Search This Blog

Sep 28, 2015

கொசுவின் பாட்டு


 சென்னையிலே இப்போது கொசுத் தொல்லை அவ்வளவாக இல்லை - இன்னும் மழை ஆரம்பிக்காததால்! ஆனால் டெங்கு வியாதி பற்றி பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில்,    சில மாதங்களுக்கு முன் கொசுத் தொல்லையைப் பற்றி நான் எழுதிய ஒரு பாட்டு , பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. தூசி தட்டி எடுக்கப்பட்ட அந்தப் பாடு இதோ !
படித்து முடித்தபின்,  "சரியான  கடி "என்று சொல்லுகிறீர்களா?
அதுவும் சரிதான் ! கொசுவைப் பற்றிய பாட்டு பிறகு எப்படி இருக்கும்?
அன்புடன் 
ரமேஷ் 
 

கொசுவின் பாட்டு


 கொசுவின் பாட்டு நாள்தோரும்    கேட்குது இரவில் காதோரம்
இசைக்கும் அந்த ரீங்காரம்    எழுப்புது ஆத்திர ஆங்காரம்.
சிசுவில் தொடங்கி சிறுவருடன்    சீனியர் சிடிசன் அனைவரையும்
சோச லிஸ்டாம்   இக்கொசுக்கள்    சமமாய்க் கடித்துக் குதறிடுமே.

மாநக ராட்சியின் புகைவண்டி    போடும் பெரும்புகை என்றாலும்
சேனையை ஒத்த கொசுக்கூட்டம்    சேதம் ஏதும் அடைவதில்லை
படுக்கப் போகும் நேரத்தில்     படையாய் வந்து சூழ்ந்திடுதே .
ஓடோ மாசைப்*  போட்டாலும்     ஓடிப் போக மாட்டாவே
 

 "நல்லிரவுத்**"  திரவ குப்பிகளை.    நாலைந் திடத்தில் வைத்தாலும்
நள்ளிரவில்  சுள்சுள் ளென்று    நன்றாய்க் கடித்தெனை எழுப்பிடுதே
மின்சா ரம்பாய் மட்டைதனை   வீசிக் கொசுபல கொன்றாலும்
மீண்டும் மீண்டும் வந்திடுதே    மீளாத் துயரைத் தந்திடுதே.
 
என்ரத்தம் தினமும் சேதாரம்    அக்கொசுவுக் கதுவே ஆதாரம்
இந்நிலைமை  என்று மாறிடுமோ?    வழிகள் உரைப்பீர் ஏதேனும்.!
இதுதான் வழி!
பரண்மேல் இருக்கும்  பழங்கால    வலையைத் தேடி எடுத்திடுக.
அரண்போல் கட்டி அதனுள்ளே   ஒயிலாய்ப் படுத்தே துயில்கொள்க.  
 

 
 

* ODOMOS        
 

** GOOD KNIGHT      

 

Sep 24, 2015

பாதுகைக்குப் பாதுகாப்பு


கோவிலுக்குச் செல்லுபவர் எல்லோருக்கும் வெளியில் விட்டுச் செல்லும் அவர்களது செருப்பைத் தொலைத்த அனுபவமோ , அல்லது செருப்பு மாறிப்போன அனுபவமோ , ஒருதடவையாவது வாழ்கையில் நடந்திருக்கும். அப்படி இருக்கையில், அவர்கள் அடுத்த முறையிலிருந்து , அது நடக்காமலிருக்க பலவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் வியப்பில்லை.
இது பற்றி, நான் பட்டறிந்ததையும், பார்த்தறிந்ததையும் வைத்து ஒரு கவிதை!

படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும் , அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

அடுத்த கவிதைக்கு அது வித்தாக அமையட்டுமே!

அன்புடன் 

ரமேஷ்.






பாதுகைக்குப்  பாதுகாப்பு


கோவிலுக்கு    புதுச்செருப்பை    அணிந்துவரும்    பக்தர்கள்
வாயிலிலே      அச்செருப்பை     விட்டுவிட்டுச்     சென்றிடுவார்.
விட்டுவிட்டுச்     செல்பவரில்.    விதம்பலவும்.    இங்குண்டு
பிட்டுப் பிட்டு.     அதையிங்கே.    சற்றேநாம்.    ஆராய்வோம்.

