காடு வரை பிள்ளை?*
இந்தக் கொரானா நாட்களில் ஒருவரும் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்ல முடிவதில்லை.
வெளி நாட்டு விமான சேவைகள் இன்னும் செயல்படத் தொடங்காத நிலையில், வெளி நாடுகளில் வசிக்கும் எவரும் இங்கு வர முடியாத நிலை.
எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் மகன்களும், மகள்களும் வெளிநாடுகளில் இருப்பதால் , வயதான பெற்றோர் தனித்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கொரானா நோய் தாக்கி இறந்தபோது, பெற்ற பிள்ளைகள் எவரும் வந்து ஈமச்சடங்களைக்கூட செய்ய முடியாமல் போனது பற்றிய பல துயரச் செய்திகளை நாளேடுகளில் சில மாதங்களுக்கு முன் படித்தேன்.
அதன் தாக்கத்தின் பயனாக (சில மாதங்களுக்கு முன்) எழுதப்பட்ட ஒரு கவிதை இது.
அன்புடன்
ரமேஷ்
காடு வரை பிள்ளை?*
"காடு வரை பிள்ளை" என்று
---------- கண்ண தாசன் சொன்னான்- ஆனால்
நாடு விட்டு நகரம் விட்டு
----------வீடு விட்டு உறவை விட்டு
தேடி வேலை** சென்ற பேர்கள்
----------மீண்டு வருதல் இயலா நிலையில்
பாடு பட்டு பாசம் கொட்டி
----------வளர்த்த பெற்றோர் இன்னுயிர் இன்று
கேடு விளைக்கும் கொடுநோய் தாக்கி
----------கூடு விட்டுப் பறந்த போதும்
வீடு திரும்ப வழியொன் றின்றி
----------வேறு இடத்தில் முடங்கிக் கிடக்க
காடு வரையில் கடைசிப் பயணம்
----------கூடச் செல்லல் எங்கன மியலும்?
* என்னுடைய ஒத்த வயதினருக்கு "வீடு வரை உறவு" என்று தொடங்கும் இந்தப் பாடல் நினைவிருக்கலாம். பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம் பெற்றது.
** "வேலை தேடி" என்று படித்தறிக.