Search This Blog

Feb 28, 2018

வாழ்க்கைக் கடிகாரம்

வாழ்க்கை ஒரு விடைகாண முடியாத புதிர்!

தொடக்கமும் நம் கையில்  இல்லை.முடிவும் நம் கையில்  இல்லை.

இடைப்பட்ட காலத்தில் செய்யும் செயல்களின் வினைப்பயன்  இப்பிறவிக்குப் பின்னும் தொடர்ந்து வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

" ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே** செய்க " என்று ஒரு சங்ககாலத் தமிழ் கவிதை பள்ளிப்பருவத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.

அதனால், நல்லவற்றைச் செய்ய நேரம் பார்ப்பானேன்?

அது பற்றி ஒரு பாடல்.

அன்புடன்
ரமேஷ்

பின் குறிப்பு : இந்த கவிதை  பிடித்திருந்தால், சில மாதங்களுக்கு முன் நான் எழுதிப்  பதித்த " சொல்ல நினைத்ததைத் சொல்லிவிடு " என்ற ஒரு கவிதையையும்  படித்துப்  பாருங்களேன் !

http://kanithottam.blogspot.in/2015/10/blog-post_24.html



வாழ்க்கைக் கடிகாரம்

ஒருமுறையே  விசையேற்கும் *   வாழ்க்கையெனும்  கடிகாரம்.
மறுமுறையதை   விசைத்தலுமே*  என்றென்றும்   முடியாதே
முடுக்கிவிட்ட  சுருள் வில்லின் ^   சக்தி  வடிந்தபின்னே
படுத்துவிடும் கடிகார முள்போன்ற  திவ்வாழ்வே.

இப்போதா அப்போதா எப்போதது நிற்குமென
துப்பறிந்து  துல்லியமாய்ச் செப்புதலும்   இயலாதே
கப்புகின்ற  இருளொத்த  காலனவன்  கைப்பிடியைத்
தப்புபவர்  இப்புவியில்  யாருமில்லை  அதனாலே

நாளைமறு  நாளைஎன  நல்வேளை பார்த்திருந்தே
மாளும்நாள்   வரும்வரையில்  வாளா  விருக்காமல்
நன்றாம் செயல்களையே  இன்றேநாம் செய்திடுவோம்..
இன்றே செய்வதையும் இப்போதே  செய்திடுவோம்.



* விசை= force ; விசையேற்கும்= energised    விசைத்தல் = to cause to move (swiftly).
^ முடுக்கிய சுருள் வில் =  a wound spring
** இன்னே = இப்போதே



3 comments:

  1. அன்புள்ள ரமேஷ்

    நீ சொன்ன நல்ல விஷயத்தை உடனடியாக கடைபிடிக்கவேண்டுமென நான் செய்ததை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

    நீ இதை அனுப்பியதோ பிப்ரவரி 28. கடிகாரத்திலுள்ள நாட்காட்டியை இன்றே மாற்றாவிட்டால் நான் நாட்காட்டியில் மூன்று நாள் பின் தங்கிவிடுவேன் . அதனால் ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய் இப்பொழுதே செய் என நாளை ஒன்றாம் தேதியாக மாற்றிவிட்டேன். நன்றி.

    உன் அன்புக்குரிய நண்பன்

    ராம்மோகன்

    ReplyDelete
  2. அருமை இரமேஷ்! ஒரு நன்கொடை இன்று கொடுக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே செய்யாமல் நாளை செய்வோம் என்று தள்ளிப் போட்டால் தொகை பாதியாகி விடும், மறு நாள் என்றால் இன்னும் குறைந்து விடும். பின் மறந்தே விடும். PRN

    ReplyDelete