உலகனைத்தும்   காத்திருக்கும்.   இறைவன்நம்    காலணியை
நலமாகக்     காத்திடுவான்     எனமுழுதும்.    நம்பி அதை
நினைவினிலே    கணமேனும்     நிறுத்தாமல்.    இறைவனைத்தன்
மனதிருத்தி    மிகத்தொழுவோர்     ஒருரகமென்     ரறிவீரே.
பரமனிடம்    பாரத்தைப்     போட்டுவிட்டுச்    சென்றபின்னும்
அரைமனது      அந்நினைப்பை     விட்டின்னும்    விலகாமல்
பாதமலர்     பூசைகளைப்      பார்த்துமனம்      மகிழாமல்
பாதத்து     அணிகலனை     நினைத்திருப்போர்.    ரகம்ஒன்று.


இல்லாத    நலன்களெலாம்     இறைவனிடம்     கேட்டாலும்
உள்ளதைக்     காத்திடுதல்      அவனிடம்    விடுவானேன் 
என்றெண்ணி     சங்கிலிவ.     டம்கொண்டு     காலணியை
நன்றாகப்     பிணைத்திட்டு     உள்செல்வோர்     ரகமொன்று.


வலக்காலின்     பாதுகையை     வடப்பக்கம்    வைத்திட்டு
விலக்கிச்சிறு     தொலைவினிலே     வேறொன்றைக்     கிடத்திவிட்டு 
பாதுகைக்குப்      பாதுகாப்பு      தந்தபின்னே      உட்சென்று
தோதாக     வழிபடுமடி     யார்களரின் .     ரகம்ஒன்று


வெளியிலே     செல்லுகையில்    நைகீயும்     ரீபோக்கும் 
களிப்புடனே     அணிபவர்கள்      கோவிலுக்குச்     செல்கையிலே
பழையதொரு     ஜோடியையே      தேடியதைச்      சூடுவதால்
இழந்தாலும்     மறந்தாலும்      இவர்க்கில்லை      ஒருகவலை.


அடுத்தமுறை     கோவிலுக்கு     நடையாகச்     செல்லுமுன்னே்
விடையிந்தக்      கேள்விக்குத்     தவறாமல்     சொல்லுங்கள்.
இந்த  ரகங்களிலே      எந்தரகம்      உங்கள்ரகம் ?
சிந்தித்து     பதிலுரைப்பீர் ;உம்       காலணியை       இறைகாக்கும்.,





Sep 21, 2015

கூகுள் உள்ளீட்டுக்கருவி

 

கூகுள் உள்ளீட்டுக்கருவி

எனது பள்ளிக்கால நண்பர்களான ராம்மோகனுக்கும் , ராமசாமிக்கும்  என்னுடைய கனித்தோட்டம் பதிவின்  வாசகர்கள். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்  கூகுள் உள்ளீட்டுக்கருவியை அறிமுகம் செய்த பின் , அவர்கள் தமிழில் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் என்னுடைய பதிவை ஆரம்பிப்பதிற்கும் இதுவே உறுதுணையாக இருந்துது எனலாம்!.
வேண்டுவோர்
www.google.com/intl/ta/inputtools/try என்ற இணைப்பை முயலவும்.

வாழ்க கூகுள் உள்ளீட்டுக்கருவி !

இதுபற்றி நான் எழுதிய ஒரு சிறு கவிதை.

கூகிள் தமிழ் எழுத்துக் கருவி மூலம் - மெல்லச் 
சாகின்ற தமிழெழுத்தை பிழைக்க வைப்போம் - கைகள் 
நோகாமல் தமிழ் எழுத உதவும் கூகிள் -அதை 
"ஆகா" வெனப் போற்றி வாழ்த் துரைப்போம்.   
  
ரமேஷ் .

Sep 18, 2015

பயன் முடிந்ததும் பயணமும் முடியும்!

பயன் முடிந்ததும் பயணமும் முடியும்!

நாகராஜன் என்னுடைய பால்ய நண்பர். தமிழ் ஆர்வலர். நல்ல சொற்பொழிவாளர். நானும் அவரும் சிறுவயதில் பள்ளிச்சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்ட நினைவுகள் இன்றும் பசுமை!
அவர்  பிள்ளையாருக்கு வந்த சோகம் பற்றித் தனது ஆதங்கத்தை என்னுடன் பகிரிந்து கொண்டிருக்கிறார்- கீழ்கண்டவாறு,!

quote :

பிள்ளை யாருக்கு வந்த சோகம்
நேற்று விற்காத விலை போகாத மண் பிள்ளையாரை
மாலை நேரத்து மதியின் கீற்றொளியில் கண்டேன்
குப்பை தொட்டியில் ,விநாயகர் !
விர்கபட்டால் தான் அது தெய்வம்.
இல்லையேல் அது களிமண் குவியல்!!


