Search This Blog

Oct 31, 2019

வாழ்த்துகள்

வாழ்த்துகள் 

தீபாவளி நாளுக்கு முன்னரும் பின்னரும் வலைத்தளத்தின் மூலமாக பலருக்கும் வாழ்த்துக்கள் அனுப்பி இருப்பீர்கள்.அதேபோல் வலைதளத்தின் வழியாக வந்து  குவியும் வாழ்த்து மழையிலிருந்தும் இப்போது  மீண்டிருப்பீர்கள்.

முகநூல், வாட்ஸ் அப் மூலம் வாழ்த்துவது மிகச் சுலபமாக ஆகிவிட்டது. பலருக்கும் வாழ்த்துச்  செய்திகள் அனுப்ப முடிகிறது.

இருந்தாலும் -

பண்டிகை நாளன்று உறவினர் வீட்டுக்குச் சென்று வாழ்த்தும் வழக்கம், பக்கத்துக்கு வீட்டுக்காரர்களையாவது பார்த்து வாழ்த்துவது -- இவைகள் எல்லாவற்றையும் இந்த முகநூல் வழிவாழ்த்தும்  வழக்கம் அழித்துவிட்டதே!

இது பற்றி இரண்டு வெண்பாக்கள்.

இரண்டுக்கும் ஒரே கருத்துதான்.

பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 



வாழ்த்துகள் 

அக்கத்துப்  பக்கத்து  அண்டை அயல்வீட்டு  
மக்களை எல்லாம் மறந்து - முகநூலில் 
திக்கெட்டும் உள்ளார்க்கும் தட்டச்சி லேதட்டி   
வக்கணையாய் வாழ்த்துகிறார் இன்று 

( ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)


முகத்தினைப் பார்த்து சிரித்தே மகிழ்ந்து 
சுகமா  யெனக்கேட்கும் நாள்போய்- முகநூலில் 
தட்டெழுத்து அச்சடித்து  எத்திக்கும்  உள்ளார்க்கும்
தட்டுகிறோம்  வாழ்த்துக்கள் இன்று 

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
   




Oct 25, 2019

பிரதோஷப் பாடல் - 25

பிரதோஷப்  பாடல் - 25

சந்தி யில்பிர தோஷ வேளையில்
------வந்து ஈஸ்வரன்  கோவிலில்
நந்தி பகவானின் பிந்தியே இருந்து
------கொம்பிரண் டினிடை  யூடிலே
லிங்க உருவான ஈசன் தரிசனம்
------செய்பவர்  கள்தம்  வாழ்விலே
சங்க டம்நீங்கி  நிம்மதி சேரும்
------உண்மை ஈதென்று அறியவே!

அன்புடன்

ரமேஷ்  ( கனித்தோட்டம் )                                          25-09-2019

Oct 14, 2019

மாற்றம்

மாற்றம் 

🙁  → →→   🙂

கீழ்நோக்கி வளைத்த கோட்டை 🙁
மேல்நோக்கி வளைத்து விட்டால் 🙂
அழுகின்ற முகமும் உடனே
சிரிக்கின்ற முகமாய் மாறும்.

கீழிழுக்கும் காமம் குரோதம்
கோபமெனும்  எண்ணம்   போக்கி 
நல்லெண்ணம் நாளும் சேர்த்தால் 
வாழ்க்கையம்  வளமாய்  மாறும் .


Oct 11, 2019

பிரதோஷப் பாடல்- 24

பிரதோஷப் பாடல்- 24

இன்றைய பிரதோஷப்  பாடல் , இறைவனை வணங்கி

அன்புடன்

ரமேஷ் .


பெருகும் கங்கையை  விரிசடை யில்தரித்து தெய்வ தரிசனம் தருபவனே
ஒருகால் மடித்து உயர்த்தி நிறுத்தி  திருச்சபை தனில்நடம் புரிபவனே
திரிபுரம் எரித்து அரக்கரை அழித்து தேவரைக் காத்த உமைபங்கா
தெரிந்தும் தெரியாது அறிந்தும் அறியாது புரிந்த   பிழைபொறுத்து அருள்வாயே!

Oct 9, 2019

வண்டியின் அடியில் ------

வண்டியின் அடியில் ------

அடாத மழையில் , ஒதுங்க இடமின்றி, தனது பழவண்டியின் அடியில் ஒதுங்குகிறான் இந்த பழ வியாபாரி.

இன்று அவன் விற்பனை ஒரு கேள்விக்குறியே !

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து எழுதிய பாடல்!


