ஒரு சுமாரான) ஆங்கில மொழிபெயர்ப்பையம் சேர்த்திருக்கிறேன்- மரபுக்கவிதை நடையில் எழுதும் கவிதைகளின் அர்த்தங்கள் புரிவதில்லை என்று என்னிடம் கருத்துத் தெரிவித்த ஒரு சிலருக்காக மட்டும்!



 
நிறம் மாறும் பருவம்

ஆடிமுடிந்து ஆடிஅசைந்து அடுத்தமாதம் வருகையில்
கோடைமுடிந்து அடுத்துவேனில் பருவமுமே  தொடங்கையில்*
மூடிஉடலை முழுதும்மறைக்கும் பச்சைநிறத்  தாவணி-யதில்
கோடிவேறு நிறங்கள்பலவும் படரத்தொடங்கும் ஆவணி.
        *தொடங்குகையில்
When August ( tamil month Aani ) fades away slowly, and ushers in September (tamil month Avani) and with it , the fall season ,  the green coloured half-sari ( thavani) covering the trees , start sporting several colours.

காதலனாம்  ஆதவனின் கதிர்க்கரங்களின்  தழுவலும்
பாதியாகிப் போனதனால்  துயர்அடைந்த மரங்கள்தம்
பச்சையாடை நடுவில்பல வண்ணங்களைத் தெளித்தவன்* 
இச்சையினைத் தூண்டிடவே முயற்சிகளும் செய்யுதோ?
        * தெளித்து அவன் 
With fall replacing summer and with days shortening, have the the trees started  missing the embrace of the  rays of their Love, the Sun? Have they started  sporting several colours now, in an effort to to entice him back?


இலை உதிரும் பருவம் 

மரம்விடுத்து மிதந்துவிழும் வண்ணவண்ண  இலைகளே 
மனம்விடுத்து மிதந்துசெல்லும் எண்ணஅலைகள் போலவோ?
எண்ணஅலைகள் எழுதும்கவிதைக்  கருப்பொருளாய் ஆகும்போல்
மண்விழுந்த இலைகளுமே நல்லுரமாய் மாறுமே !



Just like the myriad thoughts nestling in the poet's mind that float away and become the source and nourishment for a poem , the leaves  leaving the branches and  floating in the wind , fall down and get converted as fertiliser  and nourish the tree from which they have fallen !


கடந்துபோன   கோடைகாலக்  கதிரவனின் கிரணங்களால்
சூடுபட்ட உடலின்வெப்பம் சற்றுக்குறைய வேண்டியே
ஆடையான இலைகளைந்து  அத்தனை  மரங்களும்
வாடைக்கால வருகைக்காக விழிகள்நோக்கி  நிற்குதோ?  

Have the  trees  suffered due to the heat of the summer ? It does appear as if  the trees  are shedding their leafy clothes now  in order to cool their overheated bodies  and, having done so, are waiting eagerly for the cooler climes of the winter to set in!



நாளை ?

நேற்றுமாலை இலைகள்நிறைந்த கூந்தல்இருந்த  மரங்களே
முற்றும்இன்று ஓரிரவில் மொத்தமுடியும் இழந்ததே!
இன்றுமனிதன் அனுபவிக்கும் இன்பம்செல்வம் அனைத்துமே
நின்றுஎன்றும் நிலைப்பதல்ல என்றஉண்மை உணர்த்துதோ?

Yesterday the trees were full of leaves. Overnight they are gone and the Tree is bald! Are the trees trying to tell us that neither the wealth nor the happiness one gets from it are permanent and can disappear overnight ? 

இலையைஇழந்து கிளைகள்வெறித்துக் காத்துநிற்கும் மரங்களும்
நாளைவசந்த வேளைவந்தால் மீண்டும்பூத்துக் குலுங்குமே !
நிலையும்இன்று குலைந்துபோன மனிதர்பலரின்  வாழ்வுமே
மலர்ந்துமீண்டும் மகிழ்ச்சிகூடும் ; இதுவும்வாழ்க்கைப் பாடமே! 

The trees which are completely barren now, will start to bloom again, when spring comes. Similarly  those who are suffering now, can certainly look forward to a brighter tomorrow with hope!





