Search This Blog

Oct 17, 2025

தொலையும் தூய்மை

தொலையும்  தூய்மை 

படைப்பு தூய்மையாக இருந்தாலும் , அந்தத் தூய்மைத் தன்மை , வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் போது, சிதைவடைந்துவிடுகிறது! மூலத்திலிருந்து பிரிவது , எப்போதும் தூய்மையின் இழப்பிற்கு வழி வகுக்குமோ?

 

அன்புடன் 

ரமேஷ் 





முகில்விடும் மழைத்துளி தரைவிழும்  வரைதான்

தெரியும் அதன்தன் தனித்துவம் 

தரைதொட்ட உடனே  கரைபல கலந்து  

அதுதன்  தூய்மையைத்  துறந்திடும் 


கருவிட்ட  உயிர்த்துளி  தரைதொடும் வரைதான் 

நிலைத்திடும்  அதனது நிர்மலம்

உருப்பெற்று   உலகுடன் கசடுறக்  கலந்தபின்   

தொலைந்திடும் அதனது நற்குணம் 


காற்றினில் மிதக்கும் அழகிய சிறகுகள்

தரையில் விழுந்ததும்  குப்பைகளே

தோற்றம் மாறா திருப்பினும்  மாற்றம்

பார்ப்பவர் மனதினில் விளைந்திடும் 


தோன்றிய உடனே  எல்லாப் பொருளும் 

தூய்மையில் தோய்ந்து துலங்கிடுமோ?

தாய்மையை விட்டவை  விலகிய உடனே

தூய்மையும்  தேய்ந்தே  மாய்ந்துடுமோ?





Oct 6, 2025

விடை தெரியாக் கேள்விகள்

விடை தெரியாக் கேள்விகள் 


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, "இவை இப்படித்தான்" என்று நிறுவப்பட்டு நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,   அடிப்படை உண்மைகள் சில.  அவை  வளி, ஒளி, நிலம் நீர்,நெருப்பு போன்ற இயற்கைக் சக்திகளின் தன்மைகள்!

அதேபோல் , இம்மனித வாழ்வில் நாம் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிற, தத்துவ விவாதங்களுக்கு அப்பாற்பட்ட,  சில உணர்வுகளும் மதிப்புகளும்  சில உண்டு..  அன்பு, நட்பு, கருணை போன்ற இவைகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் நம் வாழ்வின் இம்மை, மறுமை பற்றிய சில விடை தெரியாக் கேள்விகள் காலம் காலமாக  கேட்கப்பட்டு வருகின்றன. நசிகேதன் என்ற இளைஞன்  எமதர்மனிடன் கேட்ட கேள்விகளும் இவைதான். 

இந்த கேள்விகளுக்கு பதில்,  தத்துவ விவாதங்களில் ஈடுபடுவதை விட, OK அறநெறிக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்தல் மூலமே கிடைக்குமோ?

இது பற்றிய, அலைந்து திரியும் எண்ணங்கள் கொண்ட,  ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 



