Search This Blog

Nov 30, 2015

பெர்க் ஷயரில் விடுமுறை

சில மாதங்களுக்கு முன், நானும் என் மனைவியும் , அமெரிக்காவில் வசிக்கும் என் மூத்த மகனுடன் சில மாதங்கள் தங்கி இருந்தோம். அப்போது, மகன்,மருமகள்,பேத்தியுடன் பெர்க் ஷயர் என்னும் இடத்திலுள்ள ஒரு விடுமுறை விடுதியில் சில நாட்கள் கழித்தோம். இயற்கை அன்னையின் மடிமேல் அமைந்திருந்த அந்த இடத்தின், அதன் சுற்றுப் புறங்களின் அழகே அழகு.  அழகே அழகு.

மனிதரின் கைபடாது வளம் கொழிக்கும் எந்த ஒரு இடத்தைப் பார்க்கையிலும் " இது போல் உண்டா!" என்று வியக்கத் தோன்றும்.


இந்த இடமும் அதற்கு விலக்கல்ல. ஒரு படி மேலே என்று தான் சொல்ல வேண்டும்.

அப்போது , அது பற்றி நான் எழுதிய ஒரு பாடல் இது; பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புடன்,
ரமேஷ்

பெர்க் ஷயரில விடுமுறை

மலைநிழலில் மரச்செறிவில் மறைந்திருந்த ஒதுக்கந் 
தனிலமைந்த அழகியதோர் விடுமுறைச் சதுக்கம் 
அங்கிருந்த சிலநாட்கள் மனவேட்டில் பதிக்கும் 
மகிழ்வான நினைவுவாழ் நாள்முழுதும் நிலைக்கும் 

வெளிர்வான நிறவானில் வெண்பஞ்சுக் குவியல் 
இடையிடையே மழைதாங்கி முகங்கருத்த மேகம் 
துளிர்பச்சை மரமுடியால் மேகம்தொடும் முகடு 
அங்கங்கே வழித்தெடுத்த பனிச்சறுக்கல் வகிடு 

இளங்காற்றில் அங்கிங்கு மலைபாயும் மேகம் 
கலைந்தாடிப் பலவுருவம் எடுத்து விளையாடும் 
உலவுமந்த மேகத்தின் நிழல்படிந்த மலையின் 
இளம்பச்சை நிறப்போர்வை கரும்போர்வை ஆகும் 

மலைமுகத்தில் நட்டுவைத்த காற்றாலைக் கூட்டம் 
காற்றடிக்கும் திசைநோக்கி தலைதிருப்பி நிற்கும் 
வலியாரின் வாக்கையெல்லாம் வேதமென ஒப்பி 
தலையாட்டும் வறியவரின் செயலதனை ஒக்கும் 

அடர்ந்தமலைச் செறிவுகளில் துள்ளிடும் அருவி 
கொடிபடர்ந்து நெடிதுயர்ந்த மரம்நிறைந்த காடு
இவற்றிடையில் வளைந்துசெல்லும் ஒற்றையடிச் சுவடு 
சலசல(வெ)ன அலம்பலுடன் ஓடும்  சிற்றோடை 

சிலநேரம் அருகில்வந்து பாதைதொட் டோடும் 
மறுநேரம் கண்மறைந்து ஒலிமட்டும்  கேட்கும் 
இலைமறைத்து இருள்கவிந்து இருக்கும்சில பகுதி 
இருள்விடுத்து  இரவிகதிர் நுழையும்பிற பகுதி 

மறைந்திருந்து  மரங்களிடை புட்கள்கவி பாடும் 
சிறகடிக்கும் சிறுகுயிலின் இசைநம்செவி நிறைக்கும் 
இயற்கையன்னை இருகரத்தில் நமைஅணைக்கும்  வேளை
துயரங்களை மனம்மறந்து உயரே  பறக்கும் 

மலைநிழலில் மரச்செறிவில் மறைந்திருந்த ஒதுக்கந் 
தனிலமைந்த அழகியதோர் விடுமுரைச் சதுக்கம் 
அங்கிருந்த சிலநாட்கள் மனவெட்டில் பதிக்கும் 
மகிழ்வான நினைவுவாழ் நாள்முழுதும் நிலைக்கும் 

  


  






