Search This Blog

Apr 14, 2019

விகாரிப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


விகாரிப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

விகாரி என்னும் புத்தாண்டின் 
-----யுகாதி* நாளின்று பிறக்கையிலே 
விகாரம் விலக்கிய சமுதாய 
-----சகாப்தம் தொடங்கிட வாழ்த்துக்கள் 

மிகாத அளவில் மழை பெய்து 
-----நதிகள் நிரம்பிட வாழ்த்துக்கள் 
தகாத செயல்கள் செய்தவர்கள் 
-----திகாரில் அடைபட வேண்டுதல்கள் 

சகோத ரத்துவம் பெருகிடவும் 
-----சமதர் மங்கள் நிலைத்திடவும் 
மகோன்னத மகிமை நம்நாடு 
------அடைந்து முன்னே சென்றிடவும்  

இவ்வாண் டனைத்தும்  இனிதாகி 
-----செய்காரியங்கள் சிறந்திடவும்
வெவ்வினை விட்டே அகன்றிடவும் 
-----செவ்வேள் சண்முகன் அருள்புரிக.

* யுகாதி = யுக+ஆதி =ஆண்டின் (யுகத்தின்) முதலாவது 

அன்புடன் 
ரமேஷ் 
www.kanithottam.blogspot.com

Apr 11, 2019

திருவிளையாடல் பாடல் - 12

திருவிளையாடல் பாடல் - 12

நீண்ட நாட்களுக்குப்  பிறகு மீண்டும் திருவிளையாடல் புராணத்தைத் தொடருகிறேன் .
படித்து மகிழ்ந்து , கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 

உக்கிர பாண்டியருக்கு வேல், வளை , செண்டு கொடுத்த படலம் 









மணப்பருவ மடைந்திட்ட  மகனுக்ர வர்மர்க்கு  மனவூரின் மன்னன் பெற்ற
குணவதியாம் கன்னி மகள் காந்திமதி என்பாளை கடிமணம் கட்டிவைத்து 
செண்டோடு எரிவளையு மதன்கூட கூர்வேலும் கொடுத்தரி யணையி லமர்த்தி 
விண்ணூர்தி மேலேறி உமையன்னை யுடன் சேர்ந்து கைலாசம் சென்றடைந் தார் 

பாடற்பொருள்

சுந்தரபாண்டியராக பாண்டியநாட்டை ஆண்டு வந்த சிவபெருமான் , தன் மகனான முருகக் கடவுளின் அவதாரமாகிய உக்கிரவர்மனுக்கு ,மனவூரின் மன்னன் மகளான காந்திமதியை மனம் புரிவித்து அவனை மகுடம் சூட்டி மன்னனாக்கினார். அவ்வேளையில் உக்கிரவர்மனுக்கு , வளை , வேல் , செண்டு ஆகிய ஆயுதங்களை  அளித்து அருள் புரிந்து தடாகைப் பிராட்டியோருடு தேவலோக விமானமேறி கைலாயம் அடைந்தார். 

The story in Tamil

பன்னெடுங்காலம் ஆட்சி செய்து வந்தபின், சுந்தரபாண்டியரான சிவபெருமான், தன் துணைவி தடாதகைப் பிராட்டியாரோடு கைலாசம் செல்ல விழைந்தார். அதற்கு முன் , தன மகனும், முருகப் பெருமானின் அவதாரமுமான தன மகன் உக்கிரவர்மனுக்கு மணமுடித்து , பின் முடிசூட்டிட விழைந்தார். மதுரையின் வடக்கே உள்ள மணவூரை ஆட்சி புரிந்து வந்த சோமசேகரன் என்னும் சூரிய குலா அரசனின் மகளான காந்திமதி என்பாளை தேர்ந்தெடுத்தார். குலவதியும் , திருமகளை ஒத்த  அழகுடையாளுமான காந்திமதியை உக்கிரசேனர் மங்கலநாண் பூட்டி மணமுடித்தார்.
அதன் பின் ஓர்நாள் , சுந்தரபாண்டியர், தன மகனை அழைத்து,   இந்திரன் , கடலரசுன் , மேரு ஆகியோரை  வெல்ல வல்ல வளை , வேல், செண்டு ஆகிய மூன்று ஆயுதங்களையும் அளித்து அருளினார். பின் உக்கிரவர்மனுக்கு மகுடம் சூட்டி அரியணையில் அமர்த்தி, தன துணையோடு கைலாசம் சென்றடைந்தார்.

The story in English

Lord Siva, who ruled the Pandiya Kingdom , as King Sundarapandian, for a long , long, time, desired to  hand over the reins of the kingdom to his son , Ukravarman,( who himself was a avthar of Lord Muruga) after getting him married. The search for a suitable bride followed and Kanthimathi, the daughter of Somasekaran, ruler of Manavoor, situated on the north of Madurai was chosen. Soon after the marriage celebrations, King Sundarapandian called his son , crowned him the as the Pandya King and gave him three armaments - a boomerang, a spear and a whip- which were to be used by him in the battles with Indra , Varuna and the Mount Meru. After completing his task, He ascended to Kailasam with his consort.  

