Search This Blog

Jan 31, 2025

GCT 70 நண்பர்களின் கூடல்

GCT 70 நண்பர்களின் கூடல் 

கோவை அரசினர் பொறியியற்கல்லூரில் இருந்து 1970 -ம் ஆண்டு பட்டம் பெற்று நாங்கள் வெளியே வந்து இப்போது 55 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிகழ்வை நினைகூறும் விதமாக நண்பர்கள் பலரும் மைசூரில் ஒன்று கூட ஆயத்தமாகி வருகிறோம். 

ஐந்து  ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பொன் விழாக் கூடலுக்குப் பிறகு, பெரிய அளவில் நண்பர்கள் இணையப்  போகும் இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தவும், அதற்கான மொத்தச் செலவையும் தானே ஏற்கவும் முன்வந்திருக்கிறார் நண்பர்                                எம்.ஜீ.எம் போர்ஜிங் பாரத் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான  முரளிதர்  பகவத். 

இந்நிகழ்ச்சியைப் பற்றியும், நண்பர் முரளியின் நேர்த்தியான செயலுக்கு நன்றியுரைக்கும்  விதமாகவும் ஒரு சிறு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 



தந்தைவழி தாய்வழியும்  கைப்பிடித்த கன்னிவழி 

வந்தடைந்த சொந்தங்கள் மட்டும் உறவல்ல

ஒன்றிணைந்து கல்வியினைக் கற்றிட்ட நண்பர்கள் 

என்றும் உறவென் றறி.


ஆண்டுகள் ஐம்பத்து ஐந்து  கழிந்தபின் 

மீண்டும் முரளியின் முன்னெடுப்பால்  - ஈண்டிங்கு

பண்டுநாட் பல்கதைகள் பேசிக் களிக்கவே

நண்பர்கள் சேர்வார் பலர்.                 


வெவ்வேறு நாடுகள் வெவ்வே  றிடங்களில் 

எவ்வெவர் எங்கெங் கிருப்பினும் -  அவ்வவர் 

தந்தேகத்  தொந்தரவை  சற்றும் கருதாமல்  

சந்திப்பில் சேரவரு  வார்


தங்க இடத்தோடு உண்ண அறுசுவையும்

எங்களுக் கன்போ டளிப்பவன் - தங்கத்தை 

ஒத்த மனத்தினன் நண்பன்  முரளிக்கு

மெத்தவும் நன்றியுரைப் போம் 


   



Jan 27, 2025

பிரதோஷப் பாடல் - 50

பிரதோஷப் பாடல் - 50 

இன்றைய பிரதோஷத்தன்று நாகலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கையில் எண்ணத்தில் எழுந்த பாடல்.

இந்த ஐம்பதாவது பாடலுடன்,  இதுவரை எழுதி வந்த பிரதோஷப் பாடல் தொடரை நிறைவு செய்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 



அகரஉகர மகரங்கள் ஒன்றிணைந்த ஓமினை 

சிகரமாகச் சேர்த்துச் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரம்  *

பகருவோர்க்கு பலமுறை பலனளிக்கும் மந்திரம் 

நகரவேண்டி நந்தியை நந்தன் சொன்ன மந்திரம் 

சிதம்பரத்தில் நடனமாடும் திகம்பரனைத் துதித்திடும்  

நிகரில்லாத மந்திரம் நமச்சிவாய மந்திரம் 

உகந்து நாளும் காலை மாலை வேளைதொறும் ஓதுவர் 

இகபர மிருவுலகிலும் இன்பமாக வாழுவர்!


* ஓம் நமசிவாய  

Jan 16, 2025

நாளுமோர் நற்கவிதை


நாளுமோர் நற்கவிதை 

என் கல்லூரி நண்பர்கள்பலரும்  இணைந்துள்ள வாட்ஸஅப் தளத்தில் நண்பர் வேலாயுதம் தினந்தோறும் ஒரு கவிதை எழுதி பதித்து  மகிழ்வித்து வருகிறார்! அன்னாரின் திறமையை வியந்துப் போற்றி ஒரு பாடல் - வெண்பா வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 


மடையுடைத்துப் பாய்கின்ற வெள்ளம்போல் -  தங்கு 

தடையின்றி வீசுகின்ற தென்றல்போல் -  நாளும்  

இடைவெளிகள் இல்லாமல் பாடல் புனைந்தளிக்கும் 

சொல்வேலை நான்போற்று வேன்.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)