Search This Blog

Oct 17, 2025

தொலையும் தூய்மை

தொலையும்  தூய்மை 

படைப்பு தூய்மையாக இருந்தாலும் , அந்தத் தூய்மைத் தன்மை , வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் போது, சிதைவடைந்துவிடுகிறது! மூலத்திலிருந்து பிரிவது , எப்போதும் தூய்மையின் இழப்பிற்கு வழி வகுக்குமோ?

 

அன்புடன் 

ரமேஷ் 





முகில்விடும் மழைத்துளி தரைவிழும்  வரைதான்

தெரியும் அதன்தன் தனித்துவம் 

தரைதொட்ட உடனே  கரைபல கலந்து  

அதுதன்  தூய்மையைத்  துறந்திடும் 


கருவிட்ட  உயிர்த்துளி  தரைதொடும் வரைதான் 

நிலைத்திடும்  அதனது நிர்மலம்

உருப்பெற்று   உலகுடன் கசடுறக்  கலந்தபின்   

தொலைந்திடும் அதனது நற்குணம் 


காற்றினில் மிதக்கும் அழகிய சிறகுகள்

தரையில் விழுந்ததும்  குப்பைகளே

தோற்றம் மாறா திருப்பினும்  மாற்றம்

பார்ப்பவர் மனதினில் விளைந்திடும் 


தோன்றிய உடனே  எல்லாப் பொருளும் 

தூய்மையில் தோய்ந்து துலங்கிடுமோ?

தாய்மையை விட்டவை  விலகிய உடனே

தூய்மையும்  தேய்ந்தே  மாய்ந்துடுமோ?





Oct 6, 2025

விடை தெரியாக் கேள்விகள்

விடை தெரியாக் கேள்விகள் 


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, "இவை இப்படித்தான்" என்று நிறுவப்பட்டு நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,   அடிப்படை உண்மைகள் சில.  அவை  வளி, ஒளி, நிலம் நீர்,நெருப்பு போன்ற இயற்கைக் சக்திகளின் தன்மைகள்!

அதேபோல் , இம்மனித வாழ்வில் நாம் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிற, தத்துவ விவாதங்களுக்கு அப்பாற்பட்ட,  சில உணர்வுகளும் மதிப்புகளும்  சில உண்டு..  அன்பு, நட்பு, கருணை போன்ற இவைகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

ஆனால் நம் வாழ்வின் இம்மை, மறுமை பற்றிய சில விடை தெரியாக் கேள்விகள் காலம் காலமாக  கேட்கப்பட்டு வருகின்றன. நசிகேதன் என்ற இளைஞன்  எமதர்மனிடன் கேட்ட கேள்விகளும் இவைதான். 

இந்த கேள்விகளுக்கு பதில்,  தத்துவ விவாதங்களில் ஈடுபடுவதை விட, OK அறநெறிக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்தல் மூலமே கிடைக்குமோ?

இது பற்றிய, அலைந்து திரியும் எண்ணங்கள் கொண்ட,  ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 



தென்றலுக்குத் தடையில்லை 

ஒளிக்கதிர்க்கு எடையில்லை

தண்ணீருக்கோர்  வடிவில்லை  

விண்வெளிக்கோ   உடையில்லை  

----------இந்தப் பிறவியின் பொருள் என்ன      

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை   


நட்பை  வாங்கக் கடையில்லை 

கருணைக் கென்றும் மடையில்லை 

அன்பை வெல்லப்  படையில்லை

உயிரை   மிஞ்சிய கொடையில்லை 

----------இப்பிறவிக் கப்பால் இருப்பதென்ன 

----------என்றவென் கேள்விக்கு விடை  இல்லை


நசிகே தனுமே  எமனிடம் எழுப்பிய

இந்தக் கேள்விகள்  புதிதில்லை

பன்னூல் படித்தும் பண்டிதர் உரைத்தும் -நான் 

உணர்ந்து புரிந்திடும்   பதிலில்லை 


விடையே யில்லா,  திருப்பினும் புரியாக்  

கேள்விகள் இங்கே பலவாகும் 

அவற்றின் புரிதலைத்  தேடி அலைந்தால் 

வாழ்நாள் முழுதும் செலவாகும் 


நல்லதை நினைத்து நல்லதைச் செய்து 

நன்றே வாழ்வை நடத்திடுவோம்   

இன்றோ என்றோ இக்கேள் விக்கு  

பதிலும் தானே கிடைத்துவிடும்


அன்புடன் 

ரமேஷ் 



Oct 1, 2025

கலைமகளைத் தொழுதிடுவோம்

கலைமகளைத் தொழுதிடுவோம்


நவராத்திரியின் கடைசி நாளான நவமித் திதி , நாம் கலைமகளைப் பூசிக்கும் தினம். 