Nov 16, 2016

கறுப்புப் பணம்


கறுப்புப் பணம்

கறுப்புப் பண வீக்கத்தைத் தவிர்க்க அரசு எடுத்த திடீர் நடவடிக்கை பலரை நிலை குலையச் செய்து இருக்கிறது. முக்கியமாக எதிர்க் கட்சிகளை. அரசு எது செய்தாலும் அதை எதிர்ப்பதே கடமை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இக் கட்சிகள், திருடனைத் தேள் கொட்டியது போல் , இதை முழுதுமாக எதிர்க்க முடியாமல், அமுல் படுத்துவத்திலுள்ள குறைபாடுகளை பற்றி அலறுகின்றன. எப்போதுமே அரசுக்கு எதிராகச் செயல்படும் ஆங்கில ஊடகங்களும் தங்கள் பங்குக்கு குறைகளை மட்டுமே படம் போட்டுக் காட்டுகின்றன. இரண்டாம் உலகப் போரின் பொது, இங்கிலாந்தில் உணவுக்கு கட்டுப்பாடு கொண்டுவந்த நேரத்தில், மக்கள் வரிசையாக நின்று தங்களிடம் இருந்த அதிகப் படியான உணவுப் பொருள்களை அரசுக் களஞ்சியத்தில் சேர்த்தார்கள் என்று படித்ததாக நினைவு! இப்படி நாம் செய்யாவிட்டாலும், நாம் இந்த நேரத்தில்  சற்றுப் பொறுமையைக் காத்து அரசுக்கு தோள்  கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதே இவ் வெண்பாக்கள்..

அன்புடன் 

ரமேஷ்

 
கறுப்புப் பணம்

தீய வழிகளில்  சேர்த்துப் பதுக்கிட்டோர் 
ஆயிரமும்  ஐந்நூறும்  செல்லாமற் போனவுடன் 
வாயில்  வயிற்றில்  அடித்துப் பதைபதைத்து 
நோய்பட்டுக்    காயமுற் றார்.

கோடிமேல்  கோடியாய்ப் செல்வம்  பதுக்குவோர்
ஆடியே  போயினார்  இன்னேரம் - மோடியின்
தாக்குதலைத் தாளாமல் ரூபாய் பணநோட்டை 
தீக்கிரை ஆக்குறார் இன்று

சரியாக நேர்வழியில் சேமித்த பேர்கள்
வரிசையாய் நிற்கிறார் வங்கிகளின் முன்னால் .
முறைமீறி செல்வத்தை  சேர்த்திட்ட பேரோ
குறைசொல்லிக்  கூவுறார்  இங்கு

ஆரம்ப சங்கடங்கள் சிக்கல்  இருந்தாலும்
வாரத்தி லேயவையும்    போய்விடும்   - பாரத
நாட்டின் நலன்கருதி  நாமும்  பொறுமையைக்  
காட்டிக்    கொடுத்திடுவோம்  தோள்.



Nov 15, 2016

தெரிவதும் தெரியாததும்

தெரிவதும் தெரியாததும் 

எனக்கு சமீபத்தில் வந்த ஒரு "வாட்ஸ்அப் " செய்தி   இது.
 

"முந்திக்கொண்ட  முதல் செங்கல் , 
கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும்
காத்திருந்த கடைசி செங்கல்தான் கலசம் தொடும் !
சாதிக்க பொறுமை மிக மிக அவசியம் ! "

என்னுடைய கருத்து இதிலிருந்து சிறிது மாறுபடுகிறது.

 பல சமயங்களில் , வெற்றிக்குப் பின்னணியில் நிற்கும் பல நிகழ்வுகளும், மனிதர்களும் வெளிஉலகுக்குத் தெரிவதில்லை. 
இது பற்றி ஒரு சிறு பாடல்.

அன்புடன்

ரமேஷ்


 

தெரிவதும் தெரியாததும் 


சுடர்விட்டு எரியும்திரி நுனியின் பின்னே 
அடியில்நெய்  ஏந்திநிற்கும் அகலும் உண்டு.

படர்ந்துபல கிளைகள்கொண்ட மரத்தின் அடியே
திடமாக அதைநிறுத்தும் வேர்கள் உண்டு.

