Search This Blog

Jul 14, 2017

கப்பலா கவிழ்ந்து போச்சு?

கப்பலா கவிழ்ந்து போச்சு?

ஒருவர் கவலையுடன் இருக்கும்போது அவரை நோக்கி கேட்கப்படும் கேள்வி - ' ஏன் இப்படி இருக்கே? கப்பலா கவிழ்ந்து போச்சு?".
கடலில் செல்லும் கப்பல், புயல் அடித்தாலும், கடல் கொந்தளித்தாலும்
கவிழுவதில்லை - அதனுள்  தண்ணீர்  புகும் வரை.
அமைதியான கடலானாலும் , ஒரு சிறு ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வந்தால் கவிழுவது நிச்சயம்!
அதுபோலவே, கவலைகளை உள்ளே விடாத வரையில், மனதும் செயலும் தெளிவாக இருக்கும்!
கவலைகளை உள்ளே விட்டால் --- கவிழ்ந்த கப்பல் கதைதான்!

அன்புடன்

ரமேஷ்

கப்பல்

அகண்டு விரிந்த ஆழிக் கடல்மேல்
---------அனைத்து திசையிலும் அலைகள் அணைக்க
சுகமாய் மிதந்து செல்லும் கப்பல்---
----------வெளியுள உவர்நீர் உட்புகும் வரையில் !

நீருட் புகும்  வரை நேராய்ச் செல்லும் 

------------கப்பலின்  சுவரில் தப்பெதும்  நேர்ந்து 
தவறியும் உவர்நீர் உட்புக நேரின் 
------------கப்பலும் கவிழும்; கடலுள் முழுகும் 

அதுபோல்

சுழலும் உலகில் உழலும்நம் வாழ்க்கைக் 

------------கப்பலின் வெளியே கவலை அலைகள் 
சூழ்ந்து அடிக்கையில் திடமாய் நின்று 
------------மனத்துள் கவலையின் திவலைகள் கூட 

உட்புகு தலையே தடுத்தோ மாயின் 

------------தெளிவாய்ச் செயல்படும் மூளையும் மனமும்.
செய்திறம் சிறக்கும்; சிந்தனை செழிக்கும்.   
------------வாழ்க்கைக் கப்பல்  வளமாய் விரையும்.







Jul 8, 2017

செயற்கை

இயந்திர கதியில் செல்லும் இன்றைய வாழ்க்கையில் உடலும், உள்ளமும் இயற்கையை விடுத்து செயற்கைக்கு அடிமை ஆகி விட்டன!

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 

செயற்கை


புரை விழுந்த*  கண்ணில்       திரைவிழுந்த பார்வை-        *cataract
சரிசெய்ய  அதையே     விழிவில்லை* அணிந்தோம்..        * artificial lens
கேட்கின்ற ஆற்றலை      காதுகள்  இழக்க
மீட்க அப்புலனை     செவித்துணை* அணிந்தோம்               * hearing aid

மைய்யெனக் கருத்த    முடிகொட்டிப் போக
பொய்  மயிர்த் தோகை*      போட்டதை மறைத்தோம்.          * wig
பல்லெலாம் உதிர்ந்து      சொல்குளறும் பொது
கட்டுப்பல் வரிசை*      கட்டிச்சரி செய்தோம்.                            *artificial dentures


கால்சியம்  சத்து      குறைவான  தாலே
கால்கை எலும்புகள்      பலவீன மாக
கீழே விழுந்துடைந்த      காலெலும்பைக் சேர்க்க
டைட்டானி*  யத்தில்       தகடுகள் புதைத்தோம் .                     * titanium

துடிக்கும்  இதயத்தின்       ஆற்றலைத் தூண்டி
முடுக்கும்  கருவியை*        மேல்வைத்துத் தைத்தோம் .          * pace maker
மூட்டுகள் தேய்ந்து       வலிவந்த தாலே
முட்டிகளை மாற்றி      புதிதாக வைத்தோம் .

பாதிக்கு மேலான       இயற்கை உறுப்பு
பாதிப்புக் குள்ளாகி       செயற்கையாய்ப்  போச்சு
இதனால் தானோ      இன்றுநம்  முகத்தின்
உதட்டுச் சிரிப்பும்      உயிரற்ற  பூச்சு!

சந்தனமும்  நீறும்     நெற்றியில் பூசி
வந்தனம் இறைவனை      செய்திடும் வேளை
சிந்தனைகள்  சிதறி       எங்கெங்கோ செல்ல
செய்யும் தொழுகைச்      செயல்களும்  செயற்கை.

