Search This Blog

Dec 11, 2021

கருகிப் போன கருவறைக் கனவுகள்

 கருகிப் போன கருவறைக் கனவுகள்

மலர்ந்து சிரிக்கும் இவள் மதிமுகத்தின் பின்னே மறைந்து சிதைந்த  இவள் கனவுகளை பற்றி!

அன்புடன் 

ரமேஷ் 





       உடுத்த பட்டுப் புடவையின் இடுப்பு 

        மடிப்புக ளிடையே சேர்த்துச் சொருகி

        மறைத்து ஒளித்த  இவள்மனத் தாசைகள்  

        ஒருவரும் அறியாக் கருவறைக் கனவுகள் !

            

நேரிய பார்வையும் நிமிர்நன்  நடையும் 

உள்ள உறுதியும் உடையவள் இவளே. 

தூரிகை எடுத்துவோர் ஓவியன் தீட்டிய 

சித்திரம் ஒத்த காரிகை இவளே!

வெளிப் பார்வையிலே இவள் ஒளிர்ந்தாலும் 

உ(ள்)ளத்தில்  ஒளித்து(ள்)ள உண்மைகள் பலவாம்!

வாய்மொழி திறந்தவள் உரைக்கா உண்மைகள் 

விழிமொழி வழியே வழிந்திடக் காண்பீர்!


நித்திரை தொலைத்தும் நிம்மதி இழந்தும் 

பத்தினி இவளே பலசுமை பொறுப்பாள் 

வாழ்க்கைத் துணையுடன் வழக்கிடும் சுமைகள் 

தாய்மைப் பொறுப்பைத் தாங்கிடும் சுமைகள் 

குடும்பப் பிணைப்புகள் விலகி விடாமல் 

இழுத்துப் பிடித்து இணைக்கும் சுமைகள் 

மொத்தச் சுமையையும் முகங் கோணாமல் 

நித்தம் சுமப்பாள் நல்லாள் இவளே!


கலகல வென்னும் கைவளை ஒலியும் 

சலசல வெனும்பட் டாடையின் ஒலியும் 

மல்லிகை மணமும் வழலை*யின் சுகந்தமும்            *வழலை=soap

என்றோ கருதிய  தாவணிக்  கனவுகள் 

எஞ்சியின் றிருப்பதோ அவற்றின் நினைவுகள்!


அகங்குலைந்து மங்கையவள் அழுகின்ற நேரத்தில்

முகம்மறைக்கும் முந்தானை கண்ணீரைக் கழுவிவிடும்..

சுகமாகச் சிரிக்கின்ற சமயத்தி லும்கூட 

சிரிப்பொலிகள் சிதறாமல் வாய்பொத்த உதவும்- இவள்

சுகிக்கின்ற நேரங்கள் ஆனாலும் குறைவே! - மனம்

தகித்து அழுகின்ற நேரங்கள் தாம்மிகவே!

 

காதிலே லோலாக்கு மூக்கிலே புல்லாக்கு 

நெற்றியில் நவமணிச் சுடர்விடும்  சுட்டி 

சங்குக் கழுத்தில் தொங்கும் அட்டிகை 

மூங்கிற் கரங்களில் மாட்டிய கங்கணம் 

சொலிக்கும் கண்களில் பளிச்சிடும் விவேகம் 

பேரழ கின்முழு உருவம் இவள்தானே எனினும் -


        பட்டாடையில் இவள் புதைத்து மறைக்கின்ற  

        சோகச் சுமைகளை யாரேதான் அறிவார்  ? - இவள் 

        கட்டிய பட்டுப் புடவையின் மடிப்பில் 

        கருகிச் சிதைந்தன  கருவறைக் கனவுகள்!










12 comments:

  1. நல்ல கவிதை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி!

      Delete
  2. Detailed descriptions...Excellent!

    ReplyDelete
  3. இமைக்கும் நேரத்தில் ஒரு பெண்ணின்
    சுமைகளை சித்தரித்து அமைந்த உங்கள் கவிதையை கண்டு பொறாமை தான் கொள்கிறேன்.
    தாய்மையை
    பெற்ற போது தாங்கிய சுமைவிட கைமை எய்திய மாதுவின் தாழ்ந்த மனப்பான்மயை யாதென்று சொல்வது? அதுவும் இளமையில் அடைந்தால் அந்த சுமை பெறும் கொடுமை.
    அந்த தையல் கையிலேந்தி இருக்கும் பழசுமையை கண்டேன் சோகம் மறைந்து என் மனதில் பசுமை மையம் கொண்டது!!

    அன்புடன்
    வென்

    ReplyDelete
  4. எத்தனையோ பேதைப்பெண்களின் கதி இதுதான்.
    அழகிய புன்னகையில் மனக்கீற்றுகளை மறைக்க முயன்றுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை, அனந்த்.பெண் மனத்தின் ஆழத்தை அளவிட முடியாது!

      Delete
  5. கருகிப்போன கருவரை கவிதை கொடுத்து உருக விட்ட எம்மை நண்பா உமக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ராம்கீ!

      Delete
  6. Excellent and resonates with the lives of many women!

    ReplyDelete