Search This Blog

Mar 3, 2017

போட்டு உடை ! ஞானம் விதை!

போட்டு உடை ! ஞானம் விதை!

எதையும் போட்டு உடைத்தால் பொருள்கள் சேதப்படும்.
இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு !

இலக்கணத்தை "உடைத்தால்" பிறக்கும் புதுக்கவிதையைப் போல --
நாம்  நம்முடன் ஒட்டியிருக்கும் சில குணங்களை   "உடைத்தால் "

நல்லவை நடக்கும்!
ஞானம் பிறக்கும் !

அன்புடன்
ரமேஷ்



போட்டு உடை ! ஞானம் விதை!



எள்ளை  உடைத்தால் எண்ணெய் வரும் - நாட்டின் 
எல்லை உடைந்தால்  தொல்லை வரும்
உள்ளம் உடைந்தால் தோல்வி வரும்- மனக்  
கள்ளம் உடைத்தால்  நேர்மை  எழும் .

வானம் உடைந்தால் மின்னல் வரும்
நாணம் உடைந்தால் மானம் கெடும்.
தானெனும் தருக்கினைப் போட் டுடைத்தால்
வாழ்க்கையின் வருத்தங்கள் விலகி  விடும்.

மேகம் உடைந்தால் மழையும் வரும்- பண 
மோகம் உடைந்தால்  சோகம் விடும்.
பொய்கள்  உடைந்தால்  உண்மை வரும் - செய் 
தீமை உடைத்தால் நன்மை வரும்

கரைகள் உடைந்தால் வெள்ளம் வரும்- உ(ள்)ளக் 
குறைகள்  உடைந்தால் நிறைவு  வரும்
சிரிப்பு உடைந்தால் அழுகை வரும்- மனச்
செருக்கு  உடைத்தால் பணிவு  வரும் .


முட்டை உடைந்தால்  குஞ்சு வரும் -சிறு 
விதைகள் வெடித்தால் பிஞ்சு வரும்
பருத்தி வெடித்தால் பஞ்சு வரும்- சுய   
கருவம் உடைத்தால் இஞ்சை*  விடும்.                                 இஞ்சை=* துன்பம்

தென்னங்  காயைப் போட்டுடைத்தால் 
இனிய இளநீர் பருக வரும் 
தன்னகங் காரம்  தனை  உடைத்தால் 
தன்முனைப்* பொழிந்து  தெளிவு  வரும்.           * தன்முனைப்பு=ego 

இலக்கியம் தருவது  பழங் கவிதை - அதன் 
இலக்கணம் உடைத்தால்  புதுக்  கவிதை-  நீ 
பலகலை பயின்ற பண்டிதன் எனினுமுன்*         *எனினும் உன்    
தலைக்கனம் உடைத்தே  ஞானம் விதை!


------------------------------------------------------------------------------------








1 comment:

  1. அப்படி போட்டு உடை நண்பனே

    ReplyDelete