Search This Blog

Jan 12, 2021

ஹனுமத் ஜெயந்தி


ஹனுமத் ஜெயந்தி 

இன்று ஹனுமத் ஜெயந்தி.
இந்த நாளில் நங்கநல்லூர் ஆதிவியாதிஹர ஹனுமந்த சுவாமியை  வணங்கி வியாதிகள் அனைத்தையும்  விலக்கி நல்வாழ்வளிக்க வேண்டி ஒரு விருத்தப் பாடல்.
ஆஞ்சனேயரின் அருள் அனைவருக்கும் கிட்டுவதாகுக!

அன்புடன் 

ரமேஷ் 


நங்கநல்லூர் ஆதிவியாதிஹர ஹனுமந்த சுவாமி





துளசி தளங்கள் பறித்து எடுத்து தொடுத்த மாலை அதனுடன்

உளுந்து சேர்த்து பொரித்துக்  கோர்த்த வடையின் மாலை அணிவித்து

வளியின் மைந்தன் ராம பக்த  ஆஞ்ச நேய  சாமியை

விழுந்து வணங்கி வியாதி அனைத்தும் போக்கி அருள வேண்டுவேன்



Jan 10, 2021

பிரதோஷப் பாடல் 37 - காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம்

பிரதோஷப் பாடல் - 37

காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம்

இன்று மகாபெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை. மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா மதத்தினராலும் ஞானியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உத்தமர் அவர்.

இந்த நன்னாளில் அவரைத்  துதித்து சமஸ்க்ருத மொழியில் எழுதப்பட்ட அஷ்டோத்ர சத நாமாவளியை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு மூலத்தின் கருத்தை சிதைக்காமல் , தமிழ்ப்பாடல் வடிவில் அமைத்திருக்கிறேன். இதன் சமஸ்கிருத மூலத்தின் இணைப்பை(லிங்க்) கீழே பகிர்கிறேன்.


மஹா ஸ்வாமிகள் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரரின் மறு உருவே  என்பது பக்தர்களின் திண்ணமான எண்ணம். இந்தத் தோத்திர மாலையில் இந்தக்  கருத்து பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இன்றைய பிரதோஷ தினப் பாடலாக  இதைப் பதிவு செய்கிறேன்.   அடியேனின் இந்த முயற்சியில் ஏதேனும் குறைகள் இருப்பின் மஹாஸ்வாமிகள் மன்னித்தருள்வார் என்று திடமாக நம்புகிறேன். பக்தர்களின் மன்னிப்பையும் கோருகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: இந்த மொழிபெயர்ப்பில் எனக்கு உதவி செய்த திரு ராமசுப்பிரமணியத்திற்கும் அவரது பிற நண்பர்களுக்கும் என் நன்றி.

