Search This Blog

Apr 14, 2020

சார்வரி ஆண்டு வேண்டுதல்கள்



சார்வரி ஆண்டு வேண்டுதல்கள்

விகாரி  ஆண்டு முடிந்தது நேற்று
முகாரி ராகப்  பின்னணி யில்.
  
கொரானா நோயின்  கூரம்பு 
சரசர வெனநமைத் தாக்கையிலே 
கண்ணால் காண முடியாத  
கிருமியின் கோரத் தாண்டவத்தால்
எண்ணொ னாத்துயர் நிறைந்தெங்கும் 
கண்ணீர் வெள்ளம்  பெருகுகையில் 
வருகுது புதிய ஆண்டின்று 
சார்வரி  யெனும்  பெயருடனே !

வரவேற் புரையை  வாசிக்க  
வார்த்தைக ளெதுவும்  தோன்ற லையே!

சார்வரி என்னும் வார்த்தைக்கு 
வீறி யெழல்எனத் தமிழ்ப்பெயராம்.  
தீரா நோயை  ஒழித்திடவே 
வீறுகொண் டனைவரும் எழுந்திடவும் ,
சமூக விலகல் நிலைமாறி 
சுமூக நிலையும் திரும்பிடவும் 
நீர்நிலை நிரம்பிட மழைபொழிந்து 
ஏர்முனை இயக்கம் சிறந்திடவும் 
சீர்குலைந் திருக்கும் நிலைமாறி 
பொருளா தாரம் நிமிர்ந்திடவும்
கண்ணால் காணாக் கிருமியினால்- இன்று   
கற்கும்  பாடங்கள்   நிலைத்திடவும்  
கண்ணில் தெரியா இறைவனையே- நம்  
மனதில் இருத்தி வேண்டிடு வோம். 

அன்புடன் 
ரமேஷ் 
www.kanithottam.blogspot.com








விகாரி = எழில்மாறல்
சார்வரி = வீறியெழல்



Apr 12, 2020

கொரானாவுக்கும் கருணை உண்டோ? - கொரானா கவிதை - 10

கொரானாவுக்கும் கருணை உண்டோ? - கொரானா கவிதை - 10

உலகையே ஆட்டிப் படைக்கும் இந்த நோய் சிறுவரையும் , பெண்களையும் குறைவாகவே பாதிக்கிறது!
வயதானவர்களைத் தாக்கும்போதும், ஏற்கனவே நோய்வார்த்திருப்பவரையே அதிகமாக் குறி வைக்கிறது!

இது பற்றி ----

அன்புடன் 
ரமேஷ் 


கொலைகாரக் கரோனாவுக்கும் கருணைமுகம் ஒன்றுளதோ?

மழலைகளை சீக்கிரமே மீள விடுகிறது!
தாய்குலத்தைத் தாக்குவதில் தீவிரம் காட்டவில்லை!
நோய்பட்ட முதியோரை நமனுலகுக்  கனுப்புவதும் 
நீள்நாட்கள் படுகின்ற  நோய்த்துயரை நீக்கிடவோ?
இளைஞர்  நடுவயதோர் இவர்களையே தேர்ந்தெடுத்து 
சமபலத் தோருடனே சமர்செய்யும் செயலாலே 

கொலைகாரக் கரோனாவுக்கும் கருணைமுகம் ஒன்றுளதோ?





Apr 10, 2020

இனிமையான எழுபத்தி ஐந்து !

 இனிமையான எழுபத்தி ஐந்து !

என்னுடைய சம்பந்தி திரு.வெங்கடராமனின் 75-ஆவது பிறந்த நாளன்று எழுதிப்  படித்த வாழ்த்து மடல்.

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு : என்னுடைய கவிதைகளின் தொகுப்பின் முழுமை கருதி , இந்த பதிவை இந்தத்  தளத்தில் பதிக்கின்றேன். ஆனால் இதனை முகநூல், மின்னஞ்சல் இவைகளில்   பகிரவில்லை.

