Search This Blog

May 28, 2021

விதியுடன் செய்த ஒப்பந்தம் - A tryst with destiny

விதியுடன் செய்த ஒப்பந்தம் - A tryst with destiny

நேற்று பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித  ஜவாஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள்.

இந்தியா சுதந்திரம் அடையும் போது அரசியலமைப்புச் சட்டப் பேரவையில்  அவர் ஆற்றிய உணர்ச்சி பொங்கும் உரை மிகவும் புகழ் பெற்றது.

அவரது 57-ஆவது நினைவு நாளன்று அந்தச் சொற்பொழிவின் ஒரு பகுதியின் சாரத்தை  கவிதையாக வடித்திருக்கிறேன்.

அப்பகுதியின் ஆங்கில உரையும் இணைக்கப்பட்டுள்ளது,

இந்தநாளை எனக்கு நினைவுபடுத்தி, இந்தக் கவிதை படைப்பதற்கு ஓர் தூண்டுகோலாக இருந்த நண்பர் எஸ்.தியாகராஜனுக்கு (ST) என் நன்றி! 

அன்புடன் 

ரமேஷ் 


 A TRYST WITH DESTINY  -

Long years ago, we made a tryst with destiny; and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom.

A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new -- when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to the service of India, and her people, and to the still larger cause of humanity.

At the dawn of history India started on her unending quest, and trackless centuries which are filled with her striving and the grandeur of her successes and her failures. Through good and ill fortunes alike, she has never lost sight of that quest or forgotten the ideals which gave her strength. We end today a period of ill fortune and India discovers herself again.


விதியுடன் செய்த ஒப்பந்தம் - 

பலநாள் முன்பு பாரத தேசம் 

-----விதியுடன் விதித்ததோர் ஒப்பந்தம்- அவ் 

விலக்கினை நாமும் அடையும் நேரம் 

-----இனிதாய் இன்றே வந்ததுவே!

உலகம் முழுதும் உறங்கும் இரவில் 

-----பாரதம் மட்டும் விழித்திருக்கும் 

விலங்கினை உடைத்து விடுதலை அடைந்து 

-----புதிதாய் சரித்திரம் படைப்பதற்கே!


ஒருயுகம் முடிந்து மறுயுகம் புதிதாய் 

-----விரியும் நேரம் சரித்திரத்தில் 

வருவது அரிதே!அந்நாள் இதுவே! 

-----வருக வென்றதையே  வரவேற்போம்!

உறங்கிக்  கிடந்த நாட்டின் ஆன்மா 

-----மறுபடி மீண்டும் குரலெடுக்கும்!

திறக்கும் புதிய பாதைகள் பலவும் ; 

-----திறமுடன் அவற்றில் பயணிப்போம்.


புனிதம் நிறைந்த இப்புது விடியலில் 

-----இன்றொரு சபதம் செய்திடுவோம்!

இனிவரும் நாட்களில் இந்திய நாட்டின் 

-----நலனை மட்டும் நினைத்திடுவோம்!

சரித்திரம் தொடங்கிய நாள் முதலாக 

-----நடக்கும் நமது தேடுதலை 

நிறுத்தி விடாமல் மீண்டும் தொடர்வோம்! 

-----தடையெவை வரினும்    உடைத்திடுவோம்!

 

May 24, 2021

பிரதோஷப் பாடல் - 38


பிரதோஷப் பாடல் - 38


உண்ணுதலும்,  உண்டுப்பின்  உறங்குவதும்,   தினந்தினமும்

உண்டியலின்  பொற்காசை  எண்ணுவதும்,   இச்செயல்கள்  

பண்ணுதலே  இப்பிறப்பின்  பயனென்று  எண்ணாமல் 

கண்ணுதலின்  கனலாலே   காமனை  எரித்தானை 

தண்புனலாள்  கங்கையினைத்  தலையில்  தரித்தானை 

எண்குணத்தான்  ஈசன்  எம்மானை  மனதிருத்தி 

எண்ணுவதே  நாளும்  நலம்!