https://mahaperiyavaa.blog/2013/04/15/downloads-of-all-guru-ashtotrams/






காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம்

1. காஞ்சி மாநகர்   காம கோடிமடப்  
    பீடத் தமர்ந்த தலைவா  போற்றி!
2. சந்திர சேகர சரஸ்வதி யாக
    வந்தருள் புரியும் குருவே போற்றி!
3. முனிபுங் குவரில்  முதல்வா போற்றி!
4. காவி உடையினை உடலில் உடுத்து
    கையில் தண்டம் தரித்தாய் போற்றி!
5. பிடித்த பீடைகள் அனைத்தும்  அகற்றி
    பேரருள் புரியும் பரமா  போற்றி !
6. சுவாமி நாத குருவே போற்றி!
7. கருணைக்  கடலின் உருவே  போற்றி!
8. உலகை ஈர்க்கும் உத்தம போற்றி!
9. அண்ட சராசரம் அனைத்திலும் இருக்கும் 
    ஆண்டவனாக வந்தாய் போற்றி!
10. பக்த கோடிகளைக் காத்து அருளும்
      உத்தம உருவே உன்புகழ் போற்றி!
11. தர்மம் காக்கும் தலைவா போற்றி!
12. ஜெயேந்திர சரஸ்வதி குருவே போற்றி!
13. விஜயேந் திரர்வழி படுபவ போற்றி !
14. சிவனும் சக்தியும் சேர்ந்தவ போற்றி!
15. பக்த ஜனங்களின் பிரியனே  போற்றி!
16. பிரம்மா விஷ்ணு சிவனெனும் மூவர்
      ஒருங்கே இணைந்த உருவே  போற்றி!
17. காசியில் வசிக்கும் கோவே போற்றி!
18. கயிலை மலையில் உறைவாய் போற்றி!
19. சுயதர் மத்தை காப்பாய் போற்றி!
20. நான்கு வர்ண மக்களை எல்லாம்
      நன்றே காக்கும் நாயகா போற்றி!
21. உலகில் வாழும் உயிர்களை எல்லாம்
      நலமாய் வாழச் செய்வாய் போற்றி!
22.  தன்னுள் உறையும் பிரம்மனை எண்ணி
      என்றும் த்யானம் செய்வோய் போற்றி! 
23. பாபம் அனைத்தையும் போக்குவாய் போற்றி!
24. நெறிமுறை காக்கும் நீதி மான்களை
      விரும்பி அருளும் வினயா போற்றி!
25. அன்பர் அளிக்கும் தான மனைத்தையும்
      மனமுவந் தேற்கும் மகேசா போற்றி!
26. உபநிடத் துக்களின் உட்பொருள் அறிந்த
      தவத்திரு ஞான உருவே போற்றி!
27. நீதி நூற்பொருள் அனைத்தும் அறிந்த 
      வேதப்  பொருளின் வித்தே போற்றி!
28. அகில உலகப் பிதாவே போற்றி!
29. வணங்கித் துதிப்போர் வேண்டும் வரத்தை
      இணங்கி அருளும் இனியா  போற்றி!
30. வேதம் ஓதும் வித்த கர்களை
      குறையெதும் இன்றிக் காப்பாய் போற்றி!   
31. பலநிறப்  பூவால்  பக்தர்கள் புரியும்
      அர்ச்சனை ஏற்கும் அருளே போற்றி!
32. உருத்தி ராட்சக் கிரீடம் சிரத்தில்
      தரித்து விளங்கும் தலைவா போற்றி!
33. நீறு பூசிய உடலாய் போற்றி!
34. அனைத்தும் அறிந்த அறிவே போற்றி!
35. விண்ணிலும் வெளியிலும் வியாபித் திருந்து
      அண்டம்  முழுதும் நிறைந்தாய் போற்றி!
36. அண்டி அடைந்திட்ட சீடர் அனைவரை
      அன்புடன் என்றும் காப்பாய் போற்றி!
37. அலையாய்ப் பாயும்  மனதை அடக்கி
      நிலையாய் நிறுத்தும் நாயகா போற்றி!