Nov 27, 2015

நேற்றும் இன்றும் -------

நேற்றும் இன்றும் -------
தமிழ் நாட்டில், குறிப்பாக சென்னையில்,  சென்ற இரு வாரங்களாக பெய்து வரும் பெருமழையைப் பற்றியும் அதன் பாதிப்புகளைப் பற்றியும் எங்கும் ஒரே பேச்சு ; கருத்துப் பரிமாற்றங்கள் .
ஆனால், இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் , வியப்பாக இருக்கிறது. "செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் இவ்வளவு வெய்யில் கொளுத்துகிறதே!"என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தோம். சாதாரணமாகப் பெய்யும் மழை கொஞ்சம் கூட இல்லாததால், ஏரிகளில் தண்ணீர் இருப்பளவு மிகவும் குறைந்து , "வரப்போகும் கோடையில் நிச்சயமாக தண்ணீர்ப் பஞ்சம் தான் "என்று பேசத் தொடங்கியிருந்தோம்.
அதைப் பற்றி அப்போது ஒரு பாட்டு  எழுத  ஆரம்பித்தேன்.! எழுதி முடிக்கும் முன்னாலேயே மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. நிலைமை தலை கீழாக மாறிவிட்டது!
இரண்டு நிலைமைகளையும் ஒப்பிட்டு ஒரு கவிதை!
அன்புடன் 

ரமேஷ் 


சென்ற மாத நிலைமை


ஆடி முடிந்து     அதன் பின்னே.     ஆவணி் வந்தும் ---           கோடை

சூடு தணிந்து     தூறல்  கூடப்        போடவேயில்லே    .-       மழை

மாரியுமே           பருவத்தில்             பொய்த்து                           விட்டதால்

ஏரிகுளம்.           ஆறு எல்லாம்        வத்திப்                                 போச்சுதே!

பூண்டி புழல்             ஏரி மற்றும்               செம்பரம்பாக்கம்   -  அதைத்

தாண்டிகொஞ்சம்  தெற்காலே                 மதுராந்தகம் -             மற்றும்

வீராணம்.                   எல்லாமே                  வற்றிப் போனதே -    அந்த

காரணத்தால்.            எல்லோருக்கும்         கவலை                         யாச்சுதே !


காவிரியும்                  கிருஷ்ணாவும்          கையை விரிக்கையில் -     வேறு

யாரிந்த                         நகருக்கு                      நீர்  தருவார்கள் ?-               மெட்ரோ 

வாரியத்தின்               பின்னாலே                 ஓடவேண்டுமே -               தண்ணீர் 

லாரிகளும்                  எங்கே என்று            தேடவேண்டுமே!


இன்றைய நிலைமை


தண்ணீர்த்                  தட்டுப்பாட்டுக்        கவலை மாறியே  -       எல்லார் 

தலைக்குமேலே    தண்ணீரென்ற               நிலைமை                      ஆச்சுதே !

வங்கக்க.                 டலழுத்தத்.                   தாழ்வு மண்டலம் -       வந்து
.  
இங்கே                      பெரும்பு.                      யலாய் உருவா              னதே!


கரைகடந்து             விரைந்து வந்த             கடுங் காற்றிலே               நிறைய 

மரம் விழுந்தது  ;  மழை பொழிந்தது        மிகையாகவே.                 மக்கள் 

கரங் கூப்பி             மழை வேண்டிய           நிலை மாறியே -           இன்று

வரம் வேண்டு       வதோ மழையின்          சீற்றம்                             குறையவே!


ஏரியெல்லாம்          கரை நிரம்பி                 வழிந்ததனாலே --         நீர்  உள்

ஏறியதால்                வீடுகளே                           ஏரியானதே! -              கரை

புரண்டோடும்        அடையாற்றின்               இருமருங்கிலும் -       உள்ள

தெருக்களிலே         படகுக் கூட்டம்              பவனி                            வருகுதே!


தொலைபேசி          தொலைக்காட்சி            தொடர்பு  போனபின்---    கையில்                      

அலைபேசி               ஒன்றேதான்                      நிலைத்து                          நிற்குதே!

நிலை குலைந்து       நிற்கின்றார்                       நகர மக்களே -                 அவர்கள்

தலைஎழுத்து           என்று மாறி                         துயரம்                                தீருமோ.


வாருதியை                வாரி வந்த                           மாரியினாலே -           இங்கே

சேருகின்ற                 நீர் அனைத்தும்                   தெருவில்                   தேங்கியே

நாறுகின்ற                 நகரமிது                                  நரகம் ஆனதே -         இதைக்

கூறுவது                      யாரிடமோ?                         தெரிய                           வில்லையே!

