Search This Blog

Feb 27, 2016

திருமகளைக் கொன்றார்.


இந்தியாவில் ஆண் -பெண் விகிதம் நாளாக , நாளாக குறைந்துகொண்டே போகிறது.

பல இந்தியக் குடும்பங்களில்  ---- கிராமம்-நகரம், ஏழை-பணக்காரர் - என்ற பாகுபாடு இன்றி,--- பெண்குழந்தைகளை வதைத்துவிடும் வழக்கம் இருக்கிறது என்பது ஒரு கேவலமான நிகழ்வு.

வசதி படைத்தோரும் , நகரங்களில் வசிப்போரும்,  ( சட்டப்படி தடைசெய்யப்பட்ட ) ஒலிப்படப்பரிசோதனைகள் செய்து , பெண் மகவென அறிந்து கருவைச் சிதைக்கின்றனர்.

கிராமங்களில், பிறந்த பிறகு, கள்ளிப்பால் ஊட்டி வதைக்கிறார்கள்!

சட்டப்படி ஒரு குற்றம் என்று தெரிந்திருந்த போதும், இத்தகைய செயல்கள் செய்யப்பட்டே வருகின்றன .

வரும் மகளைக் கொல்லும்  இவர் , திருமகளையே  அல்லவா கொல்லுகிறார்?

இது பற்றி ஒரு சிறு கவிதை.

அன்புடன்

ரமேஷ்.

திருமகளைக் கொன்றார்.
 
வறுமையில்   வாடிய   தம்பதிக   ளிருவர்
திருமகளை   மனமுருகி    தினம்பூசை    செய்தார்.
தனைவேண்டி   துதித்தவர்க்கு   அருள்செய்ய   அவளும்
மனைவியின்    கர்ப்பத்தில்    மகளாக    நுழைந்தாள்.


அவரோ

வரப்போகும்   மகவுஓர்   பெண்ணென்று   கண்டார் !
கருவைக்   கலைத்தார் !   திருமகளைக்    கொன்றார் ! 









 

Feb 23, 2016

முருகனை "எண்ணு" வோம்.!


திருவிளையாடல் படத்தில் வரும் , கே.பீ.சுந்தராம்பாள் பாடிய, " ஒன்றானவன் ...... " என்று தொடங்கி எண் வரிசைப்படி முருகன் மீது  பாடும் பாட்டு மறக்க முடியாத ஒன்று.

உள்மனதில் அதன் தாக்கமோ என்ன தெரியவில்லை, சென்ற வாரம் காலையில் பூங்காவில் நடந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில வரிகள் , சில நாட்கள் கழித்து , இந்தப் பாடலாக  உருவெடுத்து இருக்கின்றன.

முருகனுக்கும் , உங்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறேன்.


அன்புடன்

ரமேஷ்


முருகனை "எண்ணு"வோம்.!

ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே  வானையை            #1*2                  
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்  
ஈரிரண்டு#  நால்வேதத்  துட்பொருளை உணர்ந்தபின்    #2*2
பிரணவத்தை   ஈசர்க்கு  போதித்தவன் 

 
மூவிரண்^  டாறான முறுவல் முகங்களுடன்                  ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^  எண்திக்கும் அரக்கரை  அழித்திடவே       ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.

 
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும்      ^5*2                     
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^  பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு    ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
  
ஏழிரண்டு^  பதினான்கு  இரவுகள்  வளர்ந்திட்ட             ^ 7*2     
முழுமதியைப்  பழித்திடும்  வதனத்தினன்.
எட்டிரண்டு^  பதினாறு செல்வமும்  சிறப்புடன்              ^  8*2
கிட்டிடும்   குமரனைத்  துதிப்பவர்க்கே.

சித்தர்க ளீரொன்பதில்^   மூத்தமுனி  அகத்தியர்க்கு         ^ 9*2
முத்திதரும்  மந்திரங்கள்  போதித்தவன்.
பூதங்கள், புலன்,பிராணன் , இந்திரியங்  கள்என்ற            ^ 10*2
பத்திரு  வத்தையும்^   உருவித்தவன்.                    

