Search This Blog

Aug 10, 2025

உரசல்

உரசல்கள் பலவிதம்!
சில உரசல்கள் மென்மையானவை. 
வேறு சில வன்மையானவை.
வெவ்வேறு விதமான உரசல்கள் விளைக்கும் விளைவுகள் பற்றி ஒரு கற்பனை!
அன்புடன் 
ரமேஷ் 

உரசல் 

8




மலையோடு  முகிலுரச மழை பிறக்கும்
மலரோடு காற்றுரசி  மணம் பரப்பும்.
கல்லோடு உளியுரச சிலை பிறக்கும்
சொல்லோடு கருத்துரச கவி பிறக்கும்

மண்ணோடு நீருரச பயிர் தழைக்கும்
வண்டோடு மலருரசி தேன் சுரக்கும்  
கண்ணோடு கண்ணுரச காதல் பிறக்கும் 
பெண்ணோடு ஆணுரசல்  சரசம் ஆகும்  

பஞ்சோடு பொரியுரச தீ பிறக்கும் 
நெஞ்சோடு நினைவுரச துயர் மறக்கும் 
வாளோடு வாளுரச வீரம் பிறக்கும் 
தோளோடு தோளுரச நட்பு தழைக்கும் 

தென்றல்குழ லுரசுகையில் இசை பிறக்கும்
கன்றுதாய் மடியுரச பால் சுரக்கும்
உன்னோடு  உன்னையே உரசிக் கொண்டால்
உண்மையெது என்கின்ற ஞானம் பிறக்கும்.
 

அன்புடன் 

ரமேஷ் 








10 comments:

  1. கவிதை சொல்வது உரசல்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். விளையும் பயன் பல விதம்.உரசிப் பார்க்காமல் படித்தாலே பயன் கூட்டும் கவிதை இது.

    ReplyDelete
  2. முகிலோட முகில் உரசினால் இடி ஒலி பிறக்கும் ; கல்லோடு கல் உரசினால் இட்லி கூட பிறக்கும் ! உங்களோட நாங்கள் உரசினால் சிலேடை பிறக்கும்!! ஆகவே இன்று முதல் உங்களுக்காக "கவிஉரசு "என்ற பட்டம் சூட்டுகிறோம்!!

    ReplyDelete
  3. அன்புள்ள வெங்கட்

    ReplyDelete
  4. கற்பனையுடன் திறமை உரசி காகித்ததுடன் பேனா உரசி பிறந்த கவிதை அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. ஆகா! அருமையான கவிநயத்துடன் கூடிய கருத்து! மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  5. அருமையான கவிதை ரமேஷ். எந்த வித உரசலும் இல்லாத வாழ்க்கை போலியே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, சிவா!

      Delete
  6. Good evening Sir.

    ReplyDelete
  7. இரண்டு நாட்களுக்கு முன் தான் ரமேஷிடமிருந்து கற்பனை மேகங்கள் எண்ண மலைகளுடன் உரசாமல் கவிதை மழை வரவில்லையே என்று நினைத்தேன். இன்று அருமையான உரசல் மழையில் நனைந்தேன்‌ ஏக்கம் தீர்ந்து தாகம் தணிந்தது.Super

    ReplyDelete