தென்றலுக்குத் தடையில்லை 

ஒளிக்கதிர்க்கு எடையில்லை

தண்ணீருக்கோர்  வடிவில்லை  

விண்வெளிக்கோ   உடையில்லை  

----------இந்தப் பிறவியின் பொருள் என்ன      

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை   


நட்பை  வாங்கக் கடையில்லை 

கருணைக் கென்றும் மடையில்லை 

அன்பை வெல்லப்  படையில்லை

உயிரை   மிஞ்சிய கொடையில்லை 

----------இப்பிறவிக் கப்பால் இருப்பதென்ன 

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை


நசிகே தனுமே  எமனிடம் எழுப்பிய

இந்தக் கேள்விகள்  புதிதில்லை

பன்னூல் படித்தும் பண்டிதர் உரைத்தும் -நான் 

உணர்ந்து புரிந்திடும்   பதிலில்லை 


விடையே யில்லா,  திருப்பினும் புரியாக்  

கேள்விகள் இங்கே பலவாகும் 

அவற்றின் புரிதலைத்  தேடி அலைந்தால் 

வாழ்நாள் முழுதும் செலவாகும் 


நல்லதை நினைத்து நல்லதைச் செய்து 

நன்றே வாழ்வை நடத்திடுவோம்   

இன்றோ என்றோ இக்கேள் விக்கு  

பதிலும் தானே கிடைத்துவிடும்


அன்புடன் 

ரமேஷ் 



Oct 1, 2025

கலைமகளைத் தொழுதிடுவோம்

கலைமகளைத் தொழுதிடுவோம்


நவராத்திரியின் கடைசி நாளான நவமித் திதி , நாம் கலைமகளைப் பூசிக்கும் தினம். 

மனத்தின்,  ஆன்மாவின் தூய்மையைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சிதரும் அன்னை தன்  கரங்களில் ஏந்தியிருக்கும் வீணையும் , புத்தகமும்  குறிப்பது கலைகளின் இணைப்பை.

கல்விக்குத்  தெய்வமாக நாம் மட்டும் சரஸ்வதியை வழிபடுவதில்லை.  பல மதத்தினரும், பண்பாட்டினரும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு உருவங்களில் கல்வித் தேவதைகளை வணங்கி வந்திருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் இந்த பண்பாடுகள்  அழிந்து போன போது, அவைகளுடன்  இந்த  வழிபாட்டு முறைகளும்  சிதைந்து போயின. ஆனால் நம் பாரதப் பண்பாடும், அப்பண்பாட்டின் சின்னங்களான வெவ்வேறு வழிபாட்டு முறைகளும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன.

இன்று நாம் கலைமகளைப்  பூசிக்கும் இத்தினத்தில், கலைமகளைப்  பற்றியும் ,  வேறு பண்பாடுகளில் - மதங்களில்-  குறிப்பிடப்பட்டு  வணங்கப்பட்ட கல்வித் தெய்வங்களைப்  பற்றியும் ஒரு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில் !

அனைத்துக் கல்வித் தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டுதலுடன் 

உங்கள் அன்பின் 

ரமேஷ்  





வெண்பட்டு ஆடை உடுத்தாளின், தன்கரத்தில் 

பண்ணெழுப்பும் வீணை எடுத்தாளின்- தண்கருணைக்* 

கண்பார்வை பட்டாலே நற்கல்விக் கண்திறக்கும் 

மண்வாழும் மாந்தர்க்கெல் லாம்  


மற்ற மதங்களிலும் பண்பாட்டுச்  சாரலிலும்  

ஓத்தபிற தெய்வங்கள் உண்டாமே - பட்டியல் 

இட்டவற்றைப் பார்ப்போம் சரஸ்வதியை நாம்வணங்கும் 

சத்தான நன்னாளில்  இன்று   




அப்பாலோ ஆணென்றும்#  அத்தீனா பெண்ணென்றும்# 

செப்பித்  தொழுதார்  கிரேக்கர்-  அதன்முன்னர் 

மெர்க்குரி ஆணென்றும்  பெண்மினர் வாவென்றும்   

ரோமர்கள் பேரிட்ட  னர் 





BENZEITEN

ஷிண்டோ மதத்தினரின் ஆண்கடவுள் தென்ஜின்னே !  

பெண்கடவுள் பென்சய்ட்டென் வாக்தேவி**  யின்னுருவாம்  !

ஈகிப்து நாட்டினரின் ஆண்பெண்பால்  தெய்வங்கள் 

தோத்துடன் சேஷத்தும் தான்!  


