Search This Blog

Aug 19, 2022

ஜன்மாஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பின் உட்பொருளும் அது தரும் சேதியும்

 ஜன்மாஷ்டமி - கிருஷ்ணன் பிறப்பின் உட்பொருளும் அது தரும் சேதியும்





கிருஷ்ணன் பிறந்தவுடன் , நந்தகோபன் அடைக்கப்பட்டு இருந்த சிறைக்  கதவு  தானாகத்  திறந்தது ! அவரைப்  பிணைத்து இருந்த தளைகள் அறுந்தன !

அது போல, மனதில் ஞானம் பிறக்கும்போது , மனிதரைப்  பிணைத்திருக்கும் துர்க்குணங்கள் உடையும்  !  வேற்றுமைகளை ஒழித்து மனக் கதவுகள் திறக்கும் .
இதுவே ஜன்மாஷ்டமி நிகழ்வின் உட்கருத்தோ ?

அன்புடன்

ரமேஷ்



நிசிநேர  நள்ளிரவில் பூட்டிவைத்த பாழ்சிறையில் 
நீபிறந்த நேரத்தில் சிறைக்கதவும் தாள் திறக்க 
வசுதேவன் காலிருந்த விலங்குகளும் விலகிடவே 
சிசுவுன்னைத் தோள்சுமந்து செல்கையிலே யமுனையுமே
வகிடெடுத்து வழிவிடுக்க வல்லரவும் குடைபிடிக்க
விசுவாதி தேவர்களும் வணங்கியுனை வாழ்த்துரைக்க
பசுமேய்ந்து பால்சுரக்கும் கோகுலத்தை சென்றடைந்து 
யசுஓதை ஈன்றெடுத்த மகனாக வளர்ந்திட்டாய். 

அதுபோல  

மாசுற்ற வாசனைகள் மிகப்படிந்த மனச்சிறையில் 
இருள்விலகி ஞானஒளி பிறக்கின்ற நேரத்தில் 
பாசம் அகங்காரம் ஆணவங்கள் தன்முனைப்பு 
போன்ற விலங்கெல்லாம்  தெறித்துடைந்து   போய்விடுமே!
தேசங்கள் மதமினங்கள் தோல்நிறங்கள் என்றணிந்த 
வேஷங்கள் விட்டொழித்து மனக்கதவும் திறந்திடுமே!
நிசமான இஞ்ஞானம் உடைத்தாயின் எல்லோர்க்கும் 
வசமாகும் வைகுண்டம்கண்ணனவன் அருளாலே!

Jul 31, 2022

ஈ.எம்.எஸ் கூடலில் படித்த பாடல் பாடல்

1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் நாள் நானும் என்னுடன் சேர்த்து முப்பத்துயோர் இளைஞர்களும் ஸ்பிக் நிறுவனத்தில்  ஈ.எம்.எஸ் பயிற்சிபெற இணைந்தோம். நேற்று அந்நாளின் 50 ஆம் நிறைவை நண்பர்கள் சிலர் கூடிக் கொண்டாடினோம். அந்த வெள்ளிவிழா கூடலுக்காக நான் இயற்றிப் படித்த பாடல் இது.

அன்புடன்

ரமேஷ்.

பொறியியற் பாடங்கள் படித்துத்  தேர்வுற்று-----பட்டங்கள் பெறுவ தொன்றே

குறியாக பலவாண்டு  குறைவின்றி உழைத்தபின்-

-----பெற்றிட்டபட்டம் கையில் !

பெரிதாக சாதனைகள் புரியவே வேண்டிடும்
----கனவுகள் கோடி மனதில்!
புரியாத புதுஉலகில்  இவ்விரண்டின் துணையோடு
-----உறுதியுடன்  கால் பதித்தோம்!

முத்துநகர்ப் புறத்திலே முத்தைய புரத்திலே
-----முத்தெடுக்கக் கடலில் மூழ்கி  
முப்பத்தி  யோர்மணிகள்  கொத்தாகக் கண்டெடுத்து 
-----ஸ்பிக்நிறு வனத்தில் இணைத்தார்.
முப்பத்தோர் இளைஞர்கள் மேலாண்மை பயிற்சிக்கு
------எழுபத்தி ரண்டில் இணைந்தோம்.
தற்போது பதினேழு நண்பரதில் மட்டுமே 
------இவ்வரங்கில்  கூடுகின் றோம் 

இடைப்பட்ட ஆண்டுகளில் தாய்நிறு வனத்திலே 
-----தடையின்றி இருந்தார் சிலர் 
விடைபெற்று வேறுபல பாதைகள் தேர்ந்தெடுத்து 
-----பயணம் புரிந்தார் பலர்.
நாடென்னும் எல்லைகள் நமக்கில்லை எனச்சொல்லி
-----கடலைக் கடந்தார் சிலர்!
வீடென்றும் உறவென்றும் பலதளைகள் பிணைத்ததால்
-----இங்கே இருந்தார் பலர்!

