Search This Blog

Mar 18, 2018

நண்பகல் குறுந்துயில் - siesta

நான் பணியிலிருந்து ஒய்வு பெறுவதற்கு முன், வாரம் முழுவதும்  ஓடியாடி வேலை செய்து களைத்தபின், வாரக்கடைசியில், ஞாயிறன்று பகல் உணவை முடித்தபின் ஒரு சுகமான குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். எந்தக் காரணங்களாலோ அது முடியாமற் போனதென்றால், அந்த வாரமே வீணாகிப் போய்விட்டது போல் ஒரு எரிச்சல் ஏற்படும்.

இப்போது, பணியிலிருந்து ஒய்வு பெற்ற  பின், எல்லா நாளும் ஞாயிற்றுக் கிழமைதான். தினமும் மத்தியானம் "ஹாயாக" ஒரு தூக்கம் போடுவது வழக்கமாகிவிட்டது.

 வயதானவர்கள் எல்லோருக்குமே இந்த நண்பகல் குறுந்துயில் 
சுகமான ஒரு அனுபவம்.

இதை பற்றி ஒரு பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 


   
நண்பகல் குறுந்துயில் (அ )
 பகல்தூக்கம் -

இரவுநேரம்    இருட்டியபின்   உறங்கிடும்  பழக்கமே   
இயற்கையாக   எவருக்கும்  வருவதுதான் ஆயினும் 
பகல்நேர வேளையிலே பந்தியை முடித்தபின் 
சுகமான சிறுதூக்கம் சிலருக்கே வாய்த்திடும்!

நண்பகலின்  குறுந்தூக்கம் நற்பயனை  நல்குமோ
உண்டவுடன் உறங்குதலும் உடலுக்குத் தீமையே! 
உணவும் செரிக்காது எனப்பலரும்  கூறினும் 
உண்டகளைப் பாறும்சுகம்  தொண்டருக்கும் தேவையே!

பன்னிரண்டு மணியளவில் பகலுணவை முடித்தபின் 
சன்னல்திரைச் சீலைகளை நன்கிழுத்து  மூடியே  
மின்விசிறிக் கருவியுமே  மிதமாகச் சுழன்றிட   
கண்மூடிக் கட்டிலிலே கால்நீட்டித் துயில்வராம்.

சாய்வுநாற்  காலிதனில் சாய்ந்துகாலை நீட்டியே 
ஓய்வாக உட்கார்ந்து கண்கள்பாதி  மூடியே  
வாயோரம் நீர்வடிவது  மறியாமல் மென்மையாய்  
வாய்திறந்து குறட்டையோடு  உறங்குபவர்  ஒருவகை.

பகல்தூக்கம் தவறென்று போதனைசெய் பவருமே  
சொகுசாய்மெத்  திருக்கை*மேல்  சாய்ந்தே அமர்ந்தபின்          * sofa 
கைதாங்கி*  மேலேஓர்  கால்தூக்கி நீட்டியே                                        *arm rest 
மெய்மறந்து கண்மூடி தோளில்தலை   சாய்ப்பராம்.

மதியநேரத்   தூக்கத்தில் கண்கள்செருகி  இருக்கையில்  
சதிசெய்வோர்  சிலர்வந்து கதவுமணியை அழுத்துவார்.
இதயத்தில் ஈட்டியினை பாய்ச்சுதர்க் கிதுவொப்பென   
விதித்திதுவோர் குற்றமென சட்டமொன்று போடுவோம்.  .


உதயத்தில் மெய்குறுக்கி உடல்மூடி போர்வையுள்   
கதகதப்பாய்  துயிலுதற்கே   முதலிடம்பலர் அளிப்பினும்  
மதியநேர தூக்கமே  அதனினுமிகச்  சிறப்பென 
முதியோரின் ஓட்டுக்கள் முழுதாகக்  கிடைத்திடும்!


பின் குறிப்பு : 

அதிகாலை குளிரில் , அலறி எழுப்பும் அலாரத்தை அணைத்துவிட்டு, போர்வையை  மீண்டும் இழுத்துப் போர்த்து, முகத்தை அதனுள் புதைத்துக்கொண்டு தூங்கும் :செகண்ட் இன்னிங்ஸ் " தூக்கமும் சிறந்ததுதான்.  

அதிகாலைத் தூக்கத்தைப் பற்றி நான் எழுதிய ஒரு பாடலின் 'லிங்க்" இதோ.

http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_30.html

இதையும் படித்து எந்த வகைத் தூக்கம் சிறந்தது என்று நீங்களே முடிவு செய்யுங்களேன்!




3 comments:

  1. சந்தேகத்துக்கு இடமில்லாமல் பகல் தூக்கம்தான் . மதியம் உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து இனிமையாக , இதமாக சுழலும் மின்விசிறியின் காற்றில் கனவுகளின் தொல்லையில்லாமல் நிம்மதியாக தூங்கி எழுந்து முகம் கழுவி சிறிது சோம்பலுடன் அமருகயில்,இல்லாள் இனிய முகத்துடன் ஒரு filter காபியும் தந்தால் , ஆஹா பேஷ் பேஷ் ....... ...நண்பா, சந்தேகத்துக்கு இடமில்லாமல் பகல் தூக்கம் தான்

    ReplyDelete
    Replies
    1. "ஒரு வேலையும் செய்யாம சும்மா தூங்கி தூங்கி எழுந்தபின்னே காபி வேற கேக்குதோ" என்று சொல்லாமலிருந்தால் சரி!

      Delete
  2. அருமை நண்பர்களே ராமஸ்வாமி & ரமேஷ்

    தூக்கம் என்று வந்துவிட்டால் எல்லா தூக்கமும் எனக்கு ஒன்றுதான். முற்பகல் குறுந்தூக்கம் பிற்பகல் குறுந்தூக்கம் , இரவு தூக்கம் எல்லாமே எனக்கு சுகம் தான். படுத்தமாத்திரத்தில் தூக்கம் வருவது என் தாய் எனக்கு கொடுத்த வரப்பிரசாதம். வாழ்க எல்லா தூக்க வகைகளும் வளர்க அதைப்பற்றி எழுதிய நீங்கள் இருவரும்.

    உங்கள் உண்மை நண்பன்
    ராம்மோகன்

    ReplyDelete