Search This Blog

Jan 25, 2016

காஞ்சி காமாட்சி பாமாலை

இந்த கனித்தோட்டம் பதிவுத் தொகுப்பை நான் ஆரம்பிக்கும் சில மாதங்களுக்கு முன்னமாகவே நான் எழுதியது இந்த காஞ்சி  காமாட்சி  பாமாலை.ஒரு கன்னி முயற்சி என்று சொல்லலாம். 

'மருங்கினில் அசைந்தாடும் ' என்று தொடங்கும் இரண்டாவது செய்யுள்தான் முதலில் எழுதியது- காஞ்சி காமாட்சி கோவிலில் அம்மனுக்கு முன் அமர்ந்திருந்தபோது தோன்றியது.


இதை சில உறவினர்களோடு அப்போது பகிர்ந்து கொண்டேன்.

இது வெண்பா வடிவத்தில் இருந்தாலும் எல்லா வெண்பா இலக்கணங்களும் பொருந்தவில்லை. இதைத் திருத்திய பிறகு பதிக்கலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் , சொல் நயமும், ஓசை நயமும் மாறாமல் முழுதும் திருத்த என்னால்  இயலவில்லை.

இந்த சிறு  குறைகளுடன் , இதோ, நான் எழுதிய  காஞ்சி  காமாட்சி  பாமாலை. (இது வெண்டுறை என்ற வெண்பா வகைக்குள் அடங்கும் என்றும் அறிந்தேன்!)

அன்புடன்
ரமேஷ்.


 காஞ்சி  காமாட்சி  பாமாலை
1.
ஐந்தவித்த முனிவர்களும் வானவரும் தானவரும்
வந்திங்கு வணங்குபுகழ் காஞ்சிகா மாட்சிதனை
செந்தூர நிறத்தாளை வண்டூரும் முகத்தாளை
வந்தனை செய்வோம் நினைந்து.
2.
மருங்கினில் அசைந்தாடும் நந்தா விளக்கொளிதான்
கருவறையில் உறைகின்ற காமாட்சி முகந்தனில்
நெருங்கியும் நீங்கியும் நடமிடுதல் காண்கையில்
உருகிடும் உள்ளமெல் லாம்.
3.
சாமமறை நாயகனின் வாமபாகத் தினளின்,
காமனை எறித்தவனைக் கடிமணம் புரிந்தவளின்,
காமத்திரு கண்ணினளின், வரமருளும் புண்ணியளின்
நாமமதை நாளும் நவில்வோம்.
4.
பத்துமா தம்தாங்கி நமைப்பெற்ற அன்னைபோல்
மொத்தமா வுலகையும் ஈன்றெடுத்துக் காப்பவளை
பத்(து)மா சனநிலையில் அமர்ந்திருந்து அருள்புரியும்
சித்தமா சக்தியைத் தொழு.
5.
இருகையில் பாசமங்  குசங்கள் பிடித்தவள்
கரும்புவில் ஒருகையில் தாங்கித் தரித்தவள்
மறுகையில் தாமரை மலரொன்றைக் கொண்டவளின்
திருப்பாதம் துதிப்போம் தினம்.
6.
ஆதிசங்  கரரமைத்த திருச்சக்  கரத்தமர்ந்து
மேதினியில் தீதொழிய அருள்புரிபவள் அவள்
காதினிக்க சௌந்தர்ய லாஹிரியைப் பாடியவள்
பாதங்களைப் பணிந்து தொழுவோம்.
7.
ஊசிமுனை  தனில்நின்று உறுதவம் செய்துப்பின்
ஈசனை மணந்துஅவன் இடம் சேர்ந்தவள்-அவளைப்
பூசித்து மலர்கொண்டு அனுதினமும் அருள்வேண்டி
யாசித்து அடைவோம் நலம்.

8.
வளியவள் வெளியவள் அனலவள் புனளவள்
ஒளியும் நன் னிலங்களும் அவள்படைப்பு தான்..
களிப்புடன்  அவளது கழல்களைப் பற்றினால்
ஒளிந்திடும் மனக்கவலை கள் .

9.
கயிலையில் களிநடம் புரிகின்ற ஈசனை
இயக்கும்நல்  விசையே மகாசக்தியே- அவள்
மயக்குமுக அழகினை மகிழ்வுடன் பாடினால்
பயனுறும் இப்பிறப் பே.

10.
சக்தியவள் இல்லையேல் சிவனிங்கு இல்லையே
முக்திதரும் அவள்நாமம் தினம்சொல்லியே -நாளும்
பக்தியுடன் தொழுவோர்க்குப் பிறவிச்சுழல் நீங்கியே
சித்திக்கும் சொர்க்கலோ கம்.

3 comments:

  1. Sir....really very good....you are raising bar every time! Best wishes.

    ReplyDelete
  2. Sir....really very good....you are raising bar every time! Best wishes.

    ReplyDelete
    Replies
    1. You are really getting in to the thick of it. ats off! our proficiency in grammer is also evident. Guess you must have been a brilliant student of Tamizh in your school days. You are really icentivisng others to retire and focus on other passions!!!

      Delete