Search This Blog

Aug 24, 2015

விநாயகர் பதிகம் - பகுதி -1




விநாயகர் பதிகம் - பகுதி -1

சென்ற பதிவில் சொல்லியிருந்தபடியே பதிகத்தின் பாடல்களை , தகுந்த விளக்கக் குறிப்புகளுடன் எழுதி இருக்கிறேன். ஆனால் இந்த முறை முதல் ஐந்து பாடல்களை மட்டும் வெளியிடுகிறேன். ( பாதி மட்டும் வெளியிடுவதால் இதை பாதிகம் என்று சொல்லலாமோ?).

மற்றவை அடுத்த வாரங்களில்.



பாடல்
குறிப்பு .
வானுறை ஈசரும்  ஏனைய தேவரும் 
கானுறை மாத்தவ ஞானியோரும்  ---தீநிறை
வேள்விகள் செய்யுமுன் வேண்டி வணங்குவது 
வேழமுகன் பாதந்  தனை                              (1)
எந்தக் காரியத்தையும், , கடவுளர்கள்,பிற தேவர்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் கூட விநாயகனைத் தொழுதா பினனரே தொடங்குவார்கள். இல்லையேல் காரியம் வெற்றி ஆகாது! சிவபெருமான் ஒரு சமயம் போருக்குச் செல்லுமுன் இதைச் செய்ய மறந்ததால் , அவரது தேர்ச் சக்கரம் உடைந்தது என்பது புராணம்.
காரியம் யாவையும் எண்ணித்  தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவர்     --- கரிமுகத்
தூயவன் மாயோன்  மருகனுறை கோயிற்கு
போயவன்  காலில் விழுந்து                          (2)
தெய்வங்களே   இப்படி என்றால், இவ்வுலகு மாந்தர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பூசித்த பின்னரே காரியம் தொடங்குவர்.
காவியமாம்  பாரதக்  காதையினைப்  பன்னூறு 
பாயிர மாய்ச்செய்த  மாமுனிவன்  -வாயுரைக்க
தந்தம் உடைத்தெழுது  கோலாகச் செய்தானை  
வந்தனை செய்வோம் தினம்  .                        (3)
வேதவியாசர் சற்றும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பாரதக் கதையைச் சொல்லவேண்டும் என்றும், அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்லுவதைப் புரிந்து கொண்டு , சற்றும் நிறுத்தாமல் விநாயகர்  எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். அவர் வேகமாக எழுதும்போது எழுதுகோல் உடைந்துவிட்டது! என்ன செய்வது? உடனே விநாயகர் ஒரு தந்தத்தை உடைத்து , அதை எழுத்தாணியாக உபயோகித்து பரதக் கதையை எழுதி முடித்தார்!  அதை விளக்கும் பாடல் இது.
கைலையில் குடிகொண்ட பெற்றோர் தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு              மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப்  பற்று.                       (4)
விநாயகர் பற்றிய கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கதை-- அன்னையையும் தந்தை வலம் வந்து மாங்கனியைப் பெற்ற கதை.  விளக்கம் எதுவும் தேவையில்லை.      (4)
குறுமுனி  அகத்தியன் கைலயம் சென்றவண்
இருந்து கொணர்ந்ததண்  கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக்  கவிழ்த்துக் காவிரியாய்த்  தென்திசை
நிலம்செழிக்க  விட்டவனை  வணங்கு.            (5)
விந்தியமலையின் தெற்குப் பகுதிகளின் தண்ணீர்ப்  பற்றாக்குறையை நீக்க ஒரு ஜீவ நதியை  உருவாக்க அகத்திய முனி கங்கை நீரை  ஒரு மண்டலத்தில் எடுத்து  வந்தார். தென்மேற்கு  மலையில் ஒரு இடத்தில் தன்  கமண்டலத்தை கீழே வைத்து  இளைப்பாறுகையில் , விநாயகர் ஒரு காக்கை வடிவில் வந்து ( ஒரு அந்தணச் சிறுவன் வடிவில் என்றும் சொல்வதுண்டு), அந்தக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அங்கிருந்து காவிரி உற்பத்தி ஆகியது ; அந்த இடம் தான் தலை காவேரி : -என்பது ஐதீகம்.





No comments:

Post a Comment