Search This Blog

Jul 3, 2023

படைப்பின் தொடக்கம்?

படைப்பின் தொடக்கம்? 

சில நாட்களுக்கு முன்  சசி தரூரின் The Hindu Way என்ற ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் முதலாம் அத்தியாயத்திலே இந்தப் பிரபஞ்சம்  எப்படித் தோன்றியது என்ற மர்மத்தைப் பற்றி ஆராயும்  நாஸடீய ஸுக்தம் என்னும் ஒரு ஸ்லோகத் தொகுப்பைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இது ருக் வேதத்தின் ஒரு பகுதி. பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுதப்பட்ட இந்தப் பாடல் தொகுப்பிற்கும் இந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த BIG BANG என்னும் கோட்பாட்டுக்கும் இடையே  வியக்கத்தகு ஒற்றுமை  காணப்படுகிறது! 

முந்தியதோ தவ ஞானிகள் உள்ளுணர்ந்த உண்மை! சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சுக்தம் என்னும் துதி.

பிந்தைய கோட்பாடு அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சம்! இதை நம் முன்னோர்கள் அன்றே உணர்ந்திருந்தார்களா?

இது பற்றி மேலும் அறிந்துகொள்ள சில புத்தகங்களை படித்தேன். இந்த ருக்வேதப் பாடல்களின்   தமிழ்ப் பொருளை tamilandveda.com  என்ற blog ல் படித்தேன். லண்டன்  சுவாமிநாதன் என்பவரின் பதிவு அது. 

இந்த சுக்தத்தின் ஏழு பாட்லகளின் பொருளை மேற்குறிப்பிட்டுள்ள பதிவிலிருந்து எடுத்து கீழே கொடுத்திருக்கிறேன் . ஒவ்வொரு பாடலின் பொருளுக்குப் பின்னும் என் வார்த்தைகளில் பாடல் வடிவில் புனைந்திருக்கிறேன். 

படித்து உங்கள் கருத்தையும் பதியுங்களேன்!

அன்புடன

ரமேஷ் 



    

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

உளதாம் தன்மையும் இலதாம் தன்மையும்           existence and  nonexistence -

உண்மையும் இன்மையும் அன்றங் கில்லை 

வெளியும் அதன்மேல் வானும் இல்லை 

எங்க திருந்தது? எதுவதை மறைத்தது?

-----அளவிட முடியா ஆழத்  தடியில்

-----உயிர்த்துளி உண்டோ? அறிவார் யாரோ? 


2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

இறப்பு என்பது அன்றங் கில்லை 

இறவாத் தன்மை என்பதும் இல்லை 

இரவெனப் பகலெனப் பிரிவினை இல்லை 

தானே தனித்துத் தன்னிறைவடைந்த 

-----ஒருவன் மட்டும் வெறுமையில் இருக்க 

-----வேறோர் எவரும்  அன்றங் கில்லை 

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

இருளை இருளே போர்த்தி இருக்க 

இருளுள் உயிர்த்துளி ஒளிந்து கிடக்க  

அண்டம் முழுதும் அந்த காரமாய் 

வெறுமை எங்கும்  நிறைந்தே இருக்க

-----உருவம் இல்லா   அருவனாம் அவன் 

-----வெம்மையின் ஆற்றலால் உயிர்பெற் றெழுந்தான்

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

ஆதியில் எழுந்தது ஆசை என்பது 

அதுவே மனதில் விதையு மானது 

முதுபே  ரறிஞரின் தேடலி னாலவர் 

இதயத் துள்ளோர் ஒளி பிறந்தது 

-----உளதி லதென்ற விரண்டின் இடையிலே 

-----துலங்கும் தொடர்பும் தெரிய வந்தது.

5.அந்தக் கயிறு இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

சூனிய மான வெறுமையி னுள்ளே 

ஞானிகள் பார்வை நீண்ட போதிலே 

விருப்பத்தின் விதையினின் றெழுந்த சக்தியே 

விருட்சமாய் வளர்ந்து வெடித்ததை உணர்ந்தார்.

-----உள்ளே உள்ள மாபெரும் ஆற்றலே 

----வெளியே விரிந்தெங்கும் வியாபித் திருந்தது


6. யாருக்குத் தெரியும்? யார் இதைச் சொல்ல முடியும்? அது எப்போது தோன்றியது? இந்த படைப்பு என்பது எப்போது ஏற்பட்டது ?படைப்புக்குப் பின்னரே (நாம் இன்று வணங்கும்) கடவுளர் வந்தனர். அப்படி இருக்கையில் இது எப்போது தோன்றியது என்பதை எவர் அறிவார்?

படைப்பு முதலாய் நிகழ்ந்த  தெப்படி ? 

