Search This Blog

Jun 26, 2023

நாளாச்சு

நாளாச்சு

நானும் என் மனைவியும் இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தடைந்தோம். நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த அமெரிக்க விஜயம். முன்சென்ற வருகைகளின் போது நான் பார்த்து மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளை  மீண்டும் நேற்று இரவிலும் இன்று காலையிலும்  என் மகனது வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து ரசித்தபோது எழுந்த எண்ணங்கள் இவை- ஒரு பாடல் வடிவில்!

அன்புடன் 

ரமேஷ்   

நாளாச்சு

வெட்ட வெளியில் உட்கார்ந்திருந்து வானைப் பார்த்து நாளாச்சு

சிட்டுக் குருவிகள் சிறகை விரித்து பறப்பதைப் பார்த்து நாளாச்சு


மைனாப் பறவைகள் வானுலா வுவதைப்  பார்த்து மகிழ்ந்து நாளாச்சு

ஆனந்த ராகம் அவைகள் பாடுவதைக் கேட்டுக் குளிர்ந்து  நாளாச்சு..


வட்ட நிலவொளி பட்டுப் புல்வெளி சொலிப்பதைப் பார்த்து நாளாச்சு

வீட்டுத் தோட்டத்தில் காட்டு மான் கூட்டம் மேய்வதைப் பார்த்து நாளாச்சு


உண்டு கொழுத்த குண்டு அணில்கூட்டம்  ஓடுவதைக் கண்டு நாளாச்சு

செண்டு செண்டாகப் பூத்த மலர்க்  கொத்தில் வண்டுகள் பார்த்து நாளாச்சு
 

இத்தனை அழகையும் மொத்தமாயிங்கு சேர்த்துத் தந்த இறைவனையே 

நித்தமும் இந்த இயற்கையின்  வடிவில் பார்த்திடும் நேரம் வந்தாச்சு.

Jun 19, 2023

மாத்ரு பஞ்சகம் - பாடல்கள் 3,4,5

மாத்ரு பஞ்சகம் - பாடல்கள் 3,4,5

முற்றும் துறந்த முனிவர் ஆதி சங்கரர் தனது தாயைப் பிரிந்து வருந்தி அழுது பாடிய பாடல் தொகுப்பின் முதல் இரண்டு பாடல்களை சென்ற பதிவில் பதித்திருந்தேன்.  அடுத்த மூன்று பாடல்கள் இந்தப் பதிவில்.

அன்புடன் 

ரமேஷ் 

பாடல் -3

ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே மாத்ரு பஞ்சகம் - தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!


தனியாக தாயேநீ மரிக்கின்ற தினத்தில் 

புனிதநீர் உன்வாயில் நான்வார்க்க வில்லை!

உனதுடலம் உயிர்நீத்து அனலேறு  முன்னே 

மனதார அவிசளிக்க முடியவும் இல்லை!

கனிவாக உன்னைநான் என்மடியில் ஏந்தி 

காதோடு கர்ணமந் திரமோத வில்லை 

சுணங்கியே சிலகாலம் கடந்துவந்த என்மேல் 

இணங்கியே தயைகாட்டி அருளுவாய் தாயே!


பாடல் -4

முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா ! என் கண் அல்லவா ! c என் ராஜா, என் குழந்தை  சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

கண்ணே! கண்மணியே! முத்தே! என்ராஜா!

என்றெல்லாம் கொஞ்சி எனைவளர்த்த தாயே!

என்றென்றும் நானே சிரஞ்சீவி யாக 

நன்றாக வாழ்வாய் எனவாழ்த்தி னாயே!

தாயைப் பிறிந்த கன்றாக இன்று 

வாய்க்கரிசி மட்டும் போடவே வந்தேன்!


பாடல்- 5

அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.

எனையீனும் பொழுதில்நீ சினையுற் றிருக்க 

உனதுடலும் உயிரும்பெரு வலியால் துடிக்க 

தனைமறந்து நினைவிழந்து என்னப்பா சிவனே 

எனக்கதறி அலறித் துடித்தவென் தாயே!

உனதுமகன் இன்றிங்கு கிருஷ்ணா முகுந்தா 

எனவேண்டி  பதம்பணிந்து வணங்கினேன் தாயே!