Nov 26, 2015

பள்ளிக்கூடம் சென்றார்கள் - முதல் முறையாக -

This is beige posted again as the earlier post got deleted by mistake.
Their First Visit To School 

Ezhil, aged eight years, and Thamarai, his younger sister ,
Both went to school today
For the first time -

When their huts in the low lying area got flooded
And the government moved them
To the Corporation school nearby for safety!

 Ramesh 


பள்ளிக்கூடம் சென்றார்கள் - முதல் முறையாக -


கூவத்தின் கரையில் உள்ள

குடிசைக் குடியிருப்புகளில் வசிக்கும்

எட்டு வயது எழிலும் அவன்  தங்கை தாமரையும்

இன்று பள்ளிக்கூடம் சென்றார்கள் - முதல் முறையாக -


தாழ்வான சேரிகளில் வசிக்கும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை

அரசு,  மாநகராட்சிப் பள்ளிகளில்

தற்காலிகமாகக் குடியேற்றியபோது!



ரமேஷ் 


Nov 18, 2015

சியாமளா தண்டகம்

மகாகவி காளிதாசின் படைப்பு சியாமளா தண்டகம். தேவி அருள் பெற்ற உடனே அவர் இயற்றிய முதல் கவிதை.
என்னுடைய நண்பர் தியாகராஜன் சில நாட்களுக்கு முன் எனக்கு இந்த படைப்பின் சம்ஸ்க்ருத வடிவை அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அனுப்பி இருந்தார்.
அதனுடைய முதல் நான்கு ஸ்லோகங்களும் நான் சிறு வயதிலே கற்றவை.!
இந்த ஸ்லோகங்களை தமிழ்க் கவிதை வடிவில் படித்திருக்கிறேன்.
படித்து மகிழ்க! தேவி அருள் பெருக!
அன்புடன்
ரமேஷ்


Shyamala Dhandagam is Mahakavi Kalidas’s creation. This was the first poem composed by him after he got Devi’s blessings.
Some time back, My friend Thyagarajan, sent me the Sanskrit version of this , with an English translation.. I had been taught the first four stanzas  - slokas-  in my childhood. Now I have tried to render these slokas in Tamil.
Read, enjoy and get the blessings of Devi.
V.Ramesh
 

Shyamala Dhandagam
First 4 slokas
சியாமளா தண்டகம்
(முதல்  நான்கு சுலோகங்கள்.)
 
SASKRIT/EGLISH
                                 TAMIL
माणिक्यवीणामुपलालयन्तीं
मदालासां मञ्जुलवाग्विलासाम्
माहेन्द्रनीलद्युतिकोमलाङ्गीं
मातंगकन्यां सततं स्मरामि ॥१॥

I always meditate on the daughter of Matanga Maharshi who playfully holds a Veena made of Mankikya, who is lazy by intoxication, whose speech is picturesque and beautiful and whose body is resplendent like the dark blue gemstone.
 
 
 
 
 
மடியில்நல்  லிசைதரும் மாணிக்கப்  பொன்வீணை
ஒய்யார மாய் ஏந்தியே
மதுதரும் மிதபோதை மென்முறுவலைத்  தன்
முகம்தரித்த இன்மொழி யினள்
மாகேந்திர மலைதந்த நீலநிற மணிக்கல்போல் 
ஒளிர்ந்திடும் தேகத் தினள்
மாத்தவர் மாதங்க முனிவரின் மகளுனையே
மனத்திருத்தி மகிழ்ந்து தொழுவேன்                 1
 
 
 
चतुर्भुजे चन्द्रकलावतंसे
कुचोन्नते कुङ्कुमरागशोणे
पुण्ड्रेक्षुपाशाङ्कुशपुष्पबाण-
हस्ते नमस्ते जगदेकमातः ॥२॥

O The Mother of the Worlds who has four hands, whose head is adorned with the crescent moon, who has a full bosom, who has a complexion red as kukum and who carries in her hands a bow of sugarcane, arrows of flowers, the rope and the ankusa (goad), my prostrations before you.
 