                          
எண்கணக்கி  லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி 
பண்புனைந்  துன்புகழ்  பாடினேனே!
என்கணக்கு  இப்பிறவி. யில்முடியு  முன்னமே
எனையாண்டு  அருள்புரிவாய்  குமரவேளே!

 
 

Feb 20, 2016

பச்சௌரியின் கச்சேரி

பச்சௌரியின் கச்சேரி
பிப்ரவரி மாதம் முதற்பகுதியில் மக்களை மிகவும் கலக்கிய செய்தி சுற்றுச் சூழலைப் பசுமையாக பாதுகாக்கும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் TERI என்ற நிறுவனத்தின் பச்சோரி - யைப் பற்றியதாகும்.
2015 பெப்ரவரி மாதம் , TERI யில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் முறைகேடாக நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பச்சௌரி, நீண்ட விடுப்பில் சென்றார். அவர் மீது போலிசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. TERI -யும் ஒரு உள்விசாரணைக் குழுவை அமைத்தது.
இரண்டும் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கின்றன.
( உங்களில் யாருக்காவது இரண்டு (மூன்று?) ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட தருண் தேஜ்பால் பற்றி இன்று நினைவிருக்கிறதா? அது இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. Law is taking its own course! அது போலத்தான் இதுவும்! ).
இது இப்படி இருக்கையில், திடீரென்று இந்த பெப்ரவரி மாத முதலில்  "பச்சௌரிப்  பெரியவர் " மீண்டும் TERI -யின் அரியாசனத்தில் அமர்ந்தார்! அது மட்டும் அல்ல - அவருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.!
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது இதுதானோ?
உடனே கண்டனக் குரல்கள் எழுந்தன.
அது மட்டுமல்ல - வேறு ஒரு பெண்மணியும் அவர் மீது " முறைகேடாக நடந்துகொண்டதாக " குற்றச்சாட்டை எழுப்பினார். முன்னமேயே இதை TERI நிர்வாகத்திடம் பதிவு செய்திருப்பதாகவும், ஒரு பயனும் விளையவில்லை என்றும் கூறுகிறார்.
மடை திறந்தது போல் மேன்மேலும் அவர் மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் குவியத் தொடங்கி இருக்கின்றன.
ஒரு முக்கியமான விழயம் - டாக்டர். பச்சௌரியின் வயது 75 முடிந்து 76. நிச்சயமாக 'இளமை ஊஞ்சலாடுகிறது" தான் !
இந்த  " பச்சௌரியின் கச்சேரி " க்கு  எப்போது மங்களம் பாடி முடிப்பார்களோ?
இந்த நிகழ்வு  பற்றி ஒரு ஆதங்கக் கவிதை.
அன்புடன்
ரமேஷ்.


பச்சையாக   சூழ்நிலையைப்    பாதுகாக்கும்    குழுமத்தின் *
உச்சியிலே    தலைவராக    அமர்ந்திருக்கும்    ஒருவராம்
நச்சேறிய    மனம்படைத்த    பச்சௌரிப்**    பெரியவர்
லஜ்ஜையின்றி    கன்னியரைக்     காமத்தோடு    நோக்கியே
இச்சைகொண்டு    இணங்குமாறு    பலருடனே    பேசியே
நச்சரித்து    நாள்தோறும்    நச்சுவார்த்தை    கக்கினார்.


அச்சமின்றி    கொச்சைவார்த்தை    உச்சரித்த    அவரையே
மெச்சிஅவர்க்கு    மேலுமே    மேலும்பதவி    உயர்த்துறார் !
இச்சகத்தில்    இதனையொத்த    இழிசெயலும்     நடக்குமோ?
கச்சைகட்டி    நாமெல்லாம்     இச்செயலை    எதிர்ப்பமே!
எச்சமொத்த    இச்செயலை    செய்தபச்    சௌரியை
நிச்சயமாய்    நீதிமுன்னர்    நிறுத்தவேண்டும்;   செய்வரோ?