38. அபயக் கரத்தால் அருள்வாய் போற்றி!
39. பக்தர் பயங்கள் போக்குவாய் போற்றி!
40. வேள்விகள்  ஏற்கும் வேளே போற்றி!
41. வேள்விகள் அனைத்தையும் விரும்பிப் புரியும் 
      நால் வேதவிற் பன்னா போற்றி!
42. வேள்வியின் விதிமுறை அனைத்தும் அறிந்து  
       பூரணமாகப் புரிவோய் போற்றி!
43.  வேள்விக் குதவும் வேந்தே போற்றி!
44. வேள்விப் பலன்கள் அளிப்பாய் போற்றி!
45. வேள்விகள் விரும்பும் வித்தகா  போற்றி!
46. ஒப்பெதும் இல்லா உத்தமா போற்றி!
47. படிக ருத்ராக்ஷ துளசி மாலைகள்
      உடலில் அணியும் உருவே  போற்றி!
48. நான்கு வர்ணத் தோரனை வரையும்
      ஒன்றாய் நோக்கும் நல்லோய் போற்றி!
49. ருக்யஜுர் சாம அதர்வண மென்னும்
      நான்வே தங்களைக்  காப்பாய் போற்றி!
50. தக்ஷிணா மூர்த்தி உருவே போற்றி!
51. உறக்கம் விழிப்பு சொப்பனம் அனைத்தையும்
      துறந்த தூய வடிவே போற்றி!
52. கோடிப் பரிதியி னொளியினை ஒத்த
      தேசுடன் விளங்கும் தந்தையே  போற்றி !
53. பத்தரைக் காக்கும் புண்ணியா போற்றி!
54. அசுவம் யானை இவையுடன்  கூட
      பசுவைப் பூசை செய்வாய் போற்றி!
55. குருவின் உருவாய் அவர்பாது கையை
      கருதிச் சிரத்தில் அணிவாய்  போற்றி!
56. தங்கக்  காசால் தலைமுதல் கால்வரை
      எங்கள் அர்ச்சனை ஏற்பாய் போற்றி 
57. பொன்னா லான பில்வ இலைகளால்
       பரமனைப் பூசை செய்வாய் போற்றி 
58. அனைத்து உயிர்களும் மோட்சம் அடைய
      அன்புடன் அருளும் அண்ணலே போற்றி!
59. வாயால் பேசும் வார்த்தைகள் இன்றி 
       குறிப்பால் உணர்த்தும் குருவே போற்றி!
60. காட்சி உன்னைக் காணு மாத்திரம்
      தீட்சை தருகிற திவ்வியா போற்றி!
61. பனிரெண்டு லிங்கங்கள் பதித்தாய் போற்றி!
62. இசையை ரசிக்கும் ரசிகா போற்றி!
63. அறிதற் கரிய ப்ரம்ம ஞானத்தை
      அடியவர்க் குபதே சிப்பாய் போற்றி
64. அனைத்துக் கலைகளும் அறிந்தாய் போற்றி!
65. நால்வகை வர்ண மக்கள் அனைவரும் 
      போற்றித் துதிக்கும் பரமா போற்றி!
66. உலகம் முழுதும் பேசும் மொழிகள்
      பலவும் அறிந்த பெரியோய் போற்றி!
67. அட்டமா சித்தி அடைந்தாய் போற்றி!
68. சாரதா மடத்தின் ஸ்தாபிதா  போற்றி!
69. அனுதினந் தோரும் அன்ன  தானங்கள்
      அன்புடன் அளிப்போர்க் கருள்வாய் போற்றி!
70. உனைத்தினம் வணங்கும் முறையெளி  தெனினும்
       பனையென பயன்தரும் புண்ணியா போற்றி!         
71. காதம் கடந்து பாரதம் முழுதும்
      பாதம் பதித்து நடந்தாய் போற்றி!
72. பல்வகை மதமும் கூறும் பொருளை
      துல்லியமாக அறிந்தாய்  போற்றி!
73. சுருதிகள்  ஸ்மிருதிகள்   புராணங் களின்
      உருவாய்  விளங்கும் உத்தமா போற்றி!
