நீத்தார் நினைவு
இன்று மாளய அமாவாசை. எல்லா அமாவாசை நாட்களும் நீத்தார் நினைவு நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மாளயம் என்று அழைக்கப்படும் பதினைந்து நாட்களும் , நம் முன்னோரை நினைத்தும், வழிபட்டும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளோடு முடிவடையும் இந்த மாளயத்தில் ஒரு பாடல் மூலம் நம் முன்னோர்களை வணங்கும் விதமாக ஒரு வெண்பா --இதனுடன் சென்ற ஆண்டுகளில் நான் எழுதிப் பதித்த இரு சிறு பாடல்களையும் இணைத்து!
அன்புடன்
ரமேஷ்
ஈன்றதாய் தந்தையொடு முன்பிருந்த மூத்தாரின்
மூன்று தலைமுறையைப் பேரிட்டு - நோன்பிருந்து
எள்நீரை மட்டும் இறைத்துத் துதிக்காமல்
உள்ளத்தில் ஏற்றிவைப் போம் !
(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்
மாளயத் தன்றுநம் முன்னோரைக் கும்பிட்டு
எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே
சாலச் சிறந்த செயல்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின்
தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்;
நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில்
தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !
(கலிவிருத்தம்)