* TERI -
** Pachauri RK

Feb 14, 2016

அப்பா

அப்பா

சென்னையிலிருந்து  பெங்களூருக்கு  ரயில் பயணம்.

அதிகாலையில் புறப்படும் சதாப்தி ரொம்ப சௌகரியமாய் இருந்தாலும் , நாலு மணிக்கே எழுந்திருந்து அரக்கப் பறக்க ஓடி , அஞ்சு மணிக்கு முன்னாலேயே வீட்டை விட்டு கிளம்ப இப்போதெல்லாம் முடிவதில்லை. பிருந்தாவன்  எக்ஸ்பிரஸ் ஏழு மணிக்கு கிளம்புவதால், இன்னும் ஒரு மணி அவகாசம் கிடைக்கிறது
.
630 மணிக்கு ஸ்டேஷன் வந்து, A .C சேர் காரில் சீட்டைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தாகிவிட்டது. ஜன்னல் ஒர சீட் .

சீட்டில் உட்கார்ந்து செட்டில் ஆனேன். வண்டி புறப்பட இன்னும் அஞ்சு நிமிடம்தான்.  பக்கத்தில் இருந்த இரண்டு சீட்டுகளும் நிரம்பவில்லை. யார் வரப் போகிறார்கள் என்ற க்யூரியாசிட்டியோடு , அவசரம் அவசரமாக ரயில்பெட்டிக்குள் ஏறுபவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் ஏறும் அவசரத்தில் , ரிசர்வேஷன் சார்ட்டில் பார்க்க மறந்துவிட்டேன். ஒருவேளை ஒருத்தரும் வரவில்லை என்றால் , கொஞ்சம் கையைக், காலை நீட்டி வைக்க சௌகரியமாக இருக்கும் என்ற ஒரு நப்பாசை கூட.

 

ரயில் மெல்ல நகர ஆரம்பித்து விட்டது. சரி, இன்னிக்கு நமக்கு கொஞ்சம் லக் இருக்கு என்று நினைப்பதற்குள் . பின் பக்கத்தில் இருந்து வந்து நின்றார்கள் இரண்டு பேர் - முப்பதுக்கு மேல் வயதான ஒரு ஆணும்,ஒரு ஏழு வயதுப் பெண் குழந்தையும்.

குழந்தை கொள்ளை அழகு.

அதிதி- என் பேத்தி- இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள் என்று கற்பனை ஓடியது.

 பெட்டி, பைகளை யதாஸ்தானம் செய்துவிட்டு அப்பா என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார். குட்டிப் பெண் அதற்கு அடுத்த எயில் (aisle)சீட்டில் .

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்தது. குட்டிப் பெண் முகத்தை "உம்" என்று வைத்துக்கொண்டிருந்தாள் .என்னைப் பார்த்து கையைக் காட்டிஅப்பாவின் காதில் "குசு - குசு என்று எதோ சொன்னது. என்ன சொல்லியிருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், வேண்டும் என்றே மூஞ்சியை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு, வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தேன். அப்பா ' இரு ,இரு" என்று சமிஞ்கை செய்து அவளை அடக்குவதை ஓரக்கண்ணால் பார்க்க முடிந்தது.

 ஒரு ஐந்து நிமிடம் இந்த நாடகம் தொடர்ந்தது. என்னால் அதற்கு மேலும் அடக்கமுடியவில்லை. அப்பாவிடம் கேட்டேன்--


 "குழந்தை என்ன சொல்றாள்?"
ஹி , ஹி , ஒண்ணும் இல்லை, ஜன்னல் ஒர சீட்டு வேணுமாம். கேக்கறா. இருடி, தாத்தாவை டிஸ்டர்ப் செய்யக்கூடாது" -ன்னு சொல்லிண்டு இருந்தேன்."
'
அதனால் என்ன, கொழந்தைதானே, தாரளமா  வரட்டுமே"

 என்று கூறியவாறு, என் ஜன்னல் ஒர சீட்  ஆசைகளுக்கு ஒரு மூட்டை கட்டி விட்டு சீட்டை மாற்றிக்கொண்டேன்.