வண்ணங்கள்  மட்டும்       உடல்மேலே   ஏற்றி
வாசனை  விடுத்த       காகிதப் பூப்போல்
எண்ணிச் செய்கின்ற        ஈடுபா  டின்றிநாம்
செய்யும் செயல்கள்      அனைத்துமே  செயற்கை

இயற்கையோ டுறவுகள்        முற்றும்  முறிந்து
செயல்களும்  சிந்தனையும்       செயற்கையாய்ப் போச்சே!
இந்நிலைமை மாறி       உடலோடு மனமும்
நன்னிலைமை அடையும்      நாளென்று வருமோ?










Jun 30, 2017

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும் மனித வாழ்வில் மாறி மாறி வரும். வெற்றியால் மிக்க மகிழ்ச்சி அடையவும் வேண்டாம்! தோல்வியால் துவளவும் வேண்டாம்.
இது பற்றி ---

அன்புடன் 
ரமேஷ் 



சரணம்

பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.
மேகம் மறைத்தால் பகலவன் சரணம்.
காற்றில் மிதந்து மலையில் முட்டும்
மேகங்கள் எல்லாம் மழையில் சரணம்.
பொழியும்  மழைநீர்  நதியில்  சரணம்.
ஓடும் நதியோ  கடலில் சரணம்.
கடலின் அலைகள் கரையில் சரணம்
கரையில் வசிக்கும் உயிரின மனைத்தும்
உறங்கையில்* இரவின் மடியில் சரணம்                ( * உறங்குகையில் )
சுகமாய் உறங்கித் துயிலெழும் காலையில்
பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.
பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.
மேகம் மறைத்தால் பகலவன் சரணம்.
---------------------------------------------
---------------------------------------------
சுகமாய் உறங்கித் துயிலெழும் காலையில்
பகலவன்  உதிக்கையில்  இரவுகள் சரணம்.


உன்னிடம்  தோற்றவர் உனை வென்றவரை
வென்றார்  என்றால் யாரே வலியவர்?
ஒன்றை வென்றால் ஒன்றிடம் தோற்போம்.
இன்னாள்  வெற்றி; மறுநாள் தோல்வி ;
வண்டி ஒருநாள் ஓடத்தில் ஏறும்.
வண்டியில் ஒருநாள் ஓடமும் ஏறும்
வெற்றியும் தோல்வியும் நிலையில் லனவே !
சற்றும் அவற்றால் கலங்குதல்*  என்னே !      (*பாதிக்கப்படுதல் - to get affected)






Jun 24, 2017

எனக்கென்ன ? நான் போறேன் பாகு பலி.

எனக்கென்ன ?  நான் போறேன் பாகு பலி.


'பட்டப்பகலில் வாலிபர்  கொலை'
' தனியாகச் சென்ற  பெண்ணை வாலிபர்கள் கற்பழிப்பு"
இது போன்ற தலைப்புச் செய்திகளைத்  தாங்கி வரும் நாளேடுகள், கூடவே "இச்செயல்கள்  நடக்கையில் சுற்றி நின்று ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்தது" என்ற செய்தியைப்  பதிவு செய்வதையும்   தினம் தோறும் பார்த்துப் பார்த்து மரத்துப் போய்விட்டோம்..
தெருவிபத்தில் அடிபட்டு ரத்தம் வழியாக கிடப்பவரைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். ஆனால் முன்வந்து உதவி செய்ய வருபவர் எத்தனை பேர்? ""நமக்கெதுக்கு வம்பு? பாகு பலி ( அல்லது வேறு ஏதாவது) மேட்னி ஷோவுக்கு நேரம் ஆச்சு " என்று அந்த இடத்தை விட்டு வேகம் வேகமாக நகருபவர்களே அதிகம்.
"நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் சரி" என்கிற மனப்பான்மை  எல்லோரிடமும்  காணப்படுகிறது. இதுவே  சமூகத்தில் நாம் காணும் பல அவலங்களுக்கும்   காரணமாகிறது.

இதைப்  பற்றி  ஒரு ஆதங்கப் பாடல்.