ஒருபத்து ஆண்டுகளே நம்தாய் நிறுவனத்தில் 
-----பணிசெய்து நான் விலகினேன் - ஆயின் 
பெருமையாய் நானுணர்ந் தென்மனத்தில் பதிந்தவை 
-----யச் சத்தான பத்தாண்டுகள்.
இன்று நினைத்தாலும் இனியபல நினைவுகள் 
-----நெஞ்சிலே  நிழலாடுதே
ஒன்றா இரண்டா இல்லையிவை பலநூறு 
-----எங்கனம் எடுத்துரைப் பேன்?

ஆச்சாரியா பங்ளாவில்   அதன்இணைந்த   கட்டடத்தில்   
-----மில்லர்புற வீட்டறைகளில்    
நேசமிகு  நண்பருடன் வாசம் புரிந்தன்று 
------வாழ்ந்திட்ட கதை சொல்லவா?

நிறுத்தியுள்ள பேருந்து மேலேறி உட்கார்ந்து 
------முன்னிரவுப் பொழுது முழுதும் 
நொருக்குத் தீனியுடன் கல்யாணி துணையோடு 
------மகிழ்ந்திருந்த கதை சொல்லவா?

பிகேகே ராமகிருஷ்ணன் பத்மநா பன்முதலோர்   
-----படிப்பித்த கதை சொல்லவா?
சர்க்காரின் ஆங்கிலப் பிரயோ கங்கள் புரியாமல் 
-----முழித்திட்ட கதை சொல்லவா?

எர்ணா குளத்திலே  விடுதலை விடுதியில் 
-----தங்கி எடுத்த டிரைனிங் 
மதுரா பாரிலும் மேனகா தியேட்டரிலும் 
-----தொடர்ந்த கதை சொல்லவா?

பன்னிரண்டு மாதங்கள் முடிவுற்ற பின்னாலே 
-----வேலையுறு திப்படு கையில் 
தன்னிச்சையாகவே சம்பளம் குறைத்ததால் 
-----வருந்திய கதை சொல்லவா?

நேரத்தை  நோக்காமல் நாட்கிழமை பாராமல்  
-----கருமம்  கண்ணாக  உழைத்து 
உருப்பெற்ற உரச்சாலை கண்டதும் மெய்மறந்து 
------மகிழ்வுற்ற கதை சொல்லவா?

ஓடிப்போய்  மாலை மணிஏழின் முன்னாடி  
-----ஆஃபீசர்கிளப் பஸ்சைப்  பிடித்து 
மேடை வரிப்பந்து பூப்பந்து ஆட்டங்கள் 
-----ஆடிய கதை சொல்லவா? 

திறந்தவெளி திரையரங்கில் கால்நீட்டி படுத்தபடி  
-----படம்பார்த்த கதை சொல்லவா?
கௌரிசங்கர் ஓட்டலில் கட்டிவைத்த பொட்டலத்தை   
-----கோட்டைவிட் டதைச் சொல்லவா? 

காலை எழுந்தவுடன்   ஆலையின் ப்ரில்டவரை 
----- அன்றாடம் தரிசனம் செய்து 
புகையும் டவர் பார்த்தபின்  யாவும்  நலமென்று 
------ உணர்ந்த கதை சொல்லவா?

ஆர்ஜீ பாயிலர் யூரியா ரியேக்டர் 
-----சீஓடூ  கம்ப்ரசர் களில் 
ஆர்வம் குறையாமல் ராப்பகல்கள் பார்க்காமல் 
-----உழைத்த கதை சொல்லவா? 

சுற்றுலா செல்லுகையில் சுராங்கனி பாட்டும் பிற 
-----பைலாக்கள் பாடி மகிழ்ந்து 
குற்றால அருவியில் கும்மாளங்கள் போட்டு 
-----குளித்த கதை சொல்லவா?

ஈஎம்எஸ் சொற்றொடரில் மேலாண்மை என்பதை 
-----மருத்துவம் என மாற்றியே 
நாம்போட்ட நாடகம் இன்றும் நம் நினைவிலே 
-----நிற்கின்ற கதை சொல்லவா?

கார்பமேட் கரைசல் என்கண்ணில் விழுந்ததால் 
-----பார்வை பழுதுற்ற போதில் 
சார்ந்த என்நண்பர்கள் செய்திட்ட உதவியால் 
-----சரியான கதை சொல்வதா?

ராதா ராம்சுப்பு காதல் நிறைவேற்ற 
-----தூதுசென் றதைச் சொல்வதா?
வாதாடிப் பின்னாலே உதைவாங்கும் முன்னாலே 
-----ஓடியதைச் சொல்வதா?

வற்றாத நினைவுகளும் வாடாத நிகழ்வுகளும் 
------சுற்றியெனைச்  சூழ்ந்து வருதே!
பட்டியலில் அடங்காது விட்டகுறை தொட்டகுறை 
-----யாகவே  தொடர் கின்றதே!


முப்பதை நுப்போதென் றெப்போது மேசொல்லும்  
-----குழந்தையை  யொத்த   ஒருவன்   
எப்போதும் கடைசியாய் பேருந்திலே ஓடி 
-----வந்தேறும் வேறு ஒருவன்   
 
உரத்தகுரல் என்றுமே எழுப்பிப் பேசாத  
----- அமைதி  உருவம்  ஒருவன்  
மறக்காமல் இன்னாளில்   அம்மூவர்  நினைவுக்கும்  
------சிறப்புடன் அஞ்சலி செய்வோம்.


எப்பாதை எடுத்தாலும் எவ்வழியில் சென்றாலும்
-----அவ்வழியின்  நெறிமுறை யிலே
தப்பாது ஒருசிறிதும் தவறேதும் புரியாது
-----கடமைகள் ஆற்றி முடித்தோம்!

தகவுள்ள மகன்மகளை பெற்றெடுத்து அவரீன்ற
-----பெயரன் பெயர்த்தி களுடன்
அகங்குளிர  மிகநேரம் மீண்டும்சிறு பிள்ளைபோல்
-----ஆடியே மகிழுகின் றோம்!

ஆண்டுகள் ஐம்பது ஓடியே முடிந்துநாம்
-----கூடுமின் நன்னா ளினில்
மீண்டும்நம் காளைப் பருவ நிகழ்வுகளை
-----பகிர்ந்து பேசி நெகிழ்வோம்!

இப்போது இன்னேரம்  நிறைந்தநல்  மனதோடு
-----நண்பரொடு  கூடுகின் றோம் !
எப்போதும் இந்நினைவு நமைவிட்டு  அகலாமல்
-----மனக்கூட்டில் பூட்டி வைப்போம்!

May 27, 2022

பிரதோஷப் பாடல் - 46

பிரதோஷப் பாடல் - 46

இன்றைய  பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வணங்கி ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ்  




ஓடிஓடி பாடுபட்டு  பொன்பொருளைச்  சேர்த்தபின் 

தேடித்தேடி தேடித்தேடி  இன்பமுழுதும்  துய்த்தபின்

ஆடிஆடி  ஆட்டமாடி வாழ்வைவீ ணடித்தபின்  

கூடுவிட்டு சீவன்போகும்   வேளைநாளை வருகையில் 

நிம்மதியைத் தேடுகின்ற கேடுகெட்ட மாந்தரே 

தும்பைவிட்டு வாலினைப் பிடிக்கஓடல்  என்கொலோ?

அம்புலியைச்  சிரத்திலேந்தும் அர்த்தநாரி  ஈசனை   

நம்பிநாளும் காலைமாலை  நயந்துவேண்டிக் கும்பிடின்

இம்மைமறுமை முன்மைஎன்னும் முப்பிறவியின்   வினையெலாம் 

நம்மைவிட்டு நீங்கிடும்  நண்மைவந்து சேருமே! 

