Search This Blog

Nov 30, 2017

பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 2


பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 2

இந்தக் கதையின் முதல் பாகம் பதிப்பித்து  கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இரண்டாம் பாகம் இதோ!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு :
முதல் பகுதியை இந்த இணைப்பில் பார்க்கலாம் 
http://kanithottam.blogspot.in/2017/11/1.html


பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 2

"முருகனுக்கா? அவன் அண்ணனுக்கா?
-----யாருக் களிப்பது மாம்பழத்தை?
இருவருக்கும் ஒரு போட்டிவைத்து
-----வெல்பவர்க்கே அதை அளித்திடுவோம்"

என்றே  பெற்றோர் முடிவெடுத்தார்.
-----பிள்ளைகள் இருவரையும் அழைத்தார்.
"ஒன்றாய் கிளம்பி இருவருமே
-----இவ்வுலகைச் சுற்றி வரவேண்டும்.

முதலில் வருபவர் அடைந்திடுவார்
-----மந்திர மாம்பழக் கனியைத்தான்.
இதுவே எங்கள்  முடிவாகும்.
-----புறப்படுக! வெற்றி அடைந்திடுக!"

என்றே பெற்றோர் சொன்னவுடன்
-----இருவரும் போட்டிக்குப் புறப்பட்டார்.
வென்றே  வருவோம் என்றெண்ணி
-----வாகன மேற விரைந்திட்டார் .

மயில்மேல் ஏறி முருகனுமே
-----வான வழியாய்  பறக்கையிலே 
ஒயிலாய் எலியின் மேலேறி
-----பிள்ளை யாரும் புறப்பட்டார்


எலிவா கனம்மேல்  ஏறியவர்
-----பெற்றோர் இருவரையும் சுற்றி 
எளிதாய் ஒருமுறை வலம் வந்து
-----அன்னை தந்தையரை வணங்கி 

"வெற்றி எனக்கே  போட்டியிலே
-----தருக மாம்பழம் "எனக்கேட்டார்
"சுற்றவில்லையே நீ உலகத்தை"
-----என்றே பெற்றோர் கேட்டவுடன்


"எங்களுக்குப்  பெற்றோரே
-----உலகம் ; வேறே  ஏதுமில்லை.
உங்களைச் சுற்றி வந்ததுவே
-----உலகைச் சுற்றியதற் கொப்பாகும்.

அடியேன் உலகைச் சுற்றிவிட்டேன்
-----அரிய பழத்தை அளித்திடுக"
என்றே கூறி  அவர்களையே
-----வணங்கி நின்றார் விநாயகரும்.

இதனைக்  கேட்டு மனமகிழ்ந்த
-----சிவனும் உமையும் மாம்பழத்தை
முதலில் வந்தவன் எனஓப்பி
-----மூத்த மகனுக்கு கொடுத்தாராம்.











 முற்றும் உலகைச்  சுற்றிவிட்டு
-----அதன்பின் வந்த முருகனுமே
பெற்ற  தந்தை தாய்மேலே
-----பெரிதாய் கோபம் கொண்டானே.





பெற்றோர் கூறும் வார்த்தைகளை
------சற்றும் கூடக் கேட்காமல்
உற்ற உறவை  விட்டுவிட்டு 
-------பறந்து வெளியே போய்விட்டான் !








இந்தக்கதையால் உங்களுக்கு 
        தெரியும் பாடங்கள் இரண்டு                                     
தந்தை தாயை மதித்திடுக !
          சிந்தித்தே நீ  செயல்படுக. !




எங்கே சென்றான் இளமுருகன்?
தங்க அவனுக்கு ஏதுஇடம்?
உங்கள் இந்தக் கேள்விக்கு
கூடிய விரைவில் பதில் சொல்வேன் .




1 comment: