Search This Blog

May 4, 2020

மீனாட்சி கல்யாணம்

மீனாட்சி கல்யாணம் 

இன்று மீனாட்சி கல்யாணத் திருநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டாடப்படும் நாள்.
இந்த நாளில் இது குறித்து , மின்னாட்சியின் அன்னையின் திருமணம் பற்றி முன்னர் எழுதி பதிவு செய்த திருவிளையாடல் புராணப் பாடல் பதிவுகளின் சுருக்கங்களை பதிவு செய்கிறேன்,
அனைவருக்கும் அன்னை அருள் உரித்தாகுக!
அன்புடன் 
ரமேஷ் 

பி.கு :
இது குறித்த முழுப் பதிவுகளையும் கீழ்கண்ட இணைப்புகளில் பார்க்கலாம் 

https://kanithottam.blogspot.com/2018/02/4.html
https://kanithottam.blogspot.com/2018/02/5.html
https://kanithottam.blogspot.com/2018/02/6.html
https://kanithottam.blogspot.com/2018/03/7.html





( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)


மீனாட்சி கல்யாணப் படலம்

மலயத் துவசன்மகள் மீனாட்சி அவன்பின்னே அரியணையில் ஏறி யமர்ந்து 
சிலகாலம் செல்லுமுன்  புவியாளும் பிறவரசை சமர்செய்து வென்ற பின்னர் 
கைலயத் தையும்வெல்ல விரைகையில்  ஈசனின் கண்பட்டு மார்பின் மூன்றாம் 
முலைமறைய மாகேசன் மீனாட்சி கரம்பிடுத்து மதுரையில் மணம்  புரிந் தான்   


பாடற்பொருள் 

மன்னன் மலையத்வஜனுக்குப் பின்பு , தடாதகை அரியணையில் அமர்ந்து   அனைத்து  மன்னர்களையும் போரில் வென்றாள் . ,பின்பு கைலையத்தையும் வெல்ல எண்ணிப்  படையுடன் சென்றாள் . அப்போது  , சிவபெருமான் வெளியில் வந்து புன்னகையுடன் அவளை நோக்கிய நேரத்தில், அவளது மூன்றாம் முலை மறைந்தது. அவரே தன மணாளன் என்று அறிந்து நாணத்தால் தலை குனிந்த தடாதகை என்னும் மீனாட்சியை, சிவபெருமான் மதுரையில் மணந்த நிகழ்வு,  மீனாட்சி திருமணப் படலத்தில்  கூறப்பட்டுள்ளது.

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 

முனிவரும் தேவர்களும்  அன்னை  மணக்கோலம்   கண்டு  களித்தபின்னர்   
இனிதாய் விருந்துண்ணும்  முன்னமே  கண்குளிர நாதனின்  நடம்காணவே    
விரும்பி வேண்டிடவே  வெள்ளியம் பலமீதில்     நந்திமத் தளமடிக்க 
திருமால் இடக்கையிட தேவரும்  பூச்சொரிய  பரமனும்  நடமாடினான்.

இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு சிறிய தோல் கருவி 

பாடற்பொருள் :

மீனாட்சி சிவபெருமானை மணந்த திருக்கோலத்தை கண்டு மகிழ்ந்த முனிவர்களும்  , தேவர்களும் , மணவிருந்துண்ணச் செல்லுமுன்பாக , சிவபெருமானின் நடனத்தைக் காண விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் , நந்தி தேவர் மத்தளம் இசைக்க , விஷ்ணு இடுகையை ஒலிக்க  வெள்ளியம்பலத்தில் திருநடனம் ஆடினார் . அச்சமயம் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

குண்டோதரானுக்கு  அன்னமிட்ட படலம்


விருந்தினர்   எல்லோரும்    விருந்துண்ட    பின்னரும்   பெருமளவு  மிகுந்த   படியால்
வருந்திடும்   மீனாட்சி   யினைநோக்கி   சிரித்துசிவன்   பெருத்ததன்   கணத்தை   அழைத்து
கருத்தகுண்   டோதரனின்   வயிற்றிலே   வடவைத்தீ   ஏற்றிப்பெறும் பசியைத்   தூண்ட 
இருக்கும்   உணவையெலாம்   கொஞ்சமும்   மிஞ்சாமலே    மொத்தமும்  தின்று   தீர்த்தான்
                                                               
                                                                                                    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடற்பொருள் :

வந்த விருந்தினர் அனைவரும் வயிறார உண்டு சென்றபின்னும், சமைக்கப்பட்ட உணவு வகைகள், பெருமளவில் மிகுந்துவிட்ட படியால்,   தடாதகைப் பிராட்டியார்  வருத்தமுற்றாள். இது கண்ட சிவபெருமான் தன கணங்களில் ஒருவனும், பெருத்த வயிறோடும் ,  கரிய நிறத்தோடும்  காணப்படுவனுமான குண்டோதரன் என்பானை வரவழைத்து , அவனது வயிற்றிலே பசியைப் பெருக்கும் வடவைத்தீயை ஏற்றி, அவனுக்கு உணவு படைக்குமாறு பணித்தார். பெரும் பசியால் பிணிக்கப்பட்ட குண்டோதரனும் அங்கு இருக்கும் எல்லா வகை உணவுகளையும் தின்று தீர்த்தான்.

அன்னக்குழியும் வையையை அழைத்த படலம்


வருத்தவை  வெந்தவை அனைத்தையும் விழுங்கியும் பசியுமே தீராததால்    
பெருத்தவோர்  குழியிலே தருவித்த தயிரன்னம் தனையுண்டு தீர்த்தபிறகு   
செரிக்கவே குடிக்கநீர் குறைந்ததால் துடிக்குமவன் தாகம்  அடங்கவேண்டி 
விரித்த சடையிலே  தரித்த கங்கையை வைகையாய் கொண்டுவந்தான்

                                                                                                   (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
                                                                                                                              
பாடற்பொருள் 

சமைக்கப்பட்டிருந்த அத்தனை உணவு வகைகளையும் , மீதி இல்லாமல்  அள்ளி உண்ட பின்னும் , குண்டோதரனின் பசி தீராததால் , சிவபெருமான் ஒரு பெரிய குழி ஒன்றை உண்டாக்கி அதைத்  தயிரன்னத்தால் நிரப்பினார். அதை உண்டு பசியடங்கிய குண்டோதரன் , உணவை ஜீரணம் செய்ய ,நீர்நிலைகளில் இருந்த அத்தனை நீரையும் பருகியபின்னும் ,  தாகம்  அடங்காது தவித்தான். அப்போது சிவபெருமான் ஆணையின் பேரில்  அவர்  தலையில் இருக்கும் கங்கை நதி வைகை நதியாக உருவெடுத்து அங்கு வந்தது. அந்த நீரைப் பருகி குண்டோதரன் தாகம் தணிந்தான்.











4 comments:

  1. நன்றி . நல்ல பாடல் & பாடற் பொருள்

    ReplyDelete
    Replies
    1. Thanks. I am not able place you as the comments are coming as from " unknown". Please share your name and other details. Regards.

      Delete
  2. குண்டோதரனின் தாகம் தணிந்ததால்தானோ வைகையில் கைவை என்ற அளவில் நீர ஓடுகின்றது தரித்த கங்கையை வைகையாய் கொண்டு வந்தான் என்றால் என்றென்றும் நீர் வைகையில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமே ரமேஷ்?முதல் பாடலில் மார்பின் மூன்றாம் முலை மறைய என்ற சொற்றொடர்களுக்கு பொருளை கைபேசியில் விளக்கினால் நன்றி.மிக அழகான தரமான மூன்று பாடல்கள் மீனாட்சி திருக்கல்யாணம் பற்றியது.

    ReplyDelete
    Replies
    1. Unable to reply in detail through phone as I do not know from whom these beautiful comments are coming! Please share your name and coordinates.

      Delete