அப்போது அந்த குழந்தையின் முகத்தில் ஒரு பூரிப்பு  -- ஆகா, பார்க்க ஆனந்தமாக இருந்தது.

 

சதாப்தியில் ரயில்வேஸ்- ஏ சாப்பாடு கொடுத்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது சௌகர்யம் என்றாலும் , அவன் கொடுப்பதை சாப்பிட்டாகவேண்டிய கட்டாயம். ஆனால் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்! மற்ற ரயில்களில், இடைவெளி விடாமல் , இப்படியும் அப்படியுமாய் , தோசை, பூரி, பஜ்ஜி, ஆம்லெட், பிஸ்கேட் , சிப்ஸ் இத்யாதி இத்யாதி வகையறாக்களை விற்றுக்கொண்டு போவார்கள். எல்லாருக்கும் சாப்பிடவேண்டும் என்ற சபலம் வராமல் இருக்காது.  இதற்காக வேண்டியே , "டிபன் கட்டிக் கொடுக்கிறேன்" என்று சொன்ன மனைவியிடம், : உனக்கு எதுக்கு சிரமம்," என்று சொல்லி விட்டு வந்து இருந்தேன்!.

 

எனக்கே இப்படி என்றால் அனன்யா விற்கு ( அவள் பெயர்- கே.அனன்யா, 3 rd ஸ்டாண்டர்ட்  சீ செக்ஷன்- அப்பா -கிருஷ்ணன், அம்மா - பவித்ரா, டீச்சர்- மாலதி மிஸ், ரொம்ப ஸ்ட்ரிக்ட்,- பிடிச்ச ப்ரெண்ட்-பாவனா, எனிமி - மகேஷ் போன்ற கம்ப்லீட் பயோ டாடா சொல்லி முடித்து விட்டாள் .) கேட்கவா வேண்டும்ஒவ்வொரு வியாபாரி போகும் போதும் ' அப்பா, இது வேணும்" என்று கோரிக்கை. சிலதை வாங்கிக் கொடுத்தார் கிருஷ்ணன். மற்றதற்கு எல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி சமாளித்தார். மனுஷனுக்கு ரொம்ப பொறுமை என்று நினைத்தேன்.

ஒரு இரண்டு மணி நேரம்  கழித்து ஐஸ் கிரீம் விற்பவன்  வந்தான்.. 'ஐஸ் க்ரீம் ' என்ற வார்த்தையைக் கேட்டதுமே அனன்யாவின் கண்கள் அகல விரிந்தன! அந்தக் கண்களாலேயே அப்பாவுக்கு கோரிக்கை வைத்தாள் குழந்தை.

 

கிருஷ்ணன் சாமர்த்யசாலி .

எப்படியும் ஐஸ் கிரீம் வாங்கித் தராமல் இருந்தால் விட மாட்டாள் என்று தெரியும்.
அதனால் அவளுடன் ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கொண்டான்.


" அனன்யா, நான் ஐஸ் கிரீம் வாங்கிர்த் தரேன்! ஆனா ஒரு கண்டிஷன், கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வர வரைக்கும் நல்ல பொண்ணா , இது வேணும், அது வேணும் -ன்னு தொந்தரவு பண்ணாம இருந்தா, இறங்கரத்துக்கு முன்னாடி வாங்கித் தருவேன்".


இது அனன்யாவுக்கு சரியாகப் பட்டது.

