Search This Blog

Jun 29, 2021

இதழ் விரிக்கும் மலர் மொட்டு


இதழ் விரிக்கும் மலர் மொட்டு

என்னுடைய கல்லூரி நண்பர் வரதராஜன் அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையை  மொழி பெயர்த்து நான் எழுதியது இந்தக் கவிதை. 

மூலம் - சுபி கவிஞர் ஜலாலுதீன் ருமி.

படம்:  Getty Images யிலுருந்து , நன்றியுடன் 

அன்புடன் 

ரமேஷ் 


இதழ் விரிக்கும் மலர் மொட்டு 






கடவுள் படைத்த ரோஜா மொட்டை  

எடுத்துக் கையில் அன்புடன் அணைத்து 

தடவிக் கொடுத்து இதழைப் பிரிக்க 

முயன்றேன் ஆனால் முடிய வில்லையே!


மெதுவாய்ப் பதமாய் தொட்ட போதிலும் 

இதழ்கள்  கீழே உதிர்ந்து விழுந்தன!

மொட்டின் மலரிதழ் விரியச் செய்யும் 

மருமம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!


மொட்டின் இதழை விரிக்கும் செயலே 

என்னால் இங்கு இயலா திருக்கையில் , 

முன்னால் விரியுமென்  வாழ்க்கையின்  மருமம் 

ஆராய்ந் தறிதல் எங்கனம் இயலும்?


ஒட்டி இருந்த மொட்டின் இதழ்களின்  

கட்டை அவிழ்த்து மலரச் செய்தவன் 

வருகிற வாழ்க்கைத் தருண மனைத்தையும்  

பிரித்துப் பின்னே  மலரச் செய்வான் 


கண்முன் தெரியும் வாழ்க்கைப் பாதையின் 

மருமம் அனைத்தும் அறிந்தவன் அவனே!

நண்பனாய் அவனை நம்பி நடந்தால் 

நலனே என்றும் நடக்கும் என்றறிவோம்.






Jun 26, 2021

வெள்ளம்

There was a time when rivers were flowing under the bridges.
Now a days only the traffic flows over the bridge - the rivers under the bridges have dried!

 வெள்ளம்


அன்று                         

                                                     
ஆற்றில் வெள்ளம் பெருகிய நாளில் 
மறுகரை செல்ல பாலம் அமைத்தோம். 
 
இன்று                                                                                   


பாலத்தின் மேலே  மக்கள் வெள்ளம் 
கீழே பார்த்தால் ஆற்றைக் காணோம்!!


Jun 24, 2021

செய்திப் பரிமாற்றங்கள்

செய்திப் பரிமாற்றங்கள்

ஊரடைப்புத் தடைகளால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலையில் இடைவிடாமல் அவர்கள் செய்துகொள்ளும் குறுஞ்செய்திப்  பரிமாற்றம் ஒன் உதவுகிறது. என்றாலும் நேருக்கு நேராக அவள் விழியால் செய்யும் செய்திப் பரிமாற்றத்திற்கு அவை இணையாகுமா?





மின்காந்த அலைமூலம் தொலைபேசிச் செய்திகளை

அன்பார்ந்த காதலியே,  அன்றாடம் அனுப்புகிறாய் .

என்றாலும் அவையெல்லாம் நேர்நோக்கும் உன்காந்தக்

கண்பார்வைக் கில்லை இணை!

பின் குறிப்பு :

என்னுடைய நண்பர்கள் இருவர் - இராம. கி , என்.கிருஷ்ணமூர்த்தி - ஆகியோர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாறுதல்களைச் செய்திருக்கிறேன். ஆராய்ந்து கருத்துத் தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!


மின்காந்த வானலையில் உன்காதல் செய்திகளை

அன்பார்ந்த காதலியே, நாள்தோரும்  நீபகிர்வாய்

என்றாலும் நேர்நோக்கும் உன்காந்தக் கண்பார்வைக்

 குண்டோ யிணையிங்கே சொல்!

