Search This Blog

Sep 17, 2015

காலை நேரக் காற்றில்- பகுதி-1

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

பல ஆண்டுகளாக நான் காலையில் நடைப்பயிற்சி செய்வது உண்டு.
தினமும் செய்யவேண்டும் என்று ஆசை! ஆனால் நடைமுறையில் அது நடந்ததில்லை!


வாரத்தில் இரண்டு , மூன்று நாட்கள் மட்டுமே முடிந்தது.

ஆனால் இப்போது வேலையிருந்து ஒய்வு பெற்ற பின்னர், கிட்டத்தட்ட எல்லா நாட்களும் செய்கிறேன்.

வேலை செய்துகொண்டிருக்கையில் , அப்படிப்  போகும்போது கூட, மனதில் அன்று செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியே மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

காலைக் காட்சிகள், கண்ணில் பட்டாலும், மனதில் பதிந்ததில்லை.
இப்போது, ஒய்வு பெற்ற பின், சற்று நிதானித்து, கண்ணில் படும் காட்சிகள் எல்லாம் மனதில் பதிந்து மகிழ்சியைத் தருகின்றன! 
அப்படிச் செல்லும்போது கண்ட காட்சிகள் ஒரு சிறு கவிதை வடிவில்!--

காலை நேரக் காற்றில்- பகுதி-1

(இதை இதற்கு முன்னமே, சிலருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது இது கனிததோட்டத்தில்! eluthu.com இணையதளத்திலும் பதிவு  செய்து இருக்கிறேன்)

அன்புடன்
ரமேஷ்



காலைநேரக் காற்றிலே துயில்எழுந்த மாட்டிலே
 
சாலைதூங்கும் நேரத்தில் சத்தமில்லா வேளையில்

காலைவீசி நடப்பது மிகமிக உற்சாகமே!

வேலைவிடுத்த பின்னரே மிகவும்அது சாத்(தி)யமே!

 

மென்காற்றில் மிதந்துவரும் வேப்பமர வாசமே

முகர்ந்தபின்னே சுகம்அடையும்  என்னுடைய சுவாசமே.

தெருஓரம் தூங்கும்நாய்  தலைநிமிர்த்திப் பார்த்திடும்.

தெரிந்தமுகம் இதுவென்று  திரும்பதூங்கப் போய்விடும்

 

விதவிதமாய் நிறஜாலம்  விண்வெளியில் நேர்ந்திடும்

இதமான இளஞ்சூட்டில்  என்குளிரும் நீங்கிடும்.

அடுக்குமாடி கட்டிடங்கள் அனைத்தின்வாசல் வெளியிலே

வீடுகாக்கும் காவலர்கள் விழித்துக்கூட்டம் போடுவார்.

 

வானிலின்னும் ஆதவன் வரவிருக்கும் வேளையில்

தேநீர்கோப்பை ஏந்தியே தினம்தினமவர் பேசுவார்

நள்ளிரவினில் குளிர்நீக்க  அவரெரித்த குப்பைகள்

சுள்ளிகளின் சிறுபுகையின் வாசம்காற்றில் வீசுமே.

 

முகம்மூடும் மேகத்திரை  மெல்லமெல்ல விலக்கியே

மெதுவாக இரவிஎழ  இரவின்இருள் நீங்கிடும்.

சந்திக்கும் மூன்றுதெரு  எங்கெங்கி  ருப்பினும்

தொந்தியுடன் அங்கிருப்பார் விக்னவி நாயகர்.

 

சிலைதன்னைத்  தாண்டிச்செல்லும் மக்கள் அனைவரும்

தலைதிருப்பி வாய்முணுத்து  வந்தனங்கள் சொல்லுவார்.

கன்னம்தொட்டு கரணமிட்டு செல்லுவோரும் சிலருண்டு.

அனைவருக்கும் ஆசிதந்து அமர்ந்திருப்பார் பிள்ளையார்.

 

 

 

.

 

 

 

 

 

No comments:

Post a Comment