Search This Blog

Oct 25, 2015

சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடு


 பல சமயங்களில் நாம் செய்யவேண்டும் என்று நினைப்பதை உடனே செய்வதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது, முக்கியமாக, சில நல்ல காரியங்களை செய்யவேண்டும் என்று நினைத்தாலோ ,   ஒருவரைப் புகழ  வேண்டும் என்று நினைத்தாலோ  உடனடியாக நாம் செய்வதில்லை.

இதை நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த விதிக்கு நானும்  விலக்கல்ல!

ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்து, அதை உடனே செய்யாமல் தள்ளி வைத்து, சமயம் கடந்தபின்னே, , "அய்யய்யோ, அப்பவே  செய்யலாமுன்னு நெனச்சேன், எதோ தள்ளிப் போச்சு, அடுத்த தடவை பாத்துக்கலாம்" என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்வதில் நாம் மன்னர்கள்!

அதே போல் ,ஒன்றை / ஒருவரைப் புகழ்வதிலும் ரொம்ப சிக்கனம் காட்டுவோம்!  

இந்த குணங்கள்  மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எத்தனை உள்ளங்கள் மலர்ந்திருக்கும்? எத்தனை புன்னகைகள் பூத்திருக்கும்?

இது பற்றிய ஒரு கவிதை.

அன்புடன்

ரமேஷ்.

சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடு

கற்றவை, கேட்டவை, படித்தவை பிடிக்கையில்
பற்பல  சமயம்நாம் பார்த்தவை பிடிக்கையில் ,
அற்புதம்,அற்புதம் எனமனம் வியக்கையில் ,
பாராட் டிடவே உன்மனம் நினைக்கையில்

மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு           (1)


நண்பர் , உறவினர் , உற்றார்  செய்த
நன்செயல் பிடித்தால் , மனமதில் நெகிழ்ந்தால்
தன்முனைப் போடு ^^  தயக்கமும் சேர்ந்து
நன்றிதென் றுரைப்பதைத்  தடுத்தி டாமல்
 
மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு    (2)

அகத்தில் நுழைந்துநல்  லனுபவம்  அளித்து
மகிழ்ச்சியைத் தந்து மனம்தொட்ட எதையும
சுகித்திட்ட சூடு தணிந்திடும் முன்னே
பகிர்ந்திட வேண்டும் பாராட்  டுகளை

          மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
           சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு               (3)

உதவியை நாடும் உடல் நலம் நலிந்தோர்
முதியோர் , வறியோர்,  கைவிடப் பட்ட
கதியில் மாந்தர் நிலையினை நோக்கையில்
'உதவிடு ' என்று உள்மனம் சொன்னால்

          உடுக்கை இழந்தவன் கைபோல் உடனே

          கொடுக்க நினைத்ததைக் கொடுத்து விடு.          (4)


நேற்றைய பொழுது நன்றாய்க் கழிந்தது
காற்றை இழுத்து சுவாசம் செய்தாய் 
சோற்றை உண்டு சுகமாய் இருந்தாய் 
கூற்றுவன் இன்றே வரலாம் அதனால்


பையச் செய்வோம் என்றில் லாமல்
செய்ய நினைத்ததைச் செய்து விடு                      (5)
 
^^ தன்முனைப் போடு   WITH EGO















No comments:

Post a Comment