Search This Blog

Oct 2, 2024

நீத்தார் நினைவு

நீத்தார் நினைவு 

இன்று மாளய அமாவாசை.  எல்லா அமாவாசை நாட்களும் நீத்தார் நினைவு நாட்கள் என்றாலும், புரட்டாசி மாதத்தில் மாளயம் என்று அழைக்கப்படும்  பதினைந்து நாட்களும் , நம் முன்னோரை நினைத்தும், வழிபட்டும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளோடு முடிவடையும் இந்த மாளயத்தில் ஒரு பாடல் மூலம் நம் முன்னோர்களை வணங்கும் விதமாக ஒரு வெண்பா --இதனுடன் சென்ற ஆண்டுகளில் நான் எழுதிப்  பதித்த இரு சிறு பாடல்களையும் இணைத்து!

அன்புடன் 

ரமேஷ் 


ஈன்றதாய் தந்தையொடு முன்பிருந்த மூத்தாரின் 

மூன்று தலைமுறையைப் பேரிட்டு - நோன்பிருந்து 

எள்நீரை மட்டும் இறைத்துத் துதிக்காமல்   

உள்ளத்தில் ஏற்றிவைப்  போம் !

(இருவிகற்ப நேரிசை வெண்பா)


ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)


தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)

Sep 25, 2024

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை 

புடாபெஸ்ட்  நகரில் உலக நாடுகளுக்கிடையே நடைபெற்ற சதுரங்க ஒலிம்பிக்  போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவு, பெண்களுக்கான பிரிவு இரண்டிலும் இந்திய அணிகள் முதலிடத்தைப் பெற்று தங்கக்  கோப்பைகளைப் பெற்றனர்!

ஆண்கள் அணி,  ஆடிய பதினோரு ஆட்டங்களில் பத்து ஆட்டங்களை வென்றது; ஒரு ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி சம நிலையில் முடிந்தது. மொத்தம் 21 புள்ளிகளை எடுத்து கோப்பையை வென்றது.

பெண்கள் அணி பதினோரு ஆட்டங்களில், ஒன்பது  ஆட்டங்களை வென்றது; ஒன்றில் தோற்றது: மற்றொன்று வெற்றி-தோல்வி இன்றி சம நிலையில் முடிந்தது. மொத்தப் புள்ளிகள் 19 ஐ எடுத்து கோப்பையை வென்றது.

ஒரே நாட்டைச் சேர்ந்த இரு அணிகளும் ஒரே நேரத்தில் இந்தக் கோப்பைகளைத் தட்டிச் சென்றது ஒரு மிகப் பெரிய சாதனை. 

இதனுடன் கூட, இரு அணியைச் சேர்ந்த சில விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தனிப் பரிசாக தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த சாதனையைப் பாராட்டும் முகமாக ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 






சதுரங்க வேட்டையில் ஆண்கள் அணி    போட்டி 

பதறாமல் ஆடித்  தம் திறமையைக் காட்டி 

"பதினொன்றில் பத்து"என வெற்றியை ஈட்டி 

வென்றாரை  வரவேற்போம் மலர்மாலை சூட்டி.




ஆண்கட்கு  பெண்கள் சளைத்தவர் இல்லை  - இதைக் 

காண்பிப்போம்  எம்திறமைக் கிங்கேது  எல்லை - என  

அறைகூவி  வென்றார்   தங்கத்தில் வில்லை*   

பறைசாற்றி னார்இன்று மங்கையர்  மல்லை**    


* வில்லை = பதக்கம், badge 
**மல்லை = பெருமை, greatness   

 






 

Sep 16, 2024

குறள் மேல்வைப்பு வெண்பா - 25

 குறள் மேல்வைப்பு வெண்பா - 25

கொங்கணவர் ஒரு சித்தர். போகரின் மாணாக்கர். இவர்  பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணவர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனேகொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு நீண்ட நாள் தவத்திலிருந்து விழித்தமையால் ஆகாரம் உண்ண ஊருக்குள் வந்து ஒரு வீட்டிற்கு சென்று உணவு கேட்டார். அது அந்த அம்மையார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சையிட வந்ததால்  சினம் கொண்ட கொங்கணர், "என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி கடுங்கோபத்தோடு விழித்துப் பார்த்தார்ஆனால் அந்த அம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. இதுகண்டு கொங்கணவர் திகைப்புற்றார்! .உடனே அந்த அம்மையார் நகைத்து 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!" என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

சிலர் இந்த அம்மையார் திருவள்ளுவரின் மனைவி வாசுகி என்றும் கூறுவது உண்டு.

இது குறித்து ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா! ! இல்லறவியலில் இடம் பெற்ற குறள் எண் 58

அன்புடன்

ரமேஷ்

பின் குறிப்பு
இந்தக் காலத்துக்கு ஒத்துப்போகுமா என்பது கேள்விக்குரியதே!! இருந்தாலும் பதிவிடுகிறேன்!


"கொங்கணவா கொக்கென்று எண்ணினையோ என்னை"யெனத் 

தங்கணவன் சேவையையே முன்வைத்தாள் - மங்கையிவள்.-

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 

புத்தேளிர் வாழும் உலகு

                                                                                        (பல விகற்ப இன்னிசை வெண்பா)


குறள் 

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 

புத்தேளிர் வாழும் உலகு

பொருள் 

கணவனைப் போற்றி  கடமையைச் செய்யப் பெற்றால் , மகளிர் பெருஞ்சிறப்பையுடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

English version by Suththaanandha Bharatiyaar

Women who win their husbands' heart
Shall flourish where the gods resort.