 
 
கரம்நான்கு கொண்டவளே! மென்பனித் தண்பிறையை
சிரந்தனில் சூடிக் கொண்ட
குங்குமச் சிவப்புநிற முகத்தவளே!, நற்பெரும்
கொங்கையளே!,  கரும்பு வில்லும்
 மலரம்பும் பாசாங் குசங்களும்   தன்னுடைய
மலர்க் கரத்தில் ஏந்தியவளே
உலகேழின் தாயுந்தன் தாள்பணிந்து வணங்குவேன்
நலமெனக் கருள்க நீயே! .                         2
 
 
माता मरकतश्यामा
मातङ्गी मदशालिनी
कटाक्षयतु कल्याणी
कदंबवनवासिनी ॥३॥
May the Mother, who is dark as the marakata gemstone, who is the daughter of Matanga maharshi, who is exuberant, who is auspicious and who abides in the kadamba forest, cast on me the glances from her eye-corners.
 
 
 
 
 
 
 
மரகதக் கரும்பச்சை நிறத்தாளே! மாதங்க
பெருந்தவ முனிவர் மகளே!
கடம்ப வனத்தவளே! களிமுகம் கொண்டவளே
கடைக்கண்ணின் பார்வை அருளே!
जय मातंगतनये
जय नीलोत्पलद्युते
जय संगीतरसिके
जय लीलाशुकप्रिये ॥४॥

Victory to the daughter of Matanga. Victory to the one who has the complexion of the dark blue lily. Victory to the one who enjoys and appreciates music. Victory to the one who is fond of the playful parrot.
               4
 
 
 
 
 
சீலமிகு மாதங்க மாமுனிவர் மகள்வெல்க!
நீலநிறத் தாமரை முகத்தினள்  வெல்க!
இனியஇசைப் பண்சுவைக்கும் இறையவள் வெல்க!
கனிவுடன் கிளியைக்கரம்  ஏந்தினள்  வெல்க!
           
 


 




 

Nov 17, 2015

புகைப்புடங்கள் -


சென்ற சில நாட்களாக , என்னுடைய உறவினர்களுடன் செய்திகள் பகிர்ந்து கொள்ளும் "whatsapp " குழுவில் ஏராளமான பரிமாற்றங்கள்! தீபாவளி வாழ்த்துக்கள், சென்னை மழை பற்றிய தகவல்கள், கடி ஜோக்குகள் இவற்றோடு கூட ஏராளமான புகைப்படங்கள் பகிரப்பட்டன !

எங்கெங்கிருந்தோ தேடி, தோண்டி எடுக்கப்பட்ட படங்கள் ; பலரும் முதல் முறையாகப் பார்ப்பவை. சில பழைய புகைப்படங்கள் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு "அந்தக் காலத்தை" நினைவூட்டின. மனம் நெகிழ வைத்த நினைவுகள்!

புகைப்படங்கள் , என்ன ஒரு சிறப்பான பொக்கிஷங்கள் !

புகைப்படங்களின் புகழ் பாடி ஒரு கவிதை. நீங்களும் என்னைப் போலவே உணருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன் 

ரமேஷ்.

புகைப்புடங்கள் - 

அழகான         அந்நாளைய      ஆனந்த              நிகழ்வுகளை
அலுங்காமல்   குலுங்காமல்    அழகெதுவும்      குறையாமல்
நிழலாகப்        பதித்துப்பின்    பத்திரமாய்ப்       பூட்டிவைத்த
நிகரேதும்        இல்லாத           பேரழகுப்           பெட்டகங்கள்.

சிறகில்லா        சிந்தனைப்         பறவைகளைக்.   கட்டவிழ்த்து
பறந்து              பலகாலம்          பின்னோக்கிக்.    கொண்டுசென்று
இறந்த கால      நிகழ்வுகளை    'இம்'மென்று.      சொல்லுமுன்னே 
சிறப்பாகப்       படம் காட்டும்   காலப்பொறி       இயந்திரங்கள்.


இரைச்சல்.        மிகநிறைந்த.       இயந்திர.            வாழ்விடையே
இளமைக்         காலத்து              இனிய                நினைவுகளை
அரைத்தமர்ந்து அசைபோட        இடமமைத்துத்    தருகின்ற
அட்டையிலே   அச்சடித்த            அழகிய              பூங்கொத்துக்கள்.

கருப்பு               வெளுப்பாக       அன்றெடுத்த      நிழற்படத்தின் 
வண்ணங்கள்     பழுதாகி             பழுப்பேறிப்      போனாலும்
கருத்தில்            நிறைந்துஅவை  எழுப்புகின்ற      எண்ணங்கள்
பலநாட்கள்       ஆனாலும்         பழுப்படைந்து     போவதில்லை.

