Search This Blog

Sep 29, 2018

பேத்திகளுக்குப் புரிவதில்லை




பேத்திகளுக்குப் புரிவதில்லை

கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்

வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா

தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !


Sep 27, 2018

தோல் வைத்தியம் -Thol Vaiththiyam


தோல் மருத்துவர் முருகு சுந்தரம் அவர்கள் பதிப்பித்து வரும் "தோல் மலர்"  இதழுக்காக  நான் எழுதி பகிர்ந்து கொண்ட ஒரு பாடல்.

அன்புடன் ரமேஷ் 

சில ஆண்டுகளுக்கு முன் தோல் அரிப்பாலும் , தொடக்க நிலை படுக்கைப் புண்ணாலும் பாதிக்கப்பட்டிருந்த  என் உறவினருக்கு செய்து பயனளித்த ஒரு மருத்துவம் இது.

தோல் வைத்தியம்

கத்தாழை இலையைக் கசக்கிப் பிழிந்து
-----சத்தான அதன்சா றெடுத்து
அத்தோடு தேன்கொஞ்சம் சேர்த்துக் குழைத்து
-----பதமான ஒர்கலவை செய்து
நித்தமும் தடவினால் சருமத்  துபாதைகள்
-----மொத்தமும் மறைந்து போகும்


வாள்போன்று  நீண்டகற் றாழை இலையை 
நீள்வாக்கில் வெட்டியுள் ளுள்ள சதையை  
கூழ்போல அரைத்துஅக் குழம்பை நாளும் 
தோல்மீது தவறாமல் தடவி வந்தால் 
உலர்சருமம் அம்மைநோய்த் தழும்பு போன்ற 
பலகுறைகள் விலகியே பொலியும் தோலே !



Sep 22, 2018

பிரதோஷப் பாடல் - 11 Pradosham song 11

இன்று சனிக்கிழமை.
அதனுடன் கூட பிரதோஷம்.
சனிப் பிரதோஷ சிவ தரிசனம் மிகவும் விசேஷம் என்று கூறுவர்.
அத்தைகைய  பிரதோஷ நாளன்று ஒரு பிரதோஷப் பாடல்- வெண்பா வடிவில்

அன்புடன்

ரமேஷ்
பிரதோஷப் பாடல்- 11 
சனியுடன் சேர்ந்த பிரதோஷ நாளில்    
பனிமலைப் புண்ணியன்  பாதம் பணிந்தால் 
இனிவரும் துன்பங்கள்  ஆதவனைக் கண்ட 
பனிபோல் பறந்திடும் காண் .

Sep 14, 2018

சூரி 60

சூரி 60

அகவை அறுபது ஆண்டுமுடித்து
அடுத்த ஆண்டில் அடிவைத்த
சூரியநாரா யணனெனும்  சூரி!
சீரிய வளமுடன் வாழ்ந்திடுக.

எங்கே இருந்தோ வந்தான் இவனே
பெற்றது அவனை  பெருந்தவமே
என்றே அன்று கண்ணனைப்பற்றி
பாரதி பாடிய பாடலைப் போல்

முதியோர்க் கெல்லாம்  சேவகனாய்
இளையோர்க் கெல்லாம் காவலனாய்
மதிமொழி கூறும் மந்திரியாய்
குறைகளைத் தீர்க்கும் தந்திரியாய்

தம்பி, தமையன் மாமன்,மருகனாய்
நம்பிக் கைதரும் நண்பனுமாய்
பரிமா ணங்கள் பலவும்எடுத்து
பரிமளம் வீசும்  பண்புடையான்

உடல்நலம் புஜபலம் நிலபுலம்மனநலம்
எனப்பல நலமுனைச் சேர்ந்திடவும்
ஆண்டுபல தாண்டி ஈண்டு நீவாழ
ஆண்ட வனைநான்  வேண்டுகிறேன் !













Sep 7, 2018

பிரதோஷப் பாடல் - 10 Pradosham Song 10

பிரதோஷப் பாடல் - 10




இன்று பிரதோஷம்.