  

வேற்றுப்பண் பாட்டினர்கள் தம்கல்வித் தேவதையை   

போற்றி வணங்குவதை  விட்டே மறந்தாலும்    

இந்தியப்பண் பாட்டாரோ  நெஞ்சில் நிலைநிறுத்தி 

வந்தனை செய்கின்றார்  நன்று   


* தண் கருணைக்  கண்  = குளிர்ந்த,  கருணைகாட்டும் விழி 

** வாக்தேவி = சொல்லின் அரசி. . 

பென்சய்ட்டன்  என்னும் பெண் தெய்வம், சரஸ்வதியைப் போன்றே கையில் ஓர் இசைக்கருவியை ஏந்தியிருப்பதைக் காணலாம் 

# மற்ற பண்பாடுகளில் கல்வித் தெய்வங்களாக, பெண் தெய்வத்தோடு ,ஒரு ஆன் தெய்வமும் குறிப்படப்பட்டுள்ளதைப்  பார்க்கலாம். நம் பண்பாட்டிலும், விநாயகரை ஆண்  கல்வித் தெய்வமாக வழிபடுதல் உண்டு.


Sep 4, 2025

அமைதிப் பள்ளத்தாக்கில்....

அமைதிப் பள்ளத்தாக்கில்......


"அமைதிப் பள்ளத்தாக்கில்" அமர்ந்து எழுதிய ஒரு பாடல்! 

அன்புடன் 

ரமேஷ்.



எண்ணக் குவியல்களின் இரைச்சல்களைத் துறந்து 

அண்ட வெளிபரப்பின்  ஆழத்திற் குள்பறந்து 

அமைதிப்  பள்ளத்தாக்கில்    தனியாகவே    அமர்ந்து  

இமைமூடி எண்ணத்தின்  சுமையிறக்கி சுவாசிக்கிறேன்


மவுனமெனும் மொழியில்நான் எழுதியபல  கவிதைகளையென் 

செவிமட்டும் கேட்டுணர ரகசியமாய் வாசிக்கிறேன்

இயற்கையின் இடையமர்ந்து  மோனநிலை மடியமர்ந்து 

தனிமைதரும் இனிமையினை  நானுணர்ந்து  நேசிக்கிறேன் 

  

கண்மூடித்  தவமிருந்து என்னையே  நான்திறந்து 

இப்பிறவியின் காரணமே  என்னவென யோசிக்கிறேன்

ஒளிவளிவெளி நிலம்நீரை  எண்ணற்ற உயிரினத்தை 

படைத்தும் காத்தும் அழிக்கும் இறைவனைநான் பூசிக்கிறேன் 


என்னுள்ளே யேயிறைவன் இருக்கின்றான் என்றாலோ  

கண்டுணரும் வரத்தையவன்  வழங்கிடவே யாசிக்கிறேன்


அன்புடன்

ரமேஷ் 



  




முத்தமிட முகில்தொட்டு நீண்டுயர்ந்த மலைநடுவில் 

சத்தங்கள்  என்றென்றும் சேராத தானதொரு 


Aug 15, 2025

சுதந்திர தின வாழ்த்துகள்

 சுதந்திர தின வாழ்த்துகள் 




மதமினம் பற்பல   மொழிகள் என்றும் 

----வடகுட குணதென்* திசைகள் என்றும்

விதவித வெவ்வெவ் வேறு பிரிவுகள் 

----பலவு மிருந்தும்  அனைவரும் ஒன்றாய் 

இதந்தரும் இனியவிச் சுதந்திர நாளில் 

----இணைந்து  பாரதத் தாயினைப் போற்றி 

சதம்பல யுகம்** இனும் சிதறுதல் இன்றி 

----சிறப்புடன் இருந்திட வாழ்த்துகள் சொல்வோம் .


எல்லைக்  கோட்டின் இருபுறங் களிலும்   

----தொல்லை யளிக்கும் தெருநறை ^ அழிக்கும்  

      ----வல்லமை பெற்றவள் விளங்கிட வாழ்த்து! 