 "ப்ராமிஸ்?"
"
ப்ராமிஸ்!"
"
தம்ப் ப்ராமிஸ்?"
"
தம்ப் ப்ராமிஸ்!"

 ஒப்பந்தம் செய்து முடிந்தாயிற்று.

ஒரு ஐந்து நிமிடம் போனது.

 "அப்பா"--

ஆள்காட்டி விரலால் கிருஷ்ணனின் தோளில் குத்தி எழுப்பினாள் அனன்யா.


"என்னம்மா?"
'
டூட்டி பிரூட்டி  தான் வேணும்."
"
சரி."
"
நீயும் சாப்பிடனும்."
"
சரி."
"
ஒனக்கு ஒண்ணு , எனக்கு ஒண்ணு !"
"
ஓகே ."

அப்பா, உனக்கு ஐஸ் கிரீம் பிடிக்குமா ?
"
பிடிக்குமே."
"
எவ்வளோ பிடுக்கும்?"
"
இவ்வளோ !"-

 கிருஷ்ணன் கை அகல விரித்துக் காட்டினான்.

 

"எந்த ஐஸ் க்ரீம் உணல்லு ரொம்பப் பிடிக்கும்?"
"
சாக்லேட்!"
"
அப்போ,நம்ப ஒரு டூட்டி பிரூட்டி, ஒரு சாக்லேட் ஐஸ் கிரீம் வாங்கலாம்."
"
சரி."
"
நீ எனக்கு ஒரு வாய் சாக்லேட் கிரீம் தா, நான் ஒனக்கு ஒரு வாய் டூட்டி பிரூட்டி தரேன். சரியா?"
"
ஓகே. டீல் !"

 இருவரும் ஒரு "ஹை பய்வ்" கொடுத்துக்  கொண்டார்கள்.

 "உங்கப்பா உனக்கு ஐஸ் க்ரீம் வாங்கி தருவாரா?
"
தருவாரே!"

உரையாடல் தொடர்ந்தது.கிருஷ்ணன் அவரது சின்ன வயது ஐஸ் க்ரீம் கதைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
நான் தூங்கப் போய்விட்டேன்.

 

 கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வருவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னாலேயே , கச்சா முச்சா என்று சத்தத்துடன் இறங்குவதற்கு ஆயத்தம் செய்ய பலர் ஆரம்பித்தார்கள். நானும் இந்த சத்தத்தில் முழித்துக்கொண்டு விட்டேன்.

அனன்யா " அப்பா, ஐஸ் கிரீம்," என்று தொண  தொணக்க ஆரம்பித்து இருந்ததாள் !
கிருஷ்ணன் ஒரு பதபதைப்புடன் ஐஸ் கிரீம் கொண்டு வருபவனைத் தேடிக்கொண்டிருந்தான்.

அவன் வருவதாகக் காணோம் .

 அப்போது அந்தப் பக்கம் வந்த காபி விற்பவரிடம் கிருஷ்ணன், " ஏம்பா!அந்த ஐஸ் கிரீம் ஆளை கொஞ்சம் வரச் சொல்லேன்" என்று சொல்லி அனுப்பினான்.

 

குழந்தையின் முகம் சுருங்கி , உதடுகள் பிதுங்கின!.எந்த சமயமும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடலாம்.

நல்ல வேளை ! " கூல் டிரிங்க் , ஐஸ் கிரீம் " என்ற கூவலுடன் விற்பவன் வரவும், அனன்யாவின் கண்களில் மீண்டும் ஒளி  மின்னல்!

 ஐஸ் கிரீம்! இங்க வாப்பா, "

 நூறு ரூபாய்த் தாள் ஒன்று நீண்டது.

 " ஒரு டூட்டி பிரூட்டி, ஒரு சாக்லேட்"

"சாரி சார், ஒரே ஒரு ஐஸ் கிரீம் தான் இருக்கு. - டூட்டி பிரூட்டி ;

மீதி எல்லாம் காலி!"

