Search This Blog

Oct 27, 2021

யாணர் கூடல் பாட்டுக்கள் - பகுதி 2

 யாணர் கூடல் பாட்டுக்கள் - பகுதி  2


யாணர் என்னும் இணையதளத்தில் அவ்வப்போது என்னுடைய பாடல்களைப் பதிவு செய்கிறேன். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையம் ஓர் விருத்தத்தையும் எழுதினேன். 

அப் பாடல்களை மூன்று தொகுப்புகளாக - ஒரு தொகுப்பில் இரண்டு கவிதைகள் -   கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன். 

இரண்டாம்  தொகுப்பு, இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


தலைப்பு - கடைக்கு வராத சரக்கு

நாட்குறிப் பேட்டிலே   தீட்டிப் புதைத்தவென் 
பாட்டுகள் பற்பல  ஆகுமே  -  வெட்கம்  
தடைசெய்த தாலவை இன்னாள் வரையில்      
கடைக்கு வராத சரக்கு.
(பல விகற்ப இன்னிசை வெண்பா)

X
தலைப்பு - கணக்குக்கு  வராத பணம்

அஞ்சரைப் பெட்டி அடியில்  ஒளித்துவைத்த 
அஞ்சாரு ஐநூறு   ரூபாய்க ளெல்லாம்  
பணமதிப்பு  போனவுடன்  பாட்டியின் வங்கிக்   
கணக்கில் வராத  பணம் 
{பல விகற்ப இன்னிசை வெண்பா)

Oct 21, 2021

உதிக்கின்ற கதிரவனா ? சாய்கின்ற சூரியனா?

உதிக்கின்ற கதிரவனா ? சாய்கின்ற சூரியனா?


முகநூலில் நான் இப்படத்தைப் பார்த்தும் எழுந்த கேள்வி,  "இந்தப் படத்தில் இருப்பது   "உதிக்கின்ற கதிரவனா , அல்லது சாய்கின்ற சூரியனா?" என்பதுதான்.

பலரிடம் காட்டிக் கேட்டபோது சிலர் அதிகாலையில் எடுத்தது என்றும் சிலர் மாலையில் சாயும் நேரத்தில் எடுத்தது என்றும் கருத்துத் தெரிவித்தனர். 

பார்ப்பவரின் எண்ணப்படி எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்! 

இதுபோலவே பல சமயங்களில் ஒரே நிகழ்வை கண்ட  அல்லது அதைப்  பற்றிக் கேட்டவர்களும் நம்முடைய கருத்திலிருந்து மாறுபட்ட  முடிவுக்கு வரலாம்!

 அப்போது சற்று நிதானித்து மற்றவரின் கருத்துக்கும் சற்று இடம் கொடுக்கலாமே? 

அன்புடன் 

ரமேஷ் 

( இது  உதயசூரியனா  அல்லது மறையும் சூரியனா  என்ற கேள்வியின் விடை கிடைக்க   பின் குறிப்பைப் பார்க்கவும்! - முதலில் கவிதையைப் படித்து அதன் பின்னே!  )




காலையிலே மேலெழும்பும் கதிரவனோ இல்லையிவன்  

மாலையிலே மேற்றிசையில் மறைகின்ற சூரியனோ? 


அழகுமிகு காட்சியிதைக்  கண்டு களிப்பவரில்

எழுகின்ற இரவியிவனே  என்று   ரசிப்பர்சிலர்!   

விழுகின்ற வெய்யோனே என்றே வியப்பர்சிலர்!

பழுதில்லை இருசாரார் பார்வையிலும் புரிதலிலும். 


அரையளவே நிரம்பியதோர் கோப்பையினைக்  காண்போரில்    

குறையரையாக் காண்பர்சிலர்  நிறையரையே என்பர்சிலர். 


கண்காணும்  காட்சிகளே ஒன்றெனினும் அவையெழுப்பும் 

எண்ணங்கள் மாறுபடும் வெவ்வேறு பேர்மனதில்.

தன்பார்வை தான்மட்டும் உண்மையென எண்ணாமல் 

பின்னொருவர் பார்வையையும் மனந்திறந்து மதித்திடுவோம்.


பின் குறிப்பு:

இது நான் முகநூலில் பார்த்த படம்.  படத்தில் இது சூரிய உதயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது! அழகான இந்தக் காட்சியை படம் பிடித்துப் பதித்த நண்பருக்கு நன்றி!






 

     







Oct 19, 2021

பிரதோஷப் பாடல் - 41

 பிரதோஷப் பாடல் - 

நேற்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோஷம்.

சனிக்கிழமைகளில் வரும் சனிப்பிரதோஷத்தைப்போல் இதுவும் விசேஷமான ஒன்று.

இந்த நாளில் இறைவனைத் துதித்து நேற்று எழுதத் துவங்கி இன்று முடித்த பாடல் இது.

அன்புடன் 

ரமேஷ் 




சாமத்திரு வேதம்உரை வேதியர்க்கு அடியோன் 

ஈமத்திடு காட்டினிலே சாமநடம் புரிவோன் 

வாமத்தொரு பாகத்தினில் பார்வதியை வைத்தோன் 

சோமத்திரு வாரப்பிர தோஷத்திந்  நாளில் 

பூமண்டலத் துயிர்வாழும் பிறவிகள்  எல்லாமும் 

சேமமுற வாழஅவன் அடிபணிந்து தொழுவோம்.