Search This Blog

Jun 24, 2025

பிரதோஷப் பாடல் 51

 பிரதோஷப்  பாடல் 51




ஆதியனே வேதியனே மங்கையுடற் பாதியனே

மீதியுடல்  மின்னுகின்ற வேதகப்பொன்* சோதியனே  

காதினிக்க சாமமெனும் வேதமறை ** நாதத்தை 

ஓதுவரைக் காதலித்து  ஆதரிக்கும்   நாயகனே  

 

நட்டநடு நள்ளிரவில் உடலெரியும் சுடலையிலே 

சுட்டெரித்த சாம்பலையே பூசி நடம் புரிபவனே 

பிட்டுக்கு மண்ணெடுத்து பணிபுரிந்த சேவகனே 

மொட்டவிழ்ந்த மலர்தூவி பனிந்துனையே பூசிப்பேன்!


* புடமிட்ட பொன் 

** சாமவேதம் 

அன்புடன் 

ரமேஷ் 




Jun 19, 2025

தியானம்

தியானம் 



மண்மீது பாய்விரித்து கண்மூடிக் கால்மடித்து 
எண்கணக்கில் என்மூக்கால் உயிர்வளியை உள்ளிழுத்து 
நுரையீரல் தனைநிரப்பி, உள்நிறுத்தி, வெளியேற்றி
சுவாசத்தின் சுழற்சியிலே என்னைநான் இழக்கின்றேன்
மவுனத்தில்  முழுகுகிறேன்; அமைதியினைத் தழுவுகிறேன் 
கவனங்கள் வழுவாமல்  தியானத்தைப் பழகுகிறேன் 

உடலெனும் உடையிழந்து, எண்ணத்தின்   எடையிழந்து 
புவியீர்ப்பின் தடையிழந்து வானத்தில் மிதக்கின்றேன்
இறக்கைகள் இல்லாமல் பறக்கின்றேன்- இவ்வுலகின் 
இணைப்புகள் யாவையும் துண்டித்துத் துறக்கின்றேன்.
மோனப் பெருவெளியில்  மவுனத்தின் அவயத்தில்*  
நானிங்கு நிறைகின்றேன்;  மனக்கவலை மறக்கின்றேன் 

உள்ளிழுத்து உள்நிறுத்தி வெளியேற்றும் சுழற்சியிலே 
என்மனதின் சிந்தனையின் இயக்கத்தை  இழக்கின்றேன் 
பேரண்ட ஆற்றல் பரப்பினொரு  சிறுதுளியே
நானென்று உணருகிறேன்; அதில்மூழ்கிப் புணருகிறேன் 
என்னுள்ளே இருக்கின்ற எனையுணர முயலுகிறேன். 
இத்தேடல் வெற்றியுற தியானத்தைப் பயிலுகிறேன். 


* அவயம் = இரைச்சல் 

அன்புடன் 

ரமேஷ் 




 

 

May 28, 2025

geetha 80

என்னுடைய சித்தி கீதாவின் இன்றைய 80-ஆவது பிறந்தநாளன்று நான் எழுதிப் பகிர்ந்த ஒரு வாழ்த்துப் பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


கீதா -80

எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் எங்கள் அருமை கீதாவே 

இந்நன்னாளில் உன்னை வாழ்த்தி இந்தப்பாடல் எழுதுகிறேன் 

ஐந்து பேர்களில் கடைக் குட்டி ; அவர்களுள் இவளே படு சுட்டி! 

வாய் பேசுவதில் வெகு  கெட்டி; அனைவரும் கேட்பார் கைகட்டி!

தனித்துவத் தன்மை படைத்தவளாம்,  சரியெனப் படுவதை செய்பவளாம் 

எந்த எல்லைக் கோட்டுள்ளும்  இவளை வரையிட  இயலாதே. 

வாழ்க்கைப் பாதையில் வழுக்கல்கள்  பலவும்  இருந்தது உனக்கெனினும்    

வீழ்ந்து விடாமல் எழுந்திட்டு  வாழ்ந்து அவற்றை வென்றிட்டாய். 

மகனும் மகளும் உறவுகளும் உனக்குத் துணையாய்  இருக்கையிலே 

மகிழ்வுடன் மிகப்பல நாளின்னும் வாழ்ந்திட வாழ்த்துகள் பாடுகிறோம்

தடைகளை உடைக்கும் திட மனதை விடைவா கனத்தான் அருளிடுவான்!

உடலுறு குறைகள்  விடுபடவே உமையொரு பாகன் உதவிடுவான்!


 



 

ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியருக்கு வாழ்த்துகள்

எனது நீண்ட நாள் நண்பன் ராமகிருஷ்ணனின் 50 தாவது திருமணநாள் நிகழ்வன்று  ( 22-5-2025)  - தம்பதிகளுக்கு நான் எழுதிப்  படித்த வாழ்த்துப்  பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியருக்கு வாழ்த்துகள் 


காதல் மனைவியின் கைத்தலம் பற்றி 

மாதினைப் பாதியாய் மனதில் ஏற்றி 

மேதினி யோர்க்கு மாதிரி யாக 

ஆதர வாக ஒருவரோ டொருவர்

புரிதல் பெருக்கி   இருதயம் ஒன்றி  

இருமனம் இணைந்து இனிதே வாழ்ந்து 

அரைநூ றாண்டுகள் ஆகும்   இந்நாள்  

நிறைவுடன்  சிறக்க  நண்பனென்  வாழ்த்து!