அன்புடன்

ரமேஷ்


பாகுபலி

இருக்கவிடம் இல்லாத நடைபாதைக்  குடும்பங்கள்
குடித்துக்கார் ஓட்டுவோர்க்கு வேகப்  பலி.
பருவமழை தவறிப்போய் ஏரிகுளம் வற்றிப்போய்
நீரில்லா கிராம மக்கள் தாகப் பலி
இரவென்ன பகலென்ன எந்நேரம் ஆனாலும்
தனிச்செல்லும்  பருவப்பெண்  மோகப் பலி
யாரிங்கு  ஆண்டாலும் எதுவென்ன ஆனாலும்
எனக்கென்ன ?  நான்போறேன்  பாகு பலி.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வரிஏய்க்கும்
பட்டாயக்  கணக்கருக்கு* விதிகள்  பலி .      (*chartered accountant)
துட்டுக்குத்  ஓட்டுகளை விலைபேசி வாங்குகின்ற
வேட்பாளர்  முன்னாலே நேர்மை பலி
சத்தமிட்டு எதிர்க்கட்சி சட்டசபை நடக்காமல்
ஒத்திவைக்கும் உத்திமுன்ஜன  நாயகம் பலி.
யாரிங்கு  ஆண்டாலும் எதுவென்ன ஆனாலும்
எனக்கென்ன ?  நான்போறேன்  பாகு பலி.

 நாடிங்கே நாள்தோறும் போகின்ற போக்கினையே
நோக்குங்கால் வருகிறதே நெஞ்சில் வலி.
முகநூலில் ,வாட்ஸ்அப்பில் ட்விட்டர் எக்செட்ராவில்
இவைகளையே  எதிர்ப்பதில்நான் பாயும் புலி
நேராகப் போராடும் நிலையொன்றை எதிர்கொண்டால்
அப்போநான் வளைக்குள்ளே  பதுங்கும் எலி!
யாரிங்கு  ஆண்டாலும் எதுவென்ன ஆனாலும்
எனக்கென்ன ?  நான்போறேன்  பாகு பலி.








Jun 21, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 15, 16

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 15,16


நீண்ட இடைவேளைக்குப் பிறகு  , 18 ஸ்லோகங்களுடன் அமைந்த ஈசாவாஸ்ய உபநிஷத்தின் 15, 16 வது ஸ்லோகங்களை அவற்றின் பொருள் மற்றும் விளக்கங்களோடும், ஆங்கில  மொழிபெயர்ப்போடும் , என்னுடைய பாடலோடும் பதிப்பிக்கிறேன். நீண்ட இடைவேளைக்குப் பின்  என்பதால் , முந்தைய பதிப்புகளையும் படித்தால் உதவும். அப்பதிப்புகளின் இணைப்பு பற்றிய தகவல்களையும் கீழே தந்திருக்கிறேன்.

அன்புடன் 
ரமேஷ் 
http://kanithottam.blogspot.in/2015/10/blog-post_22.html
http://kanithottam.blogspot.in/2016/12/1-2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3_17.html
http://kanithottam.blogspot.in/2016/12/4-5.html
http://kanithottam.blogspot.in/2017/01/6-7_6.html
http://kanithottam.blogspot.in/2017/01/8.html
http://kanithottam.blogspot.in/2017/02/9_3.html
http://kanithottam.blogspot.in/2017/02/11.html
http://kanithottam.blogspot.in/2017/02/12-13-14.html


ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 15,16 






மொழிபெயர்ப்பு: *

உண்மையின் முகம் உன் ஒளித்திரையின் பின் மறைக்கப் பட்டுள்ளது. சற்றே அதை விலக்கி சத்திய நெறி பேணும் முனிவன் எனக்கு உண்மையைக் காண உதவுவாய்.

வானவெளியில் தனியாகப் பயணம் செய்யும் சூரியதேவனே! உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் பேணிக் காப்பவனே!
உனது கிரணங்களை விளக்கி, ஒளியைச் சுருக்கிக் கொள்.
உனது வடிவை நான் காண வேண்டுகிறேன்!

என்ன ஆச்சரியம்! உனதருளால் உன்னுருவைக் காணுகையில், அது நானே என்று உணர்கின்றேன்! ( ஸோ அஹம் அஸ்மி )

Translation : **

The face of truth is hidden by your orb
Of Gold, O Sun! May you remove your orb
So that I, who adore the true, may see
The glory of truth. O nourishing sun,
Solitary traveller, controller,
Source of life for all creatures, spread your light
And subdue your dazzling splendor
So that I may see your blessed self.