Sep 12, 2024

நான் வசிக்கும் குடியிருப்பில் இருக்கும் நண்பரது மகளின் வளைகாப்பு , சீமந்த விழாக்களில் கலந்து கொள்கையில் எழுதிய பாடல்கள்! நண்பருடனும் அவரது குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொண்டேன்! 

எனது கனித்தோட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் நிறைவு குறித்து பதிவு செய்கிறேன். பதிப்பிற்கு  மட்டுமே!  பகிரவில்லை!

அன்புடன் 

ரமேஷ் 

வளைகாப்பன்று 


வளர்பிறையில் இந்நன்னாளில் அன்னையிவள் கருவறையில் 

வளர்கின்ற இளம்பிறையை  வரவேற்கும் முகமாக 

மங்களப் பெண்டிர் பலர் பிரியமுடன் அணிவகுத்து 

மங்கையிவள் தளிர்க்கரத்தில் வளையடுக்கும் நாளின்று  

எங்கள் இதயம்நிறை வாழ்த்து!


சீமந்தத்தன்று 


சீவிச் சிங்காரம் செய்து 

நன்பட்டில் ஆடை யுடித்தி 

 

பூவைத்து  பொட்டும் வைத்து 

பெண்ணவளை மணையில் ஏற்றி 


நாவிட்டு வேதியர்கள் 

நான்மறைநல் மந்திர மோதி 


நெய்விட்டு தீ வளர்த்து 

தேவியரின் அருளை  வேண்டி 


சீமந்தம்  காணும் பிரியா   

சீரும் சிறப்புடன் இருக்க

 

நாமிங்கு அனைவரும் கூடி 

நல்வாழ்த்துக் கூறிடு வோமே .




Sep 5, 2024

இறப்பில்லாமல் இருப்பது எப்படி?

இந்தப் பதிவிற்கு முன்னுரையும், விளக்கங்களும்  தேவையில்லை!

அன்புடன் 

ரமேஷ் 


இறப்பில்லாமல்  இருப்பது எப்படி?


புதைத்தால் ஆறடி எரித்தால் ஓர்பிடி 

இதைத்தான் அடைவோம் இறுதியிலே 

அதைத்தான் விதித்தான் ஆண்டவன் நமக்கு 

அதனை மாற்றுதல் இயலாதே!

எதைத்தான் நம்முடன் எடுத்துச் செல்வோம் 

எதுவும் நம்முடன்  வருவதில்லை - (நாம்) 

விதைக்கும் நற்செயல்  விளைக்கும் பயன்மட்டும்  

நிலைத்தே  நம்பின் வாழ்ந்திருக்கும் ! 

முதுமூப் படைந்து உயிர்த்துளி உதிருமுன் 

விதைகளை இன்றே ஊன்றிடுவோம்! 

இதை நாம் செய்தால் மற்றவர் மனதினில் 

இறப்பில் லாமல் வாழ்ந்திடலாம்!




Aug 30, 2024

தக்காளியில் எக்காளம்

தக்காளியில் எக்காளம் 

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் தக்காளிகளை ஒருவர் மேல் எறிந்தும், தக்காளிகளைப்  பிழிந்தெடுத்த சாற்றில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தும் ஒரு குதூகலக் கொண்டாட்டம் (???) நடைபெறுமாம்! 

இது குறித்து, என் நண்பர் ஒருவர் படத்துடன் அனுப்பிய செய்தித் துணுக்கு இது!  இந்தப் படத்தின் உந்துதலால் நான் எழுதிய ஒரு குறும்(புப்) பாடல்-வெண்பா வடிவில் !

அன்புடன் 

ரமேஷ் 






தக்காளிச்  சேற்றினிலே  முங்கிக் குளித்தபடி 

எக்காளம் இட்டிடுவார் கட்டிப் பிடித்திட்டு  

வெட்கிச் சிவக்கவில்லை கன்னியிவள் கன்னங்கள் 

தக்காளிச் சாறுபட் டே   .  

                                                                                  (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 

Aug 22, 2024

மழையும் கவிதையும் - ஒரு சுழற்சி

மழையும் கவிதையும் - ஒரு சுழற்சி 

சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பனர்கட்டா அருகில் உள்ள ஒரு விடுமுறை ஓய்வகத்தில்  தங்கி இருக்கையில் , வானில் மழைநீர் சுமந்து மிதக்கும் கருமுகில் கூட்டத்தைக் காணுகையில், மனதில் எழுந்த ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




கருத்த நிறத்தில் நீரைச் சுமந்து வானில் மிதக்கும் மேகங்கள் 

கருவில் கருத்தை நிறைத்து வைத்து மனதில் மிதக்கும் எண்ணங்கள் 

மலையை மேகம்  தொடுகின்ற  போததன்  தேகம் குளிர்ந்து மழை பொழியும் 

அலையும் எண்ணம்   இதயம்  தொடுகையில்    எழுத்தோ  டிணைந்து  கவியாகும்  

பொழியும்  மழையால் நதிநீர்  நிறைந்து கழனியில்  பாய்ந்து வளம் செழிக்கும் 

விழுமிய மொழிதனில்  எழுதிய கவிதையைப்  பழகியோர்  மனங்களில் விழிப் பெழும்பும் . 

நதிநீர் ஓடிக்  கடலினுள் கலந்து  கடல்நீர் மீண்டும் முகிலாகும் 

அதுபோல் கவிதையும் கற்பவர் மனதினில் கருவாய் மறுபடி உருவாகும்