இடமும் நேரமும் அறிந்தவர் உண்டோ?

கடவுளர் தோன்றலும் படைப்பின் பின்னெனின் 

நடந்தது எதுவென யாரே உரைப்பர்?


7. எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? இல்லையா? யார் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த ஒருவனுக்கே  அது தெரியும்; அவனுக்கே தெரியாமலும் இருக்கலாம்!


மூலமிப் படைப்பின் காரணம்*  எதுவோ?              *இப்படைப்பின் மூலகாரணம் 

காலமிந் நிகழ்வைக்* கணித்தவர் எவரோ?           *இந்நிகழ்வின் காலத்தைக் 

மேலிருந் தனைத்தையும் நோக்கிடும் ஒருவன் 

வாலறிவன் இதன் விடையறி வானோ?

-----ஒருகால் அவர்க்கும் இதுதெரி யாதோ?

-----புரியா மருமத்தின் விடைகிடை யாதோ?


Jun 26, 2023

நாளாச்சு

நாளாச்சு

நானும் என் மனைவியும் இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தடைந்தோம். நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த அமெரிக்க விஜயம். முன்சென்ற வருகைகளின் போது நான் பார்த்து மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளை  மீண்டும் நேற்று இரவிலும் இன்று காலையிலும்  என் மகனது வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து ரசித்தபோது எழுந்த எண்ணங்கள் இவை- ஒரு பாடல் வடிவில்!

அன்புடன் 

ரமேஷ்   

நாளாச்சு

வெட்ட வெளியில் உட்கார்ந்திருந்து வானைப் பார்த்து நாளாச்சு

சிட்டுக் குருவிகள் சிறகை விரித்து பறப்பதைப் பார்த்து நாளாச்சு


மைனாப் பறவைகள் வானுலா வுவதைப்  பார்த்து மகிழ்ந்து நாளாச்சு

ஆனந்த ராகம் அவைகள் பாடுவதைக் கேட்டுக் குளிர்ந்து  நாளாச்சு..


வட்ட நிலவொளி பட்டுப் புல்வெளி சொலிப்பதைப் பார்த்து நாளாச்சு

வீட்டுத் தோட்டத்தில் காட்டு மான் கூட்டம் மேய்வதைப் பார்த்து நாளாச்சு


உண்டு கொழுத்த குண்டு அணில்கூட்டம்  ஓடுவதைக் கண்டு நாளாச்சு

செண்டு செண்டாகப் பூத்த மலர்க்  கொத்தில் வண்டுகள் பார்த்து நாளாச்சு
 

இத்தனை அழகையும் மொத்தமாயிங்கு சேர்த்துத் தந்த இறைவனையே 

நித்தமும் இந்த இயற்கையின்  வடிவில் பார்த்திடும் நேரம் வந்தாச்சு.

Jun 19, 2023

மாத்ரு பஞ்சகம் - பாடல்கள் 3,4,5

மாத்ரு பஞ்சகம் - பாடல்கள் 3,4,5

முற்றும் துறந்த முனிவர் ஆதி சங்கரர் தனது தாயைப் பிரிந்து வருந்தி அழுது பாடிய பாடல் தொகுப்பின் முதல் இரண்டு பாடல்களை சென்ற பதிவில் பதித்திருந்தேன்.  அடுத்த மூன்று பாடல்கள் இந்தப் பதிவில்.

அன்புடன் 

ரமேஷ் 

பாடல் -3

ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே மாத்ரு பஞ்சகம் - தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!


தனியாக தாயேநீ மரிக்கின்ற தினத்தில் 

புனிதநீர் உன்வாயில் நான்வார்க்க வில்லை!

உனதுடலம் உயிர்நீத்து அனலேறு  முன்னே 

மனதார அவிசளிக்க முடியவும் இல்லை!

கனிவாக உன்னைநான் என்மடியில் ஏந்தி 

காதோடு கர்ணமந் திரமோத வில்லை 

சுணங்கியே சிலகாலம் கடந்துவந்த என்மேல் 

இணங்கியே தயைகாட்டி அருளுவாய் தாயே!


பாடல் -4

முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா ! என் கண் அல்லவா ! c என் ராஜா, என் குழந்தை  சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

கண்ணே! கண்மணியே! முத்தே! என்ராஜா!

என்றெல்லாம் கொஞ்சி எனைவளர்த்த தாயே!

என்றென்றும் நானே சிரஞ்சீவி யாக 

நன்றாக வாழ்வாய் எனவாழ்த்தி னாயே!

தாயைப் பிறிந்த கன்றாக இன்று 

வாய்க்கரிசி மட்டும் போடவே வந்தேன்!


பாடல்- 5

அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.

எனையீனும் பொழுதில்நீ சினையுற் றிருக்க 

உனதுடலும் உயிரும்பெரு வலியால் துடிக்க 

தனைமறந்து நினைவிழந்து என்னப்பா சிவனே 

எனக்கதறி அலறித் துடித்தவென் தாயே!

உனதுமகன் இன்றிங்கு கிருஷ்ணா முகுந்தா 

எனவேண்டி  பதம்பணிந்து வணங்கினேன் தாயே!


Jun 13, 2023

மாத்ரு பஞ்சகம்- பாடல்கள் - 1,2

மாத்ரு பஞ்சகம் பாடல்கள் - 1,2 

முற்றும் துறந்த துறவியெனினும் தாயெனும் உறவைத் துறப்பது அரிது! தன் தாயின் மறைவின் போது ஆதி சங்கரர் வருந்திப் பாடிய பாடல் தொகுப்பு மாத்ரு பஞ்சகம். மனதை உருக்கும் ஐந்து பாடல்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் முதலாம் பாடலை, தமிழ்க் கவிதை வடிவில், சென்ற ஆண்டு அன்னையர் தினத்தன்று பதிவிட்டிருந்தேன். அது என் தாய் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் இருந்த நேரம்!

இன்று என் தாயின் நினவு நாள்.  

இந்த நாளன்று மாத்ரு பஞ்சகத்தின் முதலாம் பாடலுடன், இரண்டாம் பாடலையும்  கவிதை வடிவில், என் அன்னையை வணங்கிப்  பதிவிடுகிறேன். மற்ற மூன்று பாடல்களையும் வரும் நாட்களில் பதிப்பேன்.

அன்புடன் 

ரமேஷ் 


பாடல் 1

ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

பெறுகையில் எனைநீ பெரும்பா டுற்றாய்  

கருவைச் சுமைக்கையில்   களைத்தாய் இளைத்தாய் 

சிறுமழ  லையாய்நான்  இருக்கையில் எந்தன் 

சிறுநீர் நனைத்த படுக்கையில் படுத்தாய்  

பெரிதாய் வளர்ந்துநான்   பெரும்புகழ் பெறினும் 

சிறிதும் என்னால் நீயுற்ற துயரை 

சரியீடு செய்தல்  அரிதினும் அரிதே !

குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே! ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!


குருகுலம் நான்செலும் தருணத்தி லோர்நாள் 

உறவுக ளறுத்துநான்   துறவு கொள்வதாய்  

உறக்கத்தில் கனவொன்று கண்டுளம் பதைத்து  

மறுநா ளேகுரு குலம்வந் தடைந்தாய்!  

உருகியே உதிரமுன் விழிவழி  வழிய 

சிறுவன் எனைநீ   இறுகவே  அணைத்தாய்  

பிறிதுள பலருமக் காட்சிகண் டழுதார்!

தரையிலே  விழுந்துனை வணங்குதல் அன்றி 

வேறென்   செய்வேன்?  சரணமுன் அடியே!. 




Jun 10, 2023

அறுவடை

அறுவடை 

இன்று உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தினம். 

இதுவரை சுற்றுச் சூழலை பாதுகாக்க மறந்தும் மறுத்தும் வரும் நம் தலைமுறைகள் இனியேனும் திருந்துமா ? 

அன்புடன் 

ரமேஷ் 



அறுவடை 

விதையை  விதைத்து நெற்கதிர்  வளர்த்து 

அறுவடை செய்யும் உழவர் இடையே  

எதைநாம் விதைத்து அறுவடை செய்தோம் 

கதையிதைச் சொல்வேன் கேட்டுணர் வீரே!


ஆற்றுப் படுகையில் அரண்மனை கட்டி 

ஆறாத்  துயரை அறுவடை செய்தோம் 

சுகவாழ்வு பெறவே  சூழலை அழித்து 

நச்சுக் காற்றை அறுவடை செய்தோம்


காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தியே 

ஓசோன்  அடுக்கில்  ஓட்டைகள் செய்தோம்   

வாட்டும் வெப்பம் எங்கும் ஏற 

புவிசூ டாதலை அறுவடை செய்தோம்


ஆழ்துளைக் கிணறுகள் பலவும் அமைத்தே 

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தோம் 

ஆழிக்  கடலின் உவர்நீர்  உள்ளே   

உட்புகும் நிலையை அறுவடை செய்தோம் 


எதை விதைத்தோமோ அதையே மீண்டும் 

அறுவடை செய்வோம் அறிந்திடு வோமே !

அதைநாம்  உணர்ந்து அல்லன ஒறுத்து 

நற்செயல் செய்துநம்  பூமியைக் காப்போம்!