அன்புடன் 

ரமேஷ் 

 




 

பெற்றவர் இருவரும் பெருங்களிப் படைய 

வெற்றிபெற் றவரும்  வாழ்வினில் சிறந்தார்!

 

எடுத்த கடமைகள் அனைத்தையும் நன்றாய் 

முடித்தபின் மீண்டும் தொடங்கிய வாழ்க்கை

உடல்திடம் மனநலம் நிம்மதி யோடு 

தொடர்ந்திட இறைவன் நல்லருள் புரிக!

May 1, 2025

ஐ.பி.எல் போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும்

ஐ.பி.எல்  போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும் 

நேற்று நடந்த போட்டியில் மீண்டும் வெற்றிகரமாகத் தோல்வியுற்று சி.எஸ்.கே அணி இறுதிக் கட்ட ஆட்டங்களுக்குப் போகும் வாய்ப்பை இழந்தது.

இது குறித்து ஒரு பாடல்!

இது நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சொற்பமான பந்துகளிலேயே  சதமெடுத்து சாதனை புரிந்தார்! 

இது பற்றியும் ஒரு பாடல்!

இரண்டும் வெண்பா வடிவில்.

அன்புடன் 

ரமேஷ் 



வந்தாரை வாழவைக்கும் சென்னைநகர் பண்பினையே 

பந்தாட்டப் போட்டியிலே காட்டுவதேன்? - நொந்துமிக

நூல்தன்னைப் போலானார் மாநகரின்  மக்களெலாம்!

பால்தன்னைப் பத்தாம்நாள் ஊற்று

                                                                                (இருவிகற்ப இன்னிசை வெண்பா)




பால்வடியும் தோற்றத்தால்  ஏமார்ந்தே போகாதே!

'பால்'^அடிக்கும் மட்டை  பலத்தால் எதிரணியை                        ^ ball

பாழடிக்கும்  *"வைப(வ்)"வத்தை பார்த்தேநாம் பூரிப்போம்  * vaibhav

வாழட்டும் **சூர்யகுலத் தான்!                                                             ** suryavanshi

                                                                               (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

Apr 26, 2025

பெகல்காம் படுகொலை

எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெஹல்காம் பள்ளத்தாக்கில் செய்த படுகொலைகளுக்கு , இன மத வேறுபாடுகளின்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்துக்களை மட்டுமே கொலைசெய்து    இந்தியாவில்  மதக் கலவரத்தை தூண்ட முயலும் தீவிரவாதிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். 

ஜெய் ஹிந்த் !

ரமேஷ்  




பட்டப் பகலில் பெகல்காமின் பள்ளத்தில் 

திட்டமிட்டுத் தாக்கியே சுட்டுக்  கொலைசெய்தார்

இந்துக் களைமட்டும் -  இந்தச் செயலெதிர்த்து  

இந்தியனே பொங்கி எழு !


ஆதார  அட்டைகளில் பேர்பார்த் ததன்பின்னும்

போதாமல்  உள்ளுறுப்பை சோதித்த பாவிகள்-தன்

மாற்று மதத்தாரை மட்டும் இனம்கண்டு 

கூற்றுக் கிரையாக்கி கொன்ற கொடுஞ்செயலை 

ஏற்காது  எம்பார தம்


பெற்றிட்ட பிள்ளைகள் கட்டிய தோர்தாரம்

உற்ற உறவினர் மற்றவர் முன்னாலே  

ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொலைசெய்த 

பாவிகளைத் தேடிக்கொல் வோம் 








Apr 25, 2025

IPL -2025 -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி ??

IPL -2025  -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி??!


ஆறாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது : 

சேறிலே கால்புதைந்து ஒடத் தவிப்பவனைப் போல் 

ஆறிலே ஒன்றை மட்டும் இன்றுவரை வென்றதாலே 

மாரிலே சந்தனம்போல் மணக்கின்ற நிலைமை மாறி 

ஆர்.ஐ.பி. எழுதும் நிலைமை அய்யகோ வந்ததிங்கே !

ஏழாவது ஆட்டத்தின் வெற்றிக்குப்  பின் எழுதியது 

கருமேகக் கூட்டத்தின் விளிம்பினொளிக் கீற்றைப்போல்  
சரிபாதி ஆட்டங்கள் முடிகின்ற தருவாயில் *                * 7 out of 14
பரிதாப நிலைசற்றே மாறியதே ! இனிமேலே
ஒருவேளை பெருவாகை பெறும்வேளை வந்ததுவோ? 
 
எட்டாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது

விழுந்து கிடக்கின்ற சி.ஸ்.கே இனியேனும் 
எழுந்து நிற்குமிவ் வெட்டாவது  ஆட்டத்தில் 
என்ற நினைப்பினிலும் மண்விழுந்து மூடியதே 
வென்றதே மும்பை அணி!

இன்று ஒன்பதாம் ஆட்டத்திற்கு முன்பு 

பத்தாம் இடத்திலே பசைபோட்டு அசையாமல் 
கெத்தாய் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் சி.ஸ்.கே
ஒன்பதாம் இடத்துள்ள காபித்தூள் குழுமத்தை*      * sunrisers  
இன்றேனும் காட்டுமோ வென்று?

அன்புடனும்,எதிர்பார்ப்புடனும் 

ரமேஷ்