Search This Blog

Oct 31, 2016

எந்தன் மகனே கோவிந்தா - 2-இந்திய கிரிக்கெட் வாரியம் ,கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட் பற்றி

எந்தன் மகனே கோவிந்தா - 2

இந்திய கிரிக்கெட் வாரியம் ,கர்நாடக அரசு, சுப்ரீம் கோர்ட் பற்றி


இந்திய உச்ச நீதி மன்றம் ( சுப்ரீம்  கோர்ட் ) , இந்திய குடியரசு அமைப்பின் ஒரு முக்கியமான தூண். ஆனால் இப்போது அதன் தீர்ப்பை மதித்து , உடனடியாகச் செயல் படுத்தாத இந்திய கிரிக்கெட் வாரியம், கர்நாடக அரசு ஆகியவற்றின் இழுக்கடிக்கும் போக்கு, உச்ச நீதி மன்றத்தின் ஆளுமையையம், மதிப்பையும் குறைக்கும் விதமாக உள்ளது. இது குறித்து ஒரு கவிதை - சிறுவன் கோவிந்தனுக்கும் , அவன் தந்தைக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல் வடிவில் !

படித்து மகிழுங்கள்.

அன்புடன்

ரமேஷ்

பி.கு : 1. நமது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் " நேர்மையின் உறைவிடம் " என்று கூறிவிட முடியாது என்பது ஒரு பக்கம். இது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.
பி.கு : 2. கோவிந்தனும், அவன் தந்தையும் தேர்தலைப் பற்றி நடத்திய ஒரு உரையாடல் , சென்ற வருடம் வெளியான இந்தப் பதிவில்   உள்ளது. http://kanithottam.blogspot.com/2016/05/blog-post_15.html
இதையும் நீங்கள் படிக்கலாமே!