Unquote
அவரது அந்த ஆதங்தக் கவிதையின் தூண்டுதலால் விளைந்த எனது கவிதை இதோ!

விலைபோக முடியாத விநாய கரின் 
சிலைஅடையும் முடிவையே கண்டுரைத் தீர்.
விலையாகி பூசையில் அமர்ந்த சிலையும்
அலைகடலில் சிலநாளில் அமிழும் அன்றோ!


 எப்பொருளும் அப்பொருளின் பயனும் முடிந்தால்
அப்போதே பொருளதனின்  பயணம் முடியும்!
தப்பாத இவ்வுண்மை பொருட்கு மட்டோ?
உப்புண்னும்  மாந்தர்க்கும் பொருந்தும் அன்றோ!


அன்புடன்
ரமேஷ் www.kanithottam.blogspot.in
 

Sep 17, 2015

காலை நேரக் காற்றில்- பகுதி-1

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

பல ஆண்டுகளாக நான் காலையில் நடைப்பயிற்சி செய்வது உண்டு.
தினமும் செய்யவேண்டும் என்று ஆசை! ஆனால் நடைமுறையில் அது நடந்ததில்லை!


வாரத்தில் இரண்டு , மூன்று நாட்கள் மட்டுமே முடிந்தது.

ஆனால் இப்போது வேலையிருந்து ஒய்வு பெற்ற பின்னர், கிட்டத்தட்ட எல்லா நாட்களும் செய்கிறேன்.

வேலை செய்துகொண்டிருக்கையில் , அப்படிப்  போகும்போது கூட, மனதில் அன்று செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியே மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

காலைக் காட்சிகள், கண்ணில் பட்டாலும், மனதில் பதிந்ததில்லை.
இப்போது, ஒய்வு பெற்ற பின், சற்று நிதானித்து, கண்ணில் படும் காட்சிகள் எல்லாம் மனதில் பதிந்து மகிழ்சியைத் தருகின்றன! 
அப்படிச் செல்லும்போது கண்ட காட்சிகள் ஒரு சிறு கவிதை வடிவில்!--

காலை நேரக் காற்றில்- பகுதி-1

(இதை இதற்கு முன்னமே, சிலருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது இது கனிததோட்டத்தில்! eluthu.com இணையதளத்திலும் பதிவு  செய்து இருக்கிறேன்)

அன்புடன்
ரமேஷ்



காலைநேரக் காற்றிலே துயில்எழுந்த மாட்டிலே
 
சாலைதூங்கும் நேரத்தில் சத்தமில்லா வேளையில்

காலைவீசி நடப்பது மிகமிக உற்சாகமே!

வேலைவிடுத்த பின்னரே மிகவும்அது சாத்(தி)யமே!

 

மென்காற்றில் மிதந்துவரும் வேப்பமர வாசமே

முகர்ந்தபின்னே சுகம்அடையும்  என்னுடைய சுவாசமே.

தெருஓரம் தூங்கும்நாய்  தலைநிமிர்த்திப் பார்த்திடும்.

தெரிந்தமுகம் இதுவென்று  திரும்பதூங்கப் போய்விடும்

 

விதவிதமாய் நிறஜாலம்  விண்வெளியில் நேர்ந்திடும்

இதமான இளஞ்சூட்டில்  என்குளிரும் நீங்கிடும்.

அடுக்குமாடி கட்டிடங்கள் அனைத்தின்வாசல் வெளியிலே

வீடுகாக்கும் காவலர்கள் விழித்துக்கூட்டம் போடுவார்.

 

வானிலின்னும் ஆதவன் வரவிருக்கும் வேளையில்

தேநீர்கோப்பை ஏந்தியே தினம்தினமவர் பேசுவார்

நள்ளிரவினில் குளிர்நீக்க  அவரெரித்த குப்பைகள்

சுள்ளிகளின் சிறுபுகையின் வாசம்காற்றில் வீசுமே.