74. தேவர் யட்சர் கின்னர ரோடு
      கிம்புரு வரர்களும் வணங்குவ  போற்றி!
75. அன்பும் அருளும் ஒன்றாய்க்  கலந்த
      உன்னத வார்த்தைகள் உரைப்பாய் போற்றி!
76. திருமுக தரிசனம் காண்போர்க் கெல்லாம்
      பெருமகிழ் வளித்திடும் பெருமான் போற்றி!
77. அத்து வைத சித்தாந்தத் தனையே
       சிந்தித் தானந் தித்தாய் போற்றி!      
78. நினைத்தால் இனிக்கும் நாதா போற்றி!
79. சைவ ராயினும் வைணவ ராயினும்
      எவரும் ஒன்றென உரைத்தாய் போற்றி!
80. சங்க ராச்சர்ய குருவே போற்றி!
81. தண்டத் தோடு  கமண்ட லங்கள்
      இரண்டும்  ஏந்திய கரத்தாய் போற்றி!
82. மத்தளம் வீணை மங்கள வாத்தியம்
      அத்தனையின் இசை வடிவே  போற்றி!
83. ராக சுரங்கள் சாகித் யங்கள்
      ரசித்து மகிழும் ரம்மியா போற்றி!
84. நடனம் நாடகம் நாட்டியம் பயிலும்
      பல்கலை நிபுணரைக் காப்பாய் போற்றி!
85. இதயத்தி ருக்கும் இனியா போற்றி!
86. கேதா ரத்துறை நாதா போற்றி!
87. ருத்திர சமக தோத்திரம் மூலம்
      நித்திய பூசை ஏற்பாய் போற்றி!
88. அறியா மைதனை அழிப்பாய் போற்றி!
89. பலனெதிர்ப் பார்க்கா கடமை செய்யென
      உலகோர்க் குபதே சிப்பாய் போற்றி!
90. எளிதாய் பக்தி செய்யும் வழிகள்
      எவர்க்கும் எடுத்து உரைத்தாய் போற்றி!
91. இலிங்க உருவாய் வருவாய் போற்றி!
92. சாலிக் கிராமத் துள்ளே ஒளிரும்
      சூட்சம சொரூபச் சித்தா போற்றி!
93. சங்கர மடங்கள் நான்கையும் ஒன்றாய் 
      ஒருங்கே காணும் உத்தமா போற்றி!
94. இந்திரி யங்களை வென்றாய் போற்றி!
95. உனையே கதியென சரணடைந் தோர்க்கு
      துணையாய் இருக்கும் தெய்வமே போற்றி!
96. ஸ்ரீசை லமலைச் சிகரந் தன்னில்
      வாசம் செய்து வருவாய் போற்றி!
97. தமருக மெனும்சிறு முரசினை  ஒலித்து 
      களிப்புடன் நடம்புரி நாதா போற்றி!    
98. எருது வாகனம் ஏற்றவா போற்றி!
99. இடக்கையி லேந்திய உடுக்கையின் ஒலியால்
      வேதம் விளைத்த விமலா போற்றி!
100. ஆபி சாரரை  அழிப்பாய்  போற்றி!
101. மிதமாய் உணவை உண்பவா  போற்றி! 
102.  மறுபிறப்  பறுக்கும்  மகேசா  போற்றி!
103. இறப்பை எண்ணி இருப்போர் பயத்தை
        துரத்தி அடிக்கும் தூயா போற்றி!
104. அடியவர் புரியும் செயல்கள் சிறக்க
        அனுக்கிரஹம் செய்யும் அருளே போற்றி!
105. அனுஷத் தாரகை நன்னாள் அன்று 
        அவதா ரித்த அருளே போற்றி! 
106. உலகோர் போற்றும் உத்தமா போற்றி!
107.  வேங்க டேஸ்வரரின் தாமரைப் பாதம் 
         வணங்கிப்  போற்றும்  வடிவே போற்றி!
108. திரிபுர சுந்தரி உமையுடன் சேர்ந்த
        சந்திர மௌளீஸ் வரரைத் தினமும்
        சிந்தையில் இருத்தி மந்திரம் ஓதி
        வந்தனம் செய்யுமுன் சேவடி போற்றி!