தந்தை
எந்தன் மகனே கோவிந்தா ,    படிப்பு நன்றாய்ப் போகிறதா?
சந்தே கங்கள் ஏதுமெனின்     தந்தை என்னைக் கேட்டிடலாம்.
கோவிந்தன்
பாடம் படிப்பு பற்றியெல்லாம்     கவலை இல்லை அப்பாவே
நாட்டு நடப்பைப்  பற்றித்தான்    சற்றே கவலைப் படுகின்றேன்
தந்தை
நாட்டைப் பற்றி சிந்தித்தல்      நல்லது தானே கோவிந்தா
போட்டுஉடை உன் கவலைகளை;      நல்ல விளக்கம் நானளிப்பேன்
கோவிந்தன்
சச்சரவெல்லாம் தீர்த்து விட ,       நீதிமன்றம் பல இருக்கையிலே
உச்ச நீதி மன்றமென்று ,      ஒன்று எதற்கு  அப்பாவே
தந்தை
மிச்ச நீதி மன்றங்களின்       தீர்ப்பில் குறைகள்  உண்டென் றால்
உச்ச நீதி மன்றத்தில்      சென்று சொல்லலாம்   கோவிந்தா
இந்தத் தீர்ப்பே இறுதிஅது       செல்லும் எல்லா இடங்களி லும்
சந்தேகம் இதில் ஏதுமில்லை;      இதுதான் சட்டம் கோவிந்தா
கோவிந்தன்
நமது வீட்டில் அம்மாவின்        தீர்ப்பே கடைசித் தீர்ப்பன்றோ ?
அதற்கு மேலே முறையில்லை;      இதுவும் அதுபோ லத்தானோ ?
தந்தை
இதைவிட நல்லஉதா ரணங்கள்      எதுவும் நினைவுக்கு வரவில்லையோ?
உதறி அதைநீ தள்ளிவிட்டு,      விஷயத் திற்கே  வரலாமே?
கோவிந்தன்
எந்த நாளிலும் எவ்விடத்தும்      இதுதான் சட்டம் என்றாலே
இந்தியக் கிரிக்கெட் வாரியமும்      இப்போ செய்வது சரிதானா?
லோடா  கமிட்டீ* தீர்ப்பினையே      "போடா" என்று உதறிவிட்டு
ஏடா கூடச் செயல்களிலே      ஈடு படுதல் முறைதானா?
தாக்கூர் ^ கொடுத்த தீர்ப்பினையே      அனுராக் தாக்கூர்^^  தாக்குவதும்
சாக்குப்  போக்குகள் சொல்லுவதும்      சரிதானா? இது முறைதானா?
தந்தை
எல்லாக் கட்சியின் தலைவர்களும்#      வாரியத் தலைமையில் உள்ளவரே !
கல்லாப் பெட்டியில் கைவிட்டே       குறைவில் லாமல் அள்ளுவரே!
கோடி கோடியாய் பணம்சேர,       தலையில் அதனால் கனமேற
சட்டத்தின் வட்டத்துள்  உட்படுதல்      தேவையில் லையென நினைக்கின்றார்.
இட்டப் படிதான் இவர்நடப்பார் ;      தேவை யென்றால் ஒருங்கிணைந்து
சட்டத்தையே இவர் மாற்றிடுவார்,      சாபா னோ**வின் வழக்கைப்போல்.
கோவிந்தன்
காவிரி நீர்தமிழ்  நாட்டுக்குத்       தாவெனச் சொன்னது நீதிமன்றம்
கருநா டகமதை மதிக்காமல்      தருவதை மறுப்பது சரிதானா?
தப்புத் தப்பாய் தலைவரெல்லாம்      இப்படி எல்லாம் செய்திட்டால்
எப்படி நாடு உருப்படுமோ ?      அப்பா இதுவே என்கவலை!!
 தந்தை
வேலை நிமித்தக்  காரணமாய்      நாளை முதலே நான்சிலநாள்
சாலைப்  பேருந்  தின்மூலம்        மாண்டியா$ வுக்குப்  போகின்றேன்!
கால்கை எதற்கும் சேதமின்றி       திரும்ப நானும் வந்தாலே
கேள்வி இதற்குப் பதிலுரைப்பேன்;      அதுவரை பொறுத்திரு கோவிந்தா!

* லோடா  கமிட்டீ - The committee constituted by supreme court to look into the functioning of      BCCI and suggest reforms.
^ தாக்கூர் - H.S.Thakur- The chief Justice of Supreme Court of India
^^ அனுராக் தாக்கூர் - Anurag Thakur- The president of BCCI
# எல்லாக் கட்சியின் தலைவர்களும்--  See this link to see the political affiliations of the Who is Who of Indian Cricket,-http://indianexpress.com/article/explained/explained-indian-crickets-political-pitch/
**- சா பானோ--Shah Bano  . Her's was a famous case where the government enacted a law to nullify a judgement of the supreme court and deny a divorced muslim women, her right to alimony.
$- மாண்டியா- Mandya district in Karnataka , which was the epicenter for the protests by Kannadigas against the supreme court's directives to Karnataka to release water for Tamil Nadu.















3 comments:

  1. அன்புள்ள ரமேஷ்,
    படித்தேன் , ரசித்தேன் - கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மாண்டியாக்கு நழுவது - " நல்ல மாட்டிண்டியா " என்று சொல்ல தோன்றுகிறது !!

    ReplyDelete
  2. இதை நையாண்டிக் கவிதை என்று சொல்லலாமா ? ஆம் என்றால் உன் ஆதங்கம் புரிகிறது. உடன் ஆதங்கப்படுவதை தவிர வழி வேறொன்றும் தெரியவில்லை நண்பா

    ReplyDelete
  3. அற்புதமான அங்கதம்.
    உங்களுடைய ஆதங்கம் அங்கதமாக வெளிப்பட்டிருக்கிறது.
    தொடர்க உங்கள் பணி.
    வாழ்த்துக்கள்.
    எஸ் வெங்கடேசன்

    ReplyDelete