Even that very Self am I !
(
விளக்கம் : *

"அறியாமை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல் " என்பது ஒருவனுடைய முதல் நிலைப் பிரார்த்தனை. இதன் மூலமும், தபம் , ஜபம் போன்ற சாதனைகளின் மூலமும், ஒளியை காண்கிறான். அந்த ஒளியின் வசீகரத்தில் தன்னை மறந்து அங்கேயே நிற்கிறான். ஆனால் அவன் காண விரும்பும் உண்மை, அந்த ஒளிக்கும் பின்னாலே இருக்கிறது. அந்த உண்மையைக் காண பிரார்த்திக்கும் ஒருவன், ஒளிக்குப் பின்னால் இருக்கும் உண்மையைக் காண்கையில் , "அந்த உண்மையும் தானும் ஒன்றே" ( ஸோ அஹம் அஸ்மி )  என்று உணர்கிறான்!

பாடல் :

ஒளியின் பிழம்பாய்ச் சுடர்விட்டு
----------மிளிரும் சூரிய நாயகனே
வெளியில் தெரியுமுன் பேரொளியை
----------சற்றே விலக்கி அருள்புரிவாய்.
பொன்மயமான அவ்வொளித் திரையின்
----------பின்னே மறைந்துள உட்பொருளை  
உண்மை நெறியுடை முனிவன்நான்
----------கண்டே அறிந்திட விழைகின்றேன்.


உலகைப் பேணிக் காப்பதற்கு
----------தனியாய் வானில் பயணிப்போய்!
அலகில்    ஒளியா!   அருணாஉன் 
----------ஒளிக் கரங்களை ஒளித்திடுவாய்.
விலகிய அந்தத் திரையின்பின்
----------மகிமை வாய்ந்த உன்னுருவை
நலமாய் நானும் காணுகையில்
----------நானே அங்கெனைக் கண்டேனே


*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam, Chennai-4 

**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books



Jun 16, 2017

எந்தன் மகனேகோவிந்தா - 4

எந்தன் மகனேகோவிந்தா - 4

கோவிந்தனும் அவன் தந்தையும் பேசுவது போல் அமைக்கப்பட்ட  பாடல் வரிசையில் இது நான்காவது. இந்தப் பதிவில் , இன்றைய தமிழ் நாட்டின்  அரசியல் நிலைமையைப் பற்றி,  கோவிந்தனின் கேள்விகளுக்கு தந்தை பதில் அளிக்கிறார். மேலே படியுங்கள்.

அன்புடன்

ரமேஷ்

முந்தைய "கோவிந்தா" பதிவுகள்  படிக்க --

http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_15.html
http://kanithottam.blogspot.in/2016/10/2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3.html


எந்தன் மகனேகோவிந்தா-4

தந்தை  :

எந்தன்   மகனே    கோவிந்தா
           என்ன   கவலை   இன்றுனக்கு?
உந்தன்   அகண்ட    நெற்றியிலே
            சிந்தனைக்   கோடுகள்   காண்கின்றேன்.

கோவிந்தன் :

நாட்டு   நடப்பைப்   பற்றித்தான்
              நாளும்   கவலைப்   படுகின்றேன்
கேட்பேன்  கேள்விகள் அப்பாவே
              பதில்நீ   கூறணும்    இப்போவே
அ.தி    மு.க    ஆட்சியுமே
              கவிழப்   போகுது   என்கின்றார்
அதிகம்   ஓரிரு   மாதங்களே -   இதன்
              ஆயுசு   என்பது   சரிதானா?

தந்தை :

ஒட்டுப்   போட்ட   மக்களுக்கு
              பட்டு   வாடா   செய்தபணம்
மீட்க   இன்னும்   மாதம்பல
              ஆகும்   என்ற   காரணத்தால்
ஆட்சி   கவிழ   விடமாட்டார்
              ஆனால்   தமிழகம்   கவிழ்ந்து விடும்.

கோவிந்தன் :

கோடி   கோடியாய்   பணம்கொடுத்து
              குதிரைப்   பேரம்   செய்தசெய்தி
ஊடகங்களை    நிறைக்கிறதே -   அதைப்
              பார்க்கும்   மக்கள்   என்னசெய்வார்?
அடுத்த   தேர்தல்   வருகையிலே
              அநியா   யத்தை   செய்தவரை
அடித்து   விரட்டி   விடுவாரா?
               ஜனநா    யகத்தைக்    காப்பாரா?