   


   









Dec 28, 2020

2020 ஆம் ஆண்டின் நாட்குறிப்பேடு

2020 ஆம் ஆண்டின் நாட்குறிப்பேடு 

ஆண்டு 2020 க்கான என் நாட்குறிப்பேட்டில் எழுதி நிறைத்த பக்கங்களை விட  எழுதப்படாத வெறுமையான பக்கங்களே அதிகம். ஏழெட்டு மாதங்களாக  வீட்டிலேயே அடைந்து கிடக்கும்போது, எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான் !  இப்படி இருக்கையில் எதற்காக ஒரு தினநாட்குறிப்பு? இந்த நிலைமை சீக்கிரம் மாற இறைவனை வேண்டுவோம்.

அன்புடன் 

ரமேஷ் 



இரண்டா யிரத்திருப தாண்டின்குறிப் பேட்டை 

புரட்டிப் பார்க்கிறேன் நான்பட்ட பாட்டை !

கருமையின்* கறைபடிந்த பக்கங்கள் சிலவே!  * (கரு+மை =கரிய மை)

குறிப்பேட்டை வாங்கியது வீணான செலவே!!

ஒவ்வொரு நாளுமதன் முன்னாளின் நகலே!

இதிலிருந்து விடுபடவே இங்கேது புகலே ?


நோய்நம்மைத் தாக்குமோ என்றுபயப் பட்டு, 

வாய்மீதும் முகமீதும் முகமூடி இட்டு 

வீட்டுள் அடைபட்டு, உள்ளம் உடைபட்டு 

நாடோறும்* நாம்செய்யும்  செயல்கள் தடைபட்டு          (* நாள் தோறும் )

ஊர் முகம் காணுதல் முற்றும் மறந்து 

நேர்முகப் பரிமாறல் அறவே துறந்தோம்  


மனதிலே நிறைந்திடும் வெறுமையின் தாக்கம்

எனதுகுறிப் பேட்டிலென்  எழுத்தையும் தாக்கும்.  

உள்ளத்தின் உள்ளே நிறைந்துள்ள வெறுமை,

நாளேட்டின் பதிப்பிலென்  எழுத்திலும்  வறுமை!

வரும்நாளில் இந்நிலைமை நிச்சயம் மாறும்.

திரும்பவென்  எழுத்துக்கள் நாளேட்டில் ஏறும்!




Dec 26, 2020

கைபேசி

கைபேசி 

இன்று நம் எல்லோருக்கும் பழகிப் போன ஒன்று கைபேசி. அது இல்லாமல் இன்று, அதுவும் இந்த கோவிட்  காலத்தில், உலகம் இயங்காது  என்ற ஒரு நிலைமை.  இருந்தாலும், யாராவது அதைக் கண்டு பிடித்தவர் யாரென்று  நினைவில் வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் ஒய்வு  பெற்ற  காவல் துறைத் தலைவர்  அதிகாரி திரு.ராஜ்மோகன் அவரை இன்று நினைவு  கூறுகிறார்! 

சில வருடங்களுக்கு முன் கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை என்ற தலைப்பில்  திரு.ராஜ்மோகன் அவர்கள் செய்து வரும்  பணியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.* இன்று அப்பலகையில் இடம் பெற்றிருப்பவர்  "மார்ட்டின் கூப்பர் " என்பவர். இன்றைய கைபேசிக்கான தொழில் நுட்பத்தைக்  கண்டுபிடித்து, முதல் கைபேசியையும் வடிவமைத்தவர் கூப்பர். இன்று 92 வயதை அடையும் இந்த விஞ்ஞானியை நினைவு கூர்ந்து, அவரை வாழ்த்துகிறார் ராஜ்மோகன்!





நானும் அவருடன் இணைந்து ஒரு சிறிய பாடல் இயற்றி மார்ட்டின் கூப்பரை  வாழ்த்துகிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 

* http://kanithottam.blogspot.com/2017/08/blog-post_10.html


இடம்பெயர்ந்து இங்கங்கும் நடக்கின்ற போதும் 

தடையின்றி ஒருவரோ டொருவர் உரையாட 

விடையொன்று கண்டார்  விஞ்ஞானி கூப்பர்.

நெடுநாட்கள் அவர்வாழ வாழ்த்துக்கள் சொல்வோம்!


Dec 25, 2020

தசாவதாரம்

இன்று வைகுண்ட ஏகாதசி!

