Search This Blog

Jun 24, 2025

பிரதோஷப் பாடல் 51

 பிரதோஷப்  பாடல் 51




ஆதியனே வேதியனே மங்கையுடற் பாதியனே

மீதியுடல்  மின்னுகின்ற வேதகப்பொன்* சோதியனே  

காதினிக்க சாமமெனும் வேதமறை ** நாதத்தை 

ஓதுவரைக் காதலித்து  ஆதரிக்கும்   நாயகனே  

 

நட்டநடு நள்ளிரவில் உடலெரியும் சுடலையிலே 

சுட்டெரித்த சாம்பலையே பூசி நடம் புரிபவனே 

பிட்டுக்கு மண்ணெடுத்து பணிபுரிந்த சேவகனே 

மொட்டவிழ்ந்த மலர்தூவி பனிந்துனையே பூசிப்பேன்!


* புடமிட்ட பொன் 

** சாமவேதம் 

அன்புடன் 

ரமேஷ் 




Jun 19, 2025

தியானம்

தியானம் 



மண்மீது பாய்விரித்து கண்மூடிக் கால்மடித்து 
எண்கணக்கில் என்மூக்கால் உயிர்வளியை உள்ளிழுத்து 
நுரையீரல் தனைநிரப்பி, உள்நிறுத்தி, வெளியேற்றி
சுவாசத்தின் சுழற்சியிலே என்னைநான் இழக்கின்றேன்
மவுனத்தில்  முழுகுகிறேன்; அமைதியினைத் தழுவுகிறேன் 
கவனங்கள் வழுவாமல்  தியானத்தைப் பழகுகிறேன் 

உடலெனும் உடையிழந்து, எண்ணத்தின்   எடையிழந்து 
புவியீர்ப்பின் தடையிழந்து வானத்தில் மிதக்கின்றேன்
இறக்கைகள் இல்லாமல் பறக்கின்றேன்- இவ்வுலகின் 
இணைப்புகள் யாவையும் துண்டித்துத் துறக்கின்றேன்.
மோனப் பெருவெளியில்  மவுனத்தின் அவயத்தில்*  
நானிங்கு நிறைகின்றேன்;  மனக்கவலை மறக்கின்றேன் 

உள்ளிழுத்து உள்நிறுத்தி வெளியேற்றும் சுழற்சியிலே 
என்மனதின் சிந்தனையின் இயக்கத்தை  இழக்கின்றேன் 
பேரண்ட ஆற்றல் பரப்பினொரு  சிறுதுளியே
நானென்று உணருகிறேன்; அதில்மூழ்கிப் புணருகிறேன் 
என்னுள்ளே இருக்கின்ற எனையுணர முயலுகிறேன். 
இத்தேடல் வெற்றியுற தியானத்தைப் பயிலுகிறேன். 


* அவயம் = இரைச்சல் 

அன்புடன் 

ரமேஷ்