 கிருஷ்ணன் அதை வாங்கி குழந்தையிடம் கொடுத்துவிட்டு, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
'கொடுத்த வாக்கைக் காப்பாற்றியாகி விட்டது".

அனன்யா கொடுக்கப்பட்ட ஐஸ் கிரீமை சாபிடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு இருந்தாள்.

 "ஏண்டா செல்லம், ஏன் சாப்பிடலே? சீக்கிரம். கண்டோன்மெண்டுக்கு அப்பறம் உடனே சென்ட்ரல் வந்துடும்.  க்விக்,க்விக் "
'
ஒண்ணுதானே இருக்கு; உனக்கு சாக்லேட் வரல்லையே?"
"
பரவாயில்லடா செல்லம்., நீ சாப்பிடு."
 '
ஒனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொன்னே?"
"
அது உனக்காகச் சொன்னேன்டா கண்ணு ; ஆக்சவாலா எனக்கு ஐஸ் கிரீம் பிடிக்காது. டாக்டர் கூட நான் ஐஸ் கிரீம் சாபிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்"
"
நிஜமாவா?"
"
ஆமாண்டா செல்லம்."
"
ப்ராமிஸ்?"
"
ப்ராமிஸ்!"
"
தம்ப் ப்ராமிஸ்?"
"
தம்ப் ப்ராமிஸ்!"

 குழந்தை சமாதானம் அடைந்து ஐஸ் கிரீமை சாப்பிடத் தொடங்கினாள் .
நானும், கிருஷ்ணனும் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டோம்.

என் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.

நான் சின்னவனாக இருக்கும்போது அப்பா அடிக்கடி மாம்பழம் வாங்கி வருவார். வீட்டில் எல்லோருக்கும் மாம்பழம் ரொம்பப் பிடிக்கும்.

அதன் கதுப்புகளை வெட்டி எனக்கும், என் தங்கைக்கும் கொடுப்பார். கொஞ்சம் அம்மாவுக்கு.

 அவர் மட்டும் கொட்டையை எடுத்துக்கொண்டு அதை  உறிஞ்சி சாப்பிடுவார்--.-" எனக்கு  கொட்டையை   சப்பி   சாப்பிடறதுதான் ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிக்கொண்டு!

 அதன் அர்த்தம் இப்போது புரிந்தது.

 கண்களில்  நீர் முட்டியது.

 

 

 

Feb 13, 2016

முருகனின் அறுபடை வீடுகள்

கனித்தோட்டம் ( கனவுகள் நினைவுகள் கவிதைகள் நிகழ்வுகள்) என்ற இந்த பதிப்பை நான் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு   மாதங்கள் ஆகி விட்டன. இதுவரை 49 பதிவுகள் முடிந்து , இது 50- வது பதிப்பு. இவற்றில்  90 விழுக்காட்டுக்கு மேல் கவிதைப் பதிப்புகள்.

தொடங்கும்போது , இந்த மைல்கல்லை  எட்டுவேன் என்று நான் நினைக்கவில்லை - அதுவும் இவ்வளவு சீக்கிரம் !

பதிவுகளைத் தவறாமல் படித்து வரும் நண்பர்கள், உறவினர்கள், தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.  தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்கிறேன்.

நான் பதிவு செய்த முதல் கவிதை முதல் கவிதை விநாயகர் துதி.
இப்போது 50 -வது பதிப்பாக முருகனின் அறுபடை வீடுகள் பற்றிய கவிதை. 
ஒவ்வொரு படைவீட்டைப் பற்றிய கவிதையை அடுத்து, அக்கவிதை கூறும் கருப்பொருள் பற்றி ஒரு சிறிய ஆங்கிலச் சுருக்கமும் தந்திருக்கிறேன்.

முருகன் அருள்  அனைவருக்கும் கிட்டுவதாகுக!