இந்தப் புண்ணிய நாளில் திருமாலின் பத்து அவதாரங்களைப்  பற்றி எழுதிய பத்து வெண்பாக்களை இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன் 
ரமேஷ் 

தசாவதாரம் 

மச்சாவதாரம் 


ஆழ்கடலின் ஆழத்தில் நான்முகனின் நான்மறையை
ஆழ்த்தி மறைத்திட்ட அஸ்வமுக* தானவனை**
மீனினவ தாரத்தில்  போரிட்டு    மீட்டவன் 
வானுரை வைகுண்ட னே    

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

* அஸ்வமுக - அஸ்வம் - குதிரை.
** தானவன் - ராட்சதன் ;


கூர்மாவதாரம் 


மந்தார மாமலையை   மத்தாக ஆக்கியே
இந்திர தேவ ரசுரர் - இணைந்துவெண்        
பாற்கடலை யேகடைய அம்மலையைத் தாங்கினார்
கூர்மாவ தாரத் திலே.  

( பல விகற்ப இன்னிசை வெண்பா )
.

வராகஅவதாரம் 



மண்ணுலகை ஆழ்கடலில் ஆழ்த்திவைத்த ராட்சதனை
வெண்ணிப் பன்றியின்
ரூபத்தில்   - கொன்றபின்
பூமியைத்தன் மூக்கிலே தாங்கியே மேற்கொணர்ந்த
*நேமியன்  வாரா கனே (
பல விகற்ப இன்னிசை வெண்பா )

*நேமியன் - உயர்ந்தவன்; நியமம் தவறாதவன்.  
  

நரஸிம்ஹாவதாரம் 



மானுடன் பாதியாய் *மாஅரியும் மீதியாய் 
ஊனுடல் ரூபம் எடுத்து - இரணியனை 
கொன்றுன் பக்தனை பாலிக்க வேயெடுத்த 
நான்காதாரப்  பிறப்பு.   

(பல விகற்ப இன்னிசை வெண்பா) 

  *மாஅரி- அரிமா ; சிங்கம்  

வாமனாவதாரம் 

மூன்றடி மண்கேட்டு  ஈரடியில் பாரளந்து
மூன்றா மடியூன்றி மன்னன் தலைகொண்டு 
வாமனக் கோலத்தில் வந்தவத ரித்துலகை
சேமமுறச் செய்தமா யன். (பல விகற்ப இன்னிசை வெண்பா )


பரசுராமவதாரம் 


பரசெனும் கோடரி ஆயுதம் ந்தி                                                  
அரசாளும்  க்ஷத்ரிய வம்சத்தை கொன்றென்றும்
சாகா வரம்பெற்று சஞ்சீவி யாய்வாழும் 
ஏகாந்த ராமன் இவன்.  (பல விகற்ப இன்னிசை வெண்பா )    
 

ராமாவதாரம் 

 
பெற்றவன்  சொல்காக்க கான்சென்று தன்னுடன்
உற்றவளை மீட்கவே வில்லேந்தி - தெற்காளும்
கொற்றவனைக் கொன்றவளை மீட்ட அவதாரம்
பொற்புடை ராமனுடைத் தே ! 

( ஒரு விகற்ப நேரிசை வெண்பா )

பலராமாவதாரம்




ராமாவ தாரத்தில் சோதரனி லக்குவனாய்
*சாமத் திருமேனி அண்ணலுக்கு - நேமமாய்
செய்தபணிப்  புண்ணியத்தால் கண்ணனுக்(கு) அண்ணனாய்
உய்த்தான்  பலராம னாய் . 

( இரு விகற்ப நேரிசை வெண்பா )   

* சாமம்- இரவு; சாமத் திருமேனி - இரவைப்போன்ற கருத்த நிறத்தவன் 
  

கிருஷ்ணாவதாரம் 


 
*இருதாயைப் பெற்று  **இருதாரம் ஏற்று
திரௌபதியைக் காக்க துகிலளித்து - அர்ச்சுனனின் 
தேர்ஒட்டி  போர்முடித்து கீதையெனும் நீதியை
பாருக் களித்தகண் ணன்.  

(பல விகற்ப இன்னிசை வெண்பா )


*இருதாய் - பெற்ற  தாய் தேவகி; வளர்த்த தாய் யசோதை. இருவரையும் கண்ணனே தேர்ந்தெடுத்ததால் "இருதாயைப் பெற்று " என்று கூறியுள்ளேன்.