இடரின்றி வாழ்கின்ற குடும்பத் தடியில்
கடன்பட்டும் காக்கின்ற தந்தை உண்டு.

ஆளாகி அரசாளும் பிள்ளை பின்னே
மாளாது உழைத்தவோர் தாயும் உண்டு.

கொடியேற்றி மின்னுகின்ற கலசம் நிற்றல்
அடித்தளத்தில் புதைந்திருக்கும் கல்லால் அன்றோ?

வானெட்டும் பெரும்புக ழடைந்த பின்னும் -
ஏணியாய் இருந்தவரை மறத்தல் நன்றோ?

வெளியிலே அழகாக வெளிச்சம் போட்டு
பளிங்குபோல் ஒளிர்கின்ற   பொருள்கள் அடியில்

ஒளிந்தொண்டிக் கிடக்கின்ற உண்மை உன்டு. 
தெளிவோடு அவ்வுண்மை கண்டு உணர்வோம்.

Nov 11, 2016

சிவனை நினை

சிவனை நினை 

நமக்கு துன்பம் வரும் சமயங்களில் மட்டுமே இறைவனை நினைப்போம்.  மகிழ்ச்சியுடன் சுகங்களை அனுபவிக்கும் போது இவை அனைத்தையும் நமக்கு அளித்த ஈசனை நன்றியுடன் நினைப்பவர் சிலரே! 
இது மனித இயல்பு. 
எப்போதும் இறைவனை நினைத்து, நல்லவை செய்து, அல்லவை  அறுத்து,  நல்வினைப் பயன் சேர்ப்போம்.
வரும் சனிக்கிழமை பிரதோஷம். சிவனைத் துதித்து எழுதப்பட்ட இப்பாடலை இந்த சமயத்தில் பதிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு : இதற்கு முன், சென்ற ஆண்டு நான் எழுதிய "சிவபதிகத்தை கீழ்வரும் இணைப்பில் காணலாம்.
http://kanithottam.blogspot.com/2016/02/blog-post_6.html

 
இளமை செல்வம் மனைவி மக்கள் எண்ணிலாத இன்பங்கள்
வளமை மிக்க வாழ்க்கை பெற்று வாழுகின்ற மனிதரே!
சுவைத்து இவற்றை சுகமடைந்து தினமும் வாழும் போதிலே
கவை^ யும் கூட இவைகள் தந்த ஈசனை நினைக்கிலீர்!

தீயை யொத்த சுடுசுரத்தில் வாடு கின்ற போதிலும்
நோயில் உடலும் நனி*நலிந்து நைந்து கிடக்கும் போதிலும்
பாயில்  உன்னைப்  படுக்கவைத்துப்  பதறு  கின்ற போதிலும்
வாயில் இறைவன் நாமத்தையே முணு முணுத்தல் போதுமோ?

அவனி எங்கும் நிறைந்து காணும் அத்தனைப் பொருள்களும்
அவன் இயக்கி ஆட்டி வைக்கும் பொருளேயென் றறிந்திடு
சிவசிவயென  சிந்தை நிறுத்தி காலை மாலைப் பொழுதிலே
அவனின்  நாமம் தினம் தினமும் தவறிடாமல் சொல்லிடு.

எமதுஎமது என்று வேண்டி பணம் பொருள்கள் அனைத்தையும்
குமித்து வைத்துக் கனக்குப் போட்டு களிப்படையும் மாந்தரே!
எமனும் எருமை வாகனத்தில் அமர்ந்து உம்மை அழைக்கிற
சமயமிவை  கூட வாரா! வருவது வினைப்  பயன்களே!

சுவரில்அடித்த பந்துஒன்று திரும்பிநம்மைச் சேரும்போல்
எவரும் செய்யும் செய்வினையின் பயனும் திரும்பி வந்திடும்.
தவறு எதுவும் செய்திடாமல்  நன்று என்றும் செய்விரேல்
பவ*பயங்கள் முற்றும் நீங்கிப் பரமன் அடியை  அடைவீரே!.