 

முகம்மூடும் மேகத்திரை  மெல்லமெல்ல விலக்கியே

மெதுவாக இரவிஎழ  இரவின்இருள் நீங்கிடும்.

சந்திக்கும் மூன்றுதெரு  எங்கெங்கி  ருப்பினும்

தொந்தியுடன் அங்கிருப்பார் விக்னவி நாயகர்.

 

சிலைதன்னைத்  தாண்டிச்செல்லும் மக்கள் அனைவரும்

தலைதிருப்பி வாய்முணுத்து  வந்தனங்கள் சொல்லுவார்.

கன்னம்தொட்டு கரணமிட்டு செல்லுவோரும் சிலருண்டு.

அனைவருக்கும் ஆசிதந்து அமர்ந்திருப்பார் பிள்ளையார்.

 

 

 

.

 

 

 

 

 

Sep 8, 2015

கூவத்தின் கூவல்

சென்ற மாதம் சென்னையின் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை என்றால் உடனே நினைவுக்கு வரும் பலவற்றில் கூவமும் ஒன்று. அவ்வப்போது " கூவத்தை சுத்தம் செய்வோம் /செய்து கொண்டிருக்கிறோம் / செய்து விட்டோம் " என்றெல்லாம் செய்திகள் வருவது உண்டு. இந்த ஆண்டும் அதற்கு விதி விலக்கல்ல! ஆனால் கூவம் என்னவோ அப்படியேதான் ( அல்லது முன்னை விட மோசமாகத்தான் ) இருக்கிறது.
தன் நிலையைப் பற்றி கோவமே கூவும் பரிதாபக் கூவலாக  இந்தப் பாடலை அமைத்திருக்கிறேன்.
இந்தப்பாடலை eluthu.com இணையதளத்திலும் பதிவு செய்திருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்


கூவத்தின் கூவல்

என்பேரு   கூவம்.  நான்ரொம்பப்    பாவம்
என்கதையைக்    கூறுகிறேன்    அதுரொம்ப    சோகம்
என்பேரைச்    சொல்லி
பலர்   அடைந்தார்கள்    லாபம்-ஆனால்
என் நிலைமை    மாறவில்லை,    அதுஎந்தன்   சாபம்.


சென்னைக்கு     மேற்கில்வெகு     தூரத்தில்.   பிறந்தேன்
கடல்நோக்கி   ஓடுகையில்    சென்னைக்குள்      நுழைந்தேன்
பளிங்குபோல    தெளிந்தவுடல்    அன்றுஇருந்    தாலும் 
களிம்புபோல     கருங்குழம்பாய்     இன்றுஆன   தென்ன?


மலஜலமும்   மூத்திரமும்      கழிவுநீரும்    நித்தம்
என்னுடலில்     கலந்திடுவார்    செய்வதில்லை   சுத்தம்-என் 
உடல்சேரும்     மழைக்கால்வாய்     என்னுயிரின்    நாளம்-அதை
அடைத்திட்டு   வீடங்கு     கட்டுதலா     நியாயம்?


வரும்நீரின்     வளம்வற்றி   வெறும்குட்டை   ஆனேன்பின்
துருனாற்றம்    துளைப்பதிலே   வியப்பெதுவும்    உண்டோ?.
கீழ்ப்பாக்கம்    என்றாலே    பைத்தியமென்    பதுபோல் 
கூவமெனின்    நாற்றமென்று    பொருள்கொள்ளல்    ஆச்சு.


இத்தனையும் சென்னை நகர் மக்களின் வில்  லங்கம்
அதனாலே வருகுதென்  பெயருக்குக்  களங்கம்.
சுத்தம் செய்யும் செயல்களில்  மெத்தனங்கள்  காட்ட
அத்தனையும் என்னுடலில் விஷமாகிப் போச்சே!


பலதடவை    எனைத்தூய்மை   செயத்திட்டம்    இட்டார்
உலகப்புகழ்   தேம்ஸ்ஸின்நிகர்     ஆவெனெனச்     சொன்னார்.
செலவுகள்பல    கோடிஅவர்     செய்ததுதான்.   மிச்சம்-என்
நிலைமட்டும்   மாறவில்லை   எனக்கில்லை   மச்சம்.