அன்புடன்

ரமேஷ்









Oct 8, 2019

தனிவீடும் கூட்டுக் குடும்பமும்

தனிவீடும் கூட்டுக்  குடும்பமும் 

ஒரு காலத்தில் தோட்டம்-துறவி , மாடம்-முற்றம்  என்று கட்டப்பட்டிருந்த தனி வீடுகள் இன்று ஒன்றன் ஒயின் ஒன்றாய் சிதைக்கப்பட்டு , அவை இருந்த இடங்களில் பன்மாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதைக் காண்கிறோம். 
தனிவீடுகளில்  பாட்டன்-பாட்டி, அத்தை -சித்தி, மாமன்-மச்சான் என்று பல உறவுகளோடும் வாழ்ந்திருந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கும் இன்று விடைகொடுத்தாகி விட்டது!
சிதைந்துவரும் இந்த கடந்தகாலக்  குறியீடுகளைப் பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு : இது உங்களுக்குத் பிடித்தால், இதைத் தழுவி முன்னம் நான் எழுதியுள்ள " தனி வீடு ஒன்று தவமிருக்கிறது" என்ற பாடலையும் படியுங்கள் .
https://kanithottam.blogspot.com/2016/06/blog-post_25.html








அடுக்கு அடுக்காயோர்  பன்மாடிக்  கூடம் 
நெடுக  உயர்ந்தே   எழுகையில்பாழ்  ஆவதுவும்  
தோட்டம்  துரவுள்ள  வீடொன்று   மட்டுமோ?
கூட்டுக்  குடும்பமும் தான் .

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

ரமேஷ் (கனித்தோட்டம்) - 8-10-2019

Oct 6, 2019

தேடல்கள்



தேடல்கள்

சேருமிடம் எங்கென்றும்  போகும்வழி எதுவென்றும்
புரியாது வெறித்த கண்ணும்

வேருவை நீர்த்துளிகள் வழிந்து விழுந்ததால்
நீறழிந்த பாழ் நெற்றியும்

ஊருலகம் துறந்து உறவுகளை மறந்து
மழிக்காது செழித்த முடியும்

சீருடையாய் காவியும் அணிந்து அலையுமிவன்
தேடல்கள் என்று முடியும் ?


ரமேஷ் (கனித்தோட்டம் )    6-10-19

Oct 5, 2019

நவராத்திரி.- துர்கா சப்தஸ்துதி

துர்கா சப்தஸ்துதியில் கூறப்பட்டுள்ள வரலாறைப் பின்பற்றி சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய பாடல் - ஒரு மறுபதிப்பாக இந்த நவராத்திரியன்று .


அன்புடன் 
ரமேஷ் 



இப்போது நவராத்திரி.

இப்போது நவராத்திரி.
ஒன்பது நாட்களும், ,துர்க்கை , சரஸ்வதி, லக்ஷ்மி  வடிவங்களில் தேவியை வழிபடும் நாட்கள். 
அண்டங்களை எல்லாம் துன்புறுத்தி  வந்த மகிஷாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்ய, மும்மூர்த்திகளும், பிற தேவர்களும் இணைந்து , துர்காதேவியைத் தோற்றுவித்து, அவளுக்கு சகல ஆயுதங்களையும் அளித்ததாக , மகரிஷி மார்க்கண்டேயர் எழுதியுள்ள 'துர்கா சப்தசதி ' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. (Details in English are appended at the end)
இவ்வாறு அவதாரம் எடுத்த துர்க்கை மகிஷாசுரனோடு போர் புரிந்து , அவனை அழித்ததை நவராத்ரியின் போது கொண்டாடுகிறோம்.
இதைப் பற்றி ஒரு கவிதை.
படித்து தேவி அருள் அடையுங்கள்.
ரமேஷ்  
துர்க்கை அவதரித்தல்
முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - மண்ணரசி = பூமாதேவி 
துர்க்கையின் படைக்கோலம்
திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே
வாயுதே வன்தந்த  வில்ம்புகள்
ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.
மகிஷாசுர வதம்

உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்
செந்தழலோன் சீற்றமதைக்  கண்களில்  ஏற்றினள்
இமயவான் அளித்தஅரி  மாமீது ஏறினள்
சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைத்தனள்
துதி
எருதுருக் கொண்டமகி ஷாசுரன்  செருக்கறுத்து 
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை  
கருத்திலே   நிறுத்திநவ நாட்கள்  நோன்பிருந்து 
கரம்கூப்பி  வணங்கித் தொழுவோம்.




An English extract of the Durga Sapthasathi is given below:

Mahishasura had snatched the rights of the Sun, Indra, Fire, Wind, Moon, Yama, Varun (rain) and other gods and has made the heavens his new home.

Now, the homeless demi-Gods roamed on earth like ordinary humans as they had nowhere to go. The demi-Gods spoke of how they were now counting on the Holy Trinity to save them from this misery. Listening to the anguish of the demi-Gods, the bearer of discus – Lord Vishnu – emitted a divine light. Similarly, Brahma, Shiva and Indra emanated divine light that combined to form a huge mountain of great energy.


The demi-gods were amazed at the flames of that energy being discharged in all the four directions. That mass of energy was unmatchable in the three worlds and in no time it got converted into a woman. Her face was formed as a result of Shiva’s divine light. Yamraj’s (God of death) divine energy gave her long, lustrous hair. Vishnu’s almighty energy formed her powerful arms. Her breasts were formed as a result of the Moon God’s power. Varun’s might made her thighs and calf muscles while the Earth formed her buttocks. Her feet were shaped when Bramha blessed her with his divinity and the Sun’s ability transformed into the fingers of her feet. The Vasus shaped the fingers of her hands and Kuber’s prowess patterned her nasal passage. Agni or the Fire God’s vigour translated in the three eyes of the devi, while Prajapati’s efficiency took the shape of her teeth. Thus, the great Goddess Durga came into being.


Now was the turn of every God to bestow her with divine gifts and weapons. In the process, Shiva gave away a trident to her while Vishnu gave her a discus similar to the one he possesses. Varun or the Rain God gave her a conch shell, the Fire God gave her power, the Wind God presented her with bow and arrows, Indra offered his thunderbolt and the bell taken off from the mighty Airawat elephant. Yamraj rendered kaldand, Varun gave a Pash (noose), Prajapati gifted her Sphatik (snow rock crystal) necklace and Bramha handed out a kamandalu (oblong water pot made of a dry gourd (pumpkin) or coconut shell, metal, wood of the Kamandalataru tree, or from clay, usually with a handle and sometimes with a spout.) The Sun God filled the pores of her skin with his life-giving rays and Kaal (time) gifted her shining sword and armour. The Ocean of Milk gifted her beautiful necklace of pearls, lovely finger rings, bangles, earrings, hair accessories and clothes that would remain resplendent.
Vishwakarma gave a Farsa, various other weapons and a garland made of forever fresh Lotus flowers. Jaldhi presented her with a beautiful Lotus flower. The King of mountains - Himalaya – gave her a Lion which became her vehicle, and also bestowed on her a number of rare gemstones. Kuber – the God of Wealth – offered the Great Goddess - a pot full of honey. And last but not the least, the Serpent King - Sheshnaag – gifted her naaghaar (serpent necklace) studded with precious gemstones. Such are the endowments of Durga.

தமிழ்ப் பேச்சில் பிறமொழிச் சொற்கள்

தமிழில் பேசுகையில் வேற்று மொழி - குறிப்பாக ஆங்கிலம் - சேர்த்துப் பேசுவது மிகுந்து வருகிறது. இதை முற்றும் தவறு என்று நான் கருதவில்லை. ஆனால், பல சமயங்களில்  இது தமிழில் ஆங்கிலம் கலப்பதற்குப் பதிலாக, ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து பேசுவதாக அமைந்திருக்கிறது. 
தேவையான இடத்தில்  மட்டும்  ஆங்கிலச் சொற்களை உபயோகிக்க வேண்டும்.
இதுவே என் கருத்து.

அன்புடன்
ரமேஷ்


தமிழ்ப் பேச்சில் பிறமொழிச் சொற்கள் 

நேற்றுத்தான் நாற்றுவிட்ட வேற்றுமொழிச் சொற்களையும் 
சேர்த்துக்கொண்டால் குற்றமென்ன அம்மொழிக்கே அதுபெருமை 

தாய்மொழியே எம்மொழிக்கும் தமிழேதான் என்பதனால் 
சேய்மொழியின் சொற்கள்சில சேருவதில் குற்றமுண்டோ?

வாய்மொழியில் பேசுகையில் வார்த்தைக்கு வார்த்தையிடை 
வேற்றுமொழிச் சொற்கள்பல மிகவாகப் புகுத்தாமல்

தேவைக்கு மட்டுமான சிலசொற்கள் சேர்ப்பதிலே 
தவறேதும் இல்லையென்பேன் தாழ்மையுடன் என்கருத்து 

ரமேஷ் (கனித்தோட்டம்)   4-10-19

Oct 2, 2019

பிரிவு

பிரிவு

இந்தப் புகைப்படத்தைக் கருவாக வைத்து இரண்டு நாட்களுக்கு முன் " ஊடல்" என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி இருந்தேன்.
இந்தப் படத்தை வேறோர் கோணத்தில் நோக்கி " பிரிவு" என்ற தலைப்பில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறேன்.

படித்து கருத்தைத் தெரிவியுங்கள்.

அன்புடன் 

ரமேஷ் 





வண்ணம் துறந்து வெள்ளை அணிந்து
கண்ணில் வடியும் நீரோடு
எண்ணம் முழுதும் எனையே  எண்ணி
ஏங்கி இருக்கும் என்னவளே!


உடலைப் பிரிந்து விண்ணில்  பறந்து
உன்னை நானும் பிரிந்தாலும்
கடலில் அலையாய் அலையின் நுரையாய்
உன் கால் தழுவுவது  உணர்வாயோ ?


இற்றைப் பிறவியில் உனைப் பிரிந்தாலும்
பிற்பல பிறவிகள் தவறாமல்
வந்துனை அடைவேன் சந்ததம் சேர்வோம்
எந்தன் உயிரே கலங்காதே !


ரமேஷ் ( கனித்தோட்டம் ) 30-9-2019