இன்றைய பிரதோஷப் பாடல்  கைலாய மலையைத் தூக்க முயன்று தோல்வியுற்ற  ராவணன் தன்  தவறை உணர்ந்து அரனை வேண்டிப் பிழைத்த கதையைப்  பற்றியது.

இராவணன் சிறந்த சிவபக்தன்.
ஒரு சமயம், குபேரனைப் போரில் வென்ற பின் , வான்வீதி வழியாக ராவணன் திரும்புகையில் நந்தி அவன் வழியைத் தடை செய்தார். 
"இது சிவபெருமான் குடியிருக்கும் கைலாயம். இதைக் கடந்து செல்லல் இயலாது. சுற்றியே செல்லவேண்டும்" என்று அவர் கூறியதை ஏற்காமல் 
தலைக் கனம் மிகுந்ததால், " அந்த சிவன் குடியிருக்கும்  மலையையே இவ்விடத்திலிருந்து பெயர்த்து விடுகிறேன் " என்று அதைத்  தூக்க முயன்றான். இதை உணர்ந்த சிவபெருமான் தன் விரலால் மலையை அழுத்த,  அதன் அடியில் சிக்கித் தவித்தான் ராவணன். தன்  தவறை உணர்ந்து, தன் ஒரு தலையைக் கொய்து, அதனோடு தன்  உடலின் நரம்புகளை எடுத்து வீணையாகச் செய்து மீட்டி, சிவனைத் துதித்தான்.
மகிழ்ந்த சிவபெருமானும் அவனை விடுவித்து அருள் செய்தார்.

இந்த நிகழ்ச்சியை விளக்கும் ஒரு பாடல் இன்றைய பிரதோஷத்தில்.

அன்புடன் 

ரமேஷ் 

பிரதோஷப் பாடல் - 10

கயிலாய மலையைத்தன் கைகளா லேயசைக்க
இயலாமல் இடுக்குற்ற ராவணனும்- தயங்காமல்
நரம்பெடுத்து  நாண்பூட்டி  நல்வீணைக் கீதத்தால்
அரன்புகழ்  பாடியுய்த் தான் 
                                                                 ( வெண்கலிப்பா )

வலிகள்


வலிகள் 






வயதாகிவிட்ட தாத்தாவிற்கு 
முதுகுத் தண்டின்  L -4 L -5  ஜாயிண்ட்-இல்   ப்ரொலாப்ஸ்*  (Prolapse)

ஒன்றரை வயதுப் பேத்தியைத் தூக்கிக் கொஞ்சினால் 

முதுகு வலிக்கிறது.

தூக்க முடியாமல் போனதால்

மனது வலிக்கிறது!----------------------


அன்புடன் 

ரமேஷ் 

குறள் மேல்வைப்பு வெண்பா -19

குறள் மேல்வைப்பு வெண்பா -19


துரியோதனன் தர்மனை சூதாட அழைக்கிறான். தர்மனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான்.  துரியோதனன் எத்தனை மூர்க்கனாக இருந்தாலும் அவனது குறைகளையும், நிறைகளையும் அவனே உணர்ந்திருந்த காரணத்தால் , சூது விளையாட தன்னைவிட அவன் மாமனான சகுனியே  சிறந்தவன் என்று முடிவு செய்து ஆட்டம் ஆரம்பிக்கும் முன்  தனக்குப் பதிலாக சகுனியை நியமிக்கிறான்.
அதேபோல், தருமனும், பாண்டவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கும் கண்ணனை தனக்குப் பதிலாக நியமித்திருக்கலாம்! ஆனால் அவ்வாறு செய்யாமல், தானே ஆடுகிறான்.
முடிவு  என்ன ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே!
சூதாட சகுனியே  சிறந்தவன் என்று அவனை நியமித்ததால் , துரியோதனன் வென்றான்.

இதைத்தான் வள்ளுவரும் தனது குறட்பாவில்  ( அதிகாரம் - தெரிந்து வினையாடல் - குறள்  எண்  517 ) கூறுகிறார்.

குறள் :


இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

இதன் பொருள் 

ஒரு  காரியத்தை செவ்வனே செய்யக்கூடியவன் எவன் என்பதை ஆராய்ந்தறிந்து, இக்காரியத்தை அவனைச் செய்ய விடுவைத்தே வெற்றிக்கு வழி.