எனையீன்ற   கடல்அன்னை    யுடன்சங்கம     மாக   
சென்னைவழி     செல்வதன்றி     மாற்றுவழியு   மறியேன். 
வழித்தனியாய்ச்   செல்பவளை   வன்புணரும்     செயல்போல்என்
எழில்குலைத்தே    அழித்திடுமிச்    செயலென்று    நிற்கும்?


எனைநெருங்கையில்    இருகரத்தால்    மூக்கடைப்பதை   விட்டு
என்உடல்சேரும்   உம்கழிவின்   சாக்கடைகளை   யடைப்பீர்-என்
இருகரையிலும்   முளைத்திருக்கும்    இருப்புகளை    யகற்றி
மறுஇடமொன்று   தந்தங்கே   புல்வெளிகளை   யமைப்பீர் .


செல்வச்சீர்    செழுமையுறு    சென்னையுறை    மக்காள்!
குலைந்திட்ட    எனதெழிலை    மீட்டுதல்உம்    கடனே!
இதுவரையில்    செய்துவரும்     இழிசெயல்களை    விடுத்து
புதுவழியைப்    பதிவுசெய்வீர்    இன்றுமுதல்   உடனே!

 

Sep 6, 2015

வாழ்க்கையிலோர் புதிய தாள்.


நான் பணியிலியிருந்து முழு ஒய்வு பெற்றதும் (31-12-2014), எழுதிய முதல் கவிதை .
ஒய்வு பெற்றவுடன் நான் பெற்ற சுதந்திரத்தையும் , அதன் பின்னோடே  வந்து சேர்ந்த சில சந்தேகங்களையும் பகிர்ந்து கொண்ட பாடல் இது.
ஏற்கனவே சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுவிட்டேன்.
இப்போது இது கனித்தோட்டத்தில் - சிறு திருத்தங்களுடன்!
அன்புடன்
ரமேஷ்

 

வாழ்க்கையிலோர் புதிய தாள்.

நேற்று எந்தன் அலுவலக வாழ்க்கையிலே   கடைசி நாள்
எழுதுகிறேன் இன்று முதல் வாழ்க்கையிலோர் புதிய தாள்..

 இது வரை

 காலைக்கடன்  முடிக்க உள்ள நேரம் கூடக்  கொஞ்சமே
நாளிதழ்கள் படிக்கக்கூட காலம் மிகுந்த பஞ்சமே.


 பளபளவென முகமும் மின்ன தினம் பண்ணணும்  ஷவரமே 
அனுதினமும் அலுவலகம் செல்லுதலே  விவரமே.

முழுக்கைச் சட்டை அழுக்கில்லாமல் சலவை செய்து அணியணும்   
பழுதில்லாமல் காலணிக்கும் பாலிஷ் செய்து போடணும்

இட்லிதோசை பொங்கல் செய்து தின்ன நேரம் இல்லையே
ஓட்சும் சோழச் சில்லுகளும் சிற்றுண்டியாய்  ஆனதே

 அரக்கப் பறக்க அள்ளிப்போட்டு தினமும் தயார் ஆகணும்
அடிச்சுப் பிடிச்சு நேரத்தோடு அலுவலகம் சேரணும்.

 கம்ப்யூட்டர்  முன் அமர்ந்து லாபக் கணக்கு  பார்க்கணும்
இம்மி அளவு தவறினாலும்  ஏனிதென் றாராயனும்

பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் பல வகையில் போடணும்
எவர் செய்த தவறென்று துப்பறிந்து துலக்கணும்.
 நேற்றுப் போட்ட திட்டங்கள் போட்ட படி நடக்கலே !
நாளை என்ன நடக்குமின்னு நிச்சயமாய்ப் புரியல்லே !.
 
என்றாலும் பல ஆண்டுகள் முன் நோக்கிப் பார்க்கணும்  
வென்றாலும் தோற்றாலும் விளக்கம் பல  கூறணும் .
வீடு வந்து சேர்ந்தாலும் வேலை விடுவ தில்லையே .
கைபேசி மெயிலில் இடைவிடாத தொல்லையே.

இனிமேல்

காலையிலே கிண்கிணு எனும் கடிகாரத் தொல்லையே
இன்று முதல் என் வாழ்வில் எந்நாளும் இல்லையே !