Jun 13, 2023

மாத்ரு பஞ்சகம்- பாடல்கள் - 1,2

மாத்ரு பஞ்சகம் பாடல்கள் - 1,2 

முற்றும் துறந்த துறவியெனினும் தாயெனும் உறவைத் துறப்பது அரிது! தன் தாயின் மறைவின் போது ஆதி சங்கரர் வருந்திப் பாடிய பாடல் தொகுப்பு மாத்ரு பஞ்சகம். மனதை உருக்கும் ஐந்து பாடல்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் முதலாம் பாடலை, தமிழ்க் கவிதை வடிவில், சென்ற ஆண்டு அன்னையர் தினத்தன்று பதிவிட்டிருந்தேன். அது என் தாய் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் இருந்த நேரம்!

இன்று என் தாயின் நினவு நாள்.  

இந்த நாளன்று மாத்ரு பஞ்சகத்தின் முதலாம் பாடலுடன், இரண்டாம் பாடலையும்  கவிதை வடிவில், என் அன்னையை வணங்கிப்  பதிவிடுகிறேன். மற்ற மூன்று பாடல்களையும் வரும் நாட்களில் பதிப்பேன்.

அன்புடன் 

ரமேஷ் 


பாடல் 1

ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

பெறுகையில் எனைநீ பெரும்பா டுற்றாய்  

கருவைச் சுமைக்கையில்   களைத்தாய் இளைத்தாய் 

சிறுமழ  லையாய்நான்  இருக்கையில் எந்தன் 

சிறுநீர் நனைத்த படுக்கையில் படுத்தாய்  

பெரிதாய் வளர்ந்துநான்   பெரும்புகழ் பெறினும் 

சிறிதும் என்னால் நீயுற்ற துயரை 

சரியீடு செய்தல்  அரிதினும் அரிதே !

குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே! ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!


குருகுலம் நான்செலும் தருணத்தி லோர்நாள் 

உறவுக ளறுத்துநான்   துறவு கொள்வதாய்  

உறக்கத்தில் கனவொன்று கண்டுளம் பதைத்து  

மறுநா ளேகுரு குலம்வந் தடைந்தாய்!  

உருகியே உதிரமுன் விழிவழி  வழிய 

சிறுவன் எனைநீ   இறுகவே  அணைத்தாய்  

பிறிதுள பலருமக் காட்சிகண் டழுதார்!

தரையிலே  விழுந்துனை வணங்குதல் அன்றி 

வேறென்   செய்வேன்?  சரணமுன் அடியே!. 




Jun 10, 2023

அறுவடை

அறுவடை 

இன்று உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தினம். 

இதுவரை சுற்றுச் சூழலை பாதுகாக்க மறந்தும் மறுத்தும் வரும் நம் தலைமுறைகள் இனியேனும் திருந்துமா ? 

அன்புடன் 

ரமேஷ் 



அறுவடை 

விதையை  விதைத்து நெற்கதிர்  வளர்த்து 

அறுவடை செய்யும் உழவர் இடையே  

எதைநாம் விதைத்து அறுவடை செய்தோம் 

கதையிதைச் சொல்வேன் கேட்டுணர் வீரே!


ஆற்றுப் படுகையில் அரண்மனை கட்டி 

ஆறாத்  துயரை அறுவடை செய்தோம் 

சுகவாழ்வு பெறவே  சூழலை அழித்து 

நச்சுக் காற்றை அறுவடை செய்தோம்


காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தியே 

ஓசோன்  அடுக்கில்  ஓட்டைகள் செய்தோம்   

வாட்டும் வெப்பம் எங்கும் ஏற 

புவிசூ டாதலை அறுவடை செய்தோம்


ஆழ்துளைக் கிணறுகள் பலவும் அமைத்தே 

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தோம் 

ஆழிக்  கடலின் உவர்நீர்  உள்ளே   

உட்புகும் நிலையை அறுவடை செய்தோம் 


எதை விதைத்தோமோ அதையே மீண்டும் 

அறுவடை செய்வோம் அறிந்திடு வோமே !

அதைநாம்  உணர்ந்து அல்லன ஒறுத்து 

நற்செயல் செய்துநம்  பூமியைக் காப்போம்!