எழுபத்து ஐந்தை எட்டி இருக்கும் 
கெழுதகை நண்பர் வெங்கட்ராம்!
பழுதெதும் இல்லா உடல்நலத்தோடு 
பலநாள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் 

தொழில்நுட் பம்பல  செயல்முறை ஆக்கச்  
செய்யும் முயற்சிகள் சிறப்புறவே - நீ 
வழிபடும் தெய்வங்கள் துணையாய் நின்று 
வெற்றியை அளிக்க வேண்டுகிறேன்.

நிலத்தடிக்  கரியை கல்நெய்* ஆக்கும்    
வழிமுறை தேடி நீபுரியும் 
பலநாள்  முயற்சிகள் யாவுமிவ்வாண்டு 
பலனைத் தரவே இறை அருள்க.

சிகைநரைத் தாலும் நகை நரைக்காத 
முகத்தில் சேர்த்த முறுவலுடன் 
நகைச்சுவை உணர்வை நாளும் வளர்த்து 
நண்பர்க ளோடு பகிர்ந்திடுக.

தடைகளை உடைக்கும் திடமிகு மனதை 
விடைவா கனத்தான் அருளிடுக !
உடலுறை குறைகள் உடன்விடு படவே 
உமையொரு பாகன் உதவிடுக !

அன்புடன் 

ரமேஷ் , வர்தினி 


* கல்நெய் = diesel / petrol




Apr 8, 2020

மன அமைதி

மன அமைதி

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

கோவில் சென்றேன் கும்பிட்டு வந்தேன்
நாவால் மந்திரம் ஓதி முயன்றேன்
பாவால் பாடித் துதித்துப் பார்த்தேன்
பூவால் பூசைகள் செய்யவும் செய்தேன்
தாவித் தாவிக் குதித்தே ஓடும்
பாவி மனதெதிலும் நிலைப்பது இல்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

புத்தகம் பலவும் புரட்டிப் படித்தேன்
வித்தகர் பலரிடம் விளக்கம் கேட்டேன்
மெத்தனம் விட்டு காலையில் எழுந்து
சத்தம் சிறிதும் இல்லா வேளையில்
நித்தமும் தியானம் செய்ய முயன்றேன்
சித்தம் எதிலும் நிலைத்திட வில்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

கண்களை மூடிக் காட்சிகள் மறைத்தேன்
செவிகளை மூடி சத்தம் தவிர்த்தேன்
ஏறுதல் ஆறுதல் ஊறுதல் பழகி*
நாசியின் மூலம் ஸ்வாசம் செய்தேன்
வாயினை  மூடி வார்த்தைகள் விடுத்தேன்
ஆயினும் அமைதி அகப்பட வில்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

என்னையே  மூடி எதுவும் மனதில்
நில்லா திருக்கும் நிர்மல நிலையை
என்று அடைவேன் எப்போ(து) உய்வேன்?
அன்றே அடைவேன் பிறவிப் பயனை !

* ஏறுதல், ஆறுதல், ஊறுதல் = மூச்சை உள்ளிழுத்தல், தங்கவைத்தல், வெளிவிடுதல் 


 

Apr 4, 2020

கொரானா கவிதை - 9 - தினக்கூலி, வீட்டுவேலைத் தொழிலாளர்கள் குரல்

கொரானா கவிதை  - 9
தினக்கூலி, வீட்டுவேலைத்  தொழிலாளர்கள் குரல் 

இப்போதைய தனிப்படுத்தலால் எல்லோருக்கும் துயரம் என்றாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வீட்டுவேலை செய்வோர்  , தினக்கூலித் தொழிலாளர் ஆகியோரே!

கொரானா  இங்கு நுழைந்ததிற்கு இவர்கள் எந்த வகையிலும்  காரணமல்ல!
இவர்களுடைய கேள்வி   - இதற்கு காரணமான மற்றோரை நோக்கி!

இது பற்றி எனது கல்லூரித் தோழர் வரதராஜனது மகள் எழுதி, அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட ஆங்கிலக் கவிதையை மூலமாக வைத்து, நான் எழுதிய பாடல் .


அன்புடன்

ரமேஷ் 


மூச்சுக்கு ஒருமுறை எனையழைக்கும் உந்தன்
பேச்சுக்கு மறுபேச்சு இன்றிநான் உழைத்தேன் 
இரைதேடி அதிகாலை வெளிச்சென்ற பறவை 
இரவிலே இசைபாடி பின்திரும்பும் வரையில்  
உன்னோடு நிழலாக உன்பின் இருந்து 
சொன்னதைச் செய்து துரும்பாய்நான் தேய்ந்தபின் 

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென  பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!

திரைகடல் கடந்தாய் திரவியம் சேர்த்தாய் 
விரும்பிய வழியெலாம் வீண்செலவு செய்தாய்!
வரைமுறை ஏதின்றி வாழ்க்கையைக் கழித்தாய் 
திரும்பநீ வருகையில் கிருமிகள் கொணர்ந்தாய்!
மருத்துவ மனைசென்று சோதனைகள் செய்தே 
திருத்தங்கள் செய்துவுன்  வேதனை விடுத்தபின்  

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் ! 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!


சிறியதோர் குடிலிலே எங்கள் குடும்பம் 
வறுமையின்  பிடியிலே வாடுகிறோம்   நிதமும்  
என்னுடைய மக்கள்  என்றுமெனைச்  சுற்றி , 
என்னுடைய தாய்தந்தை என்கையைப் பற்றி.
நாள்தோறும் எங்களது வாழ்வேயோர் வேள்வி. 
நாளையென் செய்வோம் என்பதே கேள்வி. 

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!

மாகாணம் விட்டு மாகாணம் வந்து 
நீகாப்பாய் நன்றாய் என்றுன்னை நம்பி 
உனக்காக உழைக்கின்ற தினக்கூலி மக்கள் 
சோகாத்து இந்நாள்  வாடுதல் சரியோ?
ஏகாந்த மாகநீ உள்ளொளிந் திருக்க 
தேகாந்த நிலையவர்கள் அடைவதும் முறையோ?

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!













Apr 2, 2020

கொரானா கவிதை - 8

கொரானா கவிதை  - 8

இந்த வலுக்கட்டாய கொரானா தனிப்படுத்தலின் பொது ஒரு சிறிய லிமெரிக் - சுத்தத்தை வலியுறுத்தி!

அன்புடன் 

ரமேஷ் 

கை கழுவ  உதவு கின்ற  சோப்பு 
நமக் கின்று மிகப் பெரிய  காப்பு 

செஞ்சிடுவோம்   சுத்தம்
பலதடவை    நித்தம்

அடிச்சுடுவோம்  கொரானாக்கு ஆப்பு!

Apr 1, 2020

கொரானா கவிதை -7

எச்சரிக்கை!
கொரானா கவிதைகள் தொடர்கின்றன!
கொரானா அபாயம் தொடுறுமட்டும் , இந்தக் கவிதைகளும் தொடரும்!
கொரானாவே மேல் என்று தோன்றுகிறதோ?

அன்புடன் 
ரமேஷ் 



கொரானா கவிதை -7

போய்விடு போய்விடு என்று
-----பெருங்குரல் எடுத்து நாமே
கூவினால் மட்டும்   ஓடிப்
-----போகுமோ இக்கொடும் நோய்?
கோவிடு பத்தொன் போதை*           
-----காணாமல் போகச் செய்ய
நீவிடுக் காதே வீட்டை
-----விகாரி  முடியும் மட்டும் **.

*covid 19
** விகாரி வருடம்