அன்புடன்

ரமேஷ்


 முருகனின் அறுபடை வீடுகள்

முருகன் அவதரித்தல்

முக்கண்   முதல்வனின்   நெற்றிக்கண்   ஜோதியின்

சக்தியால்   உண்டா    னவா  -   மொக்கவிழ்

பூவிரித்   தாமரைப்   பூப்படுகை   மீதிலே

மூவிரு   குழந்தைவடி   வில்.


கார்த்திகைக்   கன்னியர்கள்   காத்தஅறு   மழலைகளை

சேர்த்தன்னை   உமைஅணைக்     கையில் -   ஓருடலாய்

இணைந்தாறு   முகத்தோனாய்   பன்னிரு   புஜத்தோனாய்

எண்ணரும்   எழில்   கா ட்டினாய் .

 The Birth of Lord Muruga
The above two stanzas are about the birth of Lord Arumuga – how the jyothi from Lord Siva’s third eye gave birth to six children who were brought up by the six Karthigai kannigal as separate children before Parvathi Devi’s embrace made them into one with Six heads and twelve arms- Aru Mugan

பழனிமலை

முந்தியே   உலகினை   வலம்செய்து   வந்திடினும்

தொந்தியான்  பழம் பெற்றதால்நொந்துபோய்

தாய்தந்தை   யைத்துறந்து   கைலயந்தனை  விடுத்து

கோவணத்   தாண்டியுரு   வில்


ஆவினன்   குடிமேவி    இடும்பனங்    கிருத்திட்ட

சிவகிரிக்   குன்றி   லமர்ந்தாய் -    சிவஞானப்

பழம்நீ  யேயெனச்     சிவனாரே   அருளியது

பழனிமலை   என்றான  தே!

PALANI MALAI
After being denied the Divine fruit by his parents, which went to his brother, the pot bellied Ganapathy, Murugan came to Avinan Kudi in a huff and sat on the top of the mountain Sivagiri , which was being brought to the south by Idumban, under the  orders of Saint Agasthya.  Lord Siva came to mollify Muruga and told him that he (Muruga) himself is the Fruit of Wisdom-(ஞானப் பழம் நீ).   This mountain,came to be known as Palani Malai after that.

 சாமிமலை

 பிரணவத்தின்    தத்துவத்தை    சரியாக    அறியாத

பிரம்மனின்   ஒருசிரத்    தினை -   அரிந்திட்டு

சினங்கொண்டு    சிறையிட்டு    விடுதலைபின்     செய்தனை

அனைவரும்    முறையிட்ட     தால்.

ஓமெனும்    பிரணவத்தின்    உட்பொருளை    உணர்ந்ததனை

காமனை    எரித்த    சிவர்க்கே -    சாமிமலை

குன்றிலே    மன்றுபட*    உபதேசம்    செய்தங்கு

என்றும் உறை    எழில்முருக    னே!

           * ( மன்றுபட=தெள்ளிவாகப் புரியும் படி )

SWAMI MALAI
 These stanzas refer to the legends in which
A)     Not satisfied with Brahma’s explanation of the Pranava Manthiram, Muruga took off one of the five heads of Brahma and imprisoned him , and B )  Muruga explained the inner meaning of Ohm to his father, Lord Siva himself at this place, and gained the sobriquet of Swaminathan.

திருச்செந்தூர்

 பார்வதி    தேவியிடம்    வேல்பெற்று   சூரனை

இருபாதி    யாகப்  பிளந்துஒருபாதியை

கொக்கருகோ *   எனக்கூவி    அறியாமைத் துயில்  கலைக்கும்

குக்குடக்**   கொடியாக   வும்

மற்றுமொரு    பாதியை    திக்கெட்டு    திசையெங்கும்

சுற்றிவரும்    மயிலாக    வும்-    ஏற்றருளி

கடலாடும்    கரையோரச்    செந்தூரில்   குடிகொண்டாய்  

சுடலாடி***   பெற்றமக  னே !

