தியானம்
மண்மீது பாய்விரித்து கண்மூடிக் கால்மடித்து எண்கணக்கில் என்மூக்கால் உயிர்வளியை உள்ளிழுத்து
நுரையீரல் தனைநிரப்பி, உள்நிறுத்தி, வெளியேற்றி
சுவாசத்தின் சுழற்சியிலே என்னைநான் இழக்கின்றேன்
மவுனத்தில் முழுகுகிறேன்; அமைதியினைத் தழுவுகிறேன்
கவனங்கள் வழுவாமல் தியானத்தைப் பழகுகிறேன்
உடலெனும் உடையிழந்து, எண்ணத்தின் எடையிழந்து புவியீர்ப்பின் தடையிழந்து வானத்தில் மிதக்கின்றேன்
இறக்கைகள் இல்லாமல் பறக்கின்றேன்- இவ்வுலகின்
இணைப்புகள் யாவையும் துண்டித்துத் துறக்கின்றேன்.
மோனப் பெருவெளியில் மவுனத்தின் அவயத்தில்*
நானிங்கு நிறைகின்றேன்; மனக்கவலை மறக்கின்றேன்
உள்ளிழுத்து உள்நிறுத்தி வெளியேற்றும் சுழற்சியிலே
என்மனதின் சிந்தனையின் இயக்கத்தை இழக்கின்றேன்
பேரண்ட ஆற்றல் பரப்பினொரு சிறுதுளியே
நானென்று உணருகிறேன்; அதில்மூழ்கிப் புணருகிறேன்
என்னுள்ளே இருக்கின்ற எனையுணர முயலுகிறேன்.
இத்தேடல் வெற்றியுற தியானத்தைப் பயிலுகிறேன்.
* அவயம் = இரைச்சல்
அன்புடன்
ரமேஷ்