Search This Blog

Dec 15, 2021

மார்கழி மாதத்து மாண்பு

 மார்கழி மாதத்து மாண்பு

நாளை  மார்கழி மாதத்தின் முதல் நாள்.

ஒரு வெண்பாப் பாடல் போட்டிக்காக , "மார்கழி மாதத்து மாண்பு" என்ற சொற்றொடரை ஈற்றடியாகக் கொண்டு நான் எழுதிய பாடல் இது! 

அன்புடன்

ரமேஷ்

பி.கு :

சென்ற ஆண்டின் மார்கழியின் போது நான் எழுதிப் பதித்த மற்றோர் பாடலின் இணைப்பையும் இங்கு தந்திருக்கிறேன்.  படித்துப் பாருங்களேன்!

https://kanithottam.blogspot.com/2020/12/blog-post_20.html





வாசலிலே கோலமிட்டு பூசணியின் பூவைத்து
பூசனைகள் செய்கின்ற மாசமிது -- கேசவனின்
பேர்பாடிக் காலையிலே ஊர்கோலம் போகுதலே
மார்கழி மாதத்து மாண்பு

Dec 11, 2021

கருகிப் போன கருவறைக் கனவுகள்

 கருகிப் போன கருவறைக் கனவுகள்

மலர்ந்து சிரிக்கும் இவள் மதிமுகத்தின் பின்னே மறைந்து சிதைந்த  இவள் கனவுகளை பற்றி!

அன்புடன் 

ரமேஷ் 





       உடுத்த பட்டுப் புடவையின் இடுப்பு 

        மடிப்புக ளிடையே சேர்த்துச் சொருகி

        மறைத்து ஒளித்த  இவள்மனத் தாசைகள்  

        ஒருவரும் அறியாக் கருவறைக் கனவுகள் !

            

நேரிய பார்வையும் நிமிர்நன்  நடையும் 

உள்ள உறுதியும் உடையவள் இவளே. 

தூரிகை எடுத்துவோர் ஓவியன் தீட்டிய 

சித்திரம் ஒத்த காரிகை இவளே!

வெளிப் பார்வையிலே இவள் ஒளிர்ந்தாலும் 

உ(ள்)ளத்தில்  ஒளித்து(ள்)ள உண்மைகள் பலவாம்!

வாய்மொழி திறந்தவள் உரைக்கா உண்மைகள் 

விழிமொழி வழியே வழிந்திடக் காண்பீர்!


நித்திரை தொலைத்தும் நிம்மதி இழந்தும் 

பத்தினி இவளே பலசுமை பொறுப்பாள் 

வாழ்க்கைத் துணையுடன் வழக்கிடும் சுமைகள் 

தாய்மைப் பொறுப்பைத் தாங்கிடும் சுமைகள் 

குடும்பப் பிணைப்புகள் விலகி விடாமல் 

இழுத்துப் பிடித்து இணைக்கும் சுமைகள் 

மொத்தச் சுமையையும் முகங் கோணாமல் 

நித்தம் சுமப்பாள் நல்லாள் இவளே!


கலகல வென்னும் கைவளை ஒலியும் 

சலசல வெனும்பட் டாடையின் ஒலியும் 

மல்லிகை மணமும் வழலை*யின் சுகந்தமும்            *வழலை=soap

என்றோ கருதிய  தாவணிக்  கனவுகள் 

எஞ்சியின் றிருப்பதோ அவற்றின் நினைவுகள்!


அகங்குலைந்து மங்கையவள் அழுகின்ற நேரத்தில்

முகம்மறைக்கும் முந்தானை கண்ணீரைக் கழுவிவிடும்..

சுகமாகச் சிரிக்கின்ற சமயத்தி லும்கூட 

சிரிப்பொலிகள் சிதறாமல் வாய்பொத்த உதவும்- இவள்

சுகிக்கின்ற நேரங்கள் ஆனாலும் குறைவே! - மனம்

தகித்து அழுகின்ற நேரங்கள் தாம்மிகவே!