மனத்தின்,  ஆன்மாவின் தூய்மையைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சிதரும் அன்னை தன்  கரங்களில் ஏந்தியிருக்கும் வீணையும் , புத்தகமும்  குறிப்பது கலைகளின் இணைப்பை.

கல்விக்குத்  தெய்வமாக நாம் மட்டும் சரஸ்வதியை வழிபடுவதில்லை.  பல மதத்தினரும், பண்பாட்டினரும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு உருவங்களில் கல்வித் தேவதைகளை வணங்கி வந்திருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் இந்த பண்பாடுகள்  அழிந்து போன போது, அவைகளுடன்  இந்த  வழிபாட்டு முறைகளும்  சிதைந்து போயின. ஆனால் நம் பாரதப் பண்பாடும், அப்பண்பாட்டின் சின்னங்களான வெவ்வேறு வழிபாட்டு முறைகளும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன.

இன்று நாம் கலைமகளைப்  பூசிக்கும் இத்தினத்தில், கலைமகளைப்  பற்றியும் ,  வேறு பண்பாடுகளில் - மதங்களில்-  குறிப்பிடப்பட்டு  வணங்கப்பட்ட கல்வித் தெய்வங்களைப்  பற்றியும் ஒரு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில் !

அனைத்துக் கல்வித் தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டுதலுடன் 

உங்கள் அன்பின் 

ரமேஷ்  





வெண்பட்டு ஆடை உடுத்தாளின், தன்கரத்தில் 

பண்ணெழுப்பும் வீணை எடுத்தாளின்- தண்கருணைக்* 

கண்பார்வை பட்டாலே நற்கல்விக் கண்திறக்கும் 

மண்வாழும் மாந்தர்க்கெல் லாம்  


மற்ற மதங்களிலும் பண்பாட்டுச்  சாரலிலும்  

ஓத்தபிற தெய்வங்கள் உண்டாமே - பட்டியல் 

இட்டவற்றைப் பார்ப்போம் சரஸ்வதியை நாம்வணங்கும் 

சத்தான நன்னாளில்  இன்று   




அப்பாலோ ஆணென்றும்#  அத்தீனா பெண்ணென்றும்# 

செப்பித்  தொழுதார்  கிரேக்கர்-  அதன்முன்னர் 

மெர்க்குரி ஆணென்றும்  பெண்மினர் வாவென்றும்   

ரோமர்கள் பேரிட்ட  னர் 





BENZEITEN

ஷிண்டோ மதத்தினரின் ஆண்கடவுள் தென்ஜின்னே !  

பெண்கடவுள் பென்சய்ட்டென் வாக்தேவி**  யின்னுருவாம்  !

ஈகிப்து நாட்டினரின் ஆண்பெண்பால்  தெய்வங்கள் 

தோத்துடன் சேஷத்தும் தான்!  


  

வேற்றுப்பண் பாட்டினர்கள் தம்கல்வித் தேவதையை   

போற்றி வணங்குவதை  விட்டே மறந்தாலும்    

இந்தியப்பண் பாட்டாரோ  நெஞ்சில் நிலைநிறுத்தி 

வந்தனை செய்கின்றார்  நன்று   


* தண் கருணைக்  கண்  = குளிர்ந்த,  கருணைகாட்டும் விழி 

** வாக்தேவி = சொல்லின் அரசி. . 

பென்சய்ட்டன்  என்னும் பெண் தெய்வம், சரஸ்வதியைப் போன்றே கையில் ஓர் இசைக்கருவியை ஏந்தியிருப்பதைக் காணலாம் 

# மற்ற பண்பாடுகளில் கல்வித் தெய்வங்களாக, பெண் தெய்வத்தோடு ,ஒரு ஆன் தெய்வமும் குறிப்படப்பட்டுள்ளதைப்  பார்க்கலாம். நம் பண்பாட்டிலும், விநாயகரை ஆண்  கல்வித் தெய்வமாக வழிபடுதல் உண்டு.