 

 

May 21, 2022

ஜெர்லின் அனீகாவின் சாதனைகள்

ஜெர்லின் அனீகாவின் சாதனைகள்  

பிரேசில் நாட்டில் அண்மையில் நடைபெற்ற " செவிப்புலனிழந்தோருக்கான ஒலிம்பிக் போட்டி" யில் (deafolympics), மதுரையைச் சேர்ந்த 18 வயது ஜெர்லின் அனீகா என்ற சிறுமி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றாள்! இந்தச் சாதனை பெரிதாக செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் போற்றப்படவில்லை . இது குறித்து வருத்தத்துடன் ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ் 



கேட்கும்திற னிழந்தோரின்  சிறகுப்பந் தாட்டத்தின் *   

போட்டியிலே பங்கேற்று  பதக்கங்கள் பலவென்று 

நாட்டுக்குப் பெருமையினைச் சேர்த்திட்ட நங்கைபற்றி 

ஏடுகளும் எழுதவில்லை ஊடகங்கள் உரைக்கவில்லை 


செவிப்புலன்கள் சிதைபட்ட சிறுமியிவள் சாதனைகள் 

செவிகளிலே  விழவிலையோ ? செவிடாகிப் போனோமோ ?

மவுனமினும் காட்டாமல் மாற்றுத்திற னாளிகளின் 

பவிசு**க்கோர் ஒளிவட்டம் போட்டேநாம் காட்டிடுவோம்!


* சிறகுப்பந்தாட்டம் = shuttle

** பவிசு = சிறப்பு, பெருமை 

May 13, 2022

வழக்கு

வழக்கு 

நேற்றைய செய்தித் தாளில் இடம் பெற்ற செய்தி  இது!


வழக்கின் முடிவு என்ன ஆகும் ? பொறுத்திருந்து பார்ப்போம்! இது பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 


பேரக் குழந்தையை பெற்றுத் தருவதற்கு

நேரக் கெடுவைக் கொடுத்தே - கிழவிதன்

பிள்ளைமேல் மன்றத்தில்  போட்டாள்  வழக்கொன்றை 

"இல்லையேல் ஐங்கோடி தா."



May 8, 2022

தாய்மைத் திருநாள்-அன்னையர் தினம்

தாய்மைத் திருநாள்- அன்னையர் தினம் 

இன்று அன்னையர் தினம்.

முற்றும் துறந்த முனிவர் எனினும் தாய்ப்பாசத்தை துறக்க முடியாது.

ஆதிசங்கரர் தன் தாயைப் போற்றிப் பாடிய பாடல் தொகுப்பின் முதலாவது பாடலை மொழிபெயர்த்து  இந்த தாய்மைத்  திருநாளன்று பதித்து மகிழ்கிறேன்!

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .

அன்புடன் 

ரமேஷ் 





1st sloka of the Matru Panchagam by the Great Sage AdiShankara

आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा

नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी।

एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः

दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥ 

Meaning In English

The unbearable pain endured by the mother at the time of  my delivery, the lack-lustre feeling and the emaciation of the body during pregnancy, the year long sharing of the bed dirtied by my faeces and urine  when I was a baby,   O’ Mother, none of these sufferings borne by you because of my birth can be compensated by me in the least, however great I may be.  My Namaskaram to you O ‘ Mother!

இனி என் பாடல் 

பெறுகையில் எனைநீ பெரும்பா டுற்றாய்

கருவைச் சுமக்கையில்   களைத்தாய் இளைத்தாய் 

சிறுகுழ வியாய்நான் இருக்கையில் எந்தன் 

சிறுநீர் நனைத்த படுக்கையில் படுத்தாய்  

பெரிதாய் வளர்ந்துநான்   பெரும்புகழ் பெறினும் 

சிறிதும் என்னால் நீயுற்ற துயரை 

சரியீ டுசெயல் அரிதினும் அரிதே !


வாழ்க்கை வெற்றியின் அளவுகோல்

 வாழ்க்கை வெற்றியின் அளவுகோல்


உங்கள் வாழ்வின் வெற்றியின் அளவை
நீங்கள் அறிவது எங்கனம் ?

"வங்கிக் கணக்கில் தங்கம் வெள்ளி
செல்வம் உள்ளது எத்தனை?"

என்பதை விடஇவ் வாழ்வின் மாலையில்
வேறோர் அளவுகோல்அவசியம்.

உங்களின் மீதுஅன்பு செலுத்த
நீங்கள் விரும்பும் பெயர்களில்

எத்தனை பேர்கள்  உங்கள்  மீது
உண்மை அன்பை உடையவர்?

பங்கிதை போட்டுப்  பார்த்தால் உணர்வோம்
வாழ்க்கை வெற்றியின் அளவினை.


அன்புடன் 

ரமேஷ் (கனித்தோட்டம்)