காலைக் குளிரைப் போர்வையிட்டு கதகதப்பாய் மாற்றலாம்.
தோன்றும் பொது துயிலெழுந்து தூக்க சுகம் காணலாம்.
நாள் முழுதும் நாலைந்து நாளிதழ்கள் படிக்கலாம்.
கேள்வி கேட்க ஆளின்றி கூகிள் வலை வீசலாம்.
காலைமுதல் மாலை வரை புத்தகங்கள்  படிக்கலாம்.
வேலை வெட்டி ஒன்றுமின்றி வெறும் பொழுதைப் போக்கலாம்.

உலகக் கோப்பை பந்தயங்கள்  அத்தனையும் பார்க்கலாம்.
சில சமயம் மனைவியுடன் வீட்டு  வேலை செய்யலாம்.


 சாதம் வடிக்கக் கற்கலாம்; சமையலுமே  செய்யலாம்.
வேதநூல்கள் தினம் படித்து  வாழ்வு நெறி வகுக்கலாம்.

நூலகங்கள் போகலாம் ; நல்ல படங்கள் பார்க்கலாம் ;
காலாரக்  காலை மாலை நடைப்  பயிற்சி செய்யலாம்.


பேரன்பேத்தி மழலைகேட்டு மனம் மகிழ்ந்து போகலாம்.
பாரம்  இன்றி   ஓடிப்  பாடி அவர்களோடு  ஆடலாம்.

செவிகுளிரப் பாடல்கள் சிறிது நேரம் கேட்கலாம்.
கவிதை எழுதிப் பழக லாம் ; கற்பனையில் மிதக்கலாம்.

ஆனால்


முதுமை வந்து சேர்ந்ததே, முதுகு வலியும் நேர்ந்ததே !
எதுவும் செய்ய இருமடங்கு நேரம் இன்று ஆகுதே!

ஏழு எட்டுப் படிகூட  மாடி ஏற முடியலே!
பாழாய்ப் போன முட்டி வலி பாடாய்ப் படுத்துதே !

சீனியர் சிடிசன் ஆனபின் சீனி குறைக்க வேண்டுமோ?
நான் விரும்பும் பண்டம் எல்லாம் நச்சாகப் போகுமோ?

ஒய்வு பெற்ற பின்னரே ஒரு நூறு காரியம்
தொய்வு இன்றிச் செய்யவே பட்டியல் பல  இருப்பினும்

செய்ய உறுதி இருக்குமோ? சோம்பல் வந்து சேருமோ?
பையப் பையப்  பார்க்கலாம், நடப்ப தென்ன நோக்கலாம் !


இப்படிப் பல எண்ணங்கள் என்னை வந்து குழப்பினும்
தப்பி தென்று தள்ளுவேன் ; தளர்வு நீக்கித் துள்ளுவேன் .

கரி முகத்துக் கடவுளும் , அறு  முகத்து  முருகனும்
விரிசடை யுமை பாகனும் , வந்து துணை நிற்கவே!

Sep 5, 2015

கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !

சற்று முன் பின் வரும் பதிப்பை, "eluthu.com " ல் பதிவு செய்திருக்கிறேன். உங்கள் கருத்து? பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி 

ரமேஷ் 

கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அப்படி என்றால், உலகத்தில் நடக்கும் எல்லாத் தவறுகளுக்கும், கொடுமைகளுக்கும், காரணம் என்ன என்று நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்!
வேண்டாம்!
கடவுள் என்று ஒருவன் (ஒன்று) இருந்தால், அவனே (அதுவே) எல்லாவற்றிற்கும் காரணம் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம்  இல்லையா?
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
இல்லையென்று சொல்வீர்களானால் , உங்கள் தோல்விகளுக்கும், சோகங்களுக்கும் வேறு ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமே----குடித்துவிட்டுக் கிடப்பவன், தான் குடித்ததற்கு எதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதைப் போல!
 கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அப்படிச் சொன்னால் , உங்கள் இயலாமையையும், முயலாமையையும் இறக்கி வைக்க ஒரு சுமைக்கல்  இல்லாமல் போய்விடுமே!
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !அப்படிச் சொல்லிவிட்டால், வாரம் ஒரு முறை கோவில் சென்று வணங்கி,  உண்டியலில் காணிக்கை செலுத்தி , எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டு, நாம் செய்யும் வக்கிரங்களின் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பு என்று தட்டிக் கழித்துவிட முடியாதே!
கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !
அதன் பிறகு, எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்!

 கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் - தயவு செய்து !