 

காதிலே லோலாக்கு மூக்கிலே புல்லாக்கு 

நெற்றியில் நவமணிச் சுடர்விடும்  சுட்டி 

சங்குக் கழுத்தில் தொங்கும் அட்டிகை 

மூங்கிற் கரங்களில் மாட்டிய கங்கணம் 

சொலிக்கும் கண்களில் பளிச்சிடும் விவேகம் 

பேரழ கின்முழு உருவம் இவள்தானே எனினும் -


        பட்டாடையில் இவள் புதைத்து மறைக்கின்ற  

        சோகச் சுமைகளை யாரேதான் அறிவார்  ? - இவள் 

        கட்டிய பட்டுப் புடவையின் மடிப்பில் 

        கருகிச் சிதைந்தன  கருவறைக் கனவுகள்!










Dec 3, 2021

பிரதோஷப் பாடல் 43

 பிரதோஷப் பாடல் 43


நேற்றைய பிரதோஷதினப் பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 








நந்தியை நகரவைத்து நந்தனுக்கு தரிசனம் 

தந்தசிவன் அன்பருக்கு காட்டிடுவான் கரிசனம் 

அய்ந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தால் அனுதினம் 

வந்துசேரும் வளங்கள்யாவும் வாழ்வினிலே நிச்சயம் 



Nov 30, 2021

திருமெய்யம்

திருமெய்யம் 

என் நண்பர்கள் அரவிந்த் மற்றும் இராம.கிருட்டிணன் அவர்கள் இருவரும்  வாட்சப்பில்  அப்பில் பகிர்ந்து கொண்ட ஒர் புகைப்படம் கீழே!.

திருமெய்யம்  என்னும் ஊரில் அமைந்த ஒரு கோட்டையில் உள்ள கோவில் இது.

கோவிலில் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மெய்யப்பரோடு அவர் பின்னாலே காணப்படும் பிரம்மா , மற்ற தேவர்கள், முனிவர்கள் ஆகியோரின் வடிவங்கள் கொண்ட கர்பகிருகம்  முழுதும் மலையிலே செதுக்கப்பட்ட ஒரு சிற்பக்கலை  அதிசயம்!

கோவில் சிலைகள் எல்லாம் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரும் இன்றைய நாட்களில், இப்படிப்பட்ட சிற்பங்களை திருடி விற்கவே முடியாது! 

ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மூதாதையர் சிலைத்திருட்டைத் தவிர்க்க மிகுந்த முற்போக்கு நோக்கோடு இப்படிச் செய்தார்களோ?

இந்த சிற்பக்கலை அதிசயத்தைப் பற்றி ஒரு  பாடல். 

அன்புடன் 

ரமேஷ் 


சிற்பக்கலை விற்பன்னர் கற்பனையிலே உதித்து
கற்சுவரில் உயிர்பெற்ற தெய்வத்திரு உருவங்கள்!
கர்பக் கிரஹ மானாலும் கடவுளரின் கற்சிலையை
அற்பர்சிலர் களவாடி கடல்தாண்டி வெளிநாட்டில்
விற்பதையே தடைசெய்யவழிதேடி அந்நாளே
கற்சுவரில் செதுக்கினரோ முற்போக்குப் பார்வையுடன்?




Nov 26, 2021

பாட்டொலி நிற்குமுன் ------


பாட்டொலி நிற்குமுன் ------

சில வருடங்களுக்கு முன் நான் "வாட்சப் "பில்  ஒரு  ஆங்கிலக் கவிதையைப் படித்தேன். அந்தப் பதிவு மீண்டும் என் நண்பர் சுதந்திரகுமார் அவர்களால் சென்ற வாரம் பதிக்கப் பட்டது. அந்தக் கவிதையின் தூண்டுதலால் நான் எழுதிய கவிதை இது. இன்றைய உலகில் அனைவருக்கும் தேவையான ஒரு பாடம் இது!

