Search This Blog

Apr 8, 2017

கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம் 

நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்து ரசித்த ஒரு படம் மாயா பஜார். 
அதில் கடோத்கஜன் ( எஸ்.வீ.ரங்காராவ்) பாடும் ஒரு பிரபலமான பாட்டு " கல்யாண சமையல் சாதம்". பல விதமான உணவு வகைகளை கடோத்கஜன் விழுங்குவதை ரசித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
என் வயதையொத்த பலருக்கும் இந்தப் படமும், அதில் வரும் இந்தப் பாடலும் நினைவில் இருக்கும்.

சில நாட்களுக்கு முன், என் உறவினர் ஒருவரின் கல்யாணத்திற்குச் சென்று மூன்று வேளை வயிறு முட்ட விருந்துண்ட போது , இது மீண்டும் நினைவுக்கு வந்தது. அப்படி என்னதான் இருந்தது அந்த விருந்தில்? 

படித்தும் , கேட்டும் ரசி(ருசி?)யுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 



கல்யாண சமையல் சாதம் 

                      நெருங்கிய உறவொன்றின் இல்லமண நிகழ்ச்சிக்கு
                      வருந்தியவர் அழைத்த தாலும் - கூடவே
                      இருந்தவர்க்கு* வேண்டும்பல விதமான உதவிகளை
                      செய்யஅவர் கேட்ட தாலும்               (*இருந்து அவர்க்கு)
                      மூன்றுவே ளைகளும்  காலைமுதல் மாலைவரை
                      விருந்தங்கு உண்ண லாச்சு.
                      நான்அன்று அங்குண்ட  விருந்துணவு வகைகளை
                      இங்குயிக் கவிதை கூறும்.

காலைச்  சிற்றுண்டி 

வட்டவடி வம்கொண்டு  சுட்டவடை வெண்பொங்கல்
இட்டலி அவைக ளுடனே - பல  
சட்டினி வகைகளும்  அதனுடன் கூடவே 
தொட்டுண்ண சாம்பா ருமே! - பொங்கி 
உப்பிய பூரியுடன் உருளைக் கிழங்குகறி  
இருவகை தோசை குருமா - இவைகளை  
சப்புக் கொட்டியே சாப்பிட்ட பின்னரோ  
கப்*பிலே  கொதிக்கும் காஃபி.                             * cup 

                       மங்கலநாண் கட்டியபின் மலரரிசியைத் தூவி 
                     மொய்ப் பரிசை அளிக்கும்  போது 
                      மறக்காம லேமதிய  உணவுண்ண வேண்டுமென 
                      உறவுகள்  உரைத்த தாலும் - மிகவும் 
                      நீண்ட வரிசையிலே நெடுநேரம் நின்றதால் 
                      உண்டது செரித்த தாலும் - மீண்டும் 
                      கொஞ்சம்பசி தலைதூக்கி தொல்லைப்  படுத்தவே 
                      லஞ்ச்*ஹாலை    நோக்கி நகர்ந்தேன்.       *lunch 

மதிய உணவு 

வாடாத வெண்மல்லிப் பூவின் நிறத்திலே   
சூடான  சாதம் இட்டு  - கூடவே 
உருகின  நெய்விட்டுப்  பிசைந்தோர் குழிசெய்து  
பருப்புசாம் பாரை யூற்று .

இருவகைப் பொரியலுடன்   பொரித்த அப்பளம் 

நொருக்கியத னோடு கலந்து - விரும்பியே 
உண்டபின் னேவரும் மோர்க்குழம்  பும்வாசம் 
கொண்டதக் காளிரச மும்.

பல்வகைப் பச்சடிகள் பன்னீர்ப் பாயசம் 

அல்வா இனிப்பு வகைகள் - சில்லென்ற  
கட்டித் தயிரோடு வத்தல் குழம்பின்னும் 
தொட்டுக்க ஊறுகாய் வகை 

இத்தனையும் சாப்பிட்டு எழுந்துகை கழுவியபின் 
பத்தாது இதுவென் றின்னும் - பத்துவகை 
பாக்குசீ வல்போட்டு மடித்தபான்* சுருளைகள்          *paan 
சாக்லேட்டு ஐஸ்க்ரீ *முடன்.                                                         *choclate icecream 


                        இருவேளை இலைபோட்டு உண்டி படைத்தபின் 

                      இரவுணவு சுயசேவை யாம்.
                      ஒருகையில் முள்கரண்டி மறுகையில் தட்டேந்தி 
                      விரும்பியதை நீயுண்ண லாம்.

இரவு உணவு 

பிரியாணி பச்சிடி கலந்த சாதங்கள்  
வறுத்தபூக் கோசு*த் துண்டு - பொறித்த                   *cauli - flower 
வருவல் பப்படங்கள்  சப்பாத்தி நான்வகைகள் 
குருமா தயிர்ப் பச்சடி- கூடவே 
சீனத்து நூடுலும்* கோபிமஞ் சூரியன்#              *noodle # gopi manchurian 
பானி-பேல்  பூரி* வகைகள்-இதன்பிறகு            *pani poori , bhel poori 
குல்பி*ஐஸ் கிரீமுடன் வெட்டிய பழத்துண்டு          *kulfi 
குலோப்ஜான் இனிப்பு வகைகள் .

இதன் பிறகு ?

                        நாக்கின் சுவைக்கு நானடிமை ஆகியே 
                      மூக்குப் பிடிக்க வேளை - மூன்றுமே   
                      பாக்கியே வைக்காமல் பந்தாவும்  பாராமல் 
                      சாக்கெதுவும் சொல்லா மலே - உண்டபின்
                      தேக்கியே வைத்துள்ள தேகக் கொழுப்பால் 
                      சீக்குப்பிடிக் காதிருக்கக்  -  காலையில் 
                      வாக்கிங்*  போகின்ற  நேரத்தை நாளைமுதல்      *walking 
                      ஆக்குவேன்  இருமடங் காய். 




1 comment:

  1. இன்னொருமுறை இவர்கள் இல்லத்து விழா எதுவானாலும் உன்னுடன் என்னையும் அழைத்துச்செல்ல மறவாதிருப்பாயாக

    ReplyDelete