                                                   
கவை^ = concern,
நனி*    = greatly , மிகுந்து
பவ*      = birth, பிறப்பு  

Nov 8, 2016

காலை நேரக் காற்றில் -3



காலை நேரக்  காற்றில் -3

சென்ற சில வாரங்களாக, நான் அமெரிக்காவில் இருக்கும் என் மகனுடன் இருந்து வருகிறேன். இது கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் நேரம். இருந்தாலும், என் போன்ற சென்னை வாசிகளுக்கு சற்றுக் குளிரத்தான் செய்கிறது. அதுவும் அதிகாலையில் சற்று அதிகம்தான். இருந்தாலும் , முடிந்த அளவு காலை நடைப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். 
இங்கு நடைப் பயிற்சி செய்வது , சென்னையில் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவம். **
அந்த அனுபவித்தில் முளைத்த ஒரு பாடல் இது.

அன்புடன்

ரமேஷ்.

** - காலை நேரக் காற்றில் 1 -http://kanithottam.blogspot.com/2015/09/1.html
        காலை நேரக் காற்றில் -2- http://kanithottam.blogspot.com/2015/10/2.html
இவை இரண்டும்  நான் சில மாதங்களுக்கு முன் எழுதியது.  இந்த தொடர்புகளுக்கு சென்று இவைகளையும் ரசிக்கலாமே!


காலை நேரக்  காற்றில் -3


சில்லென்ற வாடைக் காற்று முகத்திலே முட்டி மோதும்.
புல்நுனியின் முனைகள் மீது பனித்துளிகள் பூவாய்ப் பூக்கும்.
நீலமாய் விரிந்த வானம்  இடையிடை பஞ்சுக் குவியல்
காலத்தோ  டாதவன்  உதிக்கக்  காலையில்   பொழுதும் புலரும்.

கதிரவன் கிரணங்கள் நீண்டு பனித்துளியில் புகுந்திடும் போது
உதித்தெழும் வண்ணக் கலவை இயற்கையிடும் வாயிற் கோலம்
நீண்டு நெடிதாய் உயர்ந்து நிற்கின்ற மரங்கள் எல்லாம்
வானோக்கி வாழ்த்துப் பாடி விடியலை வாவென் றழைக்கும்

காலையில் வேலை செல்வோர் இயந்திர ஊர்திகள் எல்லாம்
சாலையின் இருமருங்கில் "சர்-சர்"என  விரைந்து  செல்லும்.
கலையாத தூக்கக் கண்கள்,  கையினில் காப்பிக் கோப்பை
சிலருமே  ஏந்திய வண்ணம் விரைவர்ரயில் நிலையம் நோக்கி

வாலிப வயதின ருடனே  வயோதிக மக்கள் கூட
கால்சட்டை அணிந்த வண்ணம் கால்நடைப் பயிற்சி செய்வார்.
நாமவரைக் கடக்கும் போது நகைமுக முறுவ லோடு
"சேமமுடன் செல்க இன்னாள்" என்றவர் வாழ்த்து ரைப்பார்

வீதிகள் வெறிச்சென் றிருந்தும் வாகனம் ஓட்டிச் செல்வோர்
நீதியுடன் நியமம் காத்து சந்திப்பில் நின்றே செல்வார்.
சாலையைக் கடக்க வேண்டி பாதையின் மருங்கில் நின்றால்
வேலைக்கு விரையும் வண்டியும் வழியினைக் கொடுத்து நிற்கும்.

உயரவே மெள்ள மெள்ள ஆதவன் உயரும் போது
வியர்வையால் உடலும் நனையும்; அயர்வுமே சிறிது நேரும்
நிழல்தரும் மரங்கள் அடியில் நீள்பலகை இருக்கை மீது
பழகியே சிறிது ஒய்வு; பின்னர் போய் வீடடைவேன் !

Nov 5, 2016

சூரசம்ஹாரம்

 சூரசம்ஹாரம் 

இன்று சூரசம்ஹாரம். முருகன் சூரபத்மனை அழித்து, திருச்செந்தூரில் குடிகொண்ட நாள். 
அறுபடைவீடுகள் பற்றி முன்னமேயே பதித்திருந்த ஒரு கவிதையின் ஒரு பகுதியை  இந்நாளில் நினைவுக்கு கொண்டுவந்து முருகப்பெருமானை வழிபடுகிறேன்.

SURASAMHAARAM
Today is Sura Samharam- the day when Muruga vanquished Surapadman (Suran ), using the Vel , blessed and given to him by Parvathi. Suran, in a bid to escape,  took the shape of tree which Muruga split into two. Based on a request by the repentant Suran, he converted one half into his Seval(cock) Flag and the other half into a Peacock which he used for ambulating. After killing Surapadman, Lord Muruga took his seat at   Thiruchendur , on the shores of Bay of Bengal.

அன்புடன்
ரமேஷ்
திருச்செந்தூர்

 பார்வதி    தேவியிடம்    வேல்பெற்று   சூரனை

இருபாதி    யாகப்  பிளந்துஒருபாதியை

கொக்கருகோ *   எனக்கூவி    அறியாமைத் துயில்  கலைக்கும்

குக்குடக்**   கொடியாக   வும்

மற்றுமொரு    பாதியை    திக்கெட்டு    திசையெங்கும்

சுற்றிவரும்    மயிலாக    வும்-    ஏற்றருளி

கடலாடும்    கரையோரச்    செந்தூரில்   குடிகொண்டாய்  

சுடலாடி***   பெற்றமக  னே !
          
                    *  கொக்கருகோ =கொக்கு+அறு + கோ

                                                      ="கொக்கு வடிவில் வந்த அரக்கனைக்

                                                        கொன்றவனே"

                     ** குக்குடம் = சேவல்  *** சுடலாடி -- மயானத்தில் ஆடுபவன்


Nov 4, 2016

குறள் மேல் வைப்பு வெண்பா - 12

குறள்  மேல் வைப்பு வெண்பா - 12

கற்புடைமை அதிகாரத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கதையாக , சதி அனசூயாவின் கதையை  சென்ற குறள்  மேல் வைப்பு வெண்பாவில் சொல்லி இருந்தேன். பிறகுதான் நினைவுக்கு வந்தது, வள்ளுவரின் மனைவி வாசுகியைப் பற்றி கூறப்படும் ஒரு நிகழ்வு! *

வள்ளுவர் வீட்டினுள் அமர்ந்து குறளமுதம் வடித்துக்கொண்டிருக்கிறார். வீட்டின் பின்புறத்தில் அவர் மனைவி வாசுகி , குடமொன்றைக் கயிற்றில் கட்டி , ராட்டினம் மூலம் , கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருக்கிறாள். 
அப்போது வள்ளுவர் அவளை " வாசுகி, இங்கு வா " என்று குரலெடுத்துக் கூப்பிட  , வாசுகியும் உடனே பாதி தூரம் மேலே வந்துகொண்டிருந்த நீர்க்குடத்தை  அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு உள்ளே ஓடுகிறாள்.  
என்ன ஆச்சரியம்.! நீர்க்குடம், அப்படியே கீழே போகாமல் பாதி உயரத்திலேயே நிற்கிறது!.
இதுவல்லவோ கற்பின் வலிமை! இப்படிப்பட்ட மனையாளைப் பெற்ற வள்ளுவருக்கு , அவருக்கு கிடைத்த செல்வங்களுக்குள்ளே சிறந்தது இதுவன்றோ?

( * The Story :
Vasuki was Valluvar's wife. She was fully devoted to him. Of the several instances which bring out the power of this chaste woman, the one most quoted is this :
Once when Vasuki was drawing water from the well at the backyard of her house, Valluvar summoned her to come immediately. On hearing him, Vasuki immediately left the pot midway and rushed inside. But, the pot full of water,  instead of falling back into the well, stood at the same place, defying the law of gravity!)

இந்த நிகழ்ச்சிக்குப் பின்தானோ வள்ளுவர் இந்தக் குறளை எழுதினார் ?

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். 

இந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்கிறது கீழ் வரும் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  


 
வள்ளுவன் வாவென்ன வாசுகி ஓடிவர
அள்ளுகின்ற  நீர்க்குடமே அந்தரத்தில் நின்றதுவாம்
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். 

The English version by Rev.Pop

Woman might of chastity retain, What choicer  treasure doth the world contain?
The Meaning

What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
The English version of Suthaananda Bharathi

What greater fortune is for men             
Than a constant chaste woman?