                                                                                        (பல விகற்ப இன்னிசை வெண்பா)

Jun 21, 2021

பறக்கும் சீக்கியன் - மில்கா சிங்

பறக்கும் சீக்கியன் மில்கா சிங்

1947 ம் ஆண்டு பாரதம் இரண்டாகப் பிளவுபட்டபோது நடந்த மதப் படுகொலைகளில் தன்  பெற்றோர்களையும், கூடப் பிறந்தோரையும் பலிகொடுத்தவர் மில்கா சிங். 

" நீயாவது ஒடித்த தப்பிவிடு, மில்கா" என்று கதறிய தந்தையின் குரலுக்கு கட்டுப்பட்டு, இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து தப்பி ஓடி  ஒரு  அகதியாக டெல்லி வந்தடைந்தார். பல தோல்விகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அவரது ஒட்டப்பந்தயத் திறமையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றார். 

ஆசிய மற்றும் (பிரிட்டிஷ்) குடியரசு நாடுகளுக்கான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்த அவர் , ரோம் நகரில் நடந்த 400 மீட்டர் பந்தயத்தில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.  

சென்ற வாரம் , ஜூன் 18ம் நாள்,கோவிட கொடுநோயின் தாக்கத்தால் உயிரிழந்தார் மில்கா சிங்க்.

இந்தியத்  தடகளத் தடத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை "ஒடு மில்கா ஓடு" (Bhaag, Milkaa, Bhaag) என்ற ஒரு திரைப்படமாக வடிக்கப்பட்டது. அனைவரும் பார்த்து பெருமிதம் அடைய வேண்டிய ஒரு படம். 

அவரை  வணங்கி எழுதிய ஒரு சிறு பாடல், இதோ!

அன்புடன் 

ரமேஷ் 
 






பறக்கும் சீக்கியன் மில்கா சிங் 

பாடுபட்டு தனைவளர்த்த பெற்றோரைப் பறிகொடுத்து 

கூடப் பிறந்தபல சோதரரைப் பலிகொடுத்து 

"ஓடு மில்கா ஓடு " வென்ற  தந்தைகுரல் செவிமெடுத்து

நாடுவிட்டு ஓடிவந்து நிலம்விட்டுப் புலம்பெயர்ந்து 

தடைபலவைத் தகர்த்தெறிந்து  பலதடகளப் போட்டிகளில் 

ஓடுவதே உயிர்மூச்சாய்க் கொண்டவனே! கொண்டையனே!


பஞ்சாப்பின் சிங்கமகன், பறக்கின்ற சீக்கியனே!

நெஞ்சை  நிமிர்த்தி  நம்நாட்டோர் நடக்குமுகம்  

பஞ்சாய்ப் பறந்தோடி பதக்கம்பல பெற்றவனே!

விஞ்சஉன்னை யாரும்இல்லை தடகளத்தின் தலைமகன் நீ! 

மஞ்சம்ஒன்று தேடிஅதில்  நீண்டநேரம்  நிம்மதியாய்

துஞ்ச இன்று சென்றாயோ , ஓடிக்களைத்த பின்னே ? 


ஓடிக் களைத்த பின்னே உறங்கச் சென்றாலும்

நீடித்து நிலைத்திருப்பாய் எம்மனதில் நீயென்றும்!



Jun 20, 2021

அப்பாக்கள் தினம்

அப்பாக்கள் தினம்

இன்று அப்பாக்கள் தினம் கொண்டாடப் படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் உதவியால் இன்று இது சற்றுப் பிரலபம் அடைந்திருந்தாலும்,  அம்மாக்கள் தினத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இதற்கு அளிக்கப்படுவதில்லை என்பதே பல அப்பாக்களின் குறை!

"ஒப்புக்குச் சப்பாணி, ஊறுகாய்க்கு மாங்கொட்டை" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது!

இது குறித்து ஒரு நான்கு வரிப் பாடல்!

அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்!