வரம்புகள் மீறி வம்புகள் செய்யும்   

---- டிரம்பின் காப்பு வரிகளை*** எதிர்த்து 

      ---- திறம்பட மாற்றுகள் கண்டிட வாழ்த்து 

நித்தம் நித்தம் புத்தம் புதிதாய் 

---- பற்பல தொழில்வகை  வித்துகள் விதைத்து 

    ---- இந்திய இளைஞர் எழுந்திட வாழ்த்து 

சிறுதொழில் செய்வோர் சிறந்திட வாழ்த்து 

-----பெருந்தொழில் செய்வோர் பெருகிட வாழ்த்து 

     ----உழவுத் தொழிலோர் உயர்ந்திட  வாழ்த்து

மொத்த உள்நாட்டு ஆக்கத்  திறனை# 

----மெத்த உயர்த்தி மூன்றாண்டுகளில் 

    ----மூன்றாம் இடத்தைப் பிடித்திட வாழ்த்து 


அன்புடன் 

ரமேஷ் 


^ தெருநர் = பகைவர் 

* வடகுட குணதென் = North India, Western India, Eastern India and South India divisions

**  சதம் பல யுகம் = பல சத  யுகங்கள் என்று படித்தறிக 

*** காப்பு வரிகள் = tariffs

# உள்நாட்டு ஆக்கத்  திறன் =  GDP




Aug 10, 2025

உரசல்

உரசல்கள் பலவிதம்!
சில உரசல்கள் மென்மையானவை. 
வேறு சில வன்மையானவை.
வெவ்வேறு விதமான உரசல்கள் விளைக்கும் விளைவுகள் பற்றி ஒரு கற்பனை!
அன்புடன் 
ரமேஷ் 

உரசல் 

8




மலையோடு  முகிலுரச மழை பிறக்கும்
மலரோடு காற்றுரசி  மணம் பரப்பும்.
கல்லோடு உளியுரச சிலை பிறக்கும்
சொல்லோடு கருத்துரச கவி பிறக்கும்

மண்ணோடு நீருரச பயிர் தழைக்கும்
வண்டோடு மலருரசி தேன் சுரக்கும்  
கண்ணோடு கண்ணுரச காதல் பிறக்கும் 
பெண்ணோடு ஆணுரசல்  சரசம் ஆகும்  

பஞ்சோடு பொரியுரச தீ பிறக்கும் 
நெஞ்சோடு நினைவுரச துயர் மறக்கும் 
வாளோடு வாளுரச வீரம் பிறக்கும் 
தோளோடு தோளுரச நட்பு தழைக்கும் 

தென்றல்குழ லுரசுகையில் இசை பிறக்கும்
கன்றுதாய் மடியுரச பால் சுரக்கும்
உன்னோடு  உன்னையே உரசிக் கொண்டால்
உண்மையெது என்கின்ற ஞானம் பிறக்கும்.
 

அன்புடன் 

ரமேஷ் 








Jul 26, 2025

சதுரங்க வேட்டை --சாதனை படைக்கும் இந்திய பெண்கள்

சதுரங்க வேட்டை --சாதனை படைக்கும் இந்திய பெண்கள்  

இப்போது நடைபெற்று வரும் உலக மகளிர் சதுரங்கப் போட்டியின்  இறுதிச் சுற்றில்  முதல் முறையாக இரு இந்தியப்  பெண்கள் மோதுகிறார்கள்- கொன்னூரு ஹம்பியும் , திவ்யா தேஷ்முக்கும் .

 இதைப்  பாராட்டி ஒரு சிறு பாடல் வெண்பா வடிவில்!

அன்புடன்

ரமேஷ் 

பின் குறிப்பு : இதைப் பதிக்கும் இந்நேரத்தில்  வந்த செய்தி ----  ஹம்பி இறுதிப் போட்டியில் வென்று விட்டார்.




பன்னாட்டு பெண்டிர் சதுரங்கப் போட்டியிலே 

கொன்னூரு ஹம்பியுடன் முன்னேறி மோதுகிறாள்   

இன்னாளில் இன்னுமொரு   இந்தியப்பெண்* ;  ஈவர்க்கு 

கண்ணேறு நேராமல் வேண்டு. 

                                                                    (பலவிகற்ப இன்னிசை வெண்பா) 

* திவ்யா தேஷ்முக்