Search This Blog

Jan 28, 2017

முகத்தில் முறுவல் ;அகத்தில் அமைதி

முகத்தில் முறுவல் ;அகத்தில் அமைதி


வாழ்க்கையின் சில அனுபவங்கள் சுகமானவை. 

அனுபவிக்கும்போது மட்டுமன்றி, திரும்பத் திரும்ப நினைத்து ஆனந்தப்பட்டு வைக்கின்ற அனுபவங்கள்.

இது போன்ற அனுபவங்கள்  எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். 

இவற்றை நேரிலோ, நினைவிலோ அனுபவிக்கையில், நம்மை அறியாமல் முகத்தில் ஓர் புன்னகை பூக்கும். மட்டற்ற  ஓர் மகிழ்ச்சியும், மன அமைதியும்   நம்மை வந்தடையும். 

வாழ்வில் ஏற்படும்  அனுபவங்களில் , சில (பல?) கசப்பானவைகளாவும் இருக்கும். கசப்பானவற்றைப் பற்றியே நினைத்து உழலுவது மனித இயல்பு. 

ஆனால் இதை விடுத்து நம்மை மகிழ்ச்சி அடையச் செய்த தருணங்களையே நினைத்தால்  ...............

 இது பற்றி ஒரு கவிதை!

அன்புடன் 
ரமேஷ் 



முகத்தில் முறுவல் ;அகத்தில் அமைதி



இதழை விரித்து மலரும் பூவின்
மடலின் நுனியில் முத்தாய்  மிளிரும்
பனியின் திவலைத் துளியில்  பட்டு
தெறிக்கும் எழுநிறக் கலவையைக் காண்கையில்
                   முகத்தில் முறுவல்
                   அகத்தில் அமைதி




மடலின் நுனியில் பனித்துளி மிளிர
இதழை விரித்து மலரும் பூக்கள்  
மக ரந்தசுகந்த  மணத்தைப்   பரப்ப
நுகர்ந்ததை நாசியும் சுகமாய் விரிகையில்
                   முகத்தில் முறுவல்  .                
                   அகத்தில் அமைதி 



பொலபொல பொலவெனக் காலை விடிய 
சிலுசிலு சிலுவெனக் காற்றும் வீச 
கருகரு மேகம் பன்னீர் தெளிக்கும் 
சிறுசிறு துளிகள் முகத்தில் விழுகையில்  
                     முகத்தில் முறுவல் 
                     அகத்தில் அமைதி 


இருகை தூக்கி சிறுகால் உதைத்து 
கருவிழி இரண்டிலும் முறுவலை ஏற்றி 
கன்னம் குழிவிழ குமிழிதழ் விரித்து 
சின்னக் குழந்தை சிரிப்பதைப்  பார்க்கையில் 
                        முகத்தில் முறுவல் 
                        அகத்தில் அமைதி  
       
        
துயிலைக் கலைத்து தூக்கம் துறக்கையில் 
வெயிலின் வெளிச்சம் விளிம்பில் இருக்கையில் 
குயிலின் குக்கூ கூவலின் கூட 
புள்ளினம் பாடும் பாடல்கள்  கேட்கையில்
                        முகத்தில் முறுவல் 
                        அகத்தில் அமைதி 



ஐந்து நட்சத்திர விடுதி களிலே  
அறுசுவை உண்டி உண்பதை விடவே 
பாசம் கலந்த பழந்தயிர் சோற்றைப்  
பசிக்கும் வேளையில் பகிர்ந்துண் ணுகையில்  
                        முகத்தில் முறுவல் 
                        அகத்தில்  அமைதி.

சுவை, ஒளி ,ஊறு,  ஓசை,  நாற்றம் 
இவ்வைம் புலன்கள்  இயக்கும்  இவ்வாழ்வே  
இயந்திர கதியில்  இடைவெளி யின்றி 
இயங்கிடும் ; அதிலுள அனுபவங் களிலே  
இனிதாய் இருக்கும் அனுபவம் பலவாம் ;
நினைத்து  அவற்றை நிறுத்தி மனதினில் 
முகத்தில் என்றும் முறுவல்  பதித்தும்  
அகத்தில் அமைதியை  அணிந்தும் வாழ்வோம். 


அன்புடன் 

ரமேஷ் (கனித்தோட்டம்)
www.kanithottam.blogspot.com





4 comments:

  1. அன்புள்ள ரமேஷ்

    முகத்தில் முறுவல் அகத்தில் அமைதி .
    அருமை அருமை மித மித அருமை .
    வாழ்க்கை தத்துவத்தை மித அழகாக
    வெளிக்கொண்டுவந்திருக்கிறாய் .

    என்றும் அன்புடன்
    ஆருயிர் நண்பன்
    நா. ராம்மோகன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ராம்மோகன்.

    ReplyDelete
  3. மிக அற்புதமான கவithai!

    ReplyDelete
  4. எனது இளமை நாட்களில் எங்கள் இல்லத்தில் உள்ள எல்லோரும் வட்டமாய் அமர்ந்திருக்க எங்கள் அம்மா எல்லோருக்கும் பிசைந்த சோறு கைகளில் தரும் நாட்களை உனது பாடல் நினைவு படுத்தியது . அந்த இனிய நினைவுகளை மனம் அசைபோட ஒரு சந்தர்ப்பத்தை நல்கியதற்கு நன்றிகள் பல

    ReplyDelete