அன்புடன் 

ரமேஷ் 


May 22, 2021

கோலம்

அதிகாலையில் சாலையில் நடை பழகும்போது கண்ட ஒரு காட்சியைப்  படம் பிடித்தேன் - 

என் கேமராவால் மட்டுமல்ல, கவிதையால் கூட! 

அன்புடன் 

ரமேஷ் 


கோலம் 




தள்ளாத வயதினிலும் உள்ளார்வம் குறையாமல் 

வெள்ளி முளைக்குமுன்னே பள்ளி விட்டெழுந்து 

தள்ளிக் குப்பைகளை வாசல் தெருக்கூட்டி 

தெள்ளிய நீர்பிடுத்து வாளியிலே  நிரப்பி 

உள்ளங்கை பள்ளத்தில் அள்ளி அதை எடுத்து 

மெள்ளமெல்லத் தெளித்து தெருவாசல் கூட்டிப்பின் 

எள்ளளவும் பிசகாமல் புள்ளிக் கணக்கிட்டு 

வெள்ளைப் பொடித்தூவி வரைகின்றாள் மாக்கோலம்!

May 20, 2021

மணநாள் வாழ்த்து

மணநாள் வாழ்த்து 

இன்று என் பள்ளித்தோழன் எம்.என் .ராமசாமியின் ஐம்பதாவது மணநாள்!

ராமசாமி - ரேவதி தம்பதியருக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன் 

ரமேஷ்  



பூதப் பாண்டி எனும்சிற் ரூரிலுன்  

காதல் மனைவியின் கைத்தலம் பற்றி 

அரைநூ றாண்டுகள் ஆகும் இன்னாளில் 

நிறைவுடன் வாழ நண்பனின் வாழ்த்து!


ஒருவரோ டொருவர் புரிதல் பெருக்கி 

இருமனம் இணைந்து இனிதே வாழ்ந்தீர் !

குடும்ப வாழ்வில் ஒருசில நேரம் 

இடுக்கண் வருகையில் இணைந்தெதிர் கொண்டீர்!


இருகரு விழியிணை* இருபெண் மகவை               *விழி இணை 

பெற்றே வளர்க்கும் பெரும்பே ருற்றீர் !

பெற்றவர் இருவரும் பெருங்களிப் படைய 

வெற்றிபெற் றவரும்  வாழ்வினில் சிறந்தார்!


எடுத்த கடமைகள் அனைத்தையும் நன்றாய் 

முடித்தபின் மீண்டும் தொடங்கிய வாழ்க்கை, 

உடல்திடம் மனநலம் நிம்மதி யோடு 

தொடர்ந்திட இறைவன் நல்லருள் புரிக!


May 16, 2021

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

என்னுடைய மாமி திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் எண்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நான் எழுதிப்  படித்த பாடல் இது.

அவர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 


பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாலிரு பத்து அகவைகளை என்    

-----மாமன் மனைவிநீ  அடைகின்ற   இன்னாள்! 

காலடி  புதியதோர்  ஆண்டில்  பதிக்கையில் 

-----கூடியே  அனைவரும் வாழ்த்துக ளுரைப்போம்! 

கலைமகள் கடைக்கண் பார்வையின் அருளால் 

-----கருநா  டகஇசைப் புலமை கண்டாய்!

புலம்பெயர் இந்தியர் பலருக் கதையே 

-----பயிர்ப்பித்  திடுமோர் நற்செயல்  செய்தாய் ! - உன்    

குலம்தழைத் தோங்கி நலம்பல பெறவும், 

-----உடலுறை  குறைகள்  சடுதியில் விலகவும்  

வாலிபம் மனதினில் என்றும் நிலைத்து 

-----குன்றா நலன்கள்  என்றும் கூடவும் , 

மேலினும் பற்பல ஆண்டுகள் கணவன் 

-----மகன்மரு மகளுடன் இணைந்து வாழவும் ,  

வேலொரு கையில் ஏந்தி இருக்கும் 

------பாலகன் முருகன் திருவருள் புரிக!