அன்புடன் 

ரமேஷ் 










பாட்டொலி நிற்குமுன் ---

ராட்டின மேறி சுற்றும் குழந்தையைப் 

-----பார்த்து மகிழ்ந்தது உண்டா? 

பட்டாம் பூச்சி மேலும் கீழும் 
-
----பறப்பதை ரசித்தது  உண்டா?

கொட்டும்  மழைதரை எட்டும் போதெழும் 

-----ஓசையைக் கேட்டது உண்டா?

மடியும் இரவின் மடியினின் றெழும் 
-
----கதிரைக் கண்டது உண்டா?

                    ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை  நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

நடக்கும் போது கடக்கும் நண்பரைக்

 -----குசலம் கேட்டவர் கூறும் 

விடையைக் கேட்குமுன் விரைந்தே ஓடி

 -----நடையைக் கட்டுதல் உண்டா?

படுத்த பின்னாலும் உறக்கம் தொலைத்து 

     நாளையச் செயல்களைச் செய்யும் 

திட்டம் மனதின் திரையில் நிழலாய் 

     ஓடுவ தென்றும் உண்டா? 

                    ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்ரோடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

உற்ற நட்புடன் உறவுரை யாடிட 

     சிற்சில மணித்துளி நேரம் 

சற்றும் ஒதுக்காது நட்பின் இழைகள் 

     நையச்  செய்வது உண்டா?

உன்மகள் உன்னுடன் ஆடிடச் சற்றே 

     நேரம் கேட்கும் போது 

இன்றிலை நாளை என்றுரைத் தேயவள் 

     புன்னகை தொலைத்தது உண்டா?

                  ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

ஓடியோடி உன் இலக்கை அடைந்தபின் 

     மேலிடும் களைப்பே மிஞ்சும்!

நாடிடும் இலக்கை நீ அடைந்தாலும் 

     மனதில் மகிழ்ச்சிதான் கொஞ்சம்!

ஒவ்வொரு நாளும் சுவைத்து வாழ 

     இறைவன் அளித்த பரிசு!

அவ்விதம் வாழா வாழ்க்கை முழுதும் 

    பாழாய்ப் போகும் தரிசு!

                  ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா!

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!





                   

Nov 17, 2021

தாயுமானவன்

தாயுமானவன் 

இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவையில்லை!

அன்புடன்

ரமேஷ்



படம் : இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து , நன்றியுடன் 


காரோடும் வீதிகளில் மிதிவண்டித் தேரோட்டிப்  

போராடும் போதினிலும் தன்மகவைத்  தான்சுமந்து 

மாரோடு  சேர்த்தணைத்துத் தூளியிலே தூங்கவிட்டு  

ஆராட்டு*ப் பாடுகிறான் தாயுமான தந்தையிவன்!

* ஆராட்டு = தாலாட்டு 

Nov 15, 2021

பள்ளிக்குப் பயணம்

பள்ளிக்குப் பயணம் 

சென்னையின் வீதிகள் தண்ணீரில் முழுகுவது நகரவாசிகளுக்குப் வருடந்தோரும் பார்துப் பழகிப்போன ஒரு காட்சி! இந்த வெள்ளத்திலும் தோளில் சுமந்து தன் மகனைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும் ஒரு தாயைப் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்






படம் : இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து, நன்றியுடன்


இடுப்பளவு பெருக்கெடுத்து ஓடும்வெள் ளத்தில்தன் 

உடுப்பு நனைந்தாலும் தான்பெற்ற பிள்ளையவன் 

படிப்பு உடையாமல் பள்ளிக்குப்  போய்ச்சேர  

எடுத்துத்தன் தோள்மேலே தூக்கி நடக்கும்தாய்!


அன்புடன் 

ரமேஷ்