தந்தை : 

கோடி    கோடியாய்   பணம்பெற்ற
            கூவத்   தூரின்   கும்பலையும்  
வாரிவாரி   அதை   வள்ளல்போல்
            வழங்கிய    கட்சித்   தலைமையையும்
நிச்சயம்   சும்மா   விடமாட்டார்
             நீதியைக்   கேட்டு   பொங்கிடுவார்!
"எம்எல்    ஏ-க்கு   கோடிகளா?
             எமக்குக்   கேவலம்   ஆயிரமோ ?
திருமங்    கலத்தில் தொடங்கியது
             அரவங்    குறிச்சியில்   அதிகரித்து
இராதா   கிருஷ்ணன்   நகரினிலே
             இரண்டு   மடங்காய்    உயர்ந்தாலும்
இன்று   எமக்குக்    கிடைத்தபணம்
             நாலே    நாலு    ஆயிரமே!
வரட்டும்   அடுத்த   தேர்தலுமே!
             வாங்குவோம்   வட்டியும்   முதலு"மென
உரத்து    உரைத்து   இருக்கின்றார்.
             பொறுத்து   இருந்து    நாம்பார்ப்போம்!


           
           
           
   

             






           


               

Jun 10, 2017

தசாவதாரம் - 3 - வராகஅவதாரம்

தசாவதாரம் - 3 - வராகஅவதாரம்

பல நாட்களுக்கு முன்னால் தசாவதார வெண்பாக்கள் எழுத ஆரம்பித்து முதல் இரண்டு அவதாரங்கள் பற்றிய பாடல்களை- ( மச்சாவதாரம், கூர்மாவதாரம்)- பதிப்பித்திருந்தேன். 
அப்போது நான் எழுதி இருந்த முன்னுரை இது  -

தாத்தாக்களுக்கு  ஏற்படும் ஒரு பெரிய சவால் பேரக் குழந்தைகளுக்குக்  கதை சொல்வது. கதை சொல்ல உட்காரும்போதுதான் "நமக்கு நன்றாகத் தெரியும்" என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த கதைகள் கூட முழுவதுமாக நினைவில் இல்லை என்ற ஞானோதயம் ஏற்படுகிறது. அது மட்டும் இல்லாமல், பேரன் பேத்திகள் குடைந்து, குடைந்து கெடுக்கிற கேள்விகள் வேறு ! இந்த சிக்கல்களிலிருந்து தப்பிக்கொள்ளத்தான் , நான் என்னுடைய தசாவதாரக் கதைகள் பற்றிய " ஞானத்தை" கொஞ்சம் புதிப்பித்துக்கொண்டேன் ( நன்றி - அமர் சித்ரா கதைகள் மற்றும் இணையங்களின் பதிப்புகள் ). இது வரை முழுதும் தெரியாது இருந்த சில விஷயங்களையும் தெரிந்துகொண்டேன். இது நான் பேரன் பேத்திகளுக்குச் கதை சொல்லப்போகும் நேரத்தில் உதவும். 

உங்களுக்கும் இவை கைகொடுக்கும் என்று நினைக்கிறன்.


தொடர்ந்து  இந்தப் பதிவில் வராக அவதாரம் குறித்த பாடலும் , அது குறித்த விளக்கம் ஆங்கிலத்திலும்.

அன்புடன் 
ரமேஷ் 

P.S: I get comments and reactions mostly to my email. If you post it in this blog others can also see and share your views. Many have told me that they are not clear about how to do it. The procedure for doing that is given below. Feel free to do it in English or Tamil.
Go to the blog
Below the poem/article you will find  a line which says No comment/ 1 comment etc..
Click on that , the box to enter the comment will appear
write yr comment
click "publish" below that





தசாவதாரம் - 3 - வராகஅவதாரம் 



மண்ணுலகை ஆழ்கடலில் ஆழ்த்திவைத்த ராட்சதனை
வெண்ணிப் பன்றியின் 
ரூபத்தில்   - கொன்றபின்
பூமியைத்தன் மூக்கிலே தாங்கியே மேற்கொணர்ந்த
*நேமியன்  வாரா கனே !  


(பல விகற்ப இன்னிசை வெண்பா )

*நேமியன் - உயர்ந்தவன்; நியமம் தவறாதவன்.  


In VARAHA Avatar, Lord Vishnu incarnates himself as a boar in this world. The background to this incarnation is this  :
A demon Hiranyaksha, had prayed for Lord Brahma and got awarded a boon that no beast nor man nor god could kill him. But somehow from the list of beasts the name of boar was missing. This proved to be his lacunae. He then started a campaign of plunder across the worlds. He pushed the world to the Pataal loka, or the under of the sea.
To  save the world the Lord Vishnu assumed the role of a boar, killed Hiranyaksha and brought out the earth from the under of the ocean, using its two tusks.

For the earlier posts on Dasaavathaaram , see the following links.

http://kanithottam.blogspot.in/2016/10/1.html
http://kanithottam.blogspot.in/2016/10/1.html