Search This Blog

Jan 21, 2024

அயோத்தியில் ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயில் 


நாளை அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் பால ராமரின் சிலையை நிறுவவிருக்கும் நேரத்திலே,  அந்நிகழ்வையொட்டி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




புதைபட்டு  பூமியிலே ஆண்டுபல ஆயினும்   

வதையுண்டு போகாமல்  பக்தர்கள் மனதிலே 

விதையாக உயிர்வாழ்ந்து  காவியமாய்க்  கதைகளாய்   

சிதையாமல் சிதறாமல் வேரூன்றி  வளர்ந்ததே! 


தவமிருந்து தசரதனும் கோசலையும் வேண்டிட  

அவதரித்த அண்ணலுக்கு அவர்பிறந்த இடத்திலே  

அயோத்திமா  நகரிலே அழகுமிகு  கோவிலில்  

அவருடைய திருச்சிலையை நியாசம்*செய்யும்  நாளிதே .                   

                                                                                                                                    (*நியாசம்=consecration)

வீடெடுக்கும் வினைமுடிந்து கூடிவந்த நாளிலே 

கோடிமக்கள் கூட்டமாக கூடிநின்று களித்திட 

நாடுமுழுதும் வீடுதோறும் தீபமேற்றி  மகிழ்ந்திட 

பாடிப்பாடல் பாலராமன் புகழையெவரும் போற்றுவோம்  


அன்புடன் 

ரமேஷ் 








Jan 15, 2024

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 







மங்களப் பொங்கல்தைத் திங்களின் முதல்நாள்

செங்கதிர் பரப்பி சுடர்விடும் சூரியன் 
தென்னரைக் கோளம் விட்டே விலகி 
வடதிசை நோக்கி வருமின் நாளில்
செங்கல்கள் அடுக்கி செய்தவோர் அடுப்பில் 
செந்தழல் வந்தெழச் சிறுவிறகெரித்து 
மண்கலப் பானை மேல் மஞ்சளைச் சுற்றி
பெண்கள் கூடிக் குலவை எழுப்ப 
வெல்லம் நெல்லரிசி பாலுடன் சேர்த்து
நல்சுவைப் பொங்கல் பொங்கிடச் செய்வோம்.

உறவுகள் சிறந்து உள்ளங்கள் சிரிக்க
அறம்பல நிறைந்து  அல்லவை அகல
நெறிமுறை தவறா அரசுகள்  அமைய
இறைவனை  இந்நாள் இறைஞ்சிப் பணிவோம்.  

அன்புடன் 

ரமேஷ் 



Jan 7, 2024

சாய் சங்கரா அறக்கட்டளையின் வெள்ள நிவாரணப் பணி

சாய் சங்கரா அறக்கட்டளையின் வெள்ள  நிவாரணப் பணி


சென்ற மாதம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மிகவும் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி. நான் முதலாவதாகப் பத்து வருடங்கள்  பணிபுரிந்த  ஸ்பிக் தொழிற்சாலை அருகிலுள்ள முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்று அறிந்தேன். நானும் என் மனைவியும் இணைந்து நடத்தும் ஸ்ரீ சாயி சங்கரா அறக்கட்டளையின் மூலம் எங்களால் முடிந்த அளவு உதவிசெய்ய எண்ணி, ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் முத்தையாபுரம் அம்மன் கோவிலில் தர்மகர்தாவாக இருப்பவரும் ஆன அழகுராஜ் என்ற பொதுநல ஆர்வலரின் உதவியுடன் , அப்பகுதியில்  வசிக்கும் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். அந்நிகழ்ச்சி பற்றி ஒரு பாடலை இயற்றி பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 


இடைவிடா மல்பெய்த அடைமழை யால்மக்கள் 

படாத பாடுற்று படுகின்ற துயரத்தை 

எங்களால் இயன்றைவரை  போக்கிடும் பணியிலே   

சங்கரா சாயி  அமைப்பு 




இல்லங்களில் எல்லாம் மழைநீர் புகுந்தமையால் 

இன்னல்கட் குள்ளான மக்கள் - அன்னார்க்கு

பொன்வைக்கும் இடத்திலே பூவைப்ப தைப்போல 

சின்னதோர் உதவி செய்தோம்.





உடுக்க மாற்றுடைகள் ஓர்சிறிது பருப்பரிசி  

படுக்கப் பாய்போர்வை தலையணைகள் - கூடவே  

துடைக்கத் துணித்துண்டும் சேர்த்தவோர் சிறுமூட்டை 

கிடைக்கப் பெற்றார் பலருமே 




முத்துநகர் அருகிலே  முத்தையா புறத்திலே

இத்தகைய நிகழ்வு  ஒன்றை - மெத்தவும் 

அழகாக  அருமையாய் குறையின்றி முறைசெய்த  

அழகுராஜ் அவர்க்கு நன்றி!