              

                    *  கொக்கருகோ =கொக்கு+அறு + கோ

                                                     ="கொக்கு வடிவில் வந்த அரக்கனைக்

                                                        கொன்றவனே"

                     ** குக்குடம் = சேவல்  *** சுடலாடி -- மயானத்தில் ஆடுபவன்

THIRUCHENDUR
 Muruga vanquished Surapadman (Suran ), using the Vel , blessed and given to him by Parvathi. Suran, in a bid to escape,  took the shape of tree which Muruga split into two. Based on a request by the repentant Suran, he converted one half into his Seval(cock) Flag and the other half into a Peacock which he used for ambulating.

திருப்பரங் குன்றம்

 அரக்கரால்  சிறைப்பட்ட  புலவன்   நக்கீரன்திரு

முருகாற்றுப்   படைபா   டியே -- முறையிட்ட

உடன்வந்து    சிறைமீட்டு   உயிர்காத்து    உய்வித்த 

இடமான    பரங்குன்றி   லே

முக்கண்ணன்    திருமாலன்    நான்முகனும்    முப்பத்து

முக்கோடி    தேவர்   களும்-   வாழ்த்துரைக்க

தேவர்கோன்   திருமகள்    தேவானையை மணந்த

தேவர்படைத்    தானைத்    தலைவா

- THIUPPARANKUNRAM
 Legend has it that Poet Nakkeeran, who was imprisoned in a cave at this mountain by Asuras , prayed to Muruga, composing Thirumurugaatruppadai . Hearing this Muruga came and saved Nakkeeran.
This is also the place where Muruga married Devayanai, the daughter of Indra. This marriage was blessed by the presence of the Mummoorthis and the Devas. Hence this  place is also known as Then Imayam( South Himalaya)

பழமுதிர் சோலை

 சுட்டபழம்  வேண்டுமா    சுடாதபழ  மாவென

கேட்டவ்வைப்    பாட்டி    யிடமே -   பாட்டெழுதும்

நாவல்லி    யாமவளை    நாவிலி   யாய்ச் செய்து

நாவல்பழ    முதிர்சோலை   யில்

தேவியர்   இருவருடன்    வண்ணமயில்    வாகனத்தில்

சேவற்கோடி   யடியில்    அமர்ந்து -    சேவிக்க

வந்தங்கு   கூடிடும்    அடியவர்க்    கருளினைத் 

தந்திடும்   கந்தவே   ளே!

PAZHAMUDHIR SOLAI
The first stanza refers to the story in which Murugan took the form of a small shepherd boy to make fun of Poet Avvaiyar, and also to strike a small blow to her ego!
This place is also where Muruga gives darshan with both his consorts.

 திருத்தணி

அசுரரொடு   போர்முடித்த   உக்கிரம்    தணிய *இம் 

மசலமீ    திளைப்பா   ரியே -   பாசமுடன்

பணிவோரின்     துயரெலாம்    தணித்திடும்    சிறப்பின்திருத்

தணிகையெனும்      படைவீட்டி   லே 

வனநிலத்தில்   தினைகாக்கும்   வள்ளிக்   குறமகளை

நினைத்து   மனம்   மணமுடிக்கவே -   பனித்தமுடி

விருத்தனாய்    உருவெடுத்து    வேழமுகன்   உதவியுடன்

 திருமணம்   செய்தமுரு   கே!.


                          * இம்மசலம்= இந்த அசலம் =இந்த மலை
                

THIRUTHANI
After battling the demons and destroying them, Muruga, who was in a fierce mood , came to Thiruthanni where he cooled off. “Thanitthal “ means “reduction”. Hence the name Thiruthani.

In order to woo Valli, who was guarding the fields,Muruga sought the helpofhis brother, Vinayaga. Muruga took the form of an elderly man and approached Valli for her hand. He was duly rebuffed by Valli, whereupon , at his request, Vinayahga took the form of a wild elephant and appeared there. The frightened Valli embraced Muruga who transformed into his true form and  took the hand of a delighted Valli.