Search This Blog

Jun 19, 2025

தியானம்

தியானம் 



மண்மீது பாய்விரித்து கண்மூடிக் கால்மடித்து 
எண்கணக்கில் என்மூக்கால் உயிர்வளியை உள்ளிழுத்து 
நுரையீரல் தனைநிரப்பி, உள்நிறுத்தி, வெளியேற்றி
சுவாசத்தின் சுழற்சியிலே என்னைநான் இழக்கின்றேன்
மவுனத்தில்  முழுகுகிறேன்; அமைதியினைத் தழுவுகிறேன் 
கவனங்கள் வழுவாமல்  தியானத்தைப் பழகுகிறேன் 

உடலெனும் உடையிழந்து, எண்ணத்தின்   எடையிழந்து 
புவியீர்ப்பின் தடையிழந்து வானத்தில் மிதக்கின்றேன்
இறக்கைகள் இல்லாமல் பறக்கின்றேன்- இவ்வுலகின் 
இணைப்புகள் யாவையும் துண்டித்துத் துறக்கின்றேன்.
மோனப் பெருவெளியில்  மவுனத்தின் அவயத்தில்*  
நானிங்கு நிறைகின்றேன்;  மனக்கவலை மறக்கின்றேன் 

உள்ளிழுத்து உள்நிறுத்தி வெளியேற்றும் சுழற்சியிலே 
என்மனதின் சிந்தனையின் இயக்கத்தை  இழக்கின்றேன் 
பேரண்ட ஆற்றல் பரப்பினொரு  சிறுதுளியே
நானென்று உணருகிறேன்; அதில்மூழ்கிப் புணருகிறேன் 
என்னுள்ளே இருக்கின்ற எனையுணர முயலுகிறேன். 
இத்தேடல் வெற்றியுற தியானத்தைப் பயிலுகிறேன். 


* அவயம் = இரைச்சல் 

அன்புடன் 

ரமேஷ் 




 

 

16 comments:

  1. அருமை ரமேஷ் ! வார்த்தைகளால் விளையாடி விட்டீர்கள். உங்கள் முயற்சியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  2. Very nice. Let’s Hope that we continue with the meditation bliss.

    ReplyDelete
  3. ஆஹா என்ன சொல்ல ! தமிழ் தாண்டவம் ஆடியது தியானத்தினால்( Dhyanam) எழுந்த ஞானமோ?
    அன்புள்ள... வெங்கட்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, வெங்கட்!

      Delete
  4. அருமையான கவிதை. அதுவும் தியானம் முழுதும் பயிலாமலே.
    வாழ்த்துக்கள்.
    சந்திர மோகன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, சந்திர மோகன்!

      Delete
  5. உறக்கமின்றி மறுநாள் உலகில்லை
    உறக்கத்தில் எட்டும் அமைதியினை
    விழிப்பிலும் அடைவதே பல தியான
    வழிகளின் குறி என்றறி.
    S. Raman

    ReplyDelete
  6. Great, as usual - Sunder

    ReplyDelete
  7. Great use of Tamil language and classic

    ReplyDelete
  8. தியானத்தை பழக நல்லதொரு வழி.அருமை.

    ReplyDelete