அன்புடன்

ரமேஷ்


தப்பாமல் தாயார் தினத்தை நினைப்போரும்

அப்பாவி அப்பாக்கள் நாளை  மறந்திடுவார்

முப்பொழுதும் மக்கட் கவர்செய்யும் தொண்டிற்கு 

எப்போ  கிடைக்கும்  ஒப்பு!



Jun 18, 2021

ஐயா! ஜாலி!!

ஐயா! ஜாலி!!

அரசு தற்போது அறிவித்து இருக்கும் ஊரடைப்பு விதித் தளர்வுகளால் நம் "குடிமக்கள்" உற்சாகத்தில் ஊறித் திளைக்கிறார்கள் - டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் !

கடைகளில் திருவிழாக் கூட்டம்! 

முகக் கவசம் போடலையா?
------அது எதுக்கு?
சாராய விலையை அதிகமாக்கி விட்டார்களே?  
------கவலையில்லை!
தடுப்பூசி போட்டாச்சா? 
------அதுக்கு யாரு பணம் கொடுப்பாங்க? ஒசியிலே கிடைச்சா சரி!

ஈச்வரோ ரக்ஷது ! ( இறைவன்தான் காக்கவேண்டும் !)

இது குறித்து சில வெண்பாக்கள்!

அன்புடன்

ரமேஷ்





பேஸ்மாஸ்க்கை எப்போதும் போடாமல் கூட்டமாய்

டாஸ்மாக் கடையிலே முந்துவார் ---- ஈஸ்வரனே

வந்துரைத் தாலும் திருந்தார் இவரைநாம் 

நொந்தென்ன காண்போம் பயன்?

                                                                                                                          (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

ஏராள மாகவே என்னவிலை சொன்னாலும் 

ஆராய்ச்சி சற்றுமே செய்யாம லேயுடன் 

தாராள மாய்ப்பணத்தை தாரைவார்த் தேதருவார்

சாராயச் சாருண்ப வர்!

                                                                                                       (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

எவ்விலை ஆயினும் வாங்கிக் குடிப்பார்

உயிர்குடிக்கும்  சாராயச் சாரை  - உயிர்காக்கும்

ஊசியைப் போடவே நூறுதடை சொல்லுவார்

ஓசியாய் வாராத தால்!

                                                                                                                            (பலவிகற்ப இன்னிசை வெண்பா)



Jun 15, 2021

கிண்டி பாம்புப் பண்ணை

கிண்டி பாம்புப் பண்ணை

சென்னையில் வசிப்பவர்களுக்கும், சென்னைக்கு வருபவர்களுக்கும் , அந்தக் காலத்தில் , பார்க்கவேண்டிய ஒரு சுற்றுலாத் தலமாக  இருந்தது கிண்டியில் இருக்கும் பாம்புப் பண்ணை.

பாம்புகளிடமிருந்து விஷத்தை எடுத்து, அவ்விஷத்தையே பாம்புக் கடிக்கு மாற்று மருந்தாக மாற்றும் பணியும் இங்கு நடைபெருகிறது.

இன்று , ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் வருவது முற்றும் தடைப்பட்டு , வருமானமின்றி , அங்குள்ள பாம்புகளுக்கு இரையளிக்கவும் முடியாத நிலையில் இருக்கிறது என்பது இன்றைய பத்திரிகைச் செய்தி.

நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டி, இதைப் பற்றிய ஒரு பாடலுடன் 

அன்பன் 

ரமேஷ்

Name of the Account : Chennai Snake Park Trust 
A/C.No. : 10792456546 
Name of the Bank : State Bank of India, SME Branch, Adyar


ஆலத்தை* யேமாற்றி ஔடதமாய்** ஆக்கிவிடும்      *ஆலம் = நஞ்சு**ஔடதம் = மருந்து 

ஜாலத்தை செய்கின்ற சர்ப்பச் சதுக்கத்தில் *                *சர்ப்ப சதுக்கம் = பாம்புப் பண்ணை 

பாலூட்ட பாம்பிற்கு காசில்லை ; இன்றதுதன்  

காலூன்றி நிற்கா நிலை.

                                                                                                                      (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)