ஒப்புகை  :  இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படம் shaivam.org தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 












Apr 10, 2019

நிலவும் என் பேத்தியும் -1

நிலவும் என் பேத்தியும் -1

தொடரும் என் பேத்திகள் புராணத்தில் இன்று ஒரு வெண்பா பாடல் !

அன்புடன் 

ரமேஷ் 


பேத்திகள் 







வட்ட நிலவுமிகக்    கிட்ட இருக்கென்று
எட்டிப் பிடிக்கவே   என்பேத்தி எத்தனிக்க  
பட்டுக் கரங்களும்  பட்ட   நிலவினொளி
பட்டப் பகலாச் சுதே

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)


Apr 2, 2019

பிரதோஷப் பாடல் - 15


சில மாதங்களுக்குப் பின், இன்றைய பிரதோஷப் பாடல்!

அன்புடன்

ரமேஷ்

பிரதோஷப் பாடல் - 15

நஞ்சுதன்னைத் தான ருந்தி தேவர் தம்மைக் காத்தவன்
செஞ்சடைவி ரித்து கங்கை தாங்கி தரையில் சேர்த்தவன்
அஞ்செழுத்து மந்தி ரத்தை ஓதி யவனை வேண்டினால்
அஞ்சலென்றும் தேவை யில்லை அமர லோகம் கிட்டுமே !

Mar 29, 2019

தேர்தல்

தேர்தல்

சில தினங்கள் சென்றதும் தேர்தலெனும் உத்சவம்
இந்தியாவின் தலைவிதியே  இந்தநாளில் நிர்ணயம்.

அஞ்சுஅஞ்சு வருஷந்தோறும் அரங்கேறும் விந்தையே
நாட்டுமக்கள் ஓட்டுரிமை விலைபோகும் சந்தையே.

இலவசங்கள் பலவிதம் மக்கள்வசம் இத்தினம்
சேருவதால் ஓட்டுப்போட காட்டமாட்டார் மெத்தனம்!

கோழிக்கறிப் புலவுச்சோறு*ப் பொட்டணங்கள் அத்துடன்    * chicken  biriyani
பிழிந்தெடுத்த பழத்தின்சாறு கால்குடுவை* நிச்சயம்              *quarter

ஓட்டுப்போட மையைத்தடவ கையைக்காட்டும் முன்னமே
காந்திபோட்ட சலவைநோட்டு சிலதும்வந்து சேருமே !

அஞ்சுஅஞ்சு வருஷந்தோறும் அரங்கேறும் விந்தையே
நாட்டுமக்கள் ஓட்டுரிமை விலைபோகும் சந்தையே.

Mar 27, 2019

இப்படித்தான் இருக்கும் இனி.

இப்படித்தான் இருக்கும் இனி.

சமீபத்தில் ஒரு கவியரங்கத்தில் மேற்கண்ட தலைப்பில் பாடல்கள் எழுத அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் நான் பங்கேற்க முடியாவிட்டாலும், அந்தத் தலைப்பில் இரு சிறு பாடல்கள் எழுதி இருக்கிறேன்.
கருத்து கொஞ்சம் pessimistic  ஆக இருந்தாலும் , நிதர்சனம் என்னவோ இதுதான்!

அன்புடன்

ரமேஷ்

தருமம் தலைகுனியும் தீயவை தலைநிமிரும்
----------வருமங்கள் விருட்சமாய் வளரும் 
பருவமழை தப்பும் ஏரிகுளம்  வற்றும்
----------இப்படித்தான் இருக்கும் இனி.

உள்ளங்கள் விலகும் உறவுகளும் கலையும் 
----------கள்ளங்கள் கரைமீறிப் பெருகும் - 
சுள்ளென்று  மொழிமுழுதும் சுடுசொற்கள் நிறையும்
----------இப்படித்தான் இருக்கும் இனி.

Mar 21, 2019

பேத்திகள் -

இன்று எனது மூன்றாவது பேத்தி ஆதிராவின் பிறந்த நாள்!
அதைக்  கொண்டாடும் விதமாக , வெகு நாட்களாக விடுபட்டிருந்த என் பதிவை மீண்டும் புதுப்பிக்கிறேன்!
அன்புடன் 
ரமேஷ் 
கனித்தோட்டம் 


பேத்திகள் 

பேத்திகள் -

ஓடுதலிலும் தேடுதலிலுமே  காலம் கழிந்ததால்
மகனிடமும் மகளிடமும் காட்ட மறந்து
மனதில் அணை கட்டித்
தேக்கி வைத்திருந்தஅன்பு ஊற்றுகளின்
வடிகாலாக விளங்கும்
பாத்திகள்

பேத்திகள்-

வையகத்தின் மொத்த அழகையும்
கையகப்படுத்தி , 
அதனைத் தம்
அழகுமுகச்  சிரிப்பிலும்
உதிர்மழலைச் சொல்லிலும்
சேர்த்து வைத்திருக்கும்
நேர்த்திகள்

தாத்தாக்களுக்கு 
அவை  தரும் ஆனந்தத்தைக்
கூற உண்டோ  
வார்த்தைகள்?