** இருதாரம் - பாமா, ருக்மணி



கல்கியவதாரம் 


கலியுகத்தில் பாவங்கள் பல்கிப் பெருகும்;
நலம்நாடும் மாந்தர்கள் வாடிமனம் சோர்வார்.
உலகத்தை அப்போ தழித்துப் புதுப்பிக்க
கல்கியவ தாரம் வரும்.  

( பல விகற்ப இன்னிசை வெண்பா )






Dec 20, 2020

மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு

 மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு 

சென்ற ஆண்டு மார்கழி மாதம் எழுதிப்  பதித்த ஒரு பாடலை மீண்டும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  அடைகிறேன்.

அன்புடன் 

ரமேஷ்


மார்கழி விடியல்





மார்கழித் திங்கள் நிறைபனிக் காலை
தேரில்  ஏறி வான்வழி உலவும்
சூரிய னொளிக்கதிர் தரைதொடும் நேரம்
ஊரெழு முன்தம் உறக்கம் விடுத்த
கூர்விழி  மாதர்தம் குடிலின் வாயிலில்
நீரைத் தெளித்து நிலத்தைக் கழுவி
அரைத்த அரிசி மாவை எடுத்து
விரலால் விரிமாக் கோலம் இட்டு
ஆவின் சாணம் அதனுள் வைத்து
பூசணிக் கொடியின் பூவைச் செருகி
திருப்பா வைகளின் பாசுர மிசைத்து
அறிதுயில் கொள்ளும் அரியை எழுப்ப

விடியும் இனியவோர்  காலைப்  பொழுது


Dec 16, 2020

காடு வரை பிள்ளை?

காடு வரை பிள்ளை?*

இந்தக் கொரானா நாட்களில் ஒருவரும் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்ல முடிவதில்லை.

வெளி நாட்டு விமான சேவைகள் இன்னும் செயல்படத்  தொடங்காத நிலையில், வெளி நாடுகளில் வசிக்கும் எவரும் இங்கு வர முடியாத நிலை.

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில்  மகன்களும், மகள்களும் வெளிநாடுகளில் இருப்பதால் , வயதான பெற்றோர் தனித்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கொரானா நோய் தாக்கி இறந்தபோது, பெற்ற  பிள்ளைகள் எவரும் வந்து ஈமச்சடங்களைக்கூட செய்ய முடியாமல் போனது பற்றிய பல துயரச் செய்திகளை நாளேடுகளில் சில மாதங்களுக்கு  முன் படித்தேன்.

அதன் தாக்கத்தின் பயனாக (சில மாதங்களுக்கு முன்) எழுதப்பட்ட ஒரு கவிதை இது.

 அன்புடன் 

ரமேஷ் 

காடு வரை பிள்ளை?*

"காடு வரை பிள்ளை" என்று

---------- கண்ண தாசன் சொன்னான்- ஆனால் 

நாடு விட்டு நகரம் விட்டு 

----------வீடு விட்டு உறவை விட்டு  

தேடி வேலை** சென்ற பேர்கள் 

----------மீண்டு வருதல்  இயலா  நிலையில் 

பாடு பட்டு பாசம் கொட்டி 

----------வளர்த்த  பெற்றோர் இன்னுயிர் இன்று    

கேடு விளைக்கும் கொடுநோய் தாக்கி 

----------கூடு விட்டுப்  பறந்த போதும் 

வீடு திரும்ப வழியொன் றின்றி 

----------வேறு   இடத்தில்  முடங்கிக்  கிடக்க 

காடு வரையில் கடைசிப் பயணம் 

----------கூடச் செல்லல் எங்கன மியலும்?


* என்னுடைய ஒத்த வயதினருக்கு "வீடு வரை உறவு" என்று தொடங்கும் இந்தப் பாடல் நினைவிருக்கலாம். பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம் பெற்றது.

** "வேலை தேடி" என்று படித்தறிக.