நம் மக்கள்          மணமுடித்த         வரவேற்பு           வைபவத்தில்  

குழுவாக           அனைவரையும்     கூட்டிவைத்து      எடுத்த படம்
பலவருடம்        கழிந்தபின்னே      இன்றையநாள்    பார்க்கையிலே
யார்யார்             எங்கெங்குள்ளார்   எனத் தேடல்       மிகமகிழ்ச்சி.


பல்லிழந்து         உடல் தளர்ந்த        பாட்டியையும்.    பாட்டனையும்
பார்த்து அந்த     உருவங்களே.         உள்மனதில்.        பதித்திருந்தோம்.
பருவத்திலே      அவர் இருந்த          அழகுப்               படம் பார்த்து
சொல்லிழந்து    நிற்கின்றேன்.         கண்ணில் நீர்த்     திரையுடனே! 

 

வாலிபம்           வடிந்து பின்னர்      வயதாகிப்             போகையிலே
வேலை             விடுத்த பின்னர்       வாட்டும்              வெறுமையிலே
தனிமைத்           துயர் நம்மைத்        துரத்துகிற              வேளையிலே
இனிய துணை    ஆகிடுமே              இனியிந்தப்             புகைப்படங்கள்.

Nov 7, 2015

முயலாமை தோல்வி தருமே ----

காலையில்  காற்று வாங்கிக்கொண்டு வாக்கிங் செல்லும்போது , சில சமயங்களில் கவிதைகள் எழுத கருப்பொருள்கள் கிடைப்பதுண்டு. சாதரணமாக நான் " நான் உண்டு , என் வாக்கிங் உண்டு" என்று போய்விட்டு வந்துவிடுவேன். கூடவும் , எதிரிலும் வரும் சக வாக்கர்ஸ்- ஐ ரொம்ப பார்ப்பது இல்லை. என் மனைவி கூட " ஏன் இப்படி தலையைக் குனிந்துகொண்டே நடக்கிறீர்கள் " என்று கேட்பாள். என் பையனும் " நீ தரையைப் பார்த்து தானே நடக்கிறாய்? எப்படி இயற்கைக் காட்சிகளைப் பார்த்ததுபோல் கவிதை எழுதுகிறாய்?" என்று கேட்பான். இப்படி நடப்பதாலேயே,  மூன்று வருஷ வாக்கிங்கில் , மிகச் சில சமயங்களிலே நின்று மற்றவர்களுடன் பேசியிருக்கிறேன்..

இதற்கு விதிவிலக்காக, சில நாட்களுக்கு முன்,நிழல்கள் மரப் பூங்காவில்  நான் வாக்கிங் போகும்போது நண்பர் கல்யாணத்தை சந்தித்து நானாக வலியச் சென்று பேசினேன்.( இது பற்றி பின்னால் வேறு ஒரு blog -ல் கூறுகிறேன்.). அவர் ஹிந்து பத்திரிகையின் தெற்கு மண்டல அரசியல் தலைமை  நிருபராக இருந்து ஒய்வு பெற்றவர். அவர் ,  முந்தின தினம் படித்த ஒரு துணுக்கை என்னுடன் பகிர்ந்துகொண்டார்  அந்தத் துணுக்கு -

முயல் பல நாள் வெல்லலாம்.
ஆமை ஔ நாள் வெல்லலாம்..
ஆனால்
முயலாமை ஒரு நாளும் .வெல்லாது.".

என் மனதில் பதிந்த அந்தத் துனுக்கின் தூண்டிதலில் எழுந்த எண்ணங்கள் ஒரு வெண்பா வடிவில் -

முயற்சி திரு     வினையாக்கு    மெனமுன்னோர்    உரைத்தனரே
முயலாமை      தோல்வி            தருமே ----            முயன்றதால்
முயலையும்     வென்றதே        ஆமையும்               இவ்வுலகில்
இயலாத          தொன்றில்லை   காண்!

ஆமைக்கு முயல் தன்னை  விட வேகமாக ஓடும் என்று தெரியாமலா இருக்கும்? இருந்தும் , முன்னால்  பல தடவை தோற்றிருந்தும்  , ஏன் பந்தயத்தில் பங்கேற்றது? என்றாவது ஒரு நாள் நாம் வெல்லுவோம் என்ற ஒரு நம்பிக்கைதானே?

 நம்பிக்கையே மனித வாழ்க்கையின் அடிப்படை..

அன்புடன்

ரமேஷ்.