இதற்க்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தருமன் - சகுனி சூதாட்டக் கதையை முதல் இரண்டு அடிகளிலும், இந்தக் கருத்தை விளக்கும் குறளை பின்னிரண்டு அடிகளிலும் கொண்ட மேல்வைப்பு வெண்பா கீழே!

அன்புடன் 
ரமேஷ் 



துரியனோ சூதாட மாமனைத்  தேர்ந்தான் 
தருமனோ தானாடிக்  கெட்டான்  -  அறிவாய்  
இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.
                                                                    (பல விகற்ப இன்னிசை வெண்பா )

The English poetic version by Rev. Pope :

"This man, This work will thus work out" let thoughtful king command
Then leave the matter wholly in his servant's hand.

The English poetic version by Suththaananda Barathiyaar 

This work, by this, this man can do 
Like this entrust the duty due.

Meaning 

After having considered " this man can accomplish this, by these means ", let the King leave him in the discharge of his duties.

The story in English :

Duryodana, the head of the Gowravas, challenged Dharman, the head of the Pandavas, for a game of dice. Dharman accepts the challenge. Duryodhanan, knowing fully well that his uncle Sakuni, a master of the dice game, is the best man to represent him and win the game, deputes him to play on his behalf. Likewise Dharman, who was not very proficient in the game, could have deputed his cousin Krishna, a staunch supporter of the Pandavas to play the game on his behalf. But he did not do that. The result is known to all of us. Duryodanan succeeded because he choose the right person and entrusted him to do the job!



Sep 2, 2018

ஜன்மாஷ்டமி-



ஜன்மாஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பின் உட்பொருளும் அது தரும் சேதியும்



ஜன்மாஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பின் உட்பொருளும் அது தரும் சேதியும்




கிருஷ்ணன் பிறந்தவுடன் , நந்தகோபன் அடைக்கப்பட்டு இருந்த சிறைக்  கதவு  தானாகத்  திறந்தது ! அவரைப்  பிணைத்து இருந்த தளைகள் அறுந்தன ! 

அது போல, மனதில் ஞானம் பிறக்கும்போது , மனிதரைப்  பிணைத்திருக்கும் துர்க்குணங்கள் உடையும்  !  வேற்றுமைகளை ஒழித்து மனக் கதவுகள் திறக்கும் . 
இதுவே ஜன்மாஷ்டமி நிகழ்வின் உட்கருத்தோ ?

அன்புடன் 

ரமேஷ் 



நிசிநேர  நள்ளிரவில் பூட்டிவைத்த பாழ்சிறையில்  
நீபிறந்த நேரத்தில் சிறைக்கதவும் தாள் திறக்க  
வசுதேவன் காலிருந்த விலங்குகளும் விலகிடவே  
சிசுவுன்னைத் தோள்சுமந்து செல்கையிலே யமுனையுமே 
வகிடெடுத்து வழிவிடுக்க வல்லரவும் குடைபிடிக்க 
விசுவாதி தேவர்களும் வணங்கியுனை வாழ்த்துரைக்க 
பசுமேய்ந்து பால்சுரக்கும் கோகுலத்தை சென்றடைந்து 
யசுஓதை ஈன்றெடுத்த மகனாக வளர்ந்திட்டாய். 

அதுபோல   

மாசுற்ற வாசனைகள் மிகப்படிந்த மனச்சிறையில்  
இருள்விலகி ஞானஒளி பிறக்கின்ற நேரத்தில்  
பாசம் அகங்காரம் ஆணவங்கள் தன்முனைப்பு  
போன்ற விலங்கெல்லாம்  தெறித்துடைந்து   போய்விடுமே! 
தேசங்கள் மதமினங்கள் தோல்நிறங்கள் என்றணிந்த  
வேஷங்கள் விட்டொழித்து மனக்கதவும் திறந்திடுமே!
நிசமான இஞ்ஞானம் உடைத்தாயின் எல்லோர்க்கும் 
வசமாகும் வைகுண்டம்கண்ணனவன் அருளாலே!