மத நல்லிணக்கம்
25-12-2024
இன்று கிருஸ்துமஸ்!
பள்ளிகள், அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை.
கூட்டம் அலைமோதுகிறது-
இங்குள்ள
பிள்ளையார் கோவிலில்!
யார் எந்தக் கடவுளைத் தொழுதால் என்ன?
எல்லாமே ஒன்றுதானே!
மெர்ரி கிருஸ்துமஸ்!
அன்புடன்
ரமேஷ்
மத நல்லிணக்கம்
25-12-2024
இன்று கிருஸ்துமஸ்!
பள்ளிகள், அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை.
கூட்டம் அலைமோதுகிறது-
இங்குள்ள
பிள்ளையார் கோவிலில்!
யார் எந்தக் கடவுளைத் தொழுதால் என்ன?
எல்லாமே ஒன்றுதானே!
மெர்ரி கிருஸ்துமஸ்!
அன்புடன்
ரமேஷ்
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
சின்னச் சின்ன குறும்புகள் செய்து மகிழ்ந்ததை மறந்து விட்டேன்
வன்மம் நில்லா வெள்ளை மனதை வெளியே துறந்து விட்டேன்
துள்ளல் சிரிப்பை உள்ளக் களிப்பை என்றோ துறத்தி விட்டேன்
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் எங்கோ விரட்டி விட்டேன்
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
விழுந்து காயம் பட்ட இடத்தில் அப்பா முத்தம் இட்டால்
விலகிடும் வலிகள் என்று நம்பிய அப்பா வித்தன உறுதி !
புத்த கத்தில் பத்திர மாக பதுக்கி வைத்த மயிலிறகு
சத்தியமாக போடும் மறுநாள் குட்டி என்ற நம்பிக்கை!
இத்தகு உறுதியும் நம்பிக் கைகளும் இருந்த வெள்ளை மனதை
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
ஏமாற் றங்கள் ஏற்பட் டாலும் அதையே மனதில் நிறுத்தி
ஏமா ராமல்* உடனே அடுத்த அனுபவம் தேடும் குணங்கள்
சூழ்ச்சி களங்கம் குற்றம் இவைகள் எதுவும் இல்லா மனது
தாழ்த்துதல் உயர்த்துதல் காழ்ப்புகள் இனப்பிற குணமெதும் சேராப் பண்பு
வாழ்க்கையின் உயரிய இத்தகு முறைமைகள் நிறைந்து இருந்த மனதை
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
வண்ணப் பூச்சிகள் பறப்பதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்த காலம்
விண்ணில் மின்னும் விண்மீன்களை எண்ணி வியந்த நேரம்
நண்பர் களுடன் நேரம் தெரியாமல் பேசிக் கழித்த பருவம்
கொண்டாட் டங்கட்கு குறைவில் லாமல் குதித்துக் களித்த காலம்
இவைகளை நினைவில் நிறுத்திச் சிரித்துக் களித்த காலம் கடந்து
கவலைகள் மட்டும் ஏனோ மனதில் நிலைகொண் டிருக்குமிந் நேரம்
எல்லாம் இருந்த போதும் எதுவோ குறைந்ததைப் போல் தோன்றும்
எதுவும் புரியா தேனெனத் தெரியா நெஞ்சை நெருடிடும் பாரம்
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
முன்தினம் நடந்து முடிந்த ஒன்றை மனதில் இருத்தி வருந்தி
நாளையப் பொழுதின் நடப்புகள் நினைத்து கவலையில் மூழ்கிக் கழித்து
நாளின் றிதையே நன்றாய் கழிப்பதை நானே மறந்து விட்டேன்.
என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-
உன்னுள் இருக்கும் குழந்தையை நீயும் இழந்து விடாதே நண்பா!
என்னுள் எங்கோ புதைந்து கிடைக்கும் சின்னக் குழந்தை மனதை
இன்றே தேடி எடுத்து அதனை மீண்டும் மீட்டு வருவேன்
எங்கும் இன்பம் எதிலும் இன்பம் காணும் அந்த மனதை
தங்கல்** தவிர்த்து எந்தன் மனதில் இன்றே உயிர்க்க வைப்பேன்.
* ஏமாராமல் = மனம் கலங்காமல்
**தங்கல்=தாமதித்தல்
பிறவித் துறத்தல்
விண்ணும் மண்ணும் ஒன்றை யொன்று நின்று சேரும் கோட்டினை
என்றும் நாம் நடந்து சென்று அடைய முடிவ தில்லைபோல்
என்னுளே யேயுள்ள னென்று எவரும் கூறும் இறைவனை
'சின்ன தூரம்' ஆயினும் அடைய முடிவ தில்லையே!
கண்ணை மூடி காதை மூடி கால்மடக்கி அமர்ந்தபின்
எண்கணக்கில் எண்ணி மூச்சை இழுத்தடக்கி விடுகையில்
எண்ணம் பலவும் எந்தன் உள்ளே வந்து வந்து போவதால்
என்கணக்கில் இறைவன் ஏட்டில் புண்ணியங்கள் ஏறுமோ?
வந்து போன நாட்க ளில் செஞ்ச பாவ புண்ணியம்
இன்னும் மீதி நாட்களில் செய்யப் போகும் காரியம்
முந்தை யப்பல பிறவியில் முடிந்து வைத்த மிச்சமும்
இந்த யாவும் இணைந்ததே இப் பிறவியின் அப்புறம்
ஜன்ம ஜன்ம மாய்த் தொடர்ந்து இன்னும் வருமிப் பின்னலில்
இன்ப துன்பம் மீண்டும் மீண்டும் முடிவில் லாமல் வருவதை
நின்று போகச் செய்திடும் நல்வழி யொன் றுண்டெனின்
என்னுள் உள்ள இறைவனை யான் கண்டு கொண் டுணர்வதே
ஏட்டில் இந்த உண்மையை மீட்டும் மீட்டும்* படிக்கிறேன்
பாட்டில் இந்த உண்மையை எழுதி ஏட்டில் பதிக்கிறேன்
சேட்டை செய்யும் மனதி லிந்த உண்மை என்று ஒட்டுமோ
நாட்கள் பலவும் நீளுமுன் தேட்டம்** தீர்ந்து தெளியுமோ
*மீட்டும்=மீண்டும்
**தேட்டம் = தேடுதல்
அன்புடன்
ரமேஷ்
இன்று சூரசம்ஹாரம்!
இந்த தினத்தன்று முருகனை "எண்ணி" , இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதி பதித்த இப் பாடலை, மீண்டும் பதிக்கிறேன்,
அன்புடன்
ரமேஷ்.
முருகனை "எண்ணு"வோம்.!
ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே வானையை #1*2
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்
ஈரிரண்டு# நால்வேதத் துட்பொருளை உணர்ந்தபின் #2*2
பிரணவத்தை ஈசர்க்கு போதித்தவன்
மூவிரண்^ டாறான முறுவல் முகங்களுடன் ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^ எண்திக்கும் அரக்கரை அழித்திடவே ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும் ^5*2
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^ பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
ஏழிரண்டு^ பதினான்கு இரவுகள் வளர்ந்திட்ட ^ 7*2
முழுமதியைப் பழித்திடும் வதனத்தினன்.
எட்டிரண்டு^ பதினாறு செல்வமும் சிறப்புடன் ^ 8*2
கிட்டிடும் குமரனைத் துதிப்பவர்க்கே.
.
சித்தர்க ளீரொன்ப தில்^மூத்த அகத்தியர்க்கு ^ 9*2
சத்தான முத்தமிழைப் போதித்தவன்.
எண்கணக்கி லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி
பண்புனைந் துன்புகழ் பாடினேனே!
என்கணக்கு இப்பிறவி. யில்முடியு முன்னமே
எனையாண்டு அருள்புரிவாய் குமரவேளே!
வலிகள்
சில நாட்களாக சயேடிகா (scicatica) என்னும் நரம்பு வலியால் பாதிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் இருக்கும் போது எழுதிய பாடல்! வலிகள் அளித்த ஒரு வெகுமதி!
அன்புடன்
ரமேஷ்
வலிகள்
இரவின் மடியில் இருளின் பிடியில்
இரண்டாய் பெருகும் உடல் வலிகள்
முதுகில் தொடங்கி முட்டியின் வழியே
கணுக்கால் அடையும் வலித் துளிகள்
நிலத்தின் மேலே பலமாய்க் காலை
ஊன்றி நடக்க விடா வலிகள்
பலவகை மருந்துகள் தினமும் விழுங்கியும்
விலகா திருக்கும் கால் வலிகள்
நரகம் இன்று இங்கு வந்ததென
நம்ப வைத்திடும் நீள் வலிகள்
வலிகள் பலநாள் அகலா ததனால்
அதையே விதையாய் விதைத் ததனின்
விளைவாய் மனதில் முளைத்த கருத்தை
எழுத்தாய் எழுதிய இக் கவிதை
ஒலிமொழி வழியே உனைவந் தடையுமுன்
வலிகள் எனைவிட் டோடிடுமோ? - இ(ல்)லை
இன்னும் பலநாள் தொடர்ந்தே எந்தன்
வாழ்க்கையின் நிறத்தை மாற்றிடுமோ?
Deepavali greetings to all !
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
அன்புடன்
ரமேஷ்
தீபாவளித் திருநாள்
கிருட்டிணன் தன்மனைவி பாமையுடனே+ + sathyabhama
நரகனுடன் போரிட்டுக் கொன்ற நாளோ?@
இரகுராமன் ராவணனை வதைத்த பின்னே
திரும்பவும் அயோத்தி நகர் மீண்ட நாளோ?#
துலக்கி நம் வீடுகளை தூய்மை செய்தே
இலக்குமியை வீட்டுக்கு அழைக்கும் நாளோ?^
மார்வாரி மக்கட்கோர் ஆண்டு முடிந்து
மாறியோர் புத்தாண்டு தொடங்கும் நாளோ?*
அரசன் ஜஹாங்கீரின் சிறையிலிருந்து
குருகோ விந்தர்விடு பட்ட நாளோ?$
இருபத்தி நான்காம் தீர்த்தங் கரர்
நிருவாணம் அடைந்துயிர் துறந்த நாளோ?%
வாமனன் மாபலியை வென்ற நாளோ?^^
யமனை அவன் தங்கையும் வாழ்த்தும் நாளோ?**
எவருக்கு எதுவா யிந்நாள் இருப்பினும்
தவறாமல் தீபங்கள் ஏற்றித் தொழினும் + +(தொழுதாலும்)
தமசெ+ன்னும் அறியாமை இருளை விலக்கி + tamas
நமதுமனத் துள்ளுமொளி விளக்கேறும் நாள் ***
உண்மையாய் தீவளித் திருநாள் அன்றோ?
அன்னாளும் இன்றுவர இறை அருள்கவே!
@- for most south
Indians
#- for most North
Indians
$ - for Sikhs- Bandhi
Chhorh Diwas
%- For Jains
^- for many in
North and west
*- for Rajasthanis and
many in west
^^ Kerala
**- Bhav Bheej
***- Tamaso maa
jyothir gamaya
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
நீத்தார் நினைவு
இன்று மாளய அமாவாசை. எல்லா அமாவாசை நாட்களும் நீத்தார் நினைவு நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மாளயம் என்று அழைக்கப்படும் பதினைந்து நாட்களும் , நம் முன்னோரை நினைத்தும், வழிபட்டும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளோடு முடிவடையும் இந்த மாளயத்தில் ஒரு பாடல் மூலம் நம் முன்னோர்களை வணங்கும் விதமாக ஒரு வெண்பா --இதனுடன் சென்ற ஆண்டுகளில் நான் எழுதிப் பதித்த இரு சிறு பாடல்களையும் இணைத்து!
அன்புடன்
ரமேஷ்
ஈன்றதாய் தந்தையொடு முன்பிருந்த மூத்தாரின்
மூன்று தலைமுறையைப் பேரிட்டு - நோன்பிருந்து
எள்நீரை மட்டும் இறைத்துத் துதிக்காமல்
உள்ளத்தில் ஏற்றிவைப் போம் !
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்
மாளயத் தன்றுநம் முன்னோரைக் கும்பிட்டு
எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே
சாலச் சிறந்த செயல்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின்
தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